Monday, August 11, 2014

மலையக மக்கள் உழைக்க மட்டும் வந்தவர்கள் அல்ல- கண்டி ராச்சியத்தை ஆளவந்தவர்கள்

மலையக மக்கள் இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருக்கின்றது. ஆனால், மலைநாட்டு தமிழன் ஒரு போதும் யுத்தம் செய்து, ஆளைக்கொன்று, நாடுபிடிக்க இங்கே வரவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்திய வம்சாவளி தமிழன் இங்கே அழைத்துதான் வரப்பட்டான். முதலில் சிங்கள பிரதானிகள் கண்டி இராஜ்யத்தை ஆள அழைத்து வந்தார்கள். இரண்டாம் முறை வெள்ளையர்கள் நாட்டை உருவாக்க அதே கண்டிக்கு மலைநாட்டு தமிழனை அழைத்து வந்தார்கள் இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வடகொழும்பு நாவலர் மண்டபத்தில் இடம்பெற்ற இரா. சடகோபனின்; கசந்தகோப்பி நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் உரைநிகழ்த்துகையில் மலையக உழைப்பாளர்களின் கதை, சோகம் செறிந்த வரலாறு. வெள்ளையர்களால் 1823ம் ஆண்டில் மலையகத்தமிழர்கள் கோப்பி பயிரிட இங்கே அழைத்து வரப்பட்டார்கள்.

இறப்பருக்கு முன் தேயிலை. தேயிலைக்கு முன் கோப்பி. இப்படி ஏற்றுமதி விளைபயிர் தோட்டங்களை மலையக தமிழர்கள் தங்களை காணிக்கையாக்கி உருவாக்கினார்கள்.

இந்நாட்டுக்கு உழைக்க வந்த வரலாற்றுக்கு முன்னரே, இந்திய வம்சாவளி தமிழருக்கு இந்நாட்டை ஆண்ட வரலாறும் இருகின்றது. கண்டியிலே அரச வம்சத்தில் நரேந்திரசிங்கனின் ஆயுள் முடிவுக்கு வந்த பின்னர் கண்டி சிங்கள பிரதானிகள், மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்த விஜய ராஜசிங்கனை அழைத்து வந்து கண்டி ராஜ்ய சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள்.

விஜய ராஜசிங்கன், இறந்த நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரன். அக்காலத்தில் கண்டி ராஜ்யத்துக்கும், மதுரை நாயக்க வம்ச ராஜ்யத்துக்கும் இடையில் திருமணபந்தம் இருந்தது.

குறிப்பாக ஒருபுறம் கண்டி, மதுரை ராஜ்யங்களும், மறுபுறம் தஞ்சாவூர், யாழ்ப்பாண ராஜ்யங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், பரஸ்பரம் உறவு கொண்டும் செயல்பட்டன.

1739ம் ஆண்டு முதல் நான்கு நாயக்க வம்ச மன்னர்கள் 1815 வரை கண்டியை ஆண்டார்கள். அவர்கள்தான் இலங்கையின் கடைசி மன்னர்கள். ஆளவந்த இந்திய வம்சாவளி மன்னனின் ஆட்சி 1815ம் ஆண்டு கண்டியில் முடிவுக்கு வருகிறது.

அதையடுத்து எட்டே வருடங்களில் 1823ம் ஆண்டு  இலங்கைக்கு உழைக்க வந்த முதல் இந்திய வம்சாவளி தமிழன் கண்டிக்கு  வருகிறான். ஆகவே மலைநாட்டு தமிழர் இந்நாட்டுக்கு உழைக்க மட்டும் வரவில்லை, இந்நாட்டை ஆளவும் வந்தவர்கள்.

இந்த வரலாற்றை இந்நாட்டில் வாழும் தமிழர்கள், குறிப்பாக மலையக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உழைக்க வந்த எங்களை பார்த்து எவனாவது, கூலிக்கார்கள் என்று சொன்னால், அவர்களிடம், 'முட்டாளே நாம் இந்நாட்டை ஆண்ட இனமும்கூட. இந்நாட்டின் கடைசி மன்னனின் இனம். அதுவும் இந்நாட்டை காட்டிக் கொடுக்காத, வெள்ளையர்களை கடைசிவரை எதிர்த்து நின்ற இனம்' என்று சொல்ல வேண்டும். கடைசியில் எஹலபோல நிலமே என்ற துரோகியால் வெள்ளையர்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, உயிரை இழந்த, ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் இனம் என்று தைரியமாக சொல்ல வேண்டும்.

இலங்கை தீவின் வரலாற்றை, இன்று பேரினவாதம், இன்றைய அரசியலுக்கு ஏற்ற முறையில் மாற்றி எழுதுகிறது. இந்நிலையில் உண்மை வரலாற்றை எடுத்து சொல்ல தயக்கம் ஏன்? ஆளுமையுடன் தைரியமாக உரக்க சொல்லுங்கள்.

நமது உழைப்பு, வெள்ளையர் நிர்வாகம், இவைதான் பெருந்தோட்டங்கள். இந்த வரலாற்றில் உழைக்க வந்தவர்களை நிர்வாகம் செய்த வெள்ளையரின் மன அழுத்தங்களை இங்கே சடகோபன் இந்த கசந்த கோப்பியின் மூலம் அரங்குக்கு கொண்டு வருகிறார் என நினைக்கின்றேன்.

இது ஒவ்வொரு தமிழனின் கரங்களிலும் இருக்க வேண்டிய நூல். இது மலையக மண்ணுக்கு அவரது பங்களிப்பு. இதை அவர் முதன் முறையாக செய்யவில்லை. 'கண்டிச்சீமையிலே' என்ற இன்னொரு நூலையும் அவர் எழுதியுள்ளார். இங்கே வருகை தந்துள்ள மலையக சிந்தனையாளர்கள் வாமதேவன், தெளிவத்தை ஜோசப்,  சிவலிங்கம் உட்பட பலரும் இத்தகைய பங்களிப்புகளைதான் வழங்கி வருகிறார்கள். இந்த மண்ணைப்பபற்றி, மனிதர்களை பற்றி எழுதும் இவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.
 
ஒரு சமூகம் வளர அரசியல், சமூக, பொருளாதார, கலாசார துறைகளில் சமச்சீரான வளர்ச்சி தேவை. இதற்கமைய மலையக இளைஞர்கள் சமூகத்துக்கான பங்களிப்புகளை வழங்க வேண்டும். அரசியல்வாதிகளிடம் அனைத்தையும் ஒப்படைக்காதீர்கள். எல்லோராலும் தெருவில்  இறங்கி போராட முடியாது.

எழுத முடியாது. கல்வி பணி செய்ய முடியாது. ஆகவே நீங்கள் எங்கெங்கு இருக்கின்றீர்களோ, அங்கே இருந்தபடி உங்களுக்கு இயன்ற பங்களிப்புகளை வழங்குங்கள். இதன்மூலம் மலையகம் சிந்தனையாளர்களின் கரங்களுக்கு மாறுவதை மலையக இளைஞர்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்த மலையக மறுமலர்ச்சி மாற்றத்தை மலையக இளைஞர்கள் இனவுணர்வுடன் உறுதி செய்ய வேண்டும்.

இதை தவிர மலையக விடிவிற்கு வேறு வழியே கிடையாது. விடிவு வேண்டுமென்றால் விலை கொடுக்க வேண்டும். விலை கொடுத்தால்தான் விடிவு வரும். இந்த உண்மையை அறிந்து கொள்ள நீங்கள் அமெரிக்க, ஐரோப்பிய வரலாறுகளை படிக்க தேவையில்லை. கண்ணை திறந்து எமது வடகிழக்கு உடன்பிறப்புகளை பாருங்கள்' என்றார்.

சிறுத்தை பிடிபட்டது

நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டப்பகுதியில் சுமார் ஏழு வயது நிரம்பிய சிறுத்தை ஒன்றை ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர்.
 

இதே பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையே இதுஎன  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

பிடிக்கப்பட்ட சிறுத்தையை அப்பிரதேச காட்டுப்பகுதியில் விடுவித்தால் அப்பிரதேச மக்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சிறுத்தையை கொழும்பு தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.

ரதல்ல மதுபானசாலையை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா ரதல்லை நகரில்  பிரதேச மக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றை அங்கரிருத்து அப்புறப்படுத்துமாறு கோரி ரதல்லை நகரை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இடத்தில் மதுபானசாலையால்   மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ரதல்லை நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆரப்பாட்டத்தினால்   வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டிருந்தது

இன்று  காலை 10 மணி தொடக்கம் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை தமது கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என நுவரெலியா மாவட்ட செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday, July 23, 2014

பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பகங்களின் புனரமைப்புக்கு இந்தியா ரூ. 50 மில். உதவி

பெருந்தோட்ட துறையிலுள்ள 70 சிறுவர் பராமரிப்பு நிலையங்களை தரமுயர்த்துவதற்காக இந்திய அரசாங்கம் 58 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
 
இதற்கமைய ஹற்றன். காலி, கண்டி, இரத்தினபுரி. பதுளை, கேகாலை ஆகிய பிராந்தியங்களில் புதிதாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ள அதேநேரம், இதே பிராந்தியங் களில் மேலும் பத்து நிலையங்கள் புனரமைப்பு செய்வதற்கென இனங்காணப்பட்டுள்ளன.
 
இதற்கான ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. ஒப்பந்தத்தில் ஆர்.எ.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் சர்வோடெக் (பிவிடி) லிமிட்டட் சார்பில் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டனர்.
 
கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் புனர்நிர்மாணத்திற்கு மேலதிகமாக சிறுவர்களின் பாதுகாப்பான வளர்ச்சி, சுகதாரம், கற்கும் சூழலை பெற்றுக் கொடுக்கும் வகையிலான தளபாடங்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.
 
தமது குழந்தைகள் மேற்படி நிலையங்களில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்ற நம்பிக்கையில் தாய்மார் பெருந்தோட்டத்துறைக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்பதுடன் மலையத்தில் வாழும் பெண்கள் பெருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டுமென்பதே இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, July 22, 2014

சிரேஷ்ட ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழிலுறவு அதிகாரியும் சமூக சேவையாளருமான பீ.இராஜரட்ணம் தனது 78 ஆவது வயதில் ஞாயிற்றுக்கிழமை (20) நுவரெலியாவில் காலமானார்.

இவர் 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் திகதி பிறந்தார். ஊடகத்துறையில் கடந்த 50 வருடங்களாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ், தினகரன் ஆகிய பத்திரிகைகளின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றினார். சிறந்த சமூக சேவையாளரும், பிரபல நிறுவனங்கள் பலவற்றின் ஆலோசகராகவும், சட்ட ஆலோசகராகவும் இவர் இருந்துள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஸீஸின் காலத்தில் நுவரெலியா காரியாலயத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டார்.

மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட பல முக்கிய தலைவர்களுடன் இவர் நெருங்கிய உறவையும் கொண்டிருந்தார்.

நுவரெலியா கொல்ஃப் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராவார்.

ஊடகவியலாளர் பீ.இராஜரட்ணத்தின் இழப்பு நுவரெலியாவிற்கும், குறிப்பாக ஊடகத்துறைக்கும் பாரிய ஒரு இழப்பாகும் என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தியாகு தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'வீட்டுக்கு வீடு' - 'கிராமத்துக்கு கிராமம்' அபிவிருத்தித் திட்டத்துக்கு ரூ.2657 மில்லியன்

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு மற்றும் கிராமத்துக்குக் கிராமம் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக பதுளை மாவட்டத்திலுள்ள 567 கிராம சேவகர் பிரிவில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2,657 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
 
இந்த அபிவிருத்தித் திட்டத்தினூடாக பதுளை மாவட்டத்தில் 239,463 குடும்பங்களைச் சேர்ந்த 811,758 பேர் நன்மையடையவுள்ளனர். மேலும் திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக 59,273 பேர் நன்மையடையவுள்ளனா இந்த அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்க பதுளை மாவட்ட அரசாங்க  பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
புவுது வெல்லச அபிவிருத்தித் திட்டம்- 824 மில்லியன் ருபா, கிராமிய பாடசாலைகளின். சுகாதாரத் திட்டம்.- 54 மில்லியன் ரூபா,  கிராமத்தை கட்டியெழுப்புவோம் வேலைத்திட்டம்- 840 மில்லியன் ரூபா, வனஜீவராசிகள் மற்றும் தேசிய வளங்கள் பாதுகாப்புத் திட்டம் - 70 மில்லியன் ரூபா,  திவி நெகும அபிவிருத்தித் திட்டம் - 180 மில்லியன் ரூபா, விவசாய அபிவிருத்தித் திட்டம்- 139 மில்லியன் ரூபா உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக் கப்படவுள்ளன.
பதுளை பிராந்திய மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 175 மில்லியன் ரூபாவும். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு மேலதிகமாக பதுளை மாவட்டத்தில் உள்ள 10 கிராமிய பாலங்கள் ஏற்கனவே புனரமைக் கப்பட்டுள்ளன.
 
2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் மேலும் 1000 பாலங்களைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

பாதிக்கப்படுகின்ற மலையக தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சட்டத்தில் இடமில்லை

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக தரவுகள் பெறப்படுகின்ற பொழுதிலும் பெருந்தோட்டப்புறங்களின் பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான தரவுகள் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ அதிகாரியிடம் மலையக மக்கள் முன்னணியின் இராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் கேட்டபொழுது பெருந்தோட்ட மக்களுக்கு உலர்உணவு பொருட்களை மாத்திரமே வழங்க முடியும். வேறு எந்த உதவிகளையும் தங்களால் செய்ய முடியாது எனவும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கொடுப்பனவையும் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
 
அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் அதிருப்திகுரியவை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சட்டம் என்பது தோட்டத் தொழிலாளர் என்ற பாகுபாடில்லாது சகலருக்கும் சமமாக செயற்படுத்தப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து பெருந்தோட்ட மக்களுக்கும் பயன் உள்ளதாக மாற்றுமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என நான் அறிந்து கொண்டேன்.
அப்படியானால் அரசாங்கம் பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக உரிய அக்கறை செலுத்தவில்லை என கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே நாம் தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடுகளை அமைத்து அவர்களுக்கான வீட்டு உரிமை பத்திரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கைகளை விடுத்துள்ளோம்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கா விட்டால் அது ஒரு புறத்தில் மனித உரிமை மீறல் செயலாகவும் கருத வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் சட்டம் ஒரு சாராருக்கு ஒரு மாதிரியும் இன்னொரு சாராருக்கு வேறு மாதிரியாகவும் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது எந்தவிதத்தில் நியாயமானது என எனக்கு புரியவில்லை.
 
அப்படியானால் அந்த சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய அதனை மாற்றியமைக்க வேண்டும். இது மட்டுமல்ல இன்று பிரதேச சபைகளில் பெருந்தோட்டங்களுக்கு வேலை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கும் சட்டம் ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்த நாளும் வாக்களிக்கும் இயந்திரங்களாக மாத்திரம் இருக்க வேண்டும் என அரசாங்கம் நினைத்தால் அது பிழையான ஒரு செயல்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
 
எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். நாம் பாராளுமன்றத்தில் பேசுகின்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படா விட்டால் நாம் அங்கு பேசுவதில் எந்தவிதமான பலனும் இல்லை. அது மட்டுமல்லாமல் எதற்காக இந்த மக்கள் எங்களை தெரிவு செய்து இங்கு அனுப்பியுள்ளார்களோ அந்த நோக்கமும் நிறைவேறாமல் போய்விடும்.