Sunday, May 2, 2010

மே தினத்திலாவது பெண் தொழிலாளர்கள் கௌரவிக்கப்படுவார்களா?

உதிரத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்து மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் 8 மணி நேரம் கொண்ட உழைப்பை உரிமையாகப் போராடி பெற்ற நாள் மேதின மாக உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து உழைத்து அலுத்துப் போன தொழிலா ளர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை செய்வோமென சூளுரைத்து 1886 ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கிளிர்ச்சியை நடத்தினர். கிளர்ச்சியை அடக்க கடுமையான தண்டனை கள் கொடுக்கப்பட்ட போதிலும் தோழர்கள் துளியும் அஞ்சாது உறுதியுடன் போராடி அதில் வெற்றியும் கண்டனர்.

அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டு தோறும் மே தின விழாவில் பாட்டாளி மக்கள் நினைவுகூருகின்றனர். இது ஒன்றும் உழைக்கும் வர்த்தகத்தின் ஓய்வுநாள் அல்ல. பொழுதுபோக்கும் களியாட்ட நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். உலக தொழிலாளர் வர்த்தகத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள். வேலைநிறுத்தம் செய்த நாள், மூலதனத்தின் குவிப்பை ஒருநாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். மூலதனம் இந்த நாட்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய நாட்கள் அவை. மூலதனம் தனது அடக்கு முறை இயந்திரத்தையே தொழிலாளி வர்க்கத்துக்கு ஏவிவிட்ட நாள். சுதந்தி ரம் ஜனநாயகத்தை உழைக்கும் வர்க் கத்துக்கு மறுத்த நாள்.

எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழி லாளர்களின் நினைவாக இக்கோரிக்கையை முன்நிறுத்தி போராடத் தொடங்கிய நாள். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள். மேதினம் என்பது வெறுமனே வெற்றி கோஷங்களை மேடையில் முழங்கும் நிகழ்வாக மாறி வருகின்றது. மேதினக் கூட்டங்களில் மேடைப் பேச்சுக்களும், பட்டாசு சத்தங்களும் முழங்குகின்றன.

ஆனால் தொழிலாளர் தினமான அன்று எந்த மேடையிலாவது தொழிலாளர் கழுத்தில் மாலை விழுந்திருக்கின்றதா? இல்லையேல் தொழிலாளர் எவராவது கௌரவிக்கப்பட்டிருக்கிறார்களா? தொழிலாளியை மேடையில் பேச வைத்து அரசியல் தலைமைகள் தான் கேட்டுக் கொண்டிருந்த சரித்திரங்கள் தான் உண்டா?

மலையகத்தில் மேதினக் கூட்டங்கள் ஒருநாள் கூத்தாக மறைந்து விடுகின்றன. மேதினத்தன்று காலை ஒவ்வொரு தோட்டங்களிலும் கட்சிக் கொடிகள் ஏற்றப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் பேசுவதை கூட்டத்துடன் கூட்டமாய் நின்று கேட்டுவிட்டு இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுகின்றனர். தவிர தொழிலாளர் உரிமை, தொழிலாளர் நலன் அல்லது குறைந்த பட்சம் தனது நலன் தொடர்பாக கூட சிந்திப்பதில்லை.

ஆனால் ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர் விழாக்கள், பூசைகள், விளையாட்டுப் போட்டிகள், பரிசில் வழங்கல் என தொழிலாளர் உளம் மகிழும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது சகல தோட்டங்களிலும் நடைபெறுமாயின் மேதினம் சிறக்கும் தொழிலாளர் நன்மை அடைவர்.

இன்று மலையகப் பகுதிகளில் முதலாளித்துவத்தின் தாக்கத்தினாலும், அரசியல் தலைமைகளின் பொறுப்புணர்வு இன்மையினாலும் மேதினம் வெறும் பொழுது போக்கு விடுமுறை நாளாக, ஓய்வுநாளாக, களியாட்ட நாளாக, அரசியல்வாதிகளின் மேடை வாக்குறுதிகளாக காட்டி சிதைக்கப்படுவதால் அதன் தன்மை மறைந்து வருகின்றது.

எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்நிலையிலும் கொத்தடிமை நிலை முற்றிலும் நீங்கியதாகத் தெரியவில்லை. எத்தனை வர்த்தக நிலையங்களில் கல்லுடைக்கும் இடங்களில், எத்தனை எஜமான்களின் வீடுகளில், உணவு விடுதிகளில் தினக் கூலிக்காக வேலை செய்யும் இடங்களில் ஏராளமானோர் முழு நேர வேலை களில் சட்டத்திற்கு விரோதமாக அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் அறியாமையினாலேயே வேலை செய்பவர்களும் உண்டு. இவர்களுக்கு தேவையினை பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குகின்றனர் என்பதை சிந்தித்தல் வேண்டும். இவர்களுள் முறைசார் ஊழியர்களும், முறை சாரா ஊழியர்களும் தங்களை அறியாமலே தங்கள் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பதை உணர வேண்டும்.

மலையக தொழிற் சங்கங்கள், கட்சிகள் மலையகத்தில் திருவிழாவாகக் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டி கொண்டாடுவார்கள். வாக்குறுதிகளையும் அளிப்பார்கள். ஆனால் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட்டதாக இல்லை. மலையகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுள் லயன் குடியிருப்புக்கள், காணிப் பிரச்சினைகள், ஊழிய சேமலாப நிதியை உரிய நேரத்தில் பெற முடியாத பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள். எத்தனைத் தோட்டங்களில் அம்பியூலன்ஸ் வண்டி சேவைகள் இருக்கின்றன என்பன பிரதானமானவை.

மேலும் போக்குவரத்து வசதிகள் போதாமையும் பாதைகள் புனரமைக்கப்படாமையும், நிர்வாக அலுவல்களில் மொழிப் பிரச் சினைகள் என்பன குறிப்பிடத்தக்கவை. மலையகத்திற்கென நீண்ட காலத் திட்டங்கள் வகுக்காமை, சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துதல், மலையக பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைகள், தொழில் பயிற்சி நிலையங்களின் பற்றாக்குறைகள், தொழில்நுட்ப கல்விசார் நடவடிக்கை கள் இன்மை, போதியளவான ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் காணப்படாமை, தோட்டப்புறங்கள் பிரதேச அலகிற்குள் உள்ளடக்கப்படாமை, குறைந்தளவிலான எழுத்தறிவு வீதம், போதியளவான அரச தொழில் வாய்ப்புகள் இன்மை, அடிப்படை ஆவணங்களை பெறுவதில் பிரச்சினைகள், அதிகரித்து வரும் போதைப் பொருள் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் பூரணத்துவமின்மை, தேசிய நீரோட்டத்தில் மலையக மக்கள் இணைக்கப்படாமை என தேவைகளின் பட்டியல் நீளுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றை தீர்க்கும் முகமாக கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றனவா? இல்லை. வெற்றி ஊர்வலங்கள் மட்டும் நடத்தத் தவறுவதேயில்லை.

இலங்கை பொருளாதாரத்தின் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். இலங்கையின் பொருளாதார மேன்மைக்கு பெண்களின் பங்கு அளப்பரியதாகும். இவர்கள் உடல், உள உழைப்புக்களில் தமது பங்கை செலுத்துகின்றனர். இவர்களே இன்று குடும்ப பாரங்களை சுமப்பவர்களாக உள்ளனர். இவர்களது உரிமைகள் பாலியல் வன்முறை, அதிகரித்த வேலை, அடக்குமுறை, ஆணாதிக்கம் என்ற வகையில் அதிகளவில் மீறப்படுகின்றன. இவர்களுடைய உரிமைகள் மேம்பட வேண்டும்.

எந்த மே தினத்திலாவது பெண் தொழிலாளி ஒருவர் கௌரவிக் கப்பட்டுள்ளாரா? இல்லை. கொழும்பு நகரங்களில் வீட்டு வேலை செய்யும் சிறார்களுள் பெரும்பாலானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார சிக்கல்கள் வறுமை என்பதை காரணம் காட்டி வீட்டு வேலைகளுக்கு தொடர்ந் தும் பிள்ளைகளை அனுப்பி வைக்கப் படுகின்றனர். தொழிற் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள், இச்சிறுவர்கள் கல்வி கற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறின.

அந்த முன் மொழிவுகள் எங்கே என இந்த மே தினத்தில் நினைவுகூரல் வேண்டும். மலையக தொழிற்சங்கங்களின் போட்டாப் போட்டித் தன்மையும் தனித்துவத்தை காட்டுமுகமாக பிரிந்து செல்வதும் மலையகத்தில் நீண்ட கால அபிவிருத்தி திட்டங்கள் ஏதும் நடை முறைப்படுத்தப்படாமைக்கான காரணமாகக் கொள்ளலாம். இந்நிலையே கண்டி, பதுளை மாவட்டங்களில் எத்தகையதான தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பெற முடியாமைக்கான காரணமாகும். எனவே, இம்மே தினத்திலாவது ஒரு குடையின் கீழ் மலையக மக்களுக்கு என கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதி அரசியல் செல்வாக்கு செலுத்தியிருந்தது. இன்று அனைத்தையும் தாண்டி சுய நல அரசியலையே நடைமுறையில் காண முடிகிறது. மேலும் அதிகார அந்ஸ்துக்கான போட்டி நிகழ்கிறதே தவிர மக்கள் சேவையில் போட்டி எதையும் காண முடியவில்லை.

உழைக்கும் வர்க்கத்தின் உண்மை நிலை உணர்த்தி தொழிலாளி தனது உழைப்பை தடையின்றி தொடரவும் கட்டளையிடும் அதிகாரியாக மாறவும் அரசியல் அதிகாரத்தை, உரிமையை நிறுவும் நாளாக முன்நிறுத்தி அதை நோக்கிப் போராட மலையக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சிறு துளி உரிமையையும் போராடி பெற்ற வரலாறே நம்முடையது. உழைப்பும் உயர வேண்டும், உழைக்கும் தொழிலாளியும் உயர வேண்டும்.

தலவாக்கலை கே. எச். கே.