Saturday, January 2, 2010

மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள் - தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.


மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார்.

மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் தீர்வு காணப்தற்கு பாடுபட்டவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது சகாக்களுடன்ஃ இணைந்து இடையறாது குரல் கொடுத்து வந்தவர்.


ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையொன்று மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அதற்கான பங்களிப்பை வழங்கியவர். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அதற்கு அனுசரணையாக இருந்த நிபுணர் குழுவின் முன்னிலையிலும் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்தவர்.

துமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயங்களை சர்வதேச அரங்கிலும் குறிப்பாக இந்திய தமிழக முதல்வர், தலைவர்களை சந்தித்து எடுத்துரைத்தவர்.

திரு. பெ. சந்திரசேகரன் அவர்களின் மறைவு இலங்கையின் அரசியல் வானிலும் மலையக மக்களின் அரசியல் அரங்கிலும் பாரிய வெற்றிடமொன்றை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் சகல சமூகங்களும் சமத்துவமாக ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற எழிலார்ந்த கனவுடன் வாழ்ந்தவர்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்களுக்காக ஐக்கியமாகவும், நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டுமென்று தனது இறுதி மூச்சுவரை வலியுறுத்தியவர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் தலைமை வகித்த மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.



தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.

Monday, December 28, 2009


கண்ணீர் அஞ்சலி!
மன்னார் பரியாரிகண்டலை பிறப்பிடமாகக் கொண்ட திரு பாவிலு யாக்கோபு செல்வம் ஜே.பி (76) அவர்களின் மறைவு (25-12-2009) எமக்கு மிகுந்த வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்துவந்த கால்நூற்றாண்டுகளில் ஒரு சமூக மனிதன் என்ற வகையில் அவர் அனுபவித்த துன்பங்களும், துயரங்களும் இழப்புக்களும் மிகப் பாரியவை. அவரது புதல்வர் அருமை ரஞ்சன் சமூகத்தின் விடிவிற்காகவும், நீதிக்காகவும் போராடி 1985 இல்; உயிர் நீத்தவர். அவரது புதல்வியொருவர் சமூக இயக்கத்தில் பங்களித்தவர்.

மனிதாபிமானமும், நல்லியல்பும், நீதி உணர்வும், துணிச்சலும் கொண்ட மனிதர்.

மிக ஆபத்தானதும் நெருக்கடியானதுமான காலகட்டங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை அரவணைத்து பாதுகாத்தவர்கள்.

மானிட தர்மம் சார்ந்த தனது நம்பிக்கைகளில் இறுதி மூச்சுவரை உறுதியாக நின்றவர்.

நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரண மனிதராகத் திகழ்ந்தவர்.

அவர் நம்பிக்கை வைத்திருந்த மனிதாபிமானம் சார்ந்த நிலைப்பாடுகளுக்காகவே பல்வேறு இன்னல்களை, துன்பங்களை எதிர்கொண்டவர்.

அவர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார்.

அவரது பிரிவால் துயருறும் அன்னாரின் மனைவியார், பிள்ளைகள் உற்ற சுற்றத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.”- குறள்


பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

(பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

தொழிலாளியின் பிள்ளையென்றால் தோட்டத் தொழில் செய்ய மட்டும் உரிமை உள்ளவர்களா?

மலையக சமூகம் இன்று சகல துறைகளிலும் ஏதோவொரு வகையில் பின்தங்கியுள்ளது. கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடியிருப்பு, பொருளாதாரம், விளையாட்டு, அரசியல், தொழில்துறை என்று இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கையின் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகமே உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு மலையக தொழிற்சங்கங்கள், அரசியல் வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதத்திற்கும் அதிகமானவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்பது சகலரும் அறிந்த விடயமே.

தேயிலை, இறப்பர் தோட்டங்களில் நாட்கூலிக்கு தொழில் செய்ய மட்டுமே இம் மக்கள் உரிமை உள்ளவர்களா? ஏன்ற வினாவை எழுப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அரச துறையில் வேலை வாய்ப்புப் பெறுவதென்பது பெரும் சாதனையாக பேசப்படும் இந் நாட்களில் பெருந்தோட்டத்துறையிலுள்ள படித்த பிள்ளைகளை நியமிப்பதில் தயக்கம் காட்டப்படுவது பற்றி மலையகத் தொழிற்சங்கங்களோ அரசியல் தலைவர்களோ நடவடிக்கை எடுப்பதில்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தோட்ட அலுவலகங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலை அலுவலர்களாக வெளிக்கள உத்தியோகத்தர்களாக, வாகன சாரதிகளாக, தொழிற்சாலை அதிகாரிகள் போன்ற பல பதவிகள் பெருந்தோட்டத்துறையில் இருக்கின்றன. இப் பதவிகளில் தோட்டத் தொழிலாளர் பிள்ளைகள் உள்வாங்கப்படுவதில்லை.

இருந்த போதிலும் கடந்த பல ஆண்டுகளாக பெருந்தோட்டத்துறையில் தமிழர் அல்லாதவர்களைக் கொண்டே இப் பதவிக்கு ஆட்சேர்க்கப்பட்டு நியமனம் வழங்கப்படுகின்றது. பெருந்தோட்டத்துறையிலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு போட்டிப் பரீட்சையோ, நிபந்தனைகளோ எதிர்பார்க்கப்படுவதில்லை. வெறும் சிபாரிசு கடிதங்களே நியமனத்திற்கு போதுமானதாக உள்ளன.

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களாக நாட் கூலிக்கு தொழில் செய்பவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் கூடியவர்கள் அல்லர். குடியிருப்பு, குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளின்றி பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர். ஆனால் தோட்டத்துறையில் பதவி வசிப்பவர்களுக்கு அரசாங்கத்துறையில் தொழில் செய்பவர்களைவிட கூடிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழும் பெருந்தோட்டத்துறை தமிழ்த் தொழிலாளர்களின் படித்த இளைஞர், யுவதிகளுக்கு உரிய தொழில் கிடைக்க மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்விமான்கள் அக்கறை செலுத்த வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு மாணவன் கல்வி கற்றுவிட்டால் அந்தக் குடும்பம் தலைநிமிர்ந்து விடும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சிலர் கல்வியை கற்றுவிட்டால் அந்தச் சமூகம் தலை நிமிர்ந்து விடும். ஆனால் மலையகத்தில் தற்போது கல்விமான்கள் பலர் இருந்த போதிலும் அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி தங்களுக்கு தாமே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்நிலை மலையகத்தில் தொடருமேயாயின் எமது சமூகம் எப்போது தலை நிமிரும் என்பது விடைகாண முடியாத விளைவாகவே இருக்கும். இலங்கையில் மிகவும் பின் தள்ளப்பட்ட சமூகமாக மலையக சமூகம் உள்ளது. இச் சமூகத்தின் விடுதலைக்கு உறுதுணை புரிய வேண்டும்.

மலையகத்தின் கல்விமான்களும் படித்த இளைஞர் யுவதிகளும் சமுதாயத்தை பற்றி அக்கறையுள்ளவர்களும் இன்று ஏனையோரை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர தான் இந்தச் சமூகத்தின் முன்னேற்றத்தில் எமது பங்களிப்பை நிறைவேற்றியுள்ளோமா என்பதைப் பற்றி மறந்தவர்களாகவே உள்ளனர். மலையக சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாக பாடுபட வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல. கல்வியாளர்களும், இளைஞர் யுவதிகளுமே.

பின்தள்ளப்பட்ட சமூகத்திற்கு வழிகாட்ட கிடைத்த இந்தத் தருணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கல்வியாளன் நினைத்தால் பாறையிலும் பயிர் வளரச் செய்யலாம். மலையகம் இன்று ஒரு பாறையைப் போன்று காட்சி தருகின்றது. நாட்டின் ஏனைய இனங்களோ சரி நிகராக வாழ்வதற்கும் சிந்திப்பதற்கும் பேசுவதற்கும் சிறந்த இனமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இந்த நிலையை முறையான வகையில் முறையான விதத்தில் செயற்படுத்த கல்விமான்களே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சிந்தனை வெளிப்பாடுகள் மூலமே ஒரு திடகாத்திரமான சமூகத்தை உருவாக்கி காட்ட முடியும்.


சிவா ஸ்ரீதரராவ்

வீரகேசரி.


முகவர் தபால் நிலையங்கள் உப தபாலகங்களாக மாற்ற நடவடிக்கை

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள சுமார் 126 முகவர் தபால் நிலையங்களை அரசாங்கத்தின் உப தபாலகங்களாக மாற்றியமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் எம். எஸ் செல்லச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, இது தொடர்பில் விசேட குழுவொன்று ஆராய்ந்து வருவதாகவும் ஜனாதிபதி ஆட்சிக் காலத்திலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 150 வருடகாலத்திற்குப் பின்னர் நேரடித் தபால் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபால் துறையில் புதிய பரிமாணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மலையகப் பெருந்தோட்டங்களில் மேலும் 100 தபால் ஊழியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தபால் ஊழியர்களாக 500 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்தபோது 400 பேர் மாத்திரமே கடமைகளைப் பொறுப்பேற்றனர். சில தோட்டங்கள் விடுபட்டதால், 100 பேருக்கு நியமனம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களுக்குத் தேர்தலுக்குப் பின்னர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், மலையகத்திலுள்ள அனைத்துத் தபாலகங்களையும் சகல வளங்களையும் கொண்டதாக அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செல்லச்சாமி தெரிவித்தார்

Sunday, December 27, 2009

உழைப்புக்கு மரியாதை

வரலாற்றில் முதல் தடவையாக தோட்டத் தொழிலாளருக்கு சிலை

உயர்ந்த எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்த இடங்களில் இருந்து தோன்றுவதில்லை. எப்போதும் சாதாரண மக்களிடத்திலிருந்தே ஆச்சரியப்படத்தக்க சிந்தனைகள் தோன்றும் என்பார்கள்.

ஊண்மைதான் பலரும் நினைத்துப் பார்க்காத, ஆனால் வரவேற்கத்தக்க சிந்தனை சாதாரண தோட்ட மக்கள் மனதில் உதித்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்புகள், தேசிய பொருளாதாரத்தின் ஆணி வேர்கள், ஆட்சியைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர்கள் என தோட்டத் தொழிலாளர்கள் பற்றி பல வார்த்தை ஜாலங்களுண்டு.

வர்ணனைகள் மட்டும் வாழ்க்கையாகி விடுமா? தோட்டத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான உழைப்புக்கு சமமான வருமானம் கிடைக்கிறதா? வாழ்க்கை வசதிகள் கிடைக்கிறதா? உழைப்புக்கேற்ற கௌரவம்தான் கிடைக்கிறதா? என்பது கேள்விக்குரியது.

தோட்டத் தொழிலாளர்கள் ஏணிகளாக இருந்து பலரை ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பலரை ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள். பலருக்கு சிலை வைத்திருக்கிறார்கள். முதல் தடவையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் உழைப்புக்கு கௌரவம் வழங்கும் வகையில் தொழிலாளருக்கு சிலை அமைக்கும் எண்ணம் கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மனதில் உதித்திருக்கிறது.

தேயிலை உற்பத்தித் தொழிலை மேற்கொள்கின்றவர்களை வருடாந்தம் நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் திகதி சர்வதேச தேயிலை தினம் கடந்த ஐந்து வருடங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இந்த தேயிலை தினம் தோட்டத் தொழிலாளர்களை முழுமையாக உள்ளடக்கி உள்ளது எனக் கூறுவதற்கில்லை. பரவலாகத் தேயிலைத் தொழிலாளர்கள் இத் தினம் பற்றி போதிய விளக்கமின்றியே உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இவ்வருட தேயிலை தினம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை அறிந்த பத்தனை கெலிவத்தை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஓர் உன்னத உணர்வு ஏற்பட்டது. இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 150 வருடங்களுக்கும் மேலாக பாடுபடுகின்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் முன்னோர்கள் உரிய முறையில் நினைவு கூரப்பட வேண்டும். இந்த மண்ணுக்கு உயிரையும் உடலையும் நீத்த எமது முன்னோர்களின் நினைவாக எமது தோட்டத்தில் தொழிலாளர் சிலைகளை ஏற்படுத்தினால் என்ன? என்பதுதான் அந்த எண்ணம்.

உடனடியாக இவ்விடயம் தொடர்பாக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடினர். கேலிவத்தைத் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை முன்றலில் தொழிலாளர் சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். இவ்விடயம் தொடர்பாக தோட்ட அதிகாரியான மஹிந்த ரணவீரவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தோட்ட அதிகாரி தோட்டக் கம்பனியின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதன் பின்பு கம்பனியின் சிலைகள் ஏற்படுத்துவதற்கான அனுமதியும் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச தேயிலைத் தினத்தன்று தோட்ட அதிகாரியின் தலைமையில் தோட்டத் தொழிற்சாலையின் முன்றலில் சிலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆண், பெண் தொழிலாளர் உருவங்களைக் கொண்ட சிலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தன்று இந்தச் சிலையைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் இந்த உயரிய பணிக்கும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் உதவுவதற்கு முன்வரலாமென்று கெலிவத்தைத் தோட்டத் தொழிலாளியான மாரிமுத்து தெரிவித்தார். தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இத்தகைய சிந்தனைகள் போற்றுதற்குரியதாகும்.

சோ. ஸ்ரீதரன்

மலையகப்பார்வை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் வறிய மாணவர்களுக்கு தனவந்தர்கள் உதவ வேண்டும்


இன்று மலையகப் பிரதேசங்களிலிருந்து க. பொ. த உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளிலிருந்து குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் வருடா வருடம் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்றார்கள் என்பது மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமான விடயமாகும்.

உயர்தரப் பரீட்சைகளில் கலை, வர்த்தகம் ஆகிய துறைகளிலிருந்து ஓரளவு மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டாலும், சட்ட பீடத்திற்கும் முகாமைத்துவ பீடத்திற்கும் தெரிவாகும் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படவில்லை. அதிகரிக்கின்ற எண்ணிக்கை உயர்தரப் பாடசாலைகளிலிருந்து ஒரு சில பாடசாலைகளைத் தவிர போதாதாக இருக்கின்றது. அதேவேளை விஞ்ஞானம், கணிதம் துறையிலும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து மருத்துவம், பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது. இதுவரையும் எமது இலக்கை அடைய முடியாமல் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று பல்கலைக்கழகங்களில் மேற்கூறிய துறைகளுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு எத்தனையோ புதிய புதிய கற்கை நெறிகள் சகல பாடப் பிரிவுகளுக்கும் இருக்கின்றது என்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.

க. பொ. த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களில் ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாமல் இருக்கின்றனர். இதில் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான குடும்பங்களிலுள்ள பிள்ளைகளினால் தொடர்ந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கும், பல்கலைக்கழகங்களில் காணப்படும் செலவுகளை (உணவு, விடுதி, போக்குவரத்து, இதர செலவுகள், போன்றவற்றை சமாளிக்க முடியாமல் எத்தனையோ ஏழை மாணவர்கள் கஷ்டப்படுவதோடு, இதில் ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு கிடைத்தும் கூட வசதி இல்லாததற்கு தொடர்ந்து படிக்காமல் இடை நடுவே பல்கலைக்கழக கல்வியை விட்டு விலகி விடுவதோடு, ஏதாவது ஒரு வேலைக்கு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது. சிலருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும் கூட செல்லாமல் இருப்பதை சாதாரணமாகஎ அவதானிக்கலாம்.

ஒரு பக்கத்தில் பல்கலைக்கழக அனுமதியை மலையகம் அதிகரிக்க வேண்டும் என கோசம் போடுகின்றோம் அது வரவேற்கத்தக்க விடயமாகும். நிச்சயமாக மலையகத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றும் படிக்க வேண்டும். இதற்கு யாரும் தடைபோட மாட்டார்கள். ஆனால் இதற்கான வேலைத் திட்டங்கள் எந்தளவிற்கு வெற்றிகரமாக செயற்படுத்தப்படுகிறது? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இப்பிரச்சினைகள் இருந்தபோதும் கூட வறுமையில் இருக்கும் மாணவர்கள் சித்தி பெற்றாலும் அவர்களுக்கு தொடர்ந்து படிக்கின்ற, படிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பும் கடமையும் ஆகும்.

இவ்வாறு சித்திப் பெற்ற மாணவர்களின் தகவல்களைத் திரட்டுவதற்கு முயற்சிக்க வேண்டும். இதன் பின் இவர்களுடைய பல்கலைக்கழக செலவிற்காக ஒரு தொகைப் பணத்தை எமது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல்வாதிகள், தொழிற்சங்க வாதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பிரதேச சபை, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், தனவந்தர்கள், செல்வந்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் பழைய மாணவர்கள், கல்வி மன்றங்கள், சமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், லயன்ஸ்கழகங்கள், ரோட்டரி கழகங்கள், பொதுமக்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரச தனியார் வங்கிகள், கோயில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள், போன்ற பல்வேறு தனிநபர்களும், அமைப்புக் களும், நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் இச்சமூகத்தில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். குறிப்பாக கூடுதலான புலமைப் பரிசில்களை இவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதோடு தனவந்தர்கள், இவ்வாறான மாணவர்களைத் தத்தெடுக்க வேண்டும். இவ்வாறு ஏனைய மாணவர்களுக்கு உதவிச் செய்வதன் மூலம் எமது மலையகச் சமூகத்தில் இருந்து இன்று இருப்பவர்களை விட மேலும் பல பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், இன்னும் பலதுறைப் சார்ந்தவர்களையும் உருவாக்க முடியும். இவ்வாறானவர்கள் எமது சமூகத்தில் உருவாகும்போதே ஒரு சமூகம் விழிப்படையும்.

ஒரு சமுகத்தின் விடியலுக்கு கல்விதான் அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து சென்று நல்லத் தொழில், வசதி வாய்ப்புக்களோடு இருக்கின்ற நபர்கள், 10 பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து ஒரு பல்கலைக்கழக மாணவனை தத்தெடுத்து அவரை தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு உதவி செய்வதன் மூலம் எத்தனையோ வசதி குறைந்த மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க முடியும்.

இன்று இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் மலையகச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏதோ ஒரு கற்கை நெறியில் படிக்கின்றார்கள்.

இவர்களில் சிலர் தொடர்ந்து படிப்பதற்கு வசதியில்லாத சந்தர்ப்பத்தில் இடை நடுவில் பல்கலைக்கழக கல்வியை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிடுகின்றார்கள். இதனால் குறிப்பிட்டக் காலத்தில் படித்து பட்டம் பெறுவதும் தடைப்படுவதோடு வாழ்க்கையில் எதிர்பார்த்த எத்தனையோ கனவுகளும் உடைந்து சுக்கு நூறாகிப் போகின்றது. எனவே இவ்வாறு பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக்கழக அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் வறிய மாணவர்களையும் இனம் கண்டு உதவி செய்ய முன்வர வேண்டும்.

இரா. சிவலிங்கம்... -

Sunday, December 20, 2009

மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!

எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

-சுவாதி

நன்றி- வீரகேசரி