Saturday, December 6, 2008

ஜனவசம தோட்டங்களில் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு எட்டப்படுவதில்லை

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு உரித்தான (ஜனவசம) தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக நிலவி வரும் தொழில் பிணக்குகளுக்கும், அவர்களது அடிப்படை தேவைகளுக்கும் உரிய காலத்தில் தீர்வு எட்டப்படுவதில்லை. எனினும் இவர்கள் தலைமுறை தலைமுறையாக இதே தோட்டங்களில் வாழ்ந்து தொழில் செய்தும் இவர்கள் ஓய்வுபெறும் போது இவர்களுக்கு சேர வேண்டிய ஊழியர் சேலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்கால பணம் என்பவைகூட முறையாக வழங்கப்படுவதில்லை. இது குறித்து இ.தொ.கா தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் நியமனம்- சுரேஷ்

அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு எம்.பி.பி.எஸ் தரத்திலான வைத்தியர்கள் வெக விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரிய சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகவும், அதனடிப்படையில் தோட்ட வைத்தியசாலைகளுக்கு தமிழ் மொழியில் பரிச்சயமுள்ள நியமனங்கள் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சம்பள அதிகரிப்பு வழங்காவிடில் வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை-ம.ம.மு

தோட்டத்தொழிலாளரின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் திங்கட்கிழமை இடம்பெறவிருக்கும் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை பகிஷ்கரிப்பதென மலையக மக்கள் முன்னணி 03-12-2008 மத்திய குழு கொழும்பில் கூடி நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னரே இந்த முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளது.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அவசர கவனமெடுக்கும் பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது. இதிலிருந்து அவர்களால் விலகிநிற்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவிக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.

No comments: