Wednesday, December 21, 2011

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைக்க சதி: மனோ

தற்சமயம் நுவரெலியா மாவட்டத்தின் ஏழு பாராளுமன்ற உறுபினர்களில் ஐவர் தமிழர்களாக இருக்கிறார்கள். இந்த நிலைமையை மாற்றி நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு மாற்று வழியில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களும் மலையகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.

ஆளுமையுடன் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு காலத்தில் யாழ். மாவட்டத்தில் பன்னிரண்டாக இருந்த ஒட்டுமொத்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இன்று ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் தொகையில் ஏற்பட்ட குறைவு காரணமாக காட்டப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் மாற்று வழிகளின் மூலமாக தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு திட்டம் தீட்டப்படுவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. தகுதியுள்ள தமிழர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதில் குளறுபடிகளை ஏற்படுத்தி தமிழ் வாக்காளர் தொகை அதிகரிக்கப்படாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தை தளமாகக் கொண்டு மலையகம் முழுக்க தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பெரும்பான்மையினரை குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழர்கள் செறிவாக வாழ்வதை தடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரக்கூடிய புதிய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவு செய்வதில் பெரும் நெருக்கடி ஏற்படும்.

அரசாங்கத்திற்குள்ளே அமைச்சர்களாகவும் ஆதரவு அணியினராகவும் செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மலையக அரசியல் கட்சிகளுக்கும் இது தொடர்பிலே பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நமது மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் மலையகத்தில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கின்றார்களா என்பது புரியவில்லை. வாயைத் திறந்து பேசினால் ஜனாதிபதி கோபித்துக் கொள்வார் என்பதற்காக நமது மலையகப் பிரதிநிதிகள் வாய்களை திறப்பதில்லை.

அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் மூலமாக நமது இனம் நன்மை பெற வேண்டும். ஆனால் ஆதரவையும் வழங்கிவிட்டு நமக்கெதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளையும் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருப்பதில் அர்த்தமில்லை. அøதவிட எதிரணியில் அமர்ந்து உண்மைகளை துணிச்சலுடன் எடுத்துக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ஆளுமையுடனும் செயற்பட்டு வரும் ஆபத்துகளை தடுத்து நிறுத்தாவிட்டால் எதிர்காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருப்பதற்கு கூட நமது மலையக அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தில் இடமிருக்கப் போவதில்லை.

Friday, December 16, 2011

தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அட்டன் வெலிஓயா தோட்டத்தின் ஐந்து பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்ட முகாமையளர் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கொழுந்து நிறையிடுதல் குறித்து ஏற்பட்ட இழுபறி நிலையே முரண்பாட்டுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாகத் தொழிலாளர்கள் பறித்த தேயிலை கொழுந்தின் அளவை அதிகரித்து 20 கிலோ கிராம் பறிக்க வேண்டும் எனத் தோட்ட முகாமையாளர் விடுத்த பணிப்புரைக்குத் தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் துணையை நாடவேண்டி வரும் என தோட்ட முகாமையாளர் தெரிவித்ததையடுத்து அவர் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Wednesday, November 2, 2011

தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் பாதிப்பு

மாத்தளை அம்பதன்னை பிரதேச தோட்டங்களிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கமடுவ, மாகஸ்கந்த, கரக தென்னை, நாகல, லெகல ஆகிய தோட்டங்களில் இயங்கி வந்த தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு அங்கிருந்த தொழிற்சாலை உபகரணங்கள் யாவும் தோட்ட நிர்வாகங்களால் எடுத்துச் செல்லப்படுவதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இந்த தொழிற்சாலைகளில் தொழில் செய்த தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதுடன் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த தோட்டங்களில், பறிக்கப்படும் கொழுந்துகள் யாவும் அருகில் உள்ள கெலாபொக்க தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் இதனால் தேயிலை கொழுந்துகள் பழுதடைவதாகவும் இந்த தேயிலை தொழிற்சாலைகளையும் மூடியுள்ளதால் இது இலங்கையின் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய இழப்பு எனவும் தோட்டமக்களும் அங்கு கடமை புரிந்த உத்தியோகத்தர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் தொழிலை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மாற்று தொழில்களை யாவது பெற்றுத்தருவதற்கு தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, October 17, 2011

உணவு விஷமானதால் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சிறுவர் தினத்தை கொண்டாடும் முகமாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்த நிலையில் கொட்டகலை, நுவரெலியா, லிந்துலை, கொட்டகலை, மஸ்கெலிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இரத்னகிரி, நோர்வூட், பார்மஸ்டன், லோகி, மிடில்டன், கிரேட்வெஸ்ரன் ஆகிய பெருந்தோட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களே இச் சிறுவர்தின விழாவில் பங்குபற்றியிருந்தனர்.

உணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தியும், வயிற்றுவலியும், மயக்கமும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் சிறியவர்கள், பெரியவர்களும் அடங்குவர்.

இந்த உணவை விநியோகித்தோர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிபர்கள் உட்பட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதிருக்க கால்நடை உற்பத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான அறுமுகன் தொண்டமான் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் சந்திப்பொன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலைகளில் தனிப்பட்டதாரர்கள் நிகழ்வொன்றை நடத்துவதாயின் சகல மட்டங்களிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளில் தனிப்பட்ட நிறுவனங்களால் உரியவர்களின் அனுமதியின்றி எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாது. அனுமதி பெற்ற பின்னரே இது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும் என்றார்.

மலையக பகுதிகளில் நிலவும் வரட்சியினால் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைப்பு

கடந்த சில மாதங்களாக மலையகப்பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மலையகப் பகுதிகளில் நிலவும் கடும் வரட்சியினால் தேயிலைச் செடிகள் கருகியும் வாடியும் காணப்படுவதால் நிர்வாகம் தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்துள்ளது. அத்துடன் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாள் மாத்திரம் வேலை வழங்கும் நிலையில் தொழிலாளர்கள் 18 அல்லது 25 கிலோ கொழுந்து பறித்தாலும் கூட அவர்களுக்கு அரை நாள் சம்பளமே வழங்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்பவே தீபாவளி முற்பணம் வழங்கப்படுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் தோட்ட நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்து சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை இது குறித்து அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு வருடாந்தம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்தைக் கூட இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெற்றுக்கொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி முற்பணமாக வழங்கப்பட்ட 6 ஆயிரம் ரூபா இம்முறை 4,500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இப் பண்டிகையை கூட சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணத்தை அதிகரித்து வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Saturday, August 20, 2011

Wednesday, April 27, 2011

மலையகப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உணர்த்தும் உண்மைகள்

இலங்கையில் பெண்களுள் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக அரசியல் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று நோக்கி பார்ப்பது அவசியமானதாகும்.

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும்; பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960ன் பிறகு 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள எனக் கூறலாம். அந்த வகையில் மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் காணப்படும் பெண்களின் கல்வி, சமூக, அரசியல் சமய நிலையுடன் ஒப்பிடும் போது சகல துறையிலும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் மலையக பெண்கள் என்று அடித்து கூறலாம். ஆரம்ப காலங்களை விட சமகால சூழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்கு காணப்பட்டாலும் ஏனைய சமூக பெண்ணின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும் போது இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை. என்பதை ஏற்றுக் கொண்டு தான் வேண்டும்.

போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தனக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறப்புச் சான்றிதழ் எடுப்பதந்கு தவறி விடுகின்றனர் என்றால் அதுவும் பொய் அல்ல என்பதற்கு சான்றாக அண்மையில் மலையகத்தின் நடமாடும் சேவையின்போது பிறப்புச்சான்றிதழ்; தேசிய அடையாள அட்டை இல்லாதோரே அதிக அளவில்; காணக்கூடியதாக இருந்தது. ஆதனால் சிலர் தனது ஓய்வூதியத்தைக்கூட பெறமுடியாமல தவிக்கின்றார்கள் அல்லது எடுக்காமலேயே மறணித்தும் போகின்றார்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இது ஆண்களையும் சார்ந்த ஓர் நிகழ்வும் கூட.

தனக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையூடான ஒரு சமூதாய கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில் நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தனது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் வறுமை. விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றை ஆண் சமூகத்திடம் அடகு வைத்தவர்களாகவே இப் பெண்கள் காணப் பட்டாலும் அண்மைக் காலமாக இந்த பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலை விட்டு கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும்.

எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும். இருந்த போதும் இந்த பெண்களின் சமூக கட்டமைப்பு சார்ந்த வாழ்க்கையில் குறிப்பிடுமளவில்; முன்னேற்றமடையவில்லை என்பதே எனது கருத்து.

இந்த பெண்களுக்கு, பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள்; வழங்கிவரும் சேவைகள் பூரணமாக சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன யுக உலகில் ஒரு அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும். மலையக பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடுஇ கல்விஇ கலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே இலங்கைக்கும் வெற்றி. –
ரேணுகாதாஸ்

நன்றி- வீரகேசரி