Monday, February 1, 2010


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையகத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார் - ஆறுமுகன் தொண்டமான்


இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழர்களும், வடகிழக்கு மக்களும் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஆதரிக்க மலையகத்தின் பலம் பெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் குறிப்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறிவந்தார்.

இந்நிலையில் இவரது கூற்றினை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியை விட்டு விலகி சென்ற போதிலும், அமைச்சர் தொண்டமான் அந்த உறுதியுடன் செயற்பட்டார். இவரது ஆதரவுடன் ஏற்கனவே இவர் கூறியது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சம் மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நேர்காணல்



கேள்வி: நீங்கள் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டாரே?

பதில்: உண்மைதான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்குமட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதனால் அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இது தெரியாத அரசியல் ஞானமற்றவர்கள்தான்,

ஜனாதிபதி தோல்வி அடைவார் என கூறி, அவருக்கெதிராக செயற்பட்டு தங்களையும் இழந்து வருகின்றனர். ஜனாதிபதியின் வெற்றிக்கு மலையக மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.


கேள்வி: நுவரெலியா மாவட்டம் எதிரணி வசமானதே?

பதில்: நுவரெலியா மாவட்டத்தை மட்டும் கவனத்தின் கொள்ளக் கூடாது. மலையக மக்கள் பரந்து வாழும் பகுதிகளிலும் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார். மலையக மக்களின் ஆதரவு இல்லாமல் அவரால் அமோக வெற்றி பெற்றிருக் முடியாது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், இ.தொ.கா. எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரித்தது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு இலட்சத்திற்கு மேலதிகமாக காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒரு இலட்சத்து 51 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதுடன், எதிரணி வேட்பாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 29 ஆயிரமாகும். இதனை ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

அதுமட்டுமல்ல மலையக மக்கள் உள்ள சகல மாவட்டங்களிலும் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். இதற்கு இ.தொ.கா பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.


கேள்வி: அனைத்து தமிழ் பிரிவினரும், எதிரணி வேட்பாளரை ஆதரிக்க நீங்கள் மட்டும் எவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரித்தீர்கள்?

பதில்: என்ன சொல்கியர்கள்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களை ஏனைய சமூகங்களுடன் சமமாக மதித்து அவர்களுக்கு கடந்த 4 வருடங்களாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் அரச மற்றும் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கு நன்றி செலுத்தப்படவேண்டும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு அளித்தோம். எமது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மலையக மக்கள் நன்றியுணர்வுடன் வாக்களித்துள்ளனர். அத்துடன் அவர்களின் பாதுகாப்பினையும் கடந்த காலங்களில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதுடன் விசாரணையின்றி சிறையில் வாடிய மலையக இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் இதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


கேள்வி: இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனரே? அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா?

பதில்: 3 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டதற்காக எமது கட்சி பலமிழக்கவில்லை. பலம் கூடியுள்ளது. அவர்கள் தனிப்பட்ட சுயலாபத்திற்காக சென்றுள்ளனர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. அதனை எமது தொண்டர்களும் விரும்பவில்லை. அரசியல் ஞான மற்றவர்களால் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.


கேள்வி: கட்சியைவிட்டு விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரி. வி. சென்னன், ஏ. எம். டி. இராஜன் போன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனரே?

பதில்: இவர்கள் ஐயா (அமரர் தொண்டமான்) காலத்திலிருந்து கட்சியை கட்டி காத்ததுடன், கட்சிக்காக பாடுபட்டவர்கள். தற்போது விலகியவர்கள் கட்சியினை பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களால் மலையக சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை.

இந்த விமர்சனங்களினால் அவர்களே அவர்களுக்கு குழிதோண்டிக் கொள்கின்றனர் என்பதனை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் அவரை போய் சந்தித்தீர்களா? மலையகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவருடன் கலந்துரையாடினீர்களா?

பதில்: சந்தித்தேன், வாழ்த்துக் கூறினேன். மலையக மக்களின் அபிவிருத்திற்கு நாம் 10 ஆண்டு திட்டம் +றிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, பல பதவிகளையும் நிதிகளையும் வழங்கினார். இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் நாம் நிபந்தனையற்ற ஆதரவினை இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வழங்கினோம். மலையக சமூகத்திற்கு என்னென்ன தேவை என்பதனை நாம் திட்டமிட்டு காலத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவோம். எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் நாம் உதவி செய்துள்ளோம். அத்துடன், மலையக மக்கள் இரண்டாந்தர பிரஜையல்ல என்பதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஏனைய சமூகத்துடன் சமமான முறையில் அவர்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அத்துடன் இ.தொ.கா. தனிப்பட்ட எவருக்கும் எதனையும் செய்ய விழையாது. மலையக சமூகத்திற்கு தான் செய்யும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது உண்மையாகும்.


கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா? அல்லது வேறு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில்: பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து எமது கட்சி கூடி தீர்மானம் மேற்கொள்ளும்.


கேள்வி: சபரகமுவ மாகாண தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் பலர் பல்வேறு காரணங்களினால் பதவி இழந்துள்ளனர். இந்நிலையில் இம்மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது? இது குறித்து,

பதில்: இவ்வாறானதொரு நிலை முதற்தடவையாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ணுர்கள், அங்குள்ள மக்கள் தமது தேவைகுறித்து என்னிடம், தொடர்பு கொள்ளும் பொருட்டு இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

எமது சேவை மலையக மக்களுக்கு எப்போதும் கிடைக்கும்.


கேள்வி: இறுதியாக மலையக மக்களுக்கு என்ன கூற விரும்புகியர்கள்?

பதில்: மலையக மக்கள் ஒற்றுமையாக எம்முடன் இணைந்து தமது தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொள்ள முடியும். வீண், விமர்சனங்கள் செய்து மக்களையும் ஏமாற்றாமல், தம்மையும் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்வதனால் இ.தொ.கா.விற்கோ அதன் தலைமைக்கோ எவ்வித பாதிப்புமில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு தான் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நேர்கண்டவர்: எஸ். ஆர். இரவீந்திரன்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி

Friday, January 8, 2010

அமரர் பெ. சந்திரசேகரனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.அருள்சாமி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் சந்தனம் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக 08-01-2010 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையின் 13(ஆ)பிரிவின் கீழ், மறைந்த சந்திரசேகரன் பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அதன் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அருள்சாமி.

அருள்சாமி ம.ம.முன்னணியின் நிர்வாகச் செயலாளராகவும் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவர். 2004 ஆம் ஆண்டு முன்னணியிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டு, மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வியமைச்சராகப் பதவியேற்றவர்.

தற்போது தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராகவும் ஜனாதிபதி ஆலோசகர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் 40,000 வீடுகள் - முத்துசிவலிங்கம்

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மலையகத்தில் வருடாந்தம் ஐயாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 12,230 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வீட்டைத்தானும் நிர்மாணிக்கவில்லையென்று சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் இதில் எவ்வித உண்மையுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 3,179 ஆசிரிய நியமனங்கள்; வழங்கப்பட்டுள்ளன. 500 தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதற் தடவையாக 300 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நன்மை கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக எமது கட்சியே மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இ. தொ. கா.வின் முடிவின்படி மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Saturday, January 2, 2010

மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள் - தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.


மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார்.

மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் தீர்வு காணப்தற்கு பாடுபட்டவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது சகாக்களுடன்ஃ இணைந்து இடையறாது குரல் கொடுத்து வந்தவர்.


ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையொன்று மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அதற்கான பங்களிப்பை வழங்கியவர். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அதற்கு அனுசரணையாக இருந்த நிபுணர் குழுவின் முன்னிலையிலும் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்தவர்.

துமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயங்களை சர்வதேச அரங்கிலும் குறிப்பாக இந்திய தமிழக முதல்வர், தலைவர்களை சந்தித்து எடுத்துரைத்தவர்.

திரு. பெ. சந்திரசேகரன் அவர்களின் மறைவு இலங்கையின் அரசியல் வானிலும் மலையக மக்களின் அரசியல் அரங்கிலும் பாரிய வெற்றிடமொன்றை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் சகல சமூகங்களும் சமத்துவமாக ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற எழிலார்ந்த கனவுடன் வாழ்ந்தவர்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்களுக்காக ஐக்கியமாகவும், நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டுமென்று தனது இறுதி மூச்சுவரை வலியுறுத்தியவர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் தலைமை வகித்த மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.



தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

Monday, December 28, 2009


கண்ணீர் அஞ்சலி!
மன்னார் பரியாரிகண்டலை பிறப்பிடமாகக் கொண்ட திரு பாவிலு யாக்கோபு செல்வம் ஜே.பி (76) அவர்களின் மறைவு (25-12-2009) எமக்கு மிகுந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்துவந்த கால்நூற்றாண்டுகளில் ஒரு சமூக மனிதன் என்ற வகையில் அவர் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் இழப்புக்களும் மிகப் பாரியவை. அவரது புதல்வர் அருமை ரஞ்சன் சமூகத்தின் விடிவிற்காகவும், நீதிக்காகவும் போராடி 1985 இல்; உயிர் நீத்தவர். அவரது புதல்வியொருவர் சமூக இயக்கத்தில் பங்களித்தவர்.

மனிதாபிமானமும், நல்லியல்பும், நீதி உணர்வும், துணிச்சலும் கொண்ட மனிதர்.

மிக ஆபத்தானதும் நெருக்கடியானதுமான காலகட்டங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை அரவணைத்து பாதுகாத்தவர்கள்.

மானிட தர்மம் சார்ந்த தனது நம்பிக்கைகளில் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்றவர்.

நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரண மனிதராகத் திகழ்ந்தவர்.

அவர் நம்பிக்கை வைத்திருந்த மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளுக்காகவே பல்வேறு இன்னல்களை, துன்பங்களை எதிர்கொண்டவர்.

அவர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவியார், பிள்ளைகள் உற்ற சுற்றத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”- குறள்


பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

(பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

தொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய மட்டும் உரிமை உள்ளவர்களா?

மலையக சமூகம் இன்று சகல துறைகளிலும் ஏதோவொரு வகையில் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடியிருப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அரசியல், தொழில்துறை என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையின் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகமே உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது சகலரும் அறிந்த விடயமே.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் நாட்கூலிக்கு தொழில் செய்ய மட்டுமே இம் மக்கள் உரிமை உள்ளவர்களா? ஏன்ற வினாவை எழுப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அரச துறையில் வேலை வாய்ப்புப் பெறுவதென்பது பெரும் சாதனையாக பேசப்படும் இந் நாட்களில் பெருந்தோட்டத்துறையிலுள்ள படித்த பிள்ளைகளை நியமிப்பதில் தயக்கம் காட்டப்படுவது பற்றி மலையகத் தொழிற்சங்கங்களோ அரசியல் தலைவர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலை அலுவலர்களாக வெளிக்கள உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாக, தொழிற்சாலை அதிகாரிகள் போன்ற பல பதவிகள் பெருந்தோட்டத்துறையில் இருக்கின்றன. இப் பதவிகளில் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகள் உள்வாங்கப்படுவதில்லை.

இருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டத்துறையில் தமிழர் அல்லாதவர்களைக் கொண்டே இப் பதவிக்கு ஆட்சேர்க்கப்பட்டு நியமனம் வழங்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையோ, நிபந்தனைகளோ எதிர்பார்க்கப்படுவதில்லை. வெறும் சிபாரிசு கடிதங்களே நியமனத்திற்கு போதுமானதாக உள்ளன.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக நாட் கூலிக்கு தொழில் செய்பவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கூடியவர்கள் அல்லர். குடியிருப்பு, குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர். ஆனால் தோட்டத்துறையில் பதவி வசிப்பவர்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் செய்பவர்களைவிட கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழும் பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர்களின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் கிடைக்க மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்விமான்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் கல்வி கற்றுவிட்டால் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து விடும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சிலர் கல்வியை கற்றுவிட்டால் அந்தச் சமூகம் தலை நிமிர்ந்து விடும். ஆனால் மலையகத்தில் தற்போது கல்விமான்கள் பலர் இருந்த போதிலும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கு தாமே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்நிலை மலையகத்தில் தொடருமேயாயின் எமது சமூகம் எப்போது தலை நிமிரும் என்பது விடைகாண முடியாத விளைவாகவே இருக்கும். இலங்கையில் மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு உறுதுணை புரிய வேண்டும்.

மலையகத்தின் கல்விமான்களும் படித்த இளைஞர் யுவதிகளும் சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்று ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர தான் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நிறைவேற்றியுள்ளோமா என்பதைப் பற்றி மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. கல்வியாளர்களும், இளைஞர் யுவதிகளுமே.

பின்தள்ளப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்ட கிடைத்த இந்தத் தருணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளன் நினைத்தால் பாறையிலும் பயிர் வளரச் செய்யலாம். மலையகம் இன்று ஒரு பாறையைப் போன்று காட்சி தருகின்றது. நாட்டின் ஏனைய இனங்களோ சரி நிகராக வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் சிறந்த இனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையை முறையான வகையில் முறையான விதத்தில் செயற்படுத்த கல்விமான்களே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் மூலமே ஒரு திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கி காட்ட முடியும்.


சிவா ஸ்ரீதரராவ்

வீரகேசரி.


முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடிக்கை

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுமார் 126 முகவர் தபால் நிலையங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ் செல்லச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லச்சாமி தெரிவித்தார்