Sunday, September 28, 2008

தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகளை குறைந்த விலையில் வாங்கும் வர்த்தகர்கள்

இலங்கையில் உள்ள பெருந்தோட்டங்களை கடந்த காலங்களில் SLBC மற்றும் JEDB ஆகியன நிர்வகித்து வந்தன. தற்போது 23 கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன.

1991 இல் அரசாங்கம் தோட்டங்களை தனியார் மயமாக்கும் நோக்கில் கம்பனிகளுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்தமையை இடதுசாரி தொழிற்சங்கங்கள் எதிர்த்திருந்தன. எனினும் அரசாங்கத்துடன் இணைந்திருந்த காரணத்தால் இ.தொ.கா வும் இ.தே.தோ.தொ சங்கமும் ஆதரித்திருந்தன.

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின் இறுதியில் ஒரு சமரசத் திட்டத்தை அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் ஏற்றுக் கொண்டன. அதில் ஒன்றுதான் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும், சுற்றியுள்ள மரக்கறி தோட்டங்களையும் அவர்களுக்கு உரித்தாக்குவது அடுத்ததாக தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கம்பனிகளுக்கு கிடைக்கும் இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு தரப்பட வேண்டும் . அத்தோடு தனியார் கம்பனிகளின் பங்குகளில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

மேற்படி ஆலோசனைகள் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றி நீண்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய தொழிற்சங்கங்களின் அழுத்தம் காரணமாக 10சத வீத பங்குகளை தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது. இந்தப் பங்குகளை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

பங்குகள் விநியோகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்குகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இ.தொ.கா, இ.தே.தோ.தொ சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சகல பங்குகளையும் நிர்வகிப்பதற்காக தனியான ‘நிதியம்’ ஒன்றை அமைக்க வேண்டுமென்று கோரி சம்பந்தப்பட்ட அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தின.
ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இத் திட்டத்தை முறியடிக்கும் நோக்கில் கம்பனிகளும் அரசாங்கத்தின் சில சக்திகளும் சேர்ந்து திடீரென பங்கு பத்திரங்களை தோட்ட நிர்வாகங்களினூடாக வழங்கி அவற்றை வங்கிகளிலோ, வர்த்தகர்களிடமோ கொடுத்து காசாக்கிக் கொள்ளலாம் என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டதால் பங்கு பத்திரம் கிடைத்தவுடன் இதன் முக்கியத்துவத்தை உணராமல் வங்கிகளிலும் வர்த்தகர்களிடமும் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்வதில் அக்கறையாக இருந்தார்கள்.
மேலும் இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் பலத்தை எதிர்ப்பை காட்டியதால் வங்கிகளும் வர்த்தகர்களும் பங்கு பத்திரங்களை விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.

மீண்டும் பங்குகள் விற்பனை

இவ்வாறு விற்கப்படாமலிருந்த பங்குகளை இப்போது மீண்டும் இரகசியமான முறையில் சில வர்த்தகர்கள் விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இறந்துபோன தொழிலாளர்களின் பங்குகளையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அல்லது வேலை நிறுத்தம் செய்யப்பட்டவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்று கூறி மிகவும் குறைந்த விலைக்கு வர்த்தகர்கள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களின் பங்குகளை மாற்ற முடியும்.

பங்குகளை பெற்றுள்ள தொழிலாளர்கள் யாராவது இறந்து போயிருந்தால் அவர்களின் பங்குகள் செல்லுபடியாகாது என்பதில் எந்தவித உண்மையும் இல்லை அந்த பங்குகளை உயிரோடிருக்கும் உறவினர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

பங்குகளினால் கிடைக்கும் பயன்கள்.

தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பங்குகள் மிகவும் பெறுமதி மிக்கவையாகும். ஏனெனில் பங்குகளை வைத்திருப்பதன் மூலம் தொழிலாளர்கள் கம்பனிகளுக்கு உரித்துடையவர்கள் ஆகின்றார்கள். தோட்டங்களில் வசிப்பதற்கு அவர்களுக்கு உரிமை கிடைக்கின்றது.
எதிர்கால சந்ததிகளுக்கு இத்தகைய பங்குகள் சிறந்த முதலீடாக அமைகின்றது. மேலும் 10 ரூபா பெறுமதியான ஒரு பங்கு இப்போது 50 ரூபாய்க்கு மேல் பெறுமதியுள்ளதாக காணப்படுகின்றது.

எனவே தொழிலாளர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பெற்றுக் கொடுத்துள்ள பங்குகளுக்கான உரிமையை சதிகாரர்களின் வகைக்குள் வீழ்ந்து தொழிலாளர்கள் இழந்து விடாது அவற்றை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பானா தங்கம் - வீரகேசரி

No comments: