Monday, April 6, 2009

சி.டபிள்யூ.சி பஸ் வருகிறது நடந்து போகத் தேவையில்லை


“சி.டபிள்யூ.சி காரங்க ‘கமுக்கமா’ இருந்துட்டு என்னமா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்காங்க” என்று மலையகத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள். “ப்ஷா நல்ல வேலை” என்று ஏனைய பகுதிகளில் பேசுகிறார்கள். உண்மையில் நம்புவதற்குச் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் தண்ணீருக்குள் நெருப்பு கொண்டு செல்ல முடியும் என்பதை நடைமுறைச் சாத்தியமாக்கியிருக்கிறது சி.டபிள்யூ.சி என்கிற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போக்குவரத்துச் சேவை என்ற புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கிறது காங்கிரஸ்.
வெள்ளைக்கார துரைமார்களின் வாகனங்கள் ஓடுவதற்காகவென்று மட்டும் நிர்மாணிக்கப்பட்ட பல தோட்டப்புற பாதைகளில் இனி தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக பஸ் ஓடும். இதற்கான ஒரு புரட்சிகர நடவடிக்கையைத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். மேற்கொண்டிருக்கிறது. தனியாக ஒரு பஸ் போக்குவரத்து கம்பனியை ‘அன்னை கோதை தொழில் முயற்சியாண்மை நிறுவனம்’ என்ற பெயரில் ஸ்தாபித்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு 50 பஸ் வண்டிகளை இலவசமாக வழங்கியிருக்கிறது.
இதில் முதற் கட்டமாக இருபது பஸ் வண்டிகள், கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து தம் மலையகப் பெருந்தோட்டச் சேவையை ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் 2009 எப்ரல் இரண்டாந் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினதும் மலையகத் தொழிற்சங்க வரலாற்றிலும் ஒரு மறக்க முடியாத நாள். தொழிலாளர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்ட நாள் இது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமின்றி எல்லா தொழிற்சங்கங்களும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்களை என்றுமே வசதியற்ற வளமற்ற சமூகமாக வைத்திருக்கவே அவை விரும்புகின்றன என்று பல குற்றச்சாட்டுகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இ. தொ. காவைப் பொறுத்த வரை எதுவுமே செய்யவில்லை என்பதற்கும், இனிச் செய்ய விருப்பதற்கும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து இந்தப் பணியை ஆற்றியிருக்கிறது என்றால் மிகையில்லை.
இந்த பஸ் சேவையால் உண்மையில் நன்மையடையச் போகிறவர்கள் தோட்டப்புற மாணவர்கள்தான். ஏனெனில் இது முற்றிலும் அந்த மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்களை நிவர்த்திப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸார். மயைலகத் தோட்ட உருவாகத்திற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு இருந்த போதிலும், இன்னமும் பஸ் போக்குவரத்தைக் கண்டிராத பல தோட்டங்கள் உள்ளன. நகரத்தில் இருந்து ஐந்நூறு மைல் தொலைவில் இருக்கும் தோட்டப் பாதைகள் மிகவும் குறுகியதாகவும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் காணப்படுவதால், இங்கு பஸ் போக்குவரத்து நடத்துவதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. சிரமத்திற்கு மத்தியிலும் நகரப் பாடசாலைகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் படும் வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. தோட்டங்களில் தற்போது தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் நிறையவே ஓடுகின்றன. கல்வி கற்ற இளைஞர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க சொந்த வாகனங்களும் அதிகரிக்கச் செய்கின்றன. நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, ஹப்புத்தளை உள்ளிட்ட தோட்டங்களில் வீடுகளில் வான்கள், பஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக்கூட காணலாம். ஆனால், நடந்து மட்டுமே செல்வதற்கு வசதியுள்ள தொழிலாளர்களும் அவர்களின் பிள்ளைகளும், தோட்டங்களில் உருவாகிய ஆசிரியர்களும் இன்னமும் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நகரத்திற்குச் செல்லும் தொழிலாளர்கள், தாம் வாங்கும் பொருள்களின் பெறுமதியைவிட பணம் கொடுத்து வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திச் செல்வதற்காகக் கூறுகிறார்கள் நானுஓயா தோட்டங்களில்.
இவ்வாறான தோட்டங்களில் உள்ள தொழிலாள சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் பேசுகிறார்கள். ஆனால், எல்லாம் சரி, அது ஏன் இந்திய அரசு பஸ் வண்டிகளை காங்கிரஸ்க்கு வழங்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கேட்டதால் அதற்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று எளிதில் பதில் அளித்துவிடலாம். மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு நடத்தினோம். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று பத்திரிகைகளில் படம் வரப்பண்ணும் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதில் மலையகத் தொழிற்சங்க அரசியலும் விதிவிலக்காக இருக்கவில்லை. என்றாலும் அண்மையில் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தூதுக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் காத்திரமான விடயம் கலந்தாலோசிக்கப்பட்டு நடந்தேறியிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்திய அரசு 50 சிற்றி ரைடர் பஸ் வண்டிகளை வழங்கியிருக்கிறது. பஸ் வண்டிகள் கடந்த இரண்டாந் திகதிதான் காங்கிரஸால் பொறுப்பேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பஸ் வண்டிகளைப் பொறுப்பேற்று பதிவும் செய்து, காங்கிரஸ் நிறமும், கம்பனி பெயரும் பொறிக்கப்பட்டு பஸ் வண்டிகள் கலகலப்பாய் பூஜைக்கு வந்திருந்தன.
அதுபோல்தான் இந்த பஸ் வண்டிகளுக்கான சாரதிகள், நடத்துநர்களும் தோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய நீண்டநாள் உறுப்பினர்களின் குடும்பத்தில் இருந்து அதற்குப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம். கோதை பஸ் கம்பனியைப் பற்றிக் கேட்டதும், உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய அறங்காவலர் சபைதான் நினைவுக்கு வந்தது. கிராமத்து மக்களின் நலன்கருதி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பென்னம்பெரிய இரண்டு பஸ் வண்டிகளை சேவை யில் விட்டிருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் பஸ் போக்குவரத்தைத் தாமதமாகவேனும் நடத்துவது அதன் அங்கத்துவர்களுக்கு மாத்திரம ன்றி முழுத் தொழிலாளர் சமூகத்திற்கும் மகிழ்ச்சி தான். இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சாதாரண கட்டணமொன்றைச் செலுத்தி நிம்மதி யாகக் கல்வி கற்கச் செல்ல முடியும். அது சரி, இந்தப் பணியை காங்கிரஸ் எவ்வாறு நல்ல முறையில் கொண்டு நடத்தப் போகிறது, சிக்கல்களையும் சவால்களையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் சேவையைத்தொடர வேண்டும். சபாஷ் சி.டபிள்யூ.சி. இறுதியாக ஒன்று, பஸ் சேவைக்கு பூஜை வைக்கும் வரை அது பற்றி எந்த ஊடகங்களிலும் பெரிதாகப் பிரசாரம். இது ஒரு வகையில் சிறப்புதான். ஆனால் விடயம் கைகூடியதும் அதனை திறம்படி செயற்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை காங்கிரஸார் மறுக்க மாட்டார்கள். பஸ் சேவை ஆரம்ப நிகழ்வுக்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் பலர் காங்கிரஸ் ‘பிரஸ் ஒபிசர்’மார்களின் செயற்பாடுகளில், திருப்தி காணவில்லை. இது இப்பொழுது மட்டுமல்ல இ. தொ. கா.வின் எந்த விடயத்திற்குச் சென்றாலும் ஊடகவியலாளர்கள் ஏதாவது ஒரு குறையைத்தான் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் இ. தொ. கா.வின் தலைவர்கள் அல்ல, பிரஸ் ஒபீசர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குற்றச்சாட்டு அவர்களுக்கு வராது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே, காங்கிரஸின் ஊடகப் பிரிவை சற்று உயிரூட்ட வேண்டும் என்பதையும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவது பொருந்தும்.

பி.வீரசிங்கம்


தினகரன்

No comments: