Thursday, August 11, 2016

தொழிலாளர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ள 2,500 ரூபா

அரசாங்கத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2500 ரூபா  தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குனருமான எம்.வேங்குருசாமி இ.தொ.கா தலைமை காரியமான சௌமியபவனில் இடம்பெற்ற தோட்டத் தலைவர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்ற மலையக தொழிற்சங்கங்களோ, அல்லது இதர சமூக அமைப்புக்களோ எதுவாக இருந்தாலும் மலையக சமூகத்திற்காக பொறுப்பு கூறும் கடையிலிருந்து தவறு விடுவார்களேயானால் வரலாற்றில் மேலும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். 

மலையக சமூகம் நேற்று இன்றல்ல இரண்டு நூற்றாண்டுகளை கொண்ட சமூகமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது. 2,500 ரூபாவை பெற்றுக்கொடுத்துவிட்டோம் என மார்தட்டிக் கொள்பவர்களின் அறிக்கை போர்களும் செய்தியாளர்களின் மாநாடுமே திருப்தியை கண்டதே தவிர வேறொன்றுமில்லை. 

15,16 நாட்கள் வேலை செய்தாலே போதும் 2,500 ரூபா தொழிலாளர்களுக்கு கிடைத்துவிடும் என்று வாய் கூசாமல் கூறி வருபவர்கள் வேலை செய்த நாட்களுக்கு மாத்திரமே நாளொன்றுக்கு 100 ரூபா வழங்கப்படுகிறது. அதுவும் அரசாங்கத் தோட்டங்களில் இத்தொகை வழங்கப்படுவதில்லை. எவ்வாறாயினும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற இக் கொடுப்பனவானது பெருந்தோட்ட மக்களை மேலும் ஏமாற்றி அவர்களை கடனாளிகளாக கையேந்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது. 

இ.தொ.கா தனது இலட்சியத்திலிருந்து விலகிச்செல்லாது தொழிற்சங்கங்களுக்கு மூலாதாரமாக விளங்கிய அமரர் எஸ்.தொண்டமானின் கொள்கைப்படி தொழிலாளர்களை நட்டத்தில் வீழ்த்தாமல்  அவர்களது வருமானத்துக்கு தடையில்லாதவாறு சாத்வீக போராட்டங்கள் மூலமாக பிரச்சினைகளை வென்றெடுக்கும். 1984ம் ஆண்டு தொட்டமானின் அணுகுமுறைப்படி பிரார்த்தனை இயக்கம் முழு மலையக தோட்டங்கள் அனைத்திலும் தோன்றியது. மூன்று நாட்களுக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜாவுரிமை விடயத்தில்  அமரர் தொண்டமான் வெற்றி கண்டார். 

கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வை இ.தொ.கா பெற்றுக்கொடுக்கும். பிரச்சினை என்றிருந்தால் அதற்கான தீர்வு கட்டாயம் உண்டு. 2,500 ரூபா விடயத்தில் அவர்கள் கூறியபடி தொடர்ந்து பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

தொழிலாளர் பிரச்சினையில் ஒருமித்த கொள்கையே அவசியம்

மலையகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களின உரிமைகளை பெற போராடும்போது ஒருமித்த கொள்கையுடன் செயற்பட வேண்டுமென அஸீஸ் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விவகாரத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கைச்சாத்திடப்படும். ஆனால் கடந்த 2015 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் அது நிறைவடைந்து அடுத்த இரண்டாண்டுக்கான புதிய ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. 

இதற்கான காரணம் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லாமையே. தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தில் கொள்கைகளை பற்றி சிந்திக்காமல் தோட்டத் தொழிலார்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் ஒருமித் கொள்கையுடன் செயற்பட்டால் இதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் கம்பனிகள், தொழிலாளர்களை ஏமாற்றாத வகையில் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும்.. அத்தோடு இந்த ஒப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன் சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கேற்ப அமைய வேண்டும். 

இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் எல்லா தொழிலாளர்களுக்கும் இது கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அரச பெருந்தோட்ட நிர்வாகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த விடயத்திலும் கூட்டுத் தொழிற்சங்கங்கள் உரிய கவனம செலுத்த வேண்டும். மலையகச் சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க சமூகத்தின் ஒற்றுமையிலே இது தங்கியுள்ளது என்றார்.