Thursday, February 24, 2011

பொகவானத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் முடிவு


பொகவந்தலாவை பொகவானத் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் மேற்கொண்டு வந்த பணி நிறுத்தப்போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமையைத் தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் தமது வழமையான தொழிலுக்குச்சென்றனர்.

பொகவான தோட்டத்தில் கடந்த 19 ஆம் திகதி தேயிலை நாற்றுமேடையில் தொழில் புரிகின்ற தொழிலாளி ஒருவரை அந்தத்தோட்டத்தைச்சேர்ந்த உதவித்தோட்ட அதிகாரியும் தோட்ட உத்தியோகஸ்தர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதைத்தொடர்ந்து குறிப்பிட்டத்தொழிலாளியும் தோட்ட உதவி அதிகாரியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளியைத் தாக்கியவர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேறுமாறுக்கோரி பொகவானத் தோட்டத்தைச்சேர்ந்த சுமார் 700 தொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் பணிநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப்போராட்டம் தொடர்பாக தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தோட்ட நிருவாகத்திற்குமிடையில் அட்டன் தொழிற்திணைக்களத்தில் நேற்று 23 ஆம் திகதி மாலை இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட இணக்கப்பாட்டினைத்தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று 24 ஆம் திகதி முதல் மீளவும் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.


No comments: