Tuesday, April 28, 2009

மாணவர்களின் பாதிப்பை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜோசப்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியர்களை அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் குறைந்த பட்சம் க.பொ.த. (சா த.) பரீட்சையில் திறமைச் சித்தி அவசியமாகும். ஆனால், அண்மையில் தோட்டப் பகுதிப் பாடசாலைகளுக்கு சாதாரண சித்தியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாததால் மாணவர்களே பாதிக்கப்படுவர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தோட்டப் பகுதிப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் முகமாக அண்மையில் 3,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாதாரண சித்தியுடனேயே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் அவ்வாசிரியர்கள் க.பொ.த. (சா த) பரீட்சையில் குறைந்தது திறமைச் சித்திப் பெற்றிருக்க வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தோட்டப்புறப் பாடசாலைகளுக்கு சாதாரண தர சித்தியுடைய ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மொத்தமாக 4,000; பேர் விண்ணப்பிக்கின்ற நிலையில் 1000 பேரே உள்ளீர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் பயிற்சியை பெற முடியாததால் மாணவர்களே இதனால் பாதிக்கப்படுவர். எனவே மாணவர்களின் பாதிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments: