Thursday, June 28, 2018

புற்று நோய் செல்களை அழிக்க தேயிலை சாறு உதவும்

தேயிலை இலை சாற்றின் துணையுடன் பெறப்பட்ட மிகச்சிறிய நானோ அளவிலான "குவாண்டம் துகள்கள்" (Quantum Dots) நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் திறன் உடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் சுவான்சி பல்கலைக் கழகமும் (Swansea University), இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் இணைந்து "குவாண்டம் துகள்"களைக் கொண்டு புற்று நோய் செல்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்று மேற்கொண்ட ஆய்வில், குவாண்டம் துகள்கள் புற்று நோய் செல்களை அழிக்கும் திறனையும் கூடுதலாகக் கொண்டிருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, தேயிலை சாற்றினை பரப்பு மாற்றியாக (surfactant) பயன்படுத்தி பெறப்பட்ட காட்மியம் சல்பைடு குவாண்டம் துகள்கள் புற்று நோய் கிருமிகளை 80 சதவிகிதம் அழிக்கவல்லது என்ற ஆச்சரியமூட்டும் முடிவுகளை ஆய்வக அளவில் கண்டுபிடித்துள்ளனர். அதே நேரம், இந்த குவாண்டம் துகள்களை மேலும் முறையாக அடுத்த பல நிலைகளில் ஆய்வு செய்து, மேம்படுத்தி மனிதர்களின் சிகிசைக்கு பயன்படுத்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று இந்த ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது.
இவ்வாராய்ச்சிக் குழுவில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள கே. எஸ். ரெங்கசாமி நுட்பக் கல்லூரியின் உயிரி நுட்பத் துறை மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள ஆய்வாளர்களும் பங்கு பெற்றுள்ளனர்.

"தேயிலை இலைகளின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை மூன்றில் ஒரு பங்கு அவை தேநீர் அருந்தும் சுவைக்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அவை பெரும்பாலும் குப்பைகளாக வீணாகிறது. இவ்வாறு வீணாகும் தேயிலை இலைகளை பக்க விளைவுகளற்ற, பரப்பு மாற்றிகளாக குவாண்டம் துகள்கள் தயாரிப்பில் பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த குவாண்டம் துகள்களின் தயாரிப்பு விலையினை பன்மடங்கு குறைக்க முடியும்" என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து தெரிவிக்கிறார்.

"தற்போது வர்த்தக சந்தையில் குவாண்டம் துகள்களின விலை ஒரு மில்லி கிராம் அளவானது 250 ல் இருந்து 500 பவுண்டு (1 பவுண்டு~90 ரூபாய்) வரை விற்கப்படுகிறது. ஆனால், தேயிலை இலைச் சாற்றின் துணையுடன் தயாரிக்கபப்ட்ட குவாண்டம் துகளானது மில்லிகிராம் ஒன்றிற்கு 10 பவுண்டுகள் மட்டுமே உற்பத்தி செலவாகும். அத்தோடு இவை நல்ல ஆரோக்கியமான செல்களை அழிக்காமல், புற்று நோய் செல்களை மட்டும் தெரிவு செய்து குவாண்டம் துகள்கள் துணையுடன் அழிக்க முடியும்" என முனைவர் சுதாகர் கூறுகிறார்.

மேலும் இக்குவாண்டம் துகள்கள் அதிக ஒளி உமிழ்வு திறன் (florescence) கொண்டவையாக இருப்பதால் இவற்றின் துணையுடன் புற்று நோய் கிருமிகளை மிக எளிதாக அடையாளம் காண இயலும் என இக்குழு தெரிவிக்கிறது.

இவ்வாராய்ச்சியில் மற்றுமொறு குறிப்பிட்டத்தக்க கண்டுபிடிப்பானது புற்று நோய் செல்களின் சுவற்றில் உள்ள துளைகள் (nanopores) வாயிலாக குவாண்டம் துகள்கள் மிக எளிதாக ஊடுருவும் திறனுடையது என்று நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது குவாண்டம் துகள்களைக் கொண்டு புற்று நோய் கிருமிகளை அழிக்கும் ஆராய்ச்சியினை அடுத்த நிலைக்கும் எடுத்துச் செல்லும் என இக்குழு நம்புகிறது.

தேயிலை இலையில் உள்ள பாலிபீனால், அமினோ அமிலம், விட்டமின்கள், மற்றும் ஆக்சிஜனேற்றம் செய்யும் மூலக்கூறுகள் புற்று நோய் செல்கள் தீவிரமாக பரவுவதற்கு முக்கிய காரணமான டி.என்.ஏ தகவல்களை பலபடியாக்கம் செய்ய விடாமல் அபாப்டாசிஸ் (apoptosis) என்னும் நிகழ்வின் மூலம் தடுத்து அழிக்கிறது.

வேல்ஸ் புற்று நோய் நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு பிரிவின் அறிக்கைப்படி நுரையீரல் புற்று நோய் என்பது வேல்ஸ் மற்றும் உலக அளவில் அதிக அளவில் காணப்படும் நான்கு வகை புற்று நோய்களில் ஒன்றாகும்.

ஒவ்வொரு வருடமும், வேல்ஸ் பகுதியில் குடல் மற்றும் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களை காட்டிலும் நுரையீரல் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்களே அதிகம். குறிப்பாக, நுரையீரல் புற்று நோய் செல் தாக்கம் கண்டறியப்பட்டவர்களில் எண்ணிக்கையில் பாதி பேரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது. மீதம் உள்ளவர்களின் 6.5 சதவிகிதத்தினர் மட்டுமே அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர் வாழ்கின்றனர்.

ஒரு சில வருடங்களில் மேலதிக ஆராய்ச்சி மூலம் குவாண்டம் துகள்களின் துணையுடன் நுரையீரல் புற்று நோய் செல்களை அழித்து இறப்பில் இருந்து மனிதர்களை காக்க முடியும் என முனைவர் சுதாகர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவ்வாரய்ச்சியினை கீழ்கண்ட பணிகள் மூலம் அடுத்த கட்ட நிலைக்கு எடுத்துச் செல்லும் பணியில் இக்குழு ஈடுபட்டுள்ளது.

    மிகக்குறைந்த அளவில் இருந்து குவாண்டம் துகள்களை அதிக அளவில் தயாரிக்கும் நோக்கில் "குவாண்டம் துகள் தொழிற்சாலை"யினை நிறுவுவது.

    ஆய்வக நிலையில் சோதனை தட்டில் புற்று நோய் செல்களை அழிப்பதைப் போலவே மனித உடலினுள் புற்று நோய் செல்களை மட்டும் தேடிக் கண்டறிந்து அழிக்கும் திறனையுடைய தனித்த நொதிகளை தெரிவு செய்தல்.
மேற்ச் சொன்ன பணிகளில் இருந்து ஆக்கப்பூர்வமான ஆய்வு முடிவுகள் கிடைக்குமானால் மருத்துவ சோதனைகள் சார்ந்த ஆய்வு நிலைக்கு இரண்டு வருடங்களுக்குள் இப்பணியினை எடுத்துச் செல்ல முடியும். இவற்றின் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் பயன்படும்படியான பரந்து பட்ட மருத்துவ சிகிச்சைக்கு குவாண்டம் துகள்களை கொண்டு வர இயலும்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்துவின் ஆராய்ச்சிக் குழுவானது தேயிலை இலைச்சாற்றின் துணையுடன் தயாரிக்கப்பட்ட குவாண்டம் துகள்களைக் கொண்டு நீர் மாசுபாட்டினை சுத்திகரித்தல், சூரிய மின்கலங்கள் வடிவமைத்தல், அறுவைச் சிகிச்சை அரங்குகளுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு பூச்சுகளை தயாரித்தல், சூரிய ஒளியில் இருந்து முகத்தினை பாதுகாக்கும் முகப்பூச் சினை தயாரித்தல் என்று பல நிலைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்
பி.பி.சி

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக சர்வதேசதொழில் ஸ்தாபனம், மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நலன் சார்பில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து, சர்வதேச தொழில் ஸ்தாபனம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடுசெய்ய உத்தேசித்துள்ளதாக, மக்கள் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான இ.தம்பையா பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.   

அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில் 2016ம் ஆண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பாக செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன தொழிலாளர்களுக்கு பாரிய அநீதியை இழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2016ம் ஆண்டு செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ம் திகதியோடு முடிவடைகின்ற நிலையில் புதிதாக மேற்கொள்ளப்படுகின்ற கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது தொழிலாளர்களுக்கான நிலுவை தொகை, தொழிலாளர் நலன் சார்ந்த விடயங்களை பெற்றுக்கொடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்றார்.

எனவே 2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அடிப்படைக் கூட்டு ஒப்பந்தத்திலும், உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் சட்டத்தரணி இ.தம்பையா வலியுறுத்தினார்.  

Tuesday, June 26, 2018


சுகாதாரத் துறை தேசிய மயமாக வேண்டும்

பெருந்தோட்ட மக்களின் சுகாதாரத்துறையை மேம்படுத்த வேண்டுமெனின், பெருந்தோட்டப்பகுதி கல்வி முறை தேசிய மயமாக்கப்பட்டதைப் போன்று, சுகாதாரத்துறையும் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென கண்டி மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.பி.சிவபிரகாசம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது, பெருந்தோட்டத் துறையின் தரக்குறைவான சுகாதார நிலை, காலனித்துவ யுகம் தொடக்கம், தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்டது வரை முன்னேற்றகரமில்லாத  நிலைமையில் காணப்படுகின்றது. இதன் காரணமாக, பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை, பெருந்தோட்ட மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

தேசிய மயமாக்கப்பட்ட பெருந்தோட்டக் கல்வித் துறையைப் போன்று, பெருந்தோட்டத் துறையின் மருத்துவ சுகாதாரத்துறையையும் தேசிய நீரோட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் புறம் தள்ளப்பட்டுள்ள பெருந்தோட்டச் சமூகத்தினர்  எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும். 

நாட்டில் தேசிய சுகாதார சேவையிலிருந்து புறம் தள்ளப்பட்டுள்ள இச்சமூகம் இதுவரை காலமும் தோட்டப்பகுதிகளை நிர்வகிக்கும் கம்பனிகள, தனியார் தோட்ட நிறுவனங்கள், அரச தோட்ட நிர்வாகிகள், அபிவிருத்திச் சபை போன்றவற்றின்  ஊடாக முன்னெடுக்கப்படும் சுகாதாரத்துறை தரம் குறைவானவை. 

கடந்த கால அரசாங்கங்கள் பெருந்தோட்டச் சமூகத்தினரின் அடிப்படை வசதிகளை உயர்த்துவதற்காக முயற்சிகளை கொண்டிருந்தாலும், அது முழுமையடையவில்லை. 

Sunday, June 17, 2018

இரத்தினபுரியில் மண்சரிவு அபாயத்தில் கலபட தமிழ் வித்தியாலயம்

இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழையின் காரணமாக கலபட தமிழ் வித்தியாலம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் தினேஸ் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி கலபட பிரதான வீதியில் இருந்து 300 மீற்றர்  உயரத்தில்  அமைந்துள்ள  கலபட தமிழ் வித்தியாலய சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதோடு பாடசாலைக்கருகில் இருக்கும் மண் திட்டுக்கள் தொடர்ந்து இடிந்து வருவதாகவும் தெரிவித்தார். 

மேற்படி பாடசாலையில் முதலாம்; வகுப்பு தொடக்கம் ஒன்பதாம் வகுப்புவரை 162 பாடசாலை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இங்கு அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மேற்படி பாடசாலையில்  எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

மழை காலங்களில் பாடசாலையை நடாத்த முடியாத சூழ்நிலையால் மழை காலங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றார்கள்.

சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும் பாடசாலை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி கிடைக்காத காரணத்தால் மேற்படி பாடசாலையை அமைப்பதற்கு அப்புகஸ்த்தன்ன தோட்ட கம்பனிக்கு சொந்தமான கலபட தோட்டப் பிரிவில் தோட்ட கம்பனி காணி வழங்கப்பட்டிருந்தது. எனினும் M.B.R.O பரிசோதனையில் அந்த காணியில் பாடசாலை அமைப்பதற்கு தகுதியற்றது என தெரிவிக்கப்படுகிறது.

எனவே மேற்படி பாடசாலை அமைப்பதற்கு தேவையான காணியை பெற்றுதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிபர் மேலும்  தெரிவித்தார்.

Wednesday, June 13, 2018

தொழிலாளர் குடியிருப்பு தீயில் எரிந்தது

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று (13) காலை 09.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 (லயன் தொகுதியில்)தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த வீடுகளில் குடியிருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீயில் சிக்காமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. 

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Tuesday, June 12, 2018

சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

மலையகத்தில் மீண்டும் நிலவும் சீரற்ற வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய பலத்த காற்று, அதன் விளைவாக ஏற்படும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியிலுள்ள மின் கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் (09) இரவு முதல், அப்பகுதிக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதி மக்கள், பல்வேறுப்பட்ட சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதோடு, வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றால், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, நுவரெலியா கந்தப்பளையை அண்மித்த, ஹைபொரஸ்ட், பிரம்லி, லொரிஸ்டன், அல்மா கிரேமன், சீட்டன், குருந்தோயா உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட தோட்டப்பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக வீசிய கடும் காற்றால், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் கடந்த 4ஆம் திகதி முதல், அந்தப் பிரதேசங்களில் மின்விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிக்கோயா பகுதியில் விசிய கடும் காற்றின் காரணமாக, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில், பாரிய மரம் ஒன்று நேற்று (10) முறிந்து விழுந்ததில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்ததென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
அத்துடன், மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்துள்ளமையால், டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதென அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை, தொடர்ந்து அமுலிலிருப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில், இந்த அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருப்பதாக, நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால், சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும், கேன்னியோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் நேற்றுத் திறக்கப்பட்டன. இதேவேளை, நோட்டன் பிரிஜ் விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் நேற்று திறக்கப்பட்டன. காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கமும், வழிந்தோடும் நிலையை எட்டியுள்ளதெனத் தெரிவிக்கப்படட்டுள்ளது.
கடும் மழை காரணமாக ஹட்டன், வட்டவல பகுதியில் தாழ் நிலப் பிரதேசங்களில் அமைந்துள்ள வீடுகள் பல, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை ஹட்டன் டன்பார் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், அந்த வீடு முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது.
நன்றி- தமிழ் மிரர்

Sunday, June 3, 2018

மண்சரிவு அபாயத்திலுள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தற்போது ஆரம்பித்துவிட்டது. இலங்கையில் இயற்கை அனர்த்தமென்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது மலையகமாகவே இருக்கும். குறிப்பாக மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட், டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளுகிறது மலையகம். இக்காலங்களில்தான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை மலையக மக்களுக்கு ஏற்படுகிறது.

எனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நூற்றுக்கு எழுபத்தைந்து சதவீதமான பெருந்தோட்டக் குடியிருப்புகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதால் மலையகம் இவ்விடயம் குறித்துப் பெரிதும் அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களே பெரிதும் அச்சுறுத்தலுக்குட்பட்டுள்ளன.

பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட லயன் காம்பிராக்கள் ஒன்று மலையுச்சியில் அமைந்திருக்கும். அல்லது மலையடிவாரத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான மலைப் பாங்கு பகுதிகளிலும் சரிவான பகுதிகளிலும் தான் தற்போது மண்சரிவு ஏற்படுகிறது. மண்ணரிப்பு, முறையான நீர் வழிந்தோடக்கூடிய கான் வசதிகள் இன்மை, மரங்கள் தரிப்பு என இயற்கையும் செயற்கையும் கலந்ததான பௌதீகவியல் குளறுபடிகளினால் சிறு மழையென்றாலே உரு கொண்டு ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் வெகு சுலபமாகவே இடப்பெயர்ச்சி செய்கிறது.

இதனால் இப்பகுதிகளில் வாழ்விடங்களைக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பயத்தோடும் பீதியோடும் எந்த நேரமும் லயக்காம்பிராவை விட்டு வெளியேறத் தயாராயிருப்பது வழமையான ஒன்று. இம்மக்கள் ஏறக்குறைய 200 வருடங்களாக குடியிருந்துவரும் லயக் காம்பிராக்கள் மனித வாழ்வுக்கு அருகதையற்ற நிலைக்குப் போய்விட்டது. கூரைகள், சுவர்கள் பலவீனமடைந்துபோய் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் கசிவினால் அடித்தளமே ஆட்டம் கண்டு போயுள்ளது. நிலச்சரிவு என்றாலும் மின்சார ஒழுக்கு என்றாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியாத அளவுக்கு அமைவிடம் சிதிலமடைந்து போய்விட்டது. இதனைச் சீர்செய்வதென்பது பயனற்ற முயற்சி. இதனாலேயே இவர்களுக்குத் தனித்தனி வீடுகள் தேவை என்ற கோஷம் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஆனால் இதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம் பெறுகின்றன. பல இடங்களில் வீடமைப்புக்காக நாட்டப்பட்ட அடிக்கற்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டிருக்கின்றன. இன்னும் சில இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கப்படாமல் காடு மண்டிக்கிடக்கின்றன. வேறு சில பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கையை எதிர்நோக்கியிருக்கும் (தற்போது லயன் காம்பராக்கள் அமைந்துள்ள பகுதி) பிரதேசங்களுக்கு அருகிலேயே புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். உண்மையில் தோட்ட மக்களின் வீடமைப்புக்காக பாதுக்காப்பான காணிகளை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் பொறுப்பற்ற நிலையிலேயே நடந்து கொள்கின்றன. அவை ஒதுக்கும் இடங்கள் குறித்து அவதானிகள் மத்தியில் திருப்தியில்லை.

இதே நேரம் தனிவீட்டுத் திட்டம் ஆமைவேககத்தில் நடைபெற்று வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு இம்மக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியே வாழ வேண்டிய துர்ப்பாக்கியம். இவ்வாறான காரணங்களினால் லயக்காம்பிராக்கள் முற்று முழுதாகவே மக்கள் வாழக்கூடிய அந்தஸ்தை இழந்துவிட்டன. ஆனால் இதிலிருந்து மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
தனி வீட்டுதிட்டங்களில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்நோக்கியவர்களுக்கும் மின் கசிவு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை என்கிறார் அமைச்சர் திகாம்பரம். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் இவ்வாறு பாதிக்கப்பட்ட மலையக மக்களில் பலர் இன்னும் தற்காலிக கூடாரங்களிலும் கைவிடப்பட்ட தொழிற்சாலைகளிலும் அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அண்மைய மழையால் தற்காலிக கூடாரங்களிலும் கூட நீர் பாய்ந்து சேதமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணப் பொருட்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படுவது பற்றி அவதானமேதும் செலுத்தப்படவில்லை என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையாக இருக்கிறது. மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தின் பின் மலையக அரசியல்வாதிகளின் செயற்பாடு குறித்து விமர்சனங்கள் எழவே செய்தன. நுவரெலியா மாவட்டத்தில் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் பாதிப்புகள் ஏற்படவே செய்தன. தவிர, வருடாவருடம் நிகழும் இவ்வாறான காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் எதுவுமே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவில்லை.

ஒவ்வொரு வருடமும் இயற்கை அனர்த்த அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டிய அபாய நிலையில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் மாற்று குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமான பிரச்சினையாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் தற்காலிக உதவிகளேயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடைய முடியாது. அரசின் நிவாரணங்களே அவசியமானவை. இந்நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் நியாயமாக கிடைக்க வேண்டியவை. ஆனால் அந்த நிவாரணங்கள் மலையக மக்களை சென்றடைவதில் உரிய அக்கறை காட்டத்தான் யாருமே இல்லை.

அனர்த்தம் பற்றிய விபரங்களை ஆளுக்காள் சேகரித்தாலும் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படுவதில் நியாயமாக நடந்து கொள்வதைத்தான் காணமுடியவில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று பொதுவாக கூறிவிட்டு நழுவிக்கொள்ளும் நிலையிலேயே அரச அதிகாரிகளின் போக்கு காணப்படுகின்றது. காலி, களுத்துறை, மாத்தறை, பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் வருடாவருடம் இயற்கை அனர்தங்களுக்குட்படும் நிலையில் இதனால் அதிக இழப்புகளை மலையக மக்களே சந்திக்க வேண்டி நேரிடுகிறது. இவர்களின் வாழ்விடம் அமைந்துள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாகவும் சரிவுகளாகவும் இருப்பதால் மண்சரிவு, மரம் சரிந்து முறிந்து விழல், இடி, மின்னல் தாக்கம் போன்றவற்றின் தாக்கங்களால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாதபடி பெருந்தோட்டக் கட்டமைப்பு முகாமைத்துவம் உள்ளது.

இவர்களை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் இடங்களிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற எந்தத்திட்டமும் தோட்டக் கம்பனிகளிடம் இல்லை. அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்த முன்வந்தாலும் தேவையான, பாதுகாப்பான இடங்களை ஒதுக்கித் தருவதில் தோட்டக் கம்பனிகள் போதுமான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மீரியபெத்தை மக்களுக்கு பாதுகாப்பான இட ஒதுக்கீடு செய்வதில் தோட்ட நிர்வாகம் காட்டியிருந்த அலட்சியம் பற்றி அரசு அதிகாரிகள் கூட விசனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவேதான் அனர்த்தம் என்று வந்துவிட்டால் அனைத்தையும் இழந்து அம்போவாகி விடுவோமோ என்று மக்கள் அச்சப்படும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையைப் போக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதோடு மீண்டும் இவ்வாறன அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்காதபடி பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள 4000 வீடுகள், வழங்க உறுதியளித்துள்ள 10,000 வீடுகள் இந்த அரசாங்கத்தின் 25,000 தனித்தனி வீட்டுத் திட்டங்கள் மலையகத்துக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதற்கான முன்னகர்வுகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான வீட்டுத் திட்டங்களில் அனர்த்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்போர், ஆளாகலாமென எச்சரிக்கப்பட்டிருப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படுவது அவசியமே. ஏனெனில் அதிக மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் குடியிருப்புகளை விட்டு வெறியேற அறிவுறுத்துவதும் மழை குறைந்ததும் மீண்டும் பழைய இடங்களுக்கே திருப்ப பணிக்கப்படுவதுமே வழமையாக நடக்கும் விடயமாக இருக்கிறது. இடைக்கால தங்குமிடங்களாக பாடசாலை, கோவில், சனசமூக நிலையங்களே பயன்படுத்தப்படுகின்றன.
அதிகாரிகள் மட்டத்தில் எச்சரிக்கை விடுவதோடு அவர்கள் பணி முடிந்துபோய் விடுகின்றது. ஆனால் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமான மாற்று ஏற்பாடுகள் பற்றி எவருமே கவனமெடுப்பதில்லை. இதனால் மக்கள் மழை ஆரம்பித்துவிட்டால் பயத்துடனும் பதட்டத்துடனும் நாட்களை கழிக்க வேண்டியேற்படுகின்றது. இது குறித்து நியாயமாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனர்த்த அபாயங்களை எதிர்நோக்கியிருக்கும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று கூறப்படுகின்றது. இது துரிதப்படுத்தப்படுவது முக்கியம். கடந்த வாரம் புதிதாக அமைக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகள் மண்சரிவு, மின்கசிவு விபத்துகளினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்வரும் காலங்களில் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவும் பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே உசிதமானது. இல்லாவிடில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் அகதி கோலம்பூண்டு அலைகழிப்புக்குள்ளாகும் அவலம் மட்டும் அகலப்போவதே இல்லை!

நன்றி- தினகரன்