Wednesday, April 29, 2009

இறக்குவானை முத்துமாரியம்மன் வருடாந்த உற்சவம் இனவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து இடைநிறுத்தம்

இனவாதிகளின் அச்சுறுத்தலால் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறித்து இறக்குவானை வாழ் இந்துக்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலய பரிபாலன சபையினர் வழமைபோல் இம்முறையும் வருடாந்த உற்சவத்தை நேற்று 28-04-2009-ம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்..இந்நிலையில், இப்பகுதி இனவாதிகள் இது சிங்கள நாடு, நாம் சொல்வதையே அனைத்து இன மக்களும் செய்ய வேண்டுமெனக்கூறியதுடன் இம்மாதம் வெசாக் மாதம் குறிப்பாக 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதால் இக்காலப்பகுதியில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு விழாக்களையோ, தேர் திருவிழாக்களையோ நடாத்தக்கூடாதென்றும் அதையும் மீறி நடாத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் எச்சரித்தனர்.
அத்துடன், கோயிலின் பரிபாலன சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தொழிற் கூடங்களுக்கும் சென்று அச்சுறுத்தலும் விடுத்தனர். இது குறித்து இறக்குவானை பொலிஸில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கலந்துரையாடலொன்றுக்கு இரு தரப்பினரையும் (தலா 7 பேருக்கு மட்டும்) வருமாறு அழைப்பு விடுத்தார். கோயில் பரிபாலன சபையினர் 7 பேர் பிரசன்னமாகியிருக்க எதிர்;த்தரப்பில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதனால், அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்ததால் கோயில் நிர்வாக சபை இம்முறை திருவிழாவை இடைநிறுத்துவதென முடிவெடுத்தது.
இது குறித்து கோயில் நிர்வாகம் குழுவினருக்கும் அறிவித்தனர். இதனால், இவ்வருட கோயில் திருவிழா இடைநிறுத்தப்பட்டது. சுமார் 200 வருட வரலாறு கொண்ட இக்கோயிலில் இம்முறை மட்டுமே இனவாதிகளின் எதிர்ப்பினால் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி போயா தினத்தில் மட்டும் தேரினை வெளியில் கொண்டுவரக்கூடாது அதுவும் பௌர்;ணமி தினத்தில் எவ்வித விழாக்களையும் நடாத்தக்கூடாதெனவும் ஏனைய நாட்களில் வழமைபோல் விழாவினை நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். எனினும், இனவாதிகள் இதற்கும் அனுமதிக்கவில்லையென இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தர் பிறந்து ஞானம் பெற்று பரிபூரணநிலை அடைந்த தினம்தான் வெசாக் போயாதினம். அன்றைய தினம் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இவ்வேளையில், இந்த ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவினை நடாத்த அனுமதிக்காதது பெரும் கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி- தினக்குரல்

No comments: