Sunday, August 29, 2010


இ.தொ.காவைப் பலப்படுத்துவதன் மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்


ஆசிரியராக, சமூக சேவை யாளராக இருந்து மலையக மக்கள் முன்னணியின் ஊடாக அரசியலில் பிரவேசித்த இவர், சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பிரதேச சபை உறுப்பினராக இருந்த துடன் ஆசிரியர் சேவை யையும் தொடர்ந்தவர், 2000ஆம் ஆண்டு தேசி யப் பட்டியல் மூலம் பாரா ளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அக்கட்சியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இணைந்து கொண்டார். அக்கட்சியில் உப தலைவராகவும் பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

கேள்வி: இ.தொ.காவில் நீங்கள் இணைந்து கொண்டதற்கான காரணம் என்ன?

பதில்: மலையகத்தில் சிறு சிறு கட்சிகள் ஆங்காங்கே முளைவிட ஆரம்பித்தன. மாகாண சபை உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து சென்று அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களை புதிதாக உருவாக்கிக் கொள்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தவர்களும் இதனையே செய்கின்றனர்.

இவர்கள் அந்த மக்களை வைத்து வாக்கு சேகரித்து அவர்களுடன் எவ்விதத் தொடர்புகளும் இல்லாத பெரும்பான்மை இனத்தவர் கூட மாகாண சபை உறுப்பினராக வந்து தொழிற்சங்கத்தை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

மூன்றாவது சிறுபான்மையினரான மலையக மக்கள் பல கூறுகளாக பிரிந்து இருப்பதுடன் உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கின்றனர். இவற்றுக்கு நாங்களும் கார ணகர்த்தாக்களாக இருந்துவிடக்கூடாது என்று எண்ணினேன்.
அதன் அடிப்படையில் மலையகத்தில் பிரதான அமைப்பின் தலைமையின் கீழ் முழு மலையகமும் அணிதிரள வேண்டும். அவ்வாறு ஒன்று திரண்டால் மட்டுமே மலையக மக்கள் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து வாழும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பது யதார்த்தமான உண்மை. அந்த யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நான் எனது ஆதரவாளர்களுடன் இ.தொ.காவில் இணைந்து கொண்டிருக்கிறேன். பிரிந்து போன சமூகம் மீண்டும் தலைநிமிர வேண்டும்.

பல்வேறு கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தலைவர்கள் தற்போது ஓரணியில் திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இனமான நாம் ஒரே குடையின் கீழ் இணைவதில் எந்தவிதத் தவறும் இருக்க முடியாது.

இ.தொ.கா ஒரு தாய் அமைப்பைப் போன்றது. இலங்கை இந்திய காங்கிரஸில் இருந்து ஏற்பட்ட பிளவின் காரணமாக இ.தொ.கா தோற்றம் பெற்றாலும் மலை நாட்டில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களையும் பிரதிநிதித்து வப்படுத்துகின்ற ஒரு அமைப்பாக அது விளங்குகிறது. மறைந்த சௌமியமூர்த்தி தொண் டமான் தலைமையிலே பல உரிமைகளை பெற்ற ஒரு பலம் பொருந்திய அமைப்பு. இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகிறது. இந்த அமை ப்பை பலப்படுத்துவதன் மூலம்தான் மலையகத்தைப் பலப்படுத்த முடியும்.

கேள்வி: மாற்றுக் கருத்துக்கள் கொண்ட தொழிற்சங்கங்களும் மலையகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே?

பதில்: இ.தொ.காவை விமர்சித்துக் கொண்டு இடைக்காலத்தில் புதிதாக பல அமைப்புக்கள் உருவாகியதென்பது உண்மைதான். புரட்சிகர சிந்தனைகளுடன் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு கட்சிகள் உருவான போதிலும் இதுகாலவரை அவர்கள் எதனைச் சாதித்தார்கள் என்பதை ஆழமாகச் சிந்தித்தால் புரியும். வெற்றுக் கோஷங்களால் மலையக சமூகத்தை பிளவு படுத்தியதைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்றே கூறவேண்டும்.

மேலும் பல கூறுகளாகப் பிரிந்து சிறுசிறு அமைப்புக்களாக நின்று எதனைச் சாதிக்க நினைக்கிறார்கள்? கொள்கை ரீதியாக எடுத்துக் கொண்டாலும் மலையகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கை களைக் கொண்டிருப்பதாக என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் இ.தொ.கா இந்நாட்டில் ஆளும் தரப்போடு இணைந்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற அடிப்படை கோட்பாட்டை கொண்டிருக்கிறது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலத்திலிருந்து இது தொடர்கிறது.

கேள்வி: இ. தொ. காவிலிருந்து முக்கியஸ்தர்கள் சிலர் வெளியேறிய நிலையில் நீங்கள் அதில் இணைந்து கொண்டிருக்கியர்கள். அதிலிருந்து எவ்வாறு அரசியலை முன்னெடுக்கப் போகியர்கள்?

பதில்: நான் ஏற்கனவே கூறியது போல இ.தொ.கா விலிருந்து பலர் வெளியேறியிருக்கிறார்கள். இ.தொ.கா.வின் வெளியேற்றம் பல கட்சிகளை தோற்றுவித் திருக்கிறது. ஆனால் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்து சென்றார்கள். ஏன் சென்றார்கள் என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடனான முதலாவது சந்திப்பின் போது இக்கேள்வியை அவரிடம் கேட்டேன். அவர் சரியானதொரு பதிலை தெரிவித்தார். இ.தொ.காவிற்குள் எவராவது பணக்காரராக வந்து ஏழையாக வெளியே சென்றதில்லை. பெரும் செல்வாக்குடன் இருந்து செல்வாக்கை இழந்து செல்லவில்லை. அப்படியென்றால் இ.தொ.கா விற்குள் இணைந்தவர்கள் தங்களுக்கு தேவை யானவற்றை சேர்த்துக்கொண்டு வெளியே போயிருக்கிறார்கள்.

இ.தொ.காவிற்கென ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. அந்தக் கட்டுப் பாட்டின் அடிப்படையில் எவராவது செயற்பட்டால் அவர்கள் இ.தொ.கா.விலிருந்து வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்ற போது அவர்கள் வெளியேறுவதற்கு அதுவே கார ணமாக இருந்திருக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை நான் இ.தொ.காவில் இணைந்ததற்கான காரணம் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் 1947ஆம் ஆண்டு முதல் 1977ஆம்ஆண்டு வரை எந்தவித அரசியல் பின்புலம் இல்லாமல் இந்த சமூகத்தை கட்டிக்காத்திருக்கிறார். அந்த நேரத்தில் இந்த சமூகம் அவர் பின்னால் அணி திரண்டும் இருந்திருக்கிறது, 1977ஆம் ஆண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறார். அதை எவரும் இல்லையென்று மறுதலிக்க முடியாது.

30 வருடங்கள் நாடற்றவர்களாக இருந்த ஒரு சமூகத்துக்கு பிரஜா உரிமையை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பிரஜாவுரிமையை பெற்றதன் வாயிலாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்வைத்திருக்கிறார்.பல்லாயிரக் கணக்கானவர்கள் அரசாங்க தொழிலை பெறுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மாட்டுப்பட்டியைப் போல இருந்த மலையகப் பாடசாலைகளை மாடிக் கட்டிடங்களாகவும், மகா வித்தியாலயங் களாகவும் மாற்றியமைத்திருக்கிறார்.
படிக்காத சமூகம் என தூற்றப்பட்ட சமூகத்திலிருந்து இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் படித்தவர்கள் பெருகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார். தன்னுடைய அரசியல் சாணக்கியத்தின் மூலமாக தோட்டக் குடியிருப்புக்களையும் அதனைச் சார்ந்த பிரதேசங்களையும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்க வேண்டும் என்ற முயற்சியை பெருமளவு மேற்கொண்டிருக்கிறார்.

அவர் செய்த பல்வேறு விடயங்கள் இந்த சமூகத்தை மாற்றியமைத்திருக்கிறது. அவ்வாறான தலைமைத்துவத்தோடு நாம் இணைந்திருப்பதில் எந்தவித தவறும் கிடையாது. அது மட்டுமல்ல தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமை மலையகத்திற்கு ஒரு பிரகாசத்தைக் கொடுத்திருக்கிறது என்பதுதான் உண்மை. மறைந்த தலைவர் எமது சமூகத்திற்கு ஒரு முகவரியைக் கொடுத்திருக்கிறார். அந்த முகவரியை மேலும் மெருகூட்டி அந்த மக்களை தலைநிமிர்ந்து நிற்கும் தலைவராக இன்று ஆறுமுகன் தொண்டமான் இருக்கிறார். அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து வந்திருக்கியர்கள். இ.தொ.காவில் இணைந்த பின்னர் உங்களது நிலைப்பாட்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

பதில்: தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது அடிப்படை நோக்கம். மலையக சமூகத்தின் இதயம் தோட்டத் தொழிலாளர்கள். வருமான ரீதியில் அவர்கள் உச்ச நிலையில் இருக்க வேண்டும். உச்ச நிலை என்பது இந்நாட்டில் இருக்கின்ற ஏனைய துறையை சார்ந்தவர்கள் பெறுகின்ற வருமானத்திற்கு சமமாக வருமானத்தை பெறும் சமூகமாக மலையக சமூகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த சமூகத்தின் எதிர்கால வாரிசுகள் வாழ்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அது கல்வியாக இருந்தாலும் சரி, வேலை வாய்ப்புக்களாக இருந்தாலும் சரி, வீட மைப்பாக இருந்தாலும் சரி அனைத்து நடவடிக்கைகளும் வருமானத்தில்தான் தங்கியிருக்கிறது. எனவே கடந்த காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென உரக்கக் குரல் கொடுத்ததென்பது வெறுமனே அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற் காகவே அவ்வாறான வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் பெறுவதற்கான ஒரேயொரு வழி என்னவென்றால் கூட்டு ஒப்பந்தமாகத்தான் இருக்கிறது. கூட்டு ஒப்பந்தத்தைத் தவிர தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெறுவதற்கு வேறு எந்த மார்க்கமும் இல்லாத நிலை காணப்படுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் உச்ச அளவில் எங்க ளுடைய பேரம் பேசும் சக்தியை உருவாக்கி தொழிலாளர்களுக்கான கூடுதலான சம்பளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதும் எனது நிலைப்பாடாகும்.
இ.தொ.கா எதிர்காலத்தில் செய்யப்போகும் கூட்டு ஒப்பந்தம் கூட தோட்டத் தொழிலாளர்க ளுக்கு மிக உச்ச அளவிலான வருமானத் தையும், அவர்களுடைய சேவைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான தொழிற்சங்கங்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டு களுக்கு மேல் குரல் எழுப்பி வந்திருக்கின்றன. ஆனால் இந்த 10 ஆண்டு காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு பொது வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியவில்லை. குறிப்பிட்ட கூட்டு ஒப்பந்தக் காலப்பகுதியிலேயே தோட்டத் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் இறக்குவதும் அவர்களை உணர்ச்சிமயப் படுத்தலும், புரட்சிகர வேலைகளில் ஈடுபட வைப்பதுமாகவே இருந்தார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

கூட்டு ஒப்பந்தம் முடிந்த ஒருவார காலத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம். அல்லது வேறு வகையான போராட்டங்களை முன்னெடுக்கப் போகின்றோம் என கூக்குரல் இடுவதுடன் அந்தக் காரியம் முடிந்ததாகவே இருக்கிறது. இருக்கும் ஒரேயொரு வழி கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதே சிறந்த வழியாகும். எதிரணிகள் எல்லாம எதற்கும் எடுபடாமல் இருக்கின்ற போது அந்த எடுபடாத கூட்டத்தில் இருக்கின்ற ஒருவராக இருப்பதை விட பேரம்பேசி சம்பளத்தை பெறுகின்ற கூட்டத்தோடு இணைந்து எனது ஆலோசனைகளையும் வழங்கக் கூடியதாக இருக்கிறது.

கேள்வி: தொடர்ந்தும் மாகாண சபை உறுப்பினராகவே செயற்படப் போகியர்களா? எதிர்காலத்தில் உங்களுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்கள் எவ்வாறானதாக அமையும்?

பதில்: மலையக அரசியல் வரலாற்றில் எனக்கென ஒரு இடம் இருக்கிறது. இ.தொ.காவில் நான் இணைந்தது எந்தவித சுயநலத்தின் அடிப்படையில் அல்ல என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறேன். மக்களின் நலன்களின் அடிப்படையில்தான் இ.தொ.காவில் இணைந்துள்ளேன். நான் வந்த அரசியல் பாதை மிகக் கரடுமுரடானது. போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.
பல்வேறு பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன். மக்களை நேரடியாக அணி திரட்டியிருக்கிறேன். இவ்வாறான பல்வேறு வேலைத் திட்டங்களின் அடிப்படையில் தான் அரசியல் நிலைக்கு உயர்த்தப்பட்டேன். சிலர் அரசியல் கட்சிகளின் செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். நான் கட்சிகளுக்கு செல்வாக்கை உயர்த்தி அதன் மூலம் வந்தேன் என்பதுதான் உண்மை.

இதை இ.தொ.காவின் உயர்மட்ட தலைமைகள் நன்கு உணர்ந்திருக்கின்றன. என்னை இ.தொ.கா விருப்பத்தோடு உள்வாங்கி யிருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்சியின் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எனக்கு எவ்வாறான பொறுப்புக்களை வழங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதும் எனக்குத் தெரியும். அவர்களுக்கு அவகாசத்தை வழங்கி அவர் வழங்கும் பொறுப்புக்களை ஏற்று செயற்படுவேன். மலையகத்திலே சிதறிக் கிடக்கின்ற பல்வேறு அமைப்புக்குள் கட்டுண்டு கிடக்கின்ற மக்களுக்கு ஏன் அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி அவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்பதே எனது எதிர்காலத் திட்டமாகும்.

கேள்வி: உங்களின் வரவால் இ.தொ.காவில் நீண்டகாலமாக இருப்போரின் மனநிலைகளில் ஏதேனும் மாற்றங்கள் .....?

பதில்: அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் நட்பு ரீதியாகப் பழகுகிறார்கள்.
அந்த அமைப்புக்குள் வந்து சேர்ந்த அனைவரையும் வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்கள். என்னுடைய இ.தொ.கா பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள், மேல்மட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட அங்கத்தவர்கள் வரை அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்,அதேநேரத்தில் கட்சியில் இருக்கின்ற எவருக்குமே நான் போட்டியாக திகழப் போவதில்லை. எனது திறமையை அக்கட்சிக்கு வழங்கி அதன் மூலமாக வளர்வேனே தவிர இ.தொ.கா உறுப்பினர்களின் இடத்தைப் பிடித்து வளர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.

இ.தொ.காவில் இருக்கின்ற எனது நண்பர்கள் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் என்னை எவ்வளவு சந்தோஷமாக ஏற்றுக் கொண் டிருக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாக நடந்து அக்கட்சியை கட்டிக்காப்பதுதான் எனது பிரதான நோக்கம்.

கேள்வி: இ.தொ.காவில் இணைந்ததன் மூலம் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

பதில்: இ.தொ.காவில் இணையப் போகும்போது பல்வேறு பயமுறுத்தல்கள் எனக்கு வந்தன. அங்கிருக்கின்ற தலைமைத்துவம் உள்வாங்கி விட்டு பின்னர் கிடப்பிலே போடுவார்கள். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் முத்து சிவலிங்கம், உயர்மட்ட உறுப்பினர்களான செந்தில் தொண்டமான், சென்னன் போன்றோருடன் பேசிய போது சுமுகமாக, சந்தோஷமாக ஜனநாயக ரீதியிலே யதார்த்தத்துடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்கிருந்தது.

இ.தொ.காவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இ.தொ.காவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆதங்கமாக இருந்தது. அந்த ஆதங்கத்தை நான் நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன்.


தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
நேர் கண்டவர் : பி. வீரசிங்கம்