Wednesday, October 19, 2016

அரசியல் பினாமிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும்

தீக்குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர், சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்களை திசைதிருப்ப முயல்கிறார். தமது பதவிகளையும் பட்டங்களையும் பாதுகாத்து, சுகபோகங்களை அனுபவிக்க நினைக்கும் அரசியல் பினாமிகளுக்கு, மலையகம் மிக விரைவில் பாடம் கற்றுத்தரும்” என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கூறியுள்ளது. 
இது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உப தலைவர்களில் ஒருவருமான ஏ.பிலிப்குமார் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  
“ஒளிவு மறைவின்றி, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதவாறு தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வுக்கு இ.தொ.கா வழிவகுத்தது. 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை, இ.தொ.கா முன்னெடுத்திருந்தது. மற்றவர்கள் நினைப்பதைப் போன்று, இது விடயத்தில் இ.தொ.கா நாடகமாடவில்லை. 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது, சமூகநய வஞ்சகர்களுக்குப் பேரிடியைக் கொடுத்திருக்கின்றது. முதலாளிமார் சம்மேளனத்திடம் பேரம் பேசுவதனூடாக, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே, 1,000 ரூபாய் சம்பள உயர்வை இ.தொ.கா கோரியிருந்தது.  
இதனை, மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, இலங்கைத் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இவ்விடயத்தில் மீண்டுமொரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்திருப்பது வேடிக்கையாகும். 
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர், மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், ஒவ்வொரு பேச்சுவார்த்தைக்கும் முட்டுக்கட்டையாக இருந்தார். 
இடைக்காலக் கொடுப்பனவை மக்களுக்கு வழங்கும் நோக்கில், ஒரு நகைச்சுவைக் கூத்தை இரண்டு மாதங்கள் ஓட்டிமுடித்த அவர், எம்மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்தில் நியாயமாகும்?  
இழுத்தடிப்புக்கும் இழுபறிக்கும் காரணமாக அமைந்த பொதுச் செயலாளர், எம்மை பொறுப்புக்கூற வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றார். முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் பழக்கம், இ.தொ.காவிடம் இல்லை.  
ஒரு விடயத்தை இ.தொ.கா எடுத்துக்கொண்டால், அதை நிறைவேற்றியே தீரும். நிலுவைச் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கையை இ.தொ.கா எடுக்கும். குறித்த தொழிற்சங்கமொன்று, இதனைக் குழப்பியடிக்காமல் இருந்திருந்தால், நிலுவைக் கொடுப்பனவையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம். 
மலையக அரசியல் பாரம்பரியங்களுக்கு அப்பால் செயற்படும் நடவடிக்கைகளாலும் வெறும்வாய்ச் சவாடல்களாலும் பூச்சாண்டி காட்டுவதாலும், மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை காண முடியாது.  
கூட்டுப்பேரம் பேசும் தன்மையை புரிந்து கொள்ளாதவர்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள்? இந்த 1,000 ரூபாயிலிருந்து 730 ரூபாய் கிடைக்கப்பெற்றது வரவேற்கக்கூடிய விடயமே. அதை விடுத்து, அதனை வியாக்கியானப்படுத்துவதோ அல்லது கொச்சைப்படுத்தி பேசுவதோ, தொழிலாளர் வர்க்கத்தை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமானதாகும். 
இது இவ்வாறிருக்க, கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தைக்கு ஓர் அங்கமாக, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்வாங்கப்பட்டிருந்தபோதும், அதனையும் தாண்டி அவர் பேசியிருப்பது, தொழிற்சங்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மீறி இருப்பதுதான் உண்மை. இதுவிடயத்தில் அத்தொழிற்சங்கம், சட்ட நடவடிக்கையில் ஏன் ஈடுபடக் கூடாது என, இ.தொ.கா கேள்வி எழுப்புகின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி- தமிழ் மிரர்

ரூ.500உடன் இரண்டு வருடங்களுக்கு மாரடிப்பதா

தோட்டத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களே, 110 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கேனும் காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ள விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி, “தொழிற்சங்கங்கள், தமது கடமைகளை உணர்ந்து செயற்படத் தவறியுள்ளன” என்றும் சாடியுள்ளார்.  
“இன்றுள்ள வாழ்க்கைச் செலவுக்கு, 500 ரூபாய் என்பது எவ்வகையிலும் போதாது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு, எவ்வித சம்பள அதிகரிப்புகளுமின்றி வாழும் தொழிலாளர்கள், வெறும் 500 ரூபாயில் எவ்வாறு வாழ்க்கையை ஓட்டப்போகின்றனர் என்பது கேள்விக்குறியே” எனவும் அவர் கூறியுள்ளார்.   
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   
“கூட்டொப்பந்த விவகாரத்தில், 730 ரூபாய்க்கு இணக்கப்பாடு எட்டப்பட்டு கூட்டொப்பந்தமும் கைச்சாதிடப்பட்டுவிட்டது. 2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிடைந்த கூட்டொப்பந்தம், கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்தது.   
தொழிற்சங்கங்களோ, முதலாளிமார் சம்மேளனமோ, அரசாங்கமோ இதனை கவனத்தில்கொள்ளத் தவறியதன் காரணமாகவே, தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.  
இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக, முதலாளிமார் சம்மேளனத்துக்கு, கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது.   அத்துடன், வீதிகளை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதனால், அரச மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கும் பல இலட்சம் ரூபாய் நட்டமேற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் முதலாளிமார் சம்ளேமனமும் தொழிற்சங்கங்களுமே காரணம்.  
2015ஆம் ஆண்டுக்கான கூட்டொப்பந்தம் நிறைவடைந்தவுடனேயே, புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் இடபெறாது தவிர்த்திருக்கலாம். தொழிற்சங்கங்களும் தமது கடமைகளை உணர்ந்து செயற்படவில்லை. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நல்லாட்சி அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.   
ஆரம்பத்தில் 1 சதத்தைக்கூட சம்பள உயர்வாக வழங்க முடியாது என்று கூறிய முதலாளிமார் சம்மேளனம், 110 ரூபாயையேனும் சம்பள உயர்வாக வழங்குவதற்கு முன்வந்தமைக்கு தொழிலாளர்கள் கொடுத்த அழுத்தமே காரணமாகும்” என்றார்.   
“1,000 ரூபாய்க்கும் குறைவான தொகையையே தொழிலாளர்கள் தற்போது சம்பளமாக பெற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன், தொழிலாளர்களின் சம்மதமின்றியே கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தமானது, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இதற்கிடையில், எவ்விதமான சம்பள உயர்வும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வெறும் 500 ரூபாயில், இன்றுள்ள வாழக்கைச் செலவைகூட கொண்டு நடத்தமுடியாத தொழிலாளர்கள், இன்னும் 24 மாதங்களுக்கு இந்தத் தொகையுடன் எவ்வாறு வாழ்க்கை நடத்தபோகின்றார்கள் என்பது கேள்விக்குறியே” என அவர் மேலும் கூறியுள்ளார்.

புதிய ஒப்பந்தத்தை ஜே.வி.பி எதிர்க்கின்றது

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய தொழிற்சங்கங்கள், இறுதியில் 730 ரூபாயுடன் வாயை மூடிக்கொண்டன. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி, வன்மையாகக் கண்டிக்கின்றது’ என ஜே.வி.பியின் பெருந்தோட்டத் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்தின தெரிவித்தார்.  
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,   
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு, அவர்களது போராட்டங்களும் மக்கள் சக்தியுமே காரணம். இந்நிலையில், 730 ரூபாயை பெற்றுக்கொடுத்தவர்கள், தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு வந்துள்ளனர்.  
2014ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவை முன்னெடுக்க,நா​​ளொன்றுக்கு 1,450 ரூபாய் தேவையென எமது சங்கம் கூறியிருந்தது. ஆனால், 2016இல் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு 1,500ரூபாயும் போதாது.  
இந்நிலையில், 1,000 ரூபாயை கோரிக்கையாக முன்வைத்துவிட்டு இறுதியில் 730 ரூபாய்க்கு கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்”  என்றார்.  
நன்றி- தமிழ் மிரர்

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன

தொழிற்சங்கங்கள் 730 ரூபாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.   
50 ரூபாய் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக 730 ரூபாய் சம்பளத்துடன் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப்போதிலும், அத்தொகைப் போதாது ‘1,000 ரூபாயே வேண்டும்’, ‘இரத்தத்தை உறிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு’ ‘தொழிலாளர் உழைப்பை காட்டிக்கொடுக்கதே’ ‘தீபாவளியா அல்லது தீபாவலியா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.  
மஸ்கெலியா சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஸ்கெலியா வீதி ஒல்டன் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதேவேளை, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை ஆலயத்தின் முன்றலில், சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை கடந்த 18 மாதங்களாக இழுத்தடித்த தொழிற்சங்கங்கள், இறுதியில் வெறும் 730 ரூபாய்க்கு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  
தொழிற்சங்க பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தாம், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது திண்டாடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

நன்றி- தமிழ் மிரர்