Saturday, November 5, 2016

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோவில் கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும்; மேற்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தற்போது வழங்குகின்றது. கடந்த காலத்தில்; 18 கிலோவுக்கு குறைவாகக் கொழுந்து பறித்தபோது, முழு நாள் சம்பளத்தை  வழங்கியதாகவும் கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், கடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் எங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும் தற்போது 5 மணிவரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.  5 மணிவரை தொழில் செய்யும்பொழுது எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், இதுவரையில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கம் எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது' என்றனர்.

No comments: