Tuesday, March 29, 2016

1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர்

சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்தக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு அசிரியர் நியமனம் வழங்குவது குறித்து நேற்று(28) சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே  தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 1,500 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு, மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு பட்டதாரிகளிடமிருந்து  விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2016-04-04 திகதி தமது பட்டத்தை முழுமையாக முடித்துக்கொண்ட, சப்ரகமுவ மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆங்கில ஆசிரியர் குறித்து உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பாடநெறியை டிப்ளோமா பாடநெறியை முழுமையாக முடித்துக்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமென சப்ரகமுவ மாhகண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

மலையகத்தில் தேசிய வீடமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்

பெருந்தோட்டப் புறங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினூடாக வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தில் நேற்று(24) இடம்பெற்றது. மலையக பெருந்தோட்டப் புறங்களில் கடந்த காலங்களில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடனுதவி மூலமாக நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள், முழுமையாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் உள்ளன. அவ்வாறு நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படாத வீடுகளை முழுமைப்படுத்துவதற்கான கடனுதவிகளை வழங்குவது தொடர்பிலும் முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மேலதிக கடன் வழங்கி வீடுகளை மேலும் விரிவுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

இதுவரை தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஏறத்தாழ 3900 வீடுகளுக்கு 'பசுமைபூமி' வேலைத்திட்டத்தின் கீழ், காணி உரித்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, தேசிய ரீதியில் கடனடிப்படையில் 25 வீடுகளைக் கொண்ட 200 கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டபுறங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு நிர்மாணிக்கப்படவிருக்கின்ற ஒரு தொகுதி(25வீடுகள்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 250,000 ரூபாய் கடன் வழங்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக 250,000 ரூபாய் இனாமாகவும் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தினூடாக நிர்மாண பணிகளுக்கான நில தயார்படுத்தல், தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் அறிக்கை பெறல் போன்ற ஆரம்பக்கட்ட வேலைகளுக்கு 90000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக குறித்த வீடமைப்பு தொகுதிகளுக்கு மின்சாரம், பாதை வசதிகள், குடிநீர் மலசலகூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத் தொழிலாளர்கள் அல்லாத அரச சேவையாளர்கள், தோட்ட சேவையாளர்கள், தனியார்த்துறை சேவையாளர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தகைமைக்கேற்றவாறு கடனடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலும் அதற்கான உதவிகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான ஒன்றிணைந்த வேலைத்திட்டத்துக்காக தேசிய வீடமைப்பு அமைச்சும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சர்ப்பித்து அனுமதி பெறுவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா, அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பாலசூரிய, அதிகார சபையின் பொதுமுகாமையாளர் எச்.எம்.தயானந்த உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நன்றி- தமிழ் மிரர்