Friday, January 10, 2014

மலையக தமிழர்களின் நலனுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - பி.பி. தேவராஜ்

இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் நோக்கும் இந்திய அரசியல் கட்சிகளின் இந்த இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இலட்சக்கணக்கில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென இலங்கை முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி.தேவராஜ் டில்லியில் இடம்பெற்ற “பிரவாசி பாரதிய திவஸ்” மாநாட்டில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாங்கள் அனைவரும் மத்திய மாகாணத்தில் வசிப்பவர்கள். வடக்கு மாகாணத்தில் வசிக்கும் தமிழர்கள் சுயாட்சி உரிமை கோருகின்றனர். அதேபோல, மத்திய மாகாணத்தில் உள்ள எங்களுக்கும் போதுமான மாகாண பிரதிநிதித்துவம், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் எனக்கோரி வருகிறோம். 

மலைவாழ் தமிழர்களின் மக்கள்தொகை, இலங்கைத் தமிழர்களுக்கு இணையானதாகும். நாங்கள் சிங்களர்கள், தமிழர்கள் எனப் பிரிவினை பார்க்காமல் ஒற்றுமையுடன் வாழ்கிறோம். 
இலங்கைத் தமிழர்கள் என்றாலே அது வடக்கு மாகாணத் தமிழர்கள் என்ற கோணத்தில் இந்திய அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இந்த அணுகுமுறை மாற வேண்டும். மத்திய மாகாணத்தில் இந்திய வம்சாவளி இந்தியர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களின் நலன்களுக்காகவும் இந்தியா குரல் கொடுக்க வேண்டும். 

தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மிகுந்த கொந்தளிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய வம்சாவளி தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் உணர வேண்டும். 

இலங்கை குடிமக்கள் என்ற முறையில் ஒரே நாட்டில் வசிக்கும் சிங்களர்களுடன் நல்லுறவு பேணுவது அவசியம். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்ப வேண்டும். 

இந்தியர்களின் ஆதரவும் அன்பும் எப்போதும் எங்களுக்குத் தொடர வேண்டும். அது இன, மத அடிப்படையில் அல்லாது, நட்புறவு, சகோதரத்துவம் அடிப்படையில் இருக்க வேண்டும். 

இதற்குத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இந்திய அரசும் ஒத்துழைக்க வேண்டும்´ என்று கேட்டுக் கொண்டார் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ்.

No comments: