Monday, April 11, 2011

புதிய கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தவும்


புதிதாக செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று தமது தொழிற்சங்கத்தால் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
அவற்றை சாதகமாக பரிசீலிப்பதாக ஜனாதிபதியின் தொழில் உறவுகள் செயலாளர் ஹேமசிறி ஜயலத் கடிதம் மூலம் தமக்கு அறிவித்திருப்பதாகவும் விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்தற்போது தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 285 ரூபாவும் மாதத்தில் 75 சதவீதத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மேலதிகமாக வழங்கப்படும் 90 ரூபா மற்றும் 16 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்காக வழங்கப்படும் 30 ரூபா என்பன போதுமானவையாக இல்லை.அத்துடன் 405 ரூபா சம்பளத்தை பெரும்பாலான தொழிலாளர்கள் முழுமையாக பெறுவதில்லை.தற்போது ஊ.சே.நி.,ஊ.ந.நி என்பன 285 ரூபா சம்பளத்திற்கே கணிக்கப்படுகின்றது.

அத்துடன் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானிய முறையில் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.சம்பள நிர்ணய சபையால் நிறுத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.அவர்களின் அடிப்படைச் சம்பளம் 500 ரூபாவாக நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எமது சங்கம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொழிலுறவுகள் செயலாளர் ஊடாக தோட்டக் கைத்தொழில் அமைச்சருக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தொழிலமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்குமுறைச் சட்டங்களும் மலையக மக்களின் அவலநிலையும்



பல வருடங்களாக மாறி மாறிவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அதிகாரம் செலுத்துவதற்கானஊன்றுகோலாக இச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாண மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டாலும் அவர்களின் இயல்பு வாழ்வு திரும்பாத நிலையில் தேடுதல் வேட்டை என்கிற போர்வையில் அவல வாழ்க்கையே அங்கும் தொடர்கின்றது.

ஒரு தேசத்தின் இறைமை, அதன் உரித்துடைமை, Popular Sovereignty அங்கு வாழும் மக்களிடமே உள்ளது என்கிற கோட்பாட்டின் அடிப்படையை மறுக்கும் வகையில் அவசரகாலச் சட்டம் ஊடாக ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கிறது அரசு.
இதனைக் கருத்தில் கொள்ளாத உலக நாடுகள், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8 வீதத்தை தாண்டும் அடுத்த வருடம் 10 வீதத்தை அடையும் என்கிற வகையில் பொருளாதாரப் புள்ளி விபரங்களை வெளியிட்டு அனைத்துலக நாணயச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியூடாக அவசரகாலச் சட்ட ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்றன.

பண வீக்கத்தை குறைத்து வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foriegn Direct Investment) வரவழைத்தால் நாட்டின் தலைக்குரிய வருமானம் (Income per Capital) அதிகரித்து நாட்டில் வளம் கொழிக்குமென அறிவுரை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி.

Stand by Arrangement (SBA என்கிற திட்டத்தின் கீழ் இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதால் 2188.3 மில்லியன் டொலர் மேலதிக கடனுதவியை வழங்கவிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கடந்த 4 ஆம் திகதி அறிவித்துள்ளது.
ஆகவே உடன்பாடு காணப்பட்ட 2.6 பில்லியன் கடனளிப்பில் ஏறத்தாழ 1.75 பில்லியன் டொலர்களை அந் நிதி நிறுவனம் வழங்கியுள்ளதெனலாம்.

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் குறித்து பல தரவுகளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.அண்ணளவாக இலங்கையின் உள்ளூர் மொத்த உற்பத்தி (Gross Domestic Product) $49.55 பில்லியன் டொலராக இருக்கும் அதேவேளை, வருடாந்த பொருண்மிய வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கலாமெனக் கூறுகின்றது.

இதில் விவசாயத் துறையானது உள்ளூர் மொத்த உற்பத்தியில் 11 சதவீதமாகவும் (அரிசி, தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள் என்பன முக்கியமானவை) சேவைத் துறை 59 சதவீதமாகவும் (உல்லாசப் பயணத்துறை, போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறை, நிதி நிர்வாகச் சேவை உட்பட) கைத்தொழில் துறை 29 சதவீதமாகவும் (முக்கியமாக ஆடை உற்பத்தி, பதனிடப்பட்ட தோல் பொருட்கள் இறப்பர்) இருப்பதாக அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.8.3 பில்லியன் டொலராக இருக்கும் வர்த்தக ஏற்றுமதியில் தேயிலை, ஆடை, இறப்பர், இரத்தினக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்கள் உள்ளடங்குகின்றன.

இதில் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய சந்தைகளாக அமெரிக்கா (1.77 பில்லியன் டொலர்) பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விளங்குவதோடு 13.5 பில்லியன் பெறுமதியான இறக்குமதியில் இந்தியா, சிங்கப்பூர், ஹொங்கொங், சீனா, ஈரான், மலேசியா, ஜப்பான், பிரித்தானியா, தென் கொரியா மற்றும் அமெரிக்கா (178 மில்லியன் டொலர்) போன்றவை முக்கிய நாடுகளாக குறிப்பிடப்படுகின்றன.ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை, ஐரோப்பிய நாடுகள் போன்று இலங்கையையும் வாட்டுவதை இப்புள்ளி விபரங்கள் புலப்படுத்துகின்றன.

உள்ளூர் மொத்த உற்பத்தியில் 29 விழுக்காட்டினுள் அடங்கும். ஆடை உற்பத்தியானது, ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச் சலுகைத் தடையால் பாதிப்புறும் அதேவேளை, பெருந்தோட்ட பயிர் செய்கையினால் பெறப்படும் தேயிலை, இறப்பர் போன்றவற்றிற்கான சந்தைப் போட்டியினால் 11 விழுக்காட்டினைக் கொண்டிருக்கும் இத் துறையும் பாதிப்படைகிறது.

உல்லாசப் பயணத்துறையில் மற்றும் பெருந்தோட்ட உற்பத்தித் துறையில் தற்போது பெருமளவில் தங்கியுள்ள இலங்கைப் பொருளாதாரம், வெளிநாட்டு முதலீடுகளைத் தேடி அலைகிறது.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிகள், எண்ணெய் வளத்தை பங்கு போட அணு ஆயுத வல்லரசுகளின் ஊடாக பன்னாட்டுக் கம்பனிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் எரிவாயுச் சிலிண்டர்களின் விலையை மட்டுமல்லாது, இறக்குமதியாகும். உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்திவிடும்.

ஆகவே பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும் ஆட்சியாளர்கள், மேற்கு நாடுகளின் நேரடி முதலீடுகளையே அதிகம் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்நிலையில் தோட்டத் தொழிலாளர் தரப்பிலிருந்து சம்பள உயர்வு கோரி, இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.

2009 மார்ச் 31 ஆம் திகதியன்று முதலாளிமாருக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையே தினச் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக 405 ரூபாய் வழங்கப்படுமென்ற கூட்டு ஒப்பந்தம் (ஊழடடநஉவiஎந யுபசநநஅநவெ) உருவாக்கப்பட்டது.

அதேவேளை, தற்போது நடைபெறும் சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை இழுத்தடிக்கப்பட்டு தீபாவளிக்கு “போனஸ்’ வழங்கும் நிகழ்வோடு இனிதே முற்றுப் பெறும் என்கிற கடந்த கால கசப்பான அனுபவங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விளக்கமாக எடுத்துக் கூறுகின்றார். 6 மாதங்களாக நடைபெறும் சம்பள உயர்வுப் போராட்டங்களும் தீபாவளிக் கொடுப்பனவோடு மறைந்து விடுமென்பதே உண்மை.

தோட்ட முதலாளிமார் தொழிற்சங்கங்களுக்கிடையே நிகழ்ந்த இந்த வார சந்திப்பு, வருகிற 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்.யோகராஜன், பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபயசேகரா ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளம் ரூ 500 ஆகவும் ஊக்குவிப்பு கொடுப்பனவு ரூ. 250 ஆக மொத்த நாட் சம்பளம் ரூ. 750 வை ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க முடியாதென மனோ கணேசன் முன்வைக்கும் கருத்தில் நியாயம் இருப்பதாகவே தென்படுகிறது.

சம்பள உயர்வினைக் கேட்டால், கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக வியாக்கியானம் செய்யும் தோட்ட முதலாளிமார், தொழிலாளர் மத்தியில் வறுமை அகன்று வாழ்வில் வளம் ஏற்பட்டுள்ளதாக பொய் உரைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மிகக் குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலையை விற்பனை செய்து, தொழிற்சங்கங்களுக்கு நட்டக் கணக்கைக் காட்டுவது முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையில் வழமையான விடயமே.
அந்த உற்பத்திப் பண்டம், தரகு முதலாளிகள் ஊடாக பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனத்திற்கு விற்கப்பட்டு இதே தேயிலை பெரும் இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்தினால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த முதலாளிமார் பேச்சுவார்த்தைகளின் போது எத்தனை மில்லியன் டொலர் வருமானம், இத் தேயிலை ஏற்றுமதியால் அரசிற்கு அந்நியச் செலவாணியாகக் கிடைக்கிறது என்பதனை தோட்டத் தொழிற்சங்கங்களுக்கு எடுத்துக் கூற மறந்து விடுவார்கள்.
அதேவேளை, தொழிலாளர் சங்கங்களும் முதலாளிமாரோடு சமரசப் போக்கில் நகர்ந்து கடும் குளிரிலும் வெய்யிலிலும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளை தட்டி விட்டு கடுமையான உழைக்கும் அந்த அற்புதமான மனிதர்களுக்கு உண்மை நிலைவரத்தைச் சொல்வதில்லை என்பதுதான் வேதனையான விடயம்.

உழைக்கும் வர்க்கம், அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை பெறும் உரிமையுடையவர்கள் என்கிற அடிப்படை ஜனநாயகத்தைப் புரிய வைக்க வேண்டிய அவசியம் மக்கள் அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.
வட, கிழக்கில் மட்டுமல்லாது, மலையகத்திலும் தமிழ் பேசும் இனமானது பல்வேறு பரிமாணங்களில் அரச ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வருவதைத் தமிழர் தலைமைகள் புரிந்து கொள்வது நன்று.

உழைப்புச் சுரண்டலாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் அதிகாரமற்ற பொம்மைச் சபைகளாலும் பாதுகாப்பற்ற சூழலாலும் தமிழ் பேசும் மக்கள் அடக்கப்படுவதை இனியாவது உலகிற்கு எடுத்துக் கூற ஜனநாயக விரும்பிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

-இதயச்சந்திரன்

Thursday, March 31, 2011

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் வழக்கம் போலவே மலையக அரசியல் தலைமைத்துவங்களிடம் கோஷ்டி மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. மலையக மக்களின் மேல் தாம் பற்றுக்கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ள இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் மலையக அரசியல் தலைமைத்துவங்கள் முன்வைக்கும் சம்பள உயர்வு தொடர்பான கோரிக்கைகளும் நிபந்தனைகளும் எச்சரிக்கைகளும் இன்றுவரை அந்த மக்களின் வறுமை நிலையை மாற்றியமைக்கத்தக்க எந்த முடிவையும் பெற்றுக்கொடுக்கவில்லையென்பதே எமது நீண்டகாலக் கவலை. கூட்டு ஒப்பந்தத்தை இந்தத் தலைமைகள் சுயலாப அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதே அன்றிலிருந்து இன்றுவரை நடந்தேறி வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியன ஒரு முகாமாகவும் ஏனைய மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் இன்னொரு முகாமாகவும் நின்று செயற்படுவதை முதலாளிமார் சம்மேளனம் தமக்கு சாதகமாக்கிக்கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பைத் தீர்மானிக்கின்றது. தற்போது கூட கூட்டு ஒப்பந்தத் திகதி; காலாவதியாகின்ற நிலையில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கிடையில் இழுபறிகள், கருத்து மோதல்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. இந்தவித இணக்கப்பாடற்ற தன்மைக்கு முடிவு காணப்படாத பட்சத்தில் இம்முறையும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பள அதிகரிப்பு வெறும் கானல் நீராகவே போய்விடும்.
கடந்தமுறை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 290 ரூபாவும் நாட்சம்பளமாக 405 ரூபாவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இம்முறை அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக மொத்தம் 750 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பல தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதுவிடயம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் இடம்பெறாத தொழிற்சங்கங்கள் இணைந்து செயற்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்ற நிலையில் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் நஷ்டக் கணக்கைக் காட்டத் தொடங்கியுள்ளதுடன் தோட்டத் தொழிலாளர்களிடையே வறுமைநிலை குறைந்துள்ளதாகவும் அவர்களின் வாழ்வு வளம் பெற்றுள்ளதாகவும் கூறத் தொடங்கியுள்ளமை கடந்த முறையைப் போலவே இம்முறையும் கூட்டு ஒப்பந்த கைச்சாத்து பெரும் இழுபறியில்தான் முடியப் போகின்றது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்புக் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் மலையகத் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட வேண்டும். தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடுத்த இரு வருடங்களுக்குத் தீர்மானிக்கப் போகும் இந்த விடயத்திலாவது பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும். அதைவிடுத்து வறட்டுக் கௌரவம், பிடிவாதத்துடன் செயற்பட்டால் பாதிக்கப்படப்போவது இரத்தம் சிந்தி உழைக்கும் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமே.

மலையகத் தொழிற்சங்கங்களை உடைத்து அதில் குளிர்காயாது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினையும் கருத்திற்கொண்டு நியாயமானதொரு சம்பள அதிகரிப்பை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனமும் முன்வரவேண்டும். அத்துடன் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது போல் செயற்படும் ஒருசிலர் தமது இந்தக் கபடத்தனத்தைக் கைவிட்டு தமது மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்க வழிவகைகளைச் செய்யவேண்டும். அத்துடன் தனியார் துறையினரின் சம்பள உயர்வுகள், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்படுத்தும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அரசுக்குள்ளது. ஆனால் தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாது நியாயமானதொரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசும் பொறுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

நன்;றி- தினக்குரல்

Tuesday, March 29, 2011

அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மொத்த நாட் சம்பளமாக 750 ரூபா -மனோ கணேசன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மேலதிக ஊக்குவிப்புச் கொடுப்பனவாக ரூபா 250 ரூபாவையும்; சேர்த்து மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க,தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் நஷ்டக்கணக்கு காட்டத் தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப்போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம், ஐக்கிய தேசியக் கட்சியின், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளத் தொகை தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றோம்.
சம்பள பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளாத அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தேசிய ஊடகங்களில் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் என்ற தகைமையையும் மீறிச்சென்று, தோட்டத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே வறுமை குறைந்துள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் வழமை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் துறையில் வறுமை விகிதம் அதிகரித்துச் செல்வது நாடறிந்த சங்கதியாகும். கடந்த 20 வருடங்களில் தேசிய ரீதியாக வறுமை விகிதம் சரிபாதியாக குறைந்துவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரம் அது அதிகரித்துச் செல்கின்றது. சில தேசிய ஊடகங்கள் மூலமாக முதலாளிமார் சம்மேளனம் முன்னெடுக்கும் இத்தகைய உண்மையற்ற பரப்புரையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மேலும், கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்ட நலவுரிமை சேவைகள் எதுவும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் சமூக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு தோட்ட கம்பனிகள் சட்டப்படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதில்லை. அத்துடன் தோட்ட கம்பனிகள் தனியார் உடைமையாக்கப்பட்ட பொழுது தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பங்குகளின் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தோட்ட நிறுவனங்கள் உற்பத்திக்கு ஒரு நிறுவனத்தையும், ஏற்றுமதிக்கு வேறு நிறுவனத்தையும் நடத்திவரும் தந்திரம் எங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்துவிட்டு மிகக்குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் இந்த தேயிலை பெரும் இலாபத்துடன் எற்றுமதி நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கணக்குகளையே சம்பள பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் பயன்படுத்துகின்றது.

அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் 6மாதங்களுக்கு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின்றார்கள். பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 6 மாதங்களுக்கான நிலுவைச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த நிலுவைச் சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படுகின்றது. கடந்த முறை இத்தகைய கொடுப்பனவாக சுமார் 25 கோடி ரூபா தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இது இந்நாட்டு தொழிற்சட்டங்களை மீறும் அத்துமீறிய சட்ட விரோத செயலாகும். இதற்கு கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணைபோகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்துக் கோணத்திலும் தங்களுக்கு அதிகபட்ச இலாபத்தைப் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்க மறுப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு நாம் இடந்தர முடியாது.இதற்கு உடன்பாடு காணப்பட முடியாவிட்டால், அதற்கான காரணங்களை முதலாளிமார் சம்மேளனம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பிலான அனைத்து விவகாரங்களையும் அவர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 138 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி


கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து தோற்றிய 156 மாணவர்களில் 145 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், இவர்களில் 138 மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளைவிட இம்முறை பாடசாலையின் அடைவு மட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங்கம் தெரிவித்தார்.
ஆர்.டிலாக்ஷன்,எம்.கௌசிக்,ஆர்.திலாக்சான்,ஏ.சிந்துஷா, ஜெ.லக்சாலினி ஆகிய 5 மாணவர்களும் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 4 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் 9 மாணவர்கள் 6 பாடங்களிலும் 9 மாணவர்கள் 5 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 156 மாணவர்களுள் 150 மாணவர்கள் 6 பாடங்களுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை, இச்சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களையும் மாணவர்களையும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களையும் பாடசாலையின் நிர்வாகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர் ஒன்றியம்,பாடசாலைச் சமூகம் என்பவற்றின் சார்பில் அதிபர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Monday, March 28, 2011

மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.

ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.