Tuesday, March 8, 2011

தோட்ட மக்களுக்கு சேவையாற்ற தமிழ் உறுப்பினர்கள் தேவை


களுத்துறை மாவட்டத்தில் தமிழர் ஒருவர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு அமைச்சர் நிர்மல கொத்தலாவலவுடன் இணைந்து செயற்பட்டு வருவதன் காரணமாகவே கடந்த இரண்டு வருடகாலமாக களுத்துறை மாவட்ட தோட்ட மக்களுக்கு குறிப்பிடத்தக்க சேவையைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. இப் பணியை இத்தோடு நிறுத்திவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவும், பின்தங்கிய நிலையில் இருந்து வரும் தம் சமூகத்துக்கு சேவை செய்யவேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என புளத்சிங்கள பிரதேசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளரான ரி. ஜெயராஜா ஹல்வத்துறை,கோவின்ன குடாகங்கை, கூழ்கா,கல்லுமலை,மில்லகந்த,கொபவல ஆகிய தோட்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்

மாகாணசபை உறுப்பினராகவோ,பாராளுமன்ற உறுப்பினராகவோ,பிரதேசசபை உறுப்பினராகத் தானும் இல்லாது கடந்த இரண்டு வருட காலத்தில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு கணினிக் கருவிகள், பாடசாலை உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன்,அரச முதலீட்டு வங்கியினால் 1000 மாணவர்களுக்கு தலா 200 ரூபா வீதம் சேமிப்புக்கணக்கும் ஆரம்பிக்கப்பட்டு பாஸ் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிப்புக்குள்ளான கீக்கியனகந்த பாடசாலைக்கென அமைச்சர் நிர்மலவுடன் இணைந்து மேற்கொண்ட உடனடி நடவடிக்கையினால் 1 இலட்சம் ரூபா தற்காலிக கட்டிடத்துக்கு வழங்கப்பட்டு புதிய பாடசாலைக்கென காணி ஒதுக்கப்பட்டு 100 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட செலவில் இரண்டு மாடிக்கட்டிடமும் கட்டப்பட்டு பூர்த்தியடையும் நிலையில் உள்ளது.

அரம்பஹேன,அலுக்கெட்டிய,கின்னஸ்லிகல்லுமலை,மில்லகந்த,மிஹிரிக்கெலே,குடாகங்கை,கூழ்கா,என்டர்சன்,எம்பரகல,கொபவல ஆகிய தோட்டங்களுக்கு சுமார் 4 கோடி ரூபா செலவில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பாதைகள் கொங்கிறீட் போட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தோட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments: