Friday, July 17, 2015

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான  பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது. 

பேச்சுவார்த்தையின்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். 

பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்ததற்கமைய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 510 ரூபாவாகவும்,; ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766 ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளமையை இ.தொ.கா மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை என தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது.   இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கை 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை  ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை  மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22,  நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம்  நடைபெற்றது. இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன. 

இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 06-07-2015 முதல் 1000 ரூபா வை வலியுறுத்தி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து தோட்ட நிர்வாகங்களும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இறுதிநாள் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா கடந்த ஒருவார காலமாக தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியதுடன். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ள கோரியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் இதற்கும் இணங்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Saturday, July 11, 2015

தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

கொழும்பில் தொழில் அமைச்சில்  தொழில் அமைச்சின் லோசகர் சி.விமலசேன தலைமையில் நேற்று (10-07-2015) இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையின் போது முடிவுகள் எதுவும் எட்டப்படாததால் மீண்டும் எதிர்வரும் 15-07-2015ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாள் சம்பள அதிகரிப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்றைய முக்கிய பேச்சுவார்த்தையிலும் தீர்மானகரமாக இருந்துள்ளனர். 

தனைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும்; வகையிலான உறுதியான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தொழில் அமைச்சு 23 கம்பனிகள் அடங்கிய முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளது. 
மேலும் ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனைத்திட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாததால் அந்த யோசனையை மீண்டும் சமர்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தொழில் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சு சார்பில் தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், செந்தில் தொண்டமான், கே.வேலாயுதம், ராமநாதன், சந்திரசேன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

பெருந்தோட்டங்கள் சார்பில் 23 கம்பனிகளின் பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகள் கலந்து கொண்டனா இதேவேளை பேச்சுவார்த்தை 15ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் மெதுவாக வேலைசெய்யும் போராட்டம் தொடரும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது.  

இ.தொ.கா வின் 1000 ரூபா சம்பள கோரிக்கை தனது அரசியல் இருப்புக்கு என்றாலும் அது நியாயமானது

பெருந்தோட்டக் கம்பனிகள், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்ற நாடோடிகளாக்குவதற்கான திட்டங்களை முன்வைத்து செயற்படுகின்ற போது அந்த ஆபத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் திட்டங்களை பற்றி சிந்திக்காது தொழிலாளர்களின் ஐக்கியத்தை கூறுபோடும் இ.தொ.கா.வும் அதற்கு எதிரான தமிழ் முற்போக்கு அணியினரும் ஏட்டிக்கு போட்டியாக சத்தியாகிரக போராட்டங்கள் என முன்னெடுக்கும் கோமாளித்தனத்தை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் வழமையை விட இம்முறை கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முரண்பட்டும் பிளவுபட்டு கொண்டும் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இ.தொ.கா. அதன் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைக்க தள்ளப்பட்டது. எனினும் அச்சம்பள கோரிக்கை நியாயமானது. 

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அக்கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே ஐ.தே.க. சார்பு தொழிற்சங்கங்களும் மற்றும் ஜே.வி.பி. தொழிற்சங்கமும் முன்னெடுத்து வந்தன. பேரப்பேச்சில் பங்கெடுக்கும் இ.தொ.கா, இ.தே.தொ.ச மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பற்றுடன் கலந்துரையாடாமல் 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்ததும் அக்கோரிக்கைக்கு பெருந்தோட்டக் கம்பனிகள் இணங்காததையடுத்து இந்த இரு தொழிற்சங்க அமைப்புகளுடன் கலந்துரையாடாமல் பேச்சுவார்த்தையில் இருந்து தான்தோன்றித்தனமாக வெளியேறியதும்; தவறானது. 

1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களின் வாக்குகளை பெற செயற்படுவதும் திட்டமிடப்படாத போராட்ட வழிமுறைகளை மக்கள் மீது திணிப்பதும் சம்பள உயர்வை பெற்று கொள்வதற்கான நேர்மையான அணுகுமுறையாகாது. இருப்பினும் இ.தே.தொ.ச., பெ.கூ.தொ.நிலையமும் ஏனைய ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்களும் 1000 கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றமையை அங்கீகரிக்க முடியாது. 

தோட்டக் கம்பனிகள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் கம்பனிகள் இயங்க முடியாத நிலை காணப்படுகின்றனதென முன்வைத்த வாதத்தை எமது தொழிற்சங்கம் பாரம்பரிய தொழிற்சங்க நடைமுறையை கடந்து விஞ்ஞானபூர்மாக முறியடித்துள்ளது. ரூபா 1000 நாட் சம்பள கோரிக்கை நியாயமானது என்பதையும் நிரூபித்துள்ளது. 

இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களுக்கு 03 நாட்களுக்கு மட்டுமே நாட் சம்பளத்தை வழங்க முடியும், ஏனைய நாட்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கும், வெட்டப்படும் இறப்பர் பாலுக்கும் ஏற்ப கூலி வழங்கப்பட முடியும் என்று முன்மொழிவுகள் தொழிலாளர்களை நிரந்தர தொழிலற்றவர்களாக்கி நாடோடிகளாக நடுத்தெருவில் விடுவதற்கான சதியாகும். 

இவ்வாறான சதிகளில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை பாதுகாத்து அவர்களுக்குரிய தொழிலையும் நியாயமான சம்பளத்தையும் உறுதி செய்ய வேண்டியது பொறுப்புமிக்க தொழிற்சங்கங்களினதும் அரசியல் கட்சிகளினதும் பொறுப்பாகும். இப் பாரிய பொறுப்புகளில் இருந்து விலகி தொழிலாளர்களின் வாக்குகளை மட்டும் பெறுவதை மட்டும் நோக்காக கொண்டு தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் நோக்கிலும் பாராளுமன்ற தேர்தலை மையமாக கொண்டு ஏட்டிக் போட்டியாக இ.தொ.க. மற்றும் அதற்கு எதிரான ஐ.தோ.க. சார்பு தொழிற்சங்கங்கள் சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்துவது கபடத்தனமானதும் கோமாளித்தமானதுமாகும். 

சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதற்காக தொழிலார்களின் ஒரு சாரார் இன்னொடு சாராருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவது என்பது தொழிலாளர்களை தவறாக வழிநடத்துவதாகும். இ.தொ.கா. நடத்தும் போராட்டத்திற்கு எதிராக ஏனைய அமைப்புகள் போராட்டம் நடத்துவதும் ஏனைய அமைப்புகளுக்கு எதிராக இ.தொ.கா. போராட்டம் நடத்துவதும் தொழிலாளர் விரோத நிலைப்பாடாகும். 

எனவே தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவும் பெருந்தோட்ட கம்பனிகளின் சதிகளில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கவும் தொழிலாளர்களை உள்ளடக்கிய பரந்துப்பட்ட கலந்துரையாடலை செய்து பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு செயற்படுவதே சரியான வழிமுறையாகும்.

Wednesday, July 8, 2015

தேயிலை தொழிற்சாலைகள் இயங்கவில்லை

மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுவதால் 23 பெருந்தோட்ட கம்பனிகளின் தோட்ட உத்தியோகத்தர்கள், மற்றும் தோட்ட அதிகாரிகள் வேலைக்கு செல்லாததால் தொழிற்சாலைகள் தற்காலிகமாக இயங்காமல் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொழிலாளர்கள் குறைவான கொழுந்து பறிப்பதனால் கம்பனிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தோட்டங்களில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்களை தொழிலில் ஈடுபட வேண்டாமென முதலாளிமார் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனையடுத்து தங்களுக்கு மலையக தொழிற்சங்கங்கள் இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் தங்களின் பாதுகாப்புக்காக தோட்ட நிர்வாகத்திலிருந்து விலகி கொள்ளப்போவதாகவும் மேற்படி தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போராட்டம் தொடர்ந்தால் வேலை வழங்க முடியாது

தொழிலாளர்களால் 1000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் மெதுவாக பணிசெய்யும் போராட்டமானது சட்டத்துக்கு முரணானது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமானால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்படுமென்பதுடன் சம்பளம் வழங்க முடியாதுபோகுமென 21 பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் பேச்சாளர் முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தோட்ட பிரிவு பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சத்தியாக்கிரகம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்ககோரி தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று (08-07-2015) சத்தியாகிர போராட்டத்தை முன்னெடுத்தனர். தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோரிக்கையை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கையை தோட்ட கம்பனிகள் தட்டிக்கழிக்க முற்படுவது நியாயமற்றது என பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாயை அதிகரித்து 650 ரூபாவாகவும் தேயிலை இறப்பர் விலை உயர்வுக்கேற்ப 30 ரூபாயும் வரவுத்தொகையாக 250 ரூபாயும் மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 35 ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்தன.
தொழிலாளர்களின் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை நியாயமானது. தேயிலை, இறப்பரின்; விலை குறைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பது பொருத்தமானதல்ல என தோட்ட நிர்வாகங்கள் கூறுவதில் எவ்வித நியாயமுமில்லை.
தோட்டத் தொழிற்துறையில் தேயிலை, இறப்பர் விலைகளில் வீழ்ச்சி ஏற்படுவதும் அதிகரிப்பதும் சாதாரணவொரு விடயமாகும். இது நிரந்தரமானதல்ல. கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை சுமார் 20 வருடங்களாக தொடரப்பட்டு வருகின்றது. இக்காலப் பகுதியில் தேயிலையின் விலை உயர்ந்தும் உற்பத்தி அதிகரித்தும் பாரிய அளவில் இலாபம் ஈட்டிய சந்தர்ப்பங்களும் அதேவேளை தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்து வந்துள்ளன. ஆனால், இரண்டு வருடங்களுக்கொருமுறை தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டே வந்துள்ளது. இன்று தோட்டக் கம்பனிகள் பிடிவாதமாகவும் வித்தியாசமான முறையிலும் நடந்து கொள்வது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான சூழ்நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்தே எமது பிரச்சினையை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது என்றார் இராமநாதன்.
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வழங்குகையில் தோட்ட தொழிலாளிக்கு 1000 ரூபாவை தட்டிக்கழிப்பது நியாயமற்றது

ஆறுமுகன் தொண்டமான் சத்தியாக்கிரக போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான நள்ளிரவு 12.30 மணிமுதல் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமுகன் தொண்டமான் அங்கு செய்தியாளர்களுக்கு தெரிவிக்கையில் தொழிலாளர்களின் நியாயமான சம்பளம் 1000 ரூபாவை கோரி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்களின் தீர்மானங்கள் எங்களுக்கு ஒத்துவராத காரணத்தினால் தொழிலாளர்களை மெதுவான பணிகளில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தோம்.
இதனைத் தொடர்ந்து முதலாளிமார் சம்மேளனம் தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள் அனைவரையும் தொழிலில் ஈடுபட வேண்டாமென்று கேட்டுக்கொண்டதற்கிணங்க சகல தோட்டங்களில் பணிபரியும் தோட்ட உத்தியோகத்தர்கள் நேற்று மாலை முதல் வேலைக்கு செல்லவில்லை தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதோடு தொழிலாளர்கள் பறித்த கொழுந்து அத் தோட்டங்களில் உள்ள கொழுந்து மடுவங்களில் கிடக்கிறது. கொழுந்தை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வாகனங்களை தருவதற்கு கூட தோட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டததன் காரணமாக பொலிஸாரும், அரச அதிகாரிகளும் உடனடியாக இவ்விடத்திற்கு வந்துள்ளார்கள். தற்போது இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. போராட்டம் தொழிற்சங்களுக்கும் கம்பனிக்கிடையிலேயே நடைபெறுகிறது.
இதற்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், சிறுவர் நிலையத்திற்கும், தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இவ்வாறு செயல்படுகின்ற கம்பனிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்ததோடு தொழிலாளர்களுக்கு போதிய சம்பளம் பெற்று தரும் வரை நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர் மேலும் தெரிவித்தார்

Sunday, July 5, 2015

துன்பப்படும் மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது

கடந்த 30 ஆண்டுகளாக எமது இரத்த உறவுகள் இந்த மண்ணிலே அதிக துன்பங்களோடு வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எமது இரத்தம் கூட சில நேரத்தில் அழுகிறது. இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் எப்போதும் தயாராக உள்ளோம் என  யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் யாழ். நுண்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி தர்ஷனனின்  நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக் கல்வி நூல் வெளியீட்டு விழா நுண்கலைக்கழக இசைத்துறைக் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே  இலங்கைக்கு வர வேண்டும்  ஆசை இருந்தது. அந்தக் கனவு நிறைவேறிவிட்டது. இந்திய அரசாங்கம் அப்படியொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. இலங்கை வந்து கண்டியில் 3 ஆண்டுகள் துணைத்தூதுவராக கடமையாற்றினேன்.  இந்திய அரசாங்கம் என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிய பிறகு எனது ஒட்டுமொத்த கனவு நிறைவேறிவிட்டது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் தமிழ் பேசுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்து தமிழ் மொழியில்தான் உயிரும் சிறந்த மொழிநடை பிரயோகமும் உள்ளதென இந்தியாவில் பொதுவாக கூறுவார்கள். 

மலையகத்திலும் தமிழ்மொழி பேசுகிறார்கள் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்தான் இலக்கியம் சார்ந்து மொழிநடை உள்ளது. இந்தியாவின் கலைகள் இலங்கையில் வளர்கின்றதென்றால் எங்கள் உடன்பிறப்புகள் அதை விரும்பி கற்கிறார்கள். இதை நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன்.  கலை, கலாசாரம் இங்கு நன்கு வளர்ந்து வருகிறது. இனியும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த நூலை எழுதிய கலாநிதி ஸ்ரீ தர்சனனுக்கும் அவரது பாரியாருக்கும் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

இராமநாதன் நுண்கலைக்கழகத்துக்கு இன்று தான் நான் முதல்தடவையாக வருகின்றேன். இங்கு வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது, எவ்வளவு மாணவர்கள் கலைகள் தொடர்பான பாடங்களை விரும்பிக் கற்கிறார்கள் என்று. எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. தகுதியான மாணவர்களுக்கு இந்தியா புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறது என்றார்.