Wednesday, April 29, 2009

தொழிலாளர்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க மே தினத்தில் உறுதி கொள்வோம் - ஆறுமுகன் தொண்டமான்

மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அச் செய்தியில் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மே தினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை, நேர நிர்ணயம் இன்னும் பல உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுத்த வெற்றித் தினமாகும். மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் நம்பிக்கையுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் ஜீவாதார உரிமைகள் ஆகியவை தொடர்பாக பல திட்டங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். பொருளாதார நெருக்கடிகளால் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் இச்சமயத்தில் தொழிலாளர்களுடைய வாழ்க்கை சுமுகமாகவும் சீராகவும் அமைய வேண்டும் என்ற நோக்கில் புதிய பல திட்டங்களை வகுத்துள்ளோம். அதேவேளை. அரசுடனும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் இணைந்து எமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றோம். இ.தொ.கா. ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. அதேபோல அவ்வப்போது அரசுகள் மூலமாக மலையக மக்களுக்கான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளது.
இ.தொ.கா. காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற அதேவேளையில் தொடர்ந்து சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. இன்று அரசுடன் இணைந்து எம்மக்களுக்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றோம். மலையக சமூகம் பல்வேறு துறைகளில் துரிதமாக முன்னேறி வருகின்றது.
காலமாற்றத்திற்கேற்ப எமது தேவைகள் பெருகிவிட்டன. அதேவேளை, புதுப்புது கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்மாற்றங்களுக்கு எமது சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இத் தொழிலாளர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது மே தினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: