Monday, October 21, 2013

திட்டமிடப்பட்ட கருத்தடைகளை தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் - லோரன்ஸ்

மலையகத்தில் சனத்தொகை அதிகரிப்பு அண்மை காலமாக குறைவடைந்து காணப்படுகின்றது. தேசிய ரீதியில் சனத்தொகை அதிகரிப்பு வீதம் 1.7ஆக உள்ள நிலையில் மலையகத்தில் இது 0.7 வீதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மலையகத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்கும் அம்மக்களின் இருப்பினை சீர்குலைப்பதற்கும் கடந்த காலத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அபிவிருத்தி எனும் பெயரில் மக்களை இடம்மாற்றுதல் திட்டமிட்ட குடியேற்றங்களை தாபித்தல் என்பன அவற்றுள் சிலவாகும். இதனடிப்படையில் கட்டாய கருத்தடை திட்டமும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலையக பெண்களின் விருப்பமின்றி சில இடங்களில் கட்டாய கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அறிய முடிகின்றது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நடவடிக்கைக்கு துணை போகின்றமையானது வருந்தத்தக்க விடயமாகும். ஆசை வார்த்தைகளைக் கூறி அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி மலையக பெண்களை கட்டாய கருத்தடைக்கு உள்ளாக்கி வரும் செயல் ஒரு மனித உரிமை மீறலாகும். அதிகமானோர் கருத்தடை செய்து கொள்வார்களானால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சன்மானமும் வழங்கப்படுவதாக செய்திகள் அடிபடுகின்றன. சொந்த நலன்களுக்காக ஒரு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அல்லது சமூகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

கட்டாய கருத்தடையின் காரணமாக பல்வேறு பாதக விளைவுகள் ஏற்படுகின்றன. எனினும் இவ்விடயம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் அலட்சிய போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர். பிரச்சினையின் உக்கிர தன்மையை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ள வேண்டும். கட்டாயக் கருத்தடையின் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





Sunday, October 20, 2013

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ; ரூபா பெருநாள் முற்பணம் வழங்க வேண்டும்- ஆர். யோகராஜன்

சம்பள உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகைக்காக பத்தாயிரம் ரூபாய் பெருநாள் முற்பணம் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார். 

2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் பெருந் தோட்ட தொழிலாளி ஒருவருக்கு நாட் சம்பளமாக 405 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தொழிலாளர்களுக்கு பெருநாள் முற்பணமாக 4500 ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இன்று தோட்டத் தொழிலாளி ஒருவர் 620 ரூபாய் நாட் சம்பளம் பெறுகிறார்கள். எனவே, அவர்களுக்கு ஏன் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் வழங்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே பெருந்தோட்டத் தொழிலாளிகளின் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு 405 ரூபாவாக இருந்த நாட் சம்பளம் 2011 ஆம் ஆண்டு 515 ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி 620 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது. எனவே 2009 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 53 சதவீத சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளிகளின் 53 சதவீத சம்பள அதிகரிப்பிற்கேற்ப 7500 ரூபாய் பெருநாள் முற்பணத்தினை வழங்கலாம். ஆனால், அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கமையவே பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டுமென நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த ஏப்ரல் மாதம் அவசர அவசரமாக கூட்டு ஒப்பந்தத்தினை மேற்கொண்டவர்கள் இந்த தீபாவளி முற்பணத்தினை தற்போதைய கால சூழலுக்கேற்ப பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென புரியவில்லை.

மலையகத்தில் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் பெய்த கடும் மழையினால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தையே அந்த மாதங்களில் பெற்றனர். ஆகையால், அப்போது அவர்கள் கடன்களைப் பெற்று தமது செலவுகளை சமாளித்தனர். இவ்வாறான நிலையில் பெருநாள் முற்பணமும் குறைவாக கிடைத்தால் அவர்களால் தீபாவளியை கொண்டாட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

Thursday, October 17, 2013

தொழிலாளர்களுக்குரிய 100 கோடி ரூபா கோரி சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார். 

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம்  அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாவனைக்கு உகந்ததாக இல்லாத தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத்து தருமாறு மக்களால் கோரிக்கை மனுவொன்று நுவரெலிய பிரதேச சபை தலைவருக்கு வழங்கப்பட்டதனடிப்படையில் 

நுவரெலியா பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மைதான புனரமைப்புக்கு மண் நிரப்பப்பட்டது. 

அத்தோடு, மைதானத்தில் வடிகால் அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணி முற்றுபெற்றுள்ளது. 

வீதி அதிகார சபை மூலம் மைதானத்தில் நிரப்பப்பட்ட மண் சரியான முறையில் பரப்பப்படாத காரணத்தால் இரண்டு வருடமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ககடிதம் வழங்கப்பட்டதையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 13-10-2013 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு 15,80000 ரூபா செலவிட்டதாக கூறி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காசோலை பெற முயற்சி செய்துள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியதையடுத்து  20 பேர் கொண்ட தோட்ட இளைஞர் குழு நேரடியாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சென்று செயலாளரை சந்தித்து குறித்த உறுப்பினருக்கு காசோலை வழங்க வேண்டாம் என கோரப்பட்டதால் காசோலை வழங்கப்படவில்லை. இந்த மோசடி செயலை கண்டித்தே தோட்டத் தொழிலாளாகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கருத்து வெளியிட்ட நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் நாகராஜ், 02 வருடங்களுக்கு முன்பு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இதனை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததால் 05 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதனையே பொறுப்பேற்று வேறு ஒரு நபருக்கு வழங்கியதாகவும் 15,80000 இலட்சம் ரூபா என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தனக்கும் இதற்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறிப்பிட்டார்.

Tuesday, October 15, 2013

சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தொழிலாளி வைத்தியசாலையில்

ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவுட்பட்ட குயில்வத்தை கீழ் பிரிவு தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த கணகேஸ்வரி என்ற பெண் தொழிலாளி  சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளான இவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கா நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
இந்த பெண்மணி மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். இச் சம்பவம் நேற்றுக்காலை(15-10-2013) காலை 9.00 மணிக்கு நிகழ்ந்துள்ளது. 
இது தவிர இரவு நேரங்களில் இப்பிரதேச தோட்டப்பகுதிகளுக்குள் செல்லும் சிறுத்தை அங்குள்ள நாய்களை பிடித்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

Friday, May 31, 2013

25,000 ஏக்கர்பெருந்தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க தீர்மானித்தமை தெரியாது- லலித் ஒபயசேகர



பயன்படுத்தாது இருக்கும் தேயிலை பெருந்தோட்ட 25,000 ஏக்கர் நிலப்பரப்பை வேலையற்ற 12,500 இளைஞர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான தீர்மானமொன்றை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, திறைச்சேரி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் பல மூத்த அதிகாரிகளுடனாள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும் இது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார். 
இந்த வரடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் கீழ் பயன்படுத்தப்படாதுள்ள 25,000 ஏக்கர் பெருந்தோட்ட நிலப்பரப்பை சுவீகரித்து பயன்தரக்மூடிய நோக்கங்களுக்காக இளைஞர்களிடையே பகிர்ந்தளிக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இளைஞர் ஒருமவருக்கு தலா இரண்டு ஏக்கர் காணியை வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் லலித் ஒபயசேகர தெரிவிக்கையில் அரசாங்கத்துடனான பெருந்தோட்டக் கம்பனிகள் பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டடிருந்த போதிலும் காணி பகிர்ந்தளிக்கும் திட்டம் பற்றி குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றிருந்த கூட்டங்களில் கம்பனிகள் சார்பில் கலந்து கொண்ட போதிலும் கூட இதுபற்றி கலந்துரையாடப்படவில்லை என்றார். 

குறித்த காணிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 100 மில்லியன் ரூபாவை கடனாக வழங்குவதற்கு திறைசேரி இணங்கியுள்ளதுடன் மேற்படி காணிகள் 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுமுள்ளன.
இந்த விடயம் குறித்து இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன் வைக்கப்பட்டபோது பெருந்தோட்டக் காணிகளை சுவீகரிப்பது தொடர்பான நடைமுறைகள் குறித்து பெருந்தோட்டக் கம்பனிகள் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சிடமிருந்து தெளிவுபடுத்துகையைக் கோரியிருந்ததாகவும் ஒபயசேகர கூறினார்.
இது பற்றி பெருந்தோட்டக் கைத்தொழில் நிபுணரொருவர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில்,

இத்தகைய நிகழ்ச்சித் திட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் அரசின் இந்த நடவடிக்கை உரிய பலனை அளிக்கப் போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் பற்றி அடிப்படை அறிவற்ற கட்சி ஆதரவாளர்களுக்கு இந்தக் காணிகள் வழங்கப்படவுள்ளதால் அவை உரிய பலனைத் தராதெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை தங்கள் பெருந்தோட்ட நிலங்களில் தேயிலைக் செடியை மீள நடுகைக்கான காணியைப் பெற்றுக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சினையாக தொழிலாளர் பற்றாக்குறையே இருந்து வருவதாக பல்வேறு பெருந்தோட்டக் கம்பனிகள் முறையிட்டுள்ளன. 

Tuesday, May 14, 2013

பெரும் வெள்ளத்தினால் மத்திய மாகாணத்தில் 6 பேர் பலி மூவரை காணவில்லை


மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு நாட்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூவரை காணவில்லை எனவும் சுமார் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 4000 பேர் 32 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவிக்கிறது.

1361 குடும்பங்களைச் சேர்ந்த 4667 பேர் இந்த மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் . மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கிய நான்கு இம் மாகாணத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 

துற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்துள்ளார்
 

இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, நிவித்திகலை, எலபாத்த, குருவிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச் சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 

முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களில் இரத்தினபுரியில் 121 குடும்பங்கள் 755 பேர், எஹலியகொடையில் ஒரு குடும்பம் 4 பேர், பெல்மதுளையில் 117 குடும்பங்கள் 580 பேர், எலபாத்தையில் 38 குடும்பங்கள் 151 பேர் அடங்குவர்
இதேவேளை கண்டி அங்கும்புரை பல்லேகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த அனுர ஜயசிங்க(45) முச்சக்கர வண்டியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவரை தேடுவதற்காக கடற் படையினரின் உதவியை நாடியுள்ளனர்.