Saturday, October 26, 2013

அரசாங்கம் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து விட்டது 

மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகளை கட்டிக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் மேடைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியளித்தார். ஆனால் தேர்தல் முடிந்ததும் மத்திய மாகாண தமிழ் கல்விக் அமைச்சு பறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் இரட்டை வேடம் தெட்டத் தெளிவாகியுள்ளது  ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
 பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மலையக மக்களின் வாக்குகளை வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பிக்கொண்ட இந்த அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியினால் மலையகத்தவர்களுக்கு வழங்கப்பட்ட மாகாண தமிழ்க் கல்வி அமைச்சினை பறித்து அவர்களை அவமதித்துள்ளது. எனவே மக்கள் இந்த அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை உணர்ந்து எதிர்வரும் தேர்தல்களில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார் அவர் 

இது தொடர்பாக ரவி கருணாநாயக்கா மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி சகல இன மக்களும் பயன் பெறும் வகையில் எவ்வித பாரபட்சமும் இன்றி அதனை செயற்படுத்தியது குறிப்பாக மலையக மக்களின் நலன்களையும் அவர்களின் கோரிக்கைகளையும் செவிமடுத்து மதிப்பளித்தது. அதன் விளைவாகவே தமிழ்க் கல்வி அமைச்சென்ற ஒன்றை உருவாக்கி ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதனை தமிழர்களுக்கு வழங்கியது.

இவ்வாறு மலையக தமிழர்களை மதித்து அவர்களுக்காக வழங்கப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சின் ஊடாக அவர்கள் கணிசமான முன்னேற்றத்தினையும் அடைந்துள்ளார்கள் என்பதை யாவரும் அறிவர். ஆனால் இந்த அரசாங்கம் அந்த அமைச்சினை பறித்து தந்திரோபாயமாக தமது காய் நகர்த்தலை மேற்கொள்கிறது.

மலையக மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு அமோக ஆதரவளிப்பவர்கள். எனவே அவர்களின் மனோநிலையை நன்கு அறிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியோரின் தேர்தல் பிரசார மேடைகளில் ஏறி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். அதன் மூலமாக மத்திய மாகாண தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்கு திசை திருப்பப்பட்டன.

இவ்வாறு ஜனாதிபதி பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியமையினாலேயே இம்முறை மத்திய மாகாணத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஒன்பது தமிழ் உறுப்பினர்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

தமது நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பிலேயே இம்முறை மலையக மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அரசாங்கம் வெற்றி பெற்றதும் தமது சுயரூபத்தை காட்டியுள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவது இந்த அரசாங்கத்துக்கு புதிதான விடயமல்ல. ஆனாலும் இம்முறை மலையக மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு புதிய யுக்தியை கையாண்டிருக்கிறது அவ்வளவுதான். எனவே மலையக மக்கள் மீண்டும் இந்த அரசாங்கத்தை நம்பி ஏமாறக்கூடாது.

நாட்டின் தேசிய பிரச்சினை விடயத்தில் இதே விதமான செயற்பாட்டினையே இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வினை வழங்கத் தயார் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது 13ஆம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை கூட பறிப்பதற்கே முயற்சிக்கிறது.

இவ்வாறு கபடத்தனமாக செயற்பட்டு வரும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கோ வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கோ எவ்வித நன்மையும் செய்யப்போவதில்லை என தெரிவித்தார்

Wednesday, October 23, 2013

வரவு–செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீட்டுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் -ஆ. முத்துலிங்கம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான முன்மொழிவை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆ. முத்துலிங்கம் தெரிவித்துள்ளார். 

அது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி, மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயத்தினை அதி முக்கிய கோரிக்கையாக முன்வைத்து மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தங்கை கொடுக்க வேண்டும். இந்த விடயத்தில் எத்தகைய தயக்கத்தினை காட்டாமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். 

இந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசும் தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் பாகுபாட்டையும் புறக்கணிப்பையுமே மேற்கொண்டு வந்திருக்கின்றது. இந்த நாட்டின் மேம்பாடுகளை கருத்திற்கொண்டு பெருமளவிலான அந்நிய செலாவணியை தோட்டத் தொழிலாளர்களே பெற்றுக்கொடுத்து வருகின்றனர். அத்தகையவர்களுக்கு உரிய இடத்தை இந்த நாட்டை ஆட்சி செய்த அரசுகள் வழங்கவில்லை. 

அண்மைக்காலமாக ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணியில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட போதும் அவ்வீடுகளுக்கான உரிமை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அப்பிரச்சினை தொடர் கதையாக நீண்டு செல்கிறது. 

கடந்த வருடம் ஜனாதிபதியினால் முன்ழொழியப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் மலையகப் பெருந்தோட்டங்களின் 35 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதியினால் கூறப்பட்டது. 

இந்த விடயமாக ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்த மகஜரில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குல நிலம் தானும் சொந்தமாக இல்லாதுள்ளது. ஆகையினால் பகிர்ந்தளிக்கப்படும் தரிசு நிலங்களில் தோட்டத் தொழிலாளர்களையே உள்ளடக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கின்றோம். 
கடந்த மத்திய மாமகாண சபைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஜனாதிபதி காணி மற்றும் வீட்டுரிமை விடயத்தில் தோட்டத் தொழி;லாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென்று தனது நிலைப்பாட்டினை தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றி வைக்கும் வகையில் நுவரெலியா பெருந்தோட்ட மக்கள் தமது வாக்குகளினால் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர். 

பெருந்தோட்டங்களின் எதிர்காலம் கேள்விகுறியாக இருக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களின் காணி மற்றும் வீட்டுரிமை கோரிக்கையானது உறுதிப்படுத்தப்படல் வேண்டும். 
ஆகையினால் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கவாதிகள் அனைவரும் முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு பூரண அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அதன் மூலம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்ட அறிக்கையில் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பான விடயம் உள்ளடக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியில் பங்காளிகளாக இருக்கும் மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் மேற்படி விடயங்கள் தொடர்பாக கூடிய அக்கறை காட்ட வேண்டும். இது தொடர்பாக தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதும் அவசியமாகும் என்றார்.

Monday, October 21, 2013

திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்

மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





Sunday, October 20, 2013

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ; ரூபா பெருநாள் முற்பணம் வழங்க வேண்டும்- ஆர். யோகராஜன்

சம்பள உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்காக பத்தாயிரம் ரூபாய் பெருநாள் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். 

2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாட் சம்பளமாக 405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு பெருநாள் முற்பணமாக 4500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இன்று தோட்டத் தொழிலாளி ஒருவர் 620 ரூபாய் நாட் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெருந்தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 405 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 2011 ஆம் ஆண்டு 515 ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 620 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. எனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 53 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளிகளின் 53 சதவீத சம்பள அதிகரிப்பிற்கேற்ப 7500 ரூபாய் பெருநாள் முற்பணத்தினை வழங்கலாம். ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கமையவே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டவர்கள் இந்த தீபாவளி முற்பணத்தினை தற்போதைய கால சூழலுக்கேற்ப பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென புரியவில்லை.

மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழையினால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தையே அந்த மாதங்களில் பெற்றனர். ஆகையால், அப்போது அவர்கள் கடன்களைப் பெற்று தமது செலவுகளை சமாளித்தனர். இவ்வாறான நிலையில் பெருநாள் முற்பணமும் குறைவாக கிடைத்தால் அவர்களால் தீபாவளியை கொண்டாட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

Thursday, October 17, 2013

தொழிலாளர்களுக்குரிய 100 கோடி ரூபா கோரி சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார். 

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம்  அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாவனைக்கு உகந்ததாக இல்லாத தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத்து தருமாறு மக்களால் கோரிக்கை மனுவொன்று நுவரெலிய பிரதேச சபை தலைவருக்கு வழங்கப்பட்டதனடிப்படையில் 

நுவரெலியா பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மைதான புனரமைப்புக்கு மண் நிரப்பப்பட்டது. 

அத்தோடு, மைதானத்தில் வடிகால் அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணி முற்றுபெற்றுள்ளது. 

வீதி அதிகார சபை மூலம் மைதானத்தில் நிரப்பப்பட்ட மண் சரியான முறையில் பரப்பப்படாத காரணத்தால் இரண்டு வருடமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ககடிதம் வழங்கப்பட்டதையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 13-10-2013 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு 15,80000 ரூபா செலவிட்டதாக கூறி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காசோலை பெற முயற்சி செய்துள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியதையடுத்து  20 பேர் கொண்ட தோட்ட இளைஞர் குழு நேரடியாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சென்று செயலாளரை சந்தித்து குறித்த உறுப்பினருக்கு காசோலை வழங்க வேண்டாம் என கோரப்பட்டதால் காசோலை வழங்கப்படவில்லை. இந்த மோசடி செயலை கண்டித்தே தோட்டத் தொழிலாளாகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கருத்து வெளியிட்ட நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் நாகராஜ், 02 வருடங்களுக்கு முன்பு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இதனை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததால் 05 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதனையே பொறுப்பேற்று வேறு ஒரு நபருக்கு வழங்கியதாகவும் 15,80000 இலட்சம் ரூபா என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தனக்கும் இதற்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறிப்பிட்டார்.

Tuesday, October 15, 2013

சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவுட்பட்ட குயில்வத்தை கீழ் பிரிவு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த கணகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி  சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான இவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கா நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். இச் சம்பவம் நேற்றுக்காலை(15-10-2013) காலை 9.00 மணிக்கு நிகழ்ந்துள்ளது. 
இது தவிர இரவு நேரங்களில் இப்பிரதேச தோட்டப்பகுதிகளுக்குள் செல்லும் சிறுத்தை அங்குள்ள நாய்களை பிடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.