Saturday, November 3, 2018

தோட்டத் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தை தோல்வி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கிடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்றைய தினம் 02-11-2018 பத்தரமுல்லையிலுள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.
மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சுரேஷ் வடிவேல், ஊவா மாகாண சபை உறுப்பினரும் இ. தே. தோ. தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தருமான வி. ருத்ரதீபன் மற்றும் சங்கத்தின் தேசிய இணைப்பாளர் விஜயகுமாரன், கூட்டு தொழிற்சங்கம் சார்பில் இராமநாதன் உட்பட பலரும் இம் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
தோட்டக் கம்பனிகள் மனிதாபிமானமின்றி செயற்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இனி கம்பனிகளுடன் பேசுவது அர்த்தமற்றது. இதற்கிணங்க தீபாவளி வரையே நாம் பொறுத்திருப்போம். தீபாவளியையடுத்து மலையகத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படும்.
தோட்டக் கம்பனிகளுக்கு மானியமாக கோடிக்கணக்கான ரூபாய்களை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு இதுவரை காலமும் வழங்கிவந்துள்ளது. சிறுபான்மை பிரதிநிதியொருவர் அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றதாலேயே இந்த உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.
இனியும் கம்பனிகளுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது. அவர்கள் இர1992 ஆம் ஆண்டு கம்பனிகளுக்கு தோட்டங்களை வழங்கும்போது அவை பெரும் செழிப்பாகக் காணப்பட்டன. அவை தற்போது பராமரிப்பின்றி காடாகியுள்ளன. தோட்டங்களை கம்பனிகளிடமிருந்து மீளப்பெறும் போது அதற்காக தண்டப் பணம் அறவிடப்படவேண்டுமென நான் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் தெரிவித்துள்ளேன்.
தோட்டங்களிலுள்ள சுப்ரிண்டன் பங்களாக்கள் சுற்றுலா விடுதியாக வழங்கப்பட்டு அதன் மூலமும் பெரும் இலாபம் ஈட்டப்படுகின்றன.
கடந்தமுறை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது ஒன்றரை வருடங்களுக்காக நிலுவைப் பணமாக கிடைக்கவேண்டிய 85,000 ரூபா தோட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை. இடைக்கால கொடுப்பனவென 1000 ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுத்தவர்கள் அதுபற்றிச் சிந்திக்கவில்லை.
கூட்டு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இனி அவ்வாறானதொரு ஒப்பந்தம் இருந்தால் என்ன இல்லாவிட்டாலென்ன நாம் அரசாங்கத்தின் மூலம் முடிவொன்றைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் போக நேரிடும்.
கூட்டு ஒப்பந்தம் மீறப்படும்போது முதலில் அது தொடர்பில் தொழில் ஆணையாளருக்கு தெரிவிக்கவேண்டும். அதன் பின்னரே நீதிமன்றம் செல்ல முடியும். கூட்டு ஒப்பந்தத்திலுள்ள பல்வேறு விடயங்கள் மீறப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவுக்கு மூன்று முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்த இடைக்கால கொடுப்பனவும் இனி எமக்குத் தேவையில்லை. 1000 ரூபா சம்பள உயர்வை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது போனால் அமைச்சர் பதவியைத் துறக்கவும் நான் தயங்கமாட்டேன்.
தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடமாட்டோம். தோட்டங்களை முறையாக நடத்த முடியாவிட்டால் தோட்டங்களை மீள அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அது தொடர்பில் நான் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷிடம் பேசியுள்ளேன். தொழிலாளர்களின் சலுகைகள், உரிமைகள், அவர்களை கௌரவமாக நடத்தவேண்டியது தொடர்பான நியதிகள் கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்குக் காரணம் சம்பள உயர்வுக்கு மேலதிகமாக தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகள், உரிமைகள் சார்ந்த விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதால் அவற்றை தொழிலாளர்கள் இழக்கக்கூடாது.
இம்முறை பேச்சுவார்த்தையின் போது இரண்டு தரப்பையும் பார்த்து 925 ரூபா அடிப்படை சம்பளமாக தந்தால் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தோம். எனினும் அவர்கள் 10 வீதமான சம்பள உயர்வைத் தரத் தீர்மானித்தனர். இனி 925 என்ற பேச்சுக்கே இடமில்லை. 1000 ரூபாவே எமது கோரிக்கை. அது கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.த்தத்தை உறிஞ்சும் அட்டையைவிட மோசமானவர்கள், மனிதாபிமானமற்றவர்கள்.
முதலாளிமார் சம்மேளனத்துடன் இனிஎந்தவிதப் பேச்சுக்கும் இடமில்லை. 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தராவிட்டால் தீபாவளி முடிந்ததும் மலையகம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அமைச்சர் தொண்டமான் தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனத்தின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் எனத் தெரிவித்த அமைச்சர் தமது மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் அமைச்சர் பதவியை தூக்கியெறியவும் தயார் என்றும் தெரிவித்தார்.
தீபாவளி வரையே பொறுத்திருப்பதாகவும் தீபாவளி முடிந்ததும் அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு மலையகத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்தப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நன்றி- தினகரன்