Monday, June 29, 2009














அப்புகஸ்தனை திபட்டன் தோட்டம்


காடு மண்டிய தோட்டம் தேயிலை மலையாவது எப்போது?



180 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் காடாகக் காட்சியளித்த இத்தோட்டம் இன்று காடு மண்டிக் கிடக்கிறது. 175 குடும்பங்கள் வாழ்ந்த இத் தோட்டத்தில் இன்று சில குடும்பங்களே பலத்த எதிர்பார்ப்புக்களுடன் நாட்களை கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு விடிவு எப்போது யாரால் வரும்?’
மஸ்கெலியா நகரிலிருந்து நோட்டன் வழியில் செல்லும்போது சுமார் 18 கி.மீற்றர் தூரத்தில் அப்புகஸ்தனை தோட்ட திபட்டன் பிரிவு இருக்கிறது. தனியார் துறைக்குச் சொந்தமான திபட்டன் பிரிவானது 180 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தேயிலைத் தோட்டமாகும். சுமார் 175 குடும்பங்கள் இத்தோட்டத்தில் வசித்து வந்தன. தேயிலை உற்பத்தியே பிரதான தொழிலாகும். சிறந்த முறையில் இயங்கி வந்த இத்தோட்டம் அப்புகஸ்தனையுடன் இணைக்கப்பட்டு அரச பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது
பெருந்தோட்டங்கள் மீண்டும் நீண்டகாலக் குத்தகைக்கு தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் தேயிலைச் செடிகளுக்கிடையே வாகை இன மரங்கள் நடப்பட்டன. 100 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான வாகை கன்றுகள் நாட்டப்பட்டன. எஞ்சிய 80 ஏக்கர் நிலப்பரப்பில் தனியே தேயிலைச் செடிகள் வளர்ந்திருந்தன. எனினும் தேயிலையை உற்பத்தி செய்தவற்கான எந்தவொரு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. காலா காலத்திற்கேற்றவாறு உரமோ, மருந்துகளோ இடப்படாமல், சரியான முறையில் பராமரிக்காமல் தேயிலைக் கொழுந்தை மட்டும் எடுத்து வந்தது, புற்கள், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இன்னும் 10 வருட காலப்பகுதிக்குள் திபட்டன் தோட்டம் காடாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகை மரங்கள் பெரிதாக வளர்ந்து விட்டதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்து கொண்டே போகிறது. பாரிய வாகை மரங்கள் வெட்டப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்தால் தொழிலாளர்களாகிய எமது வாழ்வு சிறப்பாக அமையும். நிர்வாகத்திற்கு பெருமளவு இலாபம் தொடர்ந்து கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது என்றார் பெருமாள் ஜயசேகரன். தோட்ட நிர்வாகம் தேயிலை உற்பத்தியில் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும். தரிசு நிலப்பகுதியில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நிர்வாகங்கள் மேலதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேவேளை தேயிலைக் செடிகளுக்கு இடையே பாரியளவில் வளரக்கூடிய மரக்கன்றுகளை நடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மலைப்பகுதியில் பெரிய மரங்கள் வளர்வதால் அதிகளவு நீரை உறிஞ்சுவதால் எதிர்காலத்தில் நீர் ஊற்றுக்கள் இல்லாமல் போகலாம். எனவே எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பில்லாத வகையில் தோட்ட நிர்வாகம் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார் ஜயசேகரன்
அதே தோட்டத்தில் கீழ் பிரிவில் இருக்கும் அஜித்குமார், குடியிருப்புக்கள் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றன. சுமார் 2 கி.மீ. தூரப் பயணத்தை கடப்பதற்கான பாதை நீண்டகாலமாக கவனிப்பாரற்று குன்றும் குழியுமாக காட்சி தருகிறது. ஒரு நோயாளியை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டு செல்ல முடியாதுள்ளது.
இவ் வீதியை புனரமைப்பு செய்வதற்கென அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இன்று வரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தோட்ட நிர்வாகமும் எதனையும் கண்டுகொள்வதில்லை என்றார் புஷ்பகுமார். பெண் தொழிலாளியான சுசிலா, கருத்து தெரிவிக்கையில், தேயிலைச் செடிகள் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர். புற்கள் தேயிலைச் செடிகளுக்கு மேலாக வளர்ந்து காடுகள் போல காட்சி தருகிறது. ஏனைய மூன்று நாட்களிலும் அப்புகஸ்தனை மேல் பிரிவில் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து பிள்ளைகளுக்கு உணவு தயாரித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்துவிட்டு வேலைக்கு போனால் மாலை 6 மணிக்கு வீடு வந்து சேருகிறோம் என்றார்.
மழைக்காலங்களில் அட்டைக்கடியால் பெரிதும் சிரமப்படுவதாக புஷ்பவதி தெரிவிக்கிறார். தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. எமது தோட்டத்தில் வைத்தியசாலை இருந்தும் அங்கு வைத்தியர் ஒருவர் இல்லாததால் அருகிலுள்ள தோட்ட வைத்தியசாலைகளை நாடவேண்டியிருக்கிறது. தோட்ட வைத்தியர் மாலை 5 மணிவரை வைத்தியசாலையில் இருப்பார். நாங்களும் ஆறு மணியாவதற்குள் வீட்டுக்கு சென்றால்தான். அதன் பின்னர் தனியே செல்ல முடியாது பன்றி மற்றும் காட்டு மிருகங்களின் தொல்லையும் அதிகரித்து விட்டது.
எமது தோட்டத்தினூடாக பிரதான வழியை சென்றடைவதற்கு இலகுவாக இருக்கும் என்பதால் அல்வா லக்சபான தோட்ட மற்றும் மக்கள் இவ் வீதியையே பெரிதும் பபயன்படுத்துவதுண்டு. மத்திய மாகாண உறுப்பினர் ஒருவர் தோட்ட வழியாகச் செல்லும் ஆற்றை ஊடறுத்து பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்தார். எனினும் 25 சதவீத வேலைகள் நடைபெற்று பாதியில் முடங்கிவிட்டது. நாளொன்று ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வீதியையும் பாலத்தையும் பயன்படுத்துவதால் அதனை புனரமைப்புச் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் புஷ்பவதி.
1987ம் ஆண்டில் ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோது எமது தோட்டப் பகுதியிலுள்ள ஒரு சமதரையான 40 ஏக்கர் காணியில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காணி ஒதுக்கப்பட்டு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. இறுதியில் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. திபட்டன் பிரிவிலுள்ள லயன் குடியிருப்பில் 16 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடியிருப்புக்கள் 150 வருடகால பழைமை வாய்ந்தவை. தற்போது 5 குடும்பங்கள் மட்டுமே அதில் வசித்து வருகின்றன. ஏனையோர் வேறு தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர். அக்குடியிருப்பின் கூரைத்தகடுகள் ஓட்டையாகி சல்லடைபோல தோன்றுகின்றன. மின்சார வசதியிருந்தும் மின் இணைப்பை பெறுவதற்கான போதிய பணமில்லாத நிலையில் வாழும் இத்தோட்ட மக்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டியது நமது அரசியல் தலைவர்களின் கடமையாகும்.


இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கும் லயன் காம்பராக்களை தகர்த்து புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொண்டுக்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு முன்வர வேண்டும். இவ்வாறான இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்பதே தோட்ட மக்களின் அவாவாகும். தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வாக்கு கேட்பார்கள் நாங்களும் வாக்குகளை அளித்து அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகிறோம். ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையென அப்பகுதி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செ. தி. பெருமாள்
நன்றி- தினகரன்

No comments: