Tuesday, March 29, 2011

அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மொத்த நாட் சம்பளமாக 750 ரூபா -மனோ கணேசன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையற்ற அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாவுடன் மேலதிக ஊக்குவிப்புச் கொடுப்பனவாக ரூபா 250 ரூபாவையும்; சேர்த்து மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க,தோட்ட முதலாளிமார் சம்மேளனம் உடன்படவேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே தேசிய ஊடகங்களில் நஷ்டக்கணக்கு காட்டத் தொடங்கியிருக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இதற்கு பதிலளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் இன்னுமொரு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகப்போகின்றது. தோட்ட முதலாளிமார் சம்மேளனமும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{ம், ஐக்கிய தேசியக் கட்சியின், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தொழிற்சங்க கூட்டு கமிட்டியும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது எவர் என்பது தொடர்பில் எங்களுக்கு அக்கறை கிடையாது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளத் தொகை தொடர்பில் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றோம்.
சம்பள பேச்சுவார்த்தையில் நேரடியாக கலந்துகொள்ளாத அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தத்தளிக்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.
பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்குள் தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தேசிய ஊடகங்களில் நஷ்டக் கணக்கு காட்ட ஆரம்பித்துள்ளது. அத்துடன் முதலாளிமார் சம்மேளனம் என்ற தகைமையையும் மீறிச்சென்று, தோட்டத் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க தொடங்கியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலே வறுமை குறைந்துள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் வழமை ஏற்பட்டுள்ளதாகவும் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் துறையில் வறுமை விகிதம் அதிகரித்துச் செல்வது நாடறிந்த சங்கதியாகும். கடந்த 20 வருடங்களில் தேசிய ரீதியாக வறுமை விகிதம் சரிபாதியாக குறைந்துவிட்ட நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரம் அது அதிகரித்துச் செல்கின்றது. சில தேசிய ஊடகங்கள் மூலமாக முதலாளிமார் சம்மேளனம் முன்னெடுக்கும் இத்தகைய உண்மையற்ற பரப்புரையை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

மேலும், கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்பட்ட நலவுரிமை சேவைகள் எதுவும் தற்பொழுது வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் சமூக நல்வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு தோட்ட கம்பனிகள் சட்டப்படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை கிரமமாக வழங்குவதில்லை. அத்துடன் தோட்ட கம்பனிகள் தனியார் உடைமையாக்கப்பட்ட பொழுது தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பங்குகளின் இலாபம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
தோட்ட நிறுவனங்கள் உற்பத்திக்கு ஒரு நிறுவனத்தையும், ஏற்றுமதிக்கு வேறு நிறுவனத்தையும் நடத்திவரும் தந்திரம் எங்களுக்குத் தெரியும். ஒரு நிறுவனத்தின் பெயரில் உற்பத்தி செய்துவிட்டு மிகக்குறைந்த இலாபத்தில் ஏற்றுமதி நிறுவனத்திற்கு தேயிலை விற்பனை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் இந்த தேயிலை பெரும் இலாபத்துடன் எற்றுமதி நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆனால் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் கணக்குகளையே சம்பள பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் பயன்படுத்துகின்றது.

அதேபோல் முதலாளிமார் சம்மேளனமும் கையொப்பமிடும் தொழிற்சங்கங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து சுமார் 6மாதங்களுக்கு பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கின்றார்கள். பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் 6 மாதங்களுக்கான நிலுவைச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த நிலுவைச் சம்பளத்திற்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படுகின்றது. கடந்த முறை இத்தகைய கொடுப்பனவாக சுமார் 25 கோடி ரூபா தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இது இந்நாட்டு தொழிற்சட்டங்களை மீறும் அத்துமீறிய சட்ட விரோத செயலாகும். இதற்கு கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் துணைபோகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அனைத்துக் கோணத்திலும் தங்களுக்கு அதிகபட்ச இலாபத்தைப் பெற்றுக்கொண்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்க மறுப்பதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு நாம் இடந்தர முடியாது.இதற்கு உடன்பாடு காணப்பட முடியாவிட்டால், அதற்கான காரணங்களை முதலாளிமார் சம்மேளனம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். சில தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடட்டும். ஆனால் தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பிலான அனைத்து விவகாரங்களையும் அவர்களிடம் மாத்திரம் ஒப்படைத்துவிட்டு நாம் அமைதியாக வேடிக்கை பார்க்கப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 138 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி


கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து தோற்றிய 156 மாணவர்களில் 145 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், இவர்களில் 138 மாணவர்கள் க.பொ.த. உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகளைவிட இம்முறை பாடசாலையின் அடைவு மட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி அதிபர் எஸ்.விஜயசிங்கம் தெரிவித்தார்.
ஆர்.டிலாக்ஷன்,எம்.கௌசிக்,ஆர்.திலாக்சான்,ஏ.சிந்துஷா, ஜெ.லக்சாலினி ஆகிய 5 மாணவர்களும் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் 4 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் 9 மாணவர்கள் 6 பாடங்களிலும் 9 மாணவர்கள் 5 பாடங்களிலும் அதிவிசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 156 மாணவர்களுள் 150 மாணவர்கள் 6 பாடங்களுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை, இச்சிறப்பான பரீட்சைப் பெறுபேறுகளைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட ஆசிரியப் பெருமக்களையும் மாணவர்களையும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களையும் பாடசாலையின் நிர்வாகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம்,பழைய மாணவர் ஒன்றியம்,பாடசாலைச் சமூகம் என்பவற்றின் சார்பில் அதிபர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Monday, March 28, 2011

மாற்றுத் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரிப்பு

பதுளை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக 30 வேட்பாளர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தப்பட்டபோதும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் மலையக மக்கள் முன்னணி மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிட்டபோதும் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக 14 வேட்பாளர்கள் போட்டியிட்டபோதும் 9 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இ.தொ.கா.வுக்கு ஊவா மாகாண சபையில் அமைச்சர் ஒருவரும் மத்திய அரசாங்கத்திலும் பிரதி மற்றும் அமைச்சர் பதவிகளுடன் அதிகாரங்களும் இருந்த பொழுதும் பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பசறை, பதுளை, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளிலும் ப்புத்தளை, பண்டாரவளை ஆகிய நகரசபைகளிலும் இ.தொ.கா.வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனினும் பசறை ஹாலிஎல , பதுளை பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வுக்கு கணிசமான அங்கத்தினர்கள் இருக்கின்றபோதும் இவர்கள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விசேடமாக பசறை, பதுளை, பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் இ.தொ.கா.வினர் பெரும்பாலும் ஐ.தே.க.பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இதற்குச் சான்றாக பசறை,பதுளை, ஹாலி எல, பண்டாரவளை ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட்ட ஐ.தே.க. தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பசறை பிரதேச சபையில் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் மூவரும் தோல்வியடைந்துள்ள போதும் அதே பட்டியலில் முன்னாள் பிரதியமைச்சரும் பசறை பொ.ஐ.மு. அமைப்பாளருமான வடிவேல் சுரேஸினால் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர் எஸ்.தயாபரன் 1955 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஏன் இவ்வளவு சேவையினை மேற்கொண்டும் மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணித்தனர் என்பதை இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் இப்போதே ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில் இனிவரும் தேர்தல்கள் இதைவிட இன்னும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியதொரு நிலை ஏற்படும் என்று இ.தொ.கா.ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.

2013 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் தற்போதைய நிலையை விட மிகவும் பாதிக்கப்படலாம்.கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட வடிவேல் சுரேஸ் 27 ஆயிரம் வாக்குகளையும், அதே பட்டியலில் போட்டியிட்ட இ.தொ.கா.வேட்பாளர்கள் இருவரும் 7 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர்.

ஐ.தே.கட்சிப் பட்டியலில் போட்டியிட்ட கே.வேலாயுதம் 25 ஆயிரம், எம்.சச்சிதானந்தன் 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றனர். இதிலும் இ.தொ.கா.படுதோல்வியை தழுவியபோதும் இது குறித்து கவனம் செலுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ளாததன் பிரதிபலிப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

பதுளை மாவட்டத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன் ஜனநாயக முறையிலான அரசியலையே விரும்புகின்றனர் என்பது பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் மத்திய அரசாங்கத்தில் ஒரு உறுப்பினரும் மாத்திரம் இருக்கின்றபோதும் உள்ளூராட்சித் தேர்தலில் 7 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளதற்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் எ.அரவிந்குமாரின் தனிப்பட்ட வெற்றியென்றே கூறவேண்டும்.


பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக விசனம்



தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலைத்தலங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் பெண் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலான தோட்டவீதிகள் தற்போது குன்றும் குழியுமாக காணப்படுவதோடு; தோட்ட வாகனங்களின் போக்குவரத்துகள் இடம்பெறாத காரணத்தினால் கொழுந்து பறிக்கின்ற பெண்கள் தாம் பறித்த கொழுந்தினை நீண்ட நேரம் சுமந்து சென்று நிறுவை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.அத்துடன் தோட்டங்களில் கொழுந்து நிறுவைக்காக பயன்படுத்தப்படுகின்ற தராசுகளின் நம்பகத்தன்மையும் குறைந்து வருவதால் தமது உழைப்பு சுரண்டப்படுவதாக பெண்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான தொழில் ரீதியான உரிமை மீறல்கள் குறித்து தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறைகொள்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

இவ்வாறன நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண்தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தினை இந்தத் தோட்ட நிர்வாகம் நிறுக்கும் முறையானது பாரியதொரு மனித உரிமை மீறலாகுமென்று சுட்டிக்காட்டப்படுகின்றது.பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலாமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.இதனால் கம்பங்களைத் தலையில் சுமந்து கொண்டு நிற்கும் பெண்தொழிலாளர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வேலைத்தலங்களில் பெருந்தோட்டப்பகுதி பெண்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து தோட்டத்தொழிற்சங்கங்கள் உடனடியாக ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென தொழிலாளர் நலன் சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, March 23, 2011

தொழிற்சங்கங்கள்- முதலாளிமார் சம்மேளத்திற்கிடயிலான சந்திப்பு அடுத்தவாரம்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனத்திற்கிடயிலான பேச்சுவார்த்த எதிர்வரும் புதன்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பள உயர்வு கூட்டொப்பந்தம் தொடர்பான கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடயிலான சந்திப்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன காரியாலயத்தில் நடபெறவுள்ளது.

எதிர்வரும் 31-03-2011 ஆம் திகதியுடன் கூட்டொப்பந்தம் நிறைவு பெறுகின்ற நிலையில் எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற வகையிலான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென கூட்டொப்பந்தத்தில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்கள் கோரிவருகின்றன.

அதாவது ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவை இணைந்து அமைத்துள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு மொத்த நாட்சம்பளமாக 750 ரூபா எதிர்வரும் கூட்டொப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரியுள்ளது. தோட்டத் தொழிலாளருக்கு நிபந்தனையற்ற குறைந்தபட்ச நாட் சம்பளமாக 500 ரூபாவும் மேலதிக ஊக்குவிப்பாக 250 ரூபாவும் வழங்கப்பட வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை ஜே.வி.பி.யின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இன்றைய வாழ்க்கை செலவு உயர்வுக்கு ஏற்ப நிபந்தனையற்ற நாட்சம்பளமாக 700 ரூபா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தற்போது என்றுமில்லாத வகையில் பொருட்களின் விலை அதிகரிப்பினால் கஷ்ட நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த 700 ரூபா சம்பள உயர்வு அவசியமானதென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டொப்பந்தம் மூலம் நிபந்தனையற்ற அடிப்படை சம்பளமாக 500 ரூபாவும் ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 250 ரூபாவுமாக 750 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்

கொழுந்து நிறுவைக்குப் பெண் தொழிலாளர்களின் பரிதாபகரமான நிலைமை



தோட்டத்தொழிலாளர்களுக்கு வேலைத்தளங்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கின்ற பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து தேயிலைத் தூளினை கொள்வனவு செய்வதில் வெளிநாடுகள் சில ஆர்வம் செலுத்தி வருகின்றன.

சில தோட்டக் கம்பனிகள் வேலைத் தளங்களில் தொழிலாளர்களின் நலன் கருதி சில நலனோம்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் நவீனகால அடிமைகளாக நடத்தப்படுகின்றனர் என்பதை இந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட கொழுந்தின் அளவை அறிந்து கொள்வதற்காக தேயிலை மலைகளிலேயே நிறுக்கப்படுவது வாடிக்கையாகும்.

அதன் போது இரும்பினால் அல்லது மரத்தடியினால் செய்யப்பட்ட கம்பங்களை பிடித்துக்கொண்டு அதன் நடுவில் அகலமான கூடை ஒன்றில் கொழுந்து கொட்டப்பட்டு கொழுந்தின் அளவு கணிக்கப்படுகின்றது.

ஆனால் தெரேசியா தோட்டத்தில் இரண்டு பெண்கள் தமது தலையில் கம்புகளை தாங்கிக் கொண்டு கொழுந்தினை நிறுவை செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.இவ்விடயம் தொடர்பில் மலையகத் தொழிற்சங்கங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன?

Monday, March 21, 2011

மலையகத் தமிழ்த் தலைமைகள் மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடுகின்றனவா?

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்ததின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.

தங்கக் காசும் தங்குவதற்கு இடமும் இலவசமாம். தேயிலைத்தூரில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம் என நம்பி வந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் மற்றும் கேளிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை இவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல் தலைமைகளும் மறுபுறத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு தொழிற்சங்கமாயினும் சரி அரசியல் கட்சியாயினும் சரி மக்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டதென்றால் அவர்களின் கொள்கைகள் இறுதி வரை நிறைவேற்றப்பட வேண்டும். தாமே ஒட்டுமொத்த மலையக மக்களின் பிரதிநிதிகள் - சேவைக்கு முன்னுதாரணமானவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் தமது காலத்தில், பேசுவது போல் செயலிலும் தீரத்தைக் காட்டுவார்களாயின் வரலாற்றில் அவர்களுடைய பெயர் நிச்சயம் எழுதப்படும்.

ஆனால், அதற்கு மாறான சம்பவங்களே இங்கு நடைபெறுகின்றன. அப்பாவித் தமிழர்களின் வாழ்க்கையை திறந்த மேடையாக்கிக்கொள்ள முனையும் பலர் அதில் நாடகமாடி வெளித்தோற்றத்தில் சிறந்தவர்கள் எனக் காட்ட முற்படுகிறார்கள். மலையகத்தில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆயினும் சரி மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட ஏனைய தொழிற்சங்கங்களாயினும் சரி அவற்றுக்கென்று தனித்துவம், தனிக்கொள்கை உண்டு. அவற்றை அவை எந்தளவுக்கு அடைந்துள்ளன என்பதை சுயமதிப்பீடு செய்தல் அவசியமாகும்.

குறிப்பாக மலையகத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்கு பிற்போக்குடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டமைக்கான காரணத்தை பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து தொழிற்சங்கங்களும் பதிலளிக்க முன்வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

பாதை செப்பனிடுவதும், கூரைத் தகடுகள் கொடுப்பதும் மட்டுமே மலையக அபிவிருத்தியும் மக்களுக்கான சேவையும் என்ற பிரதான நோக்கினை அரசியல் தலைவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை தீர்த்து வைப்பதன் மூலம் மலையகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம்.

அடுத்து மலையகக் கல்வியில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. சிறுபராயத்தில் குழந்தைகளுக்கு போஷாக்கான உணவு கிடைக்காததால் அவர்களின் அறிவாற்றலிலும் மந்த நிலை காணப்படுகிறது. தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படுமானால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாமல்லவா?

பொது நலனுக்காக அரசியலில் ஈடுபடுவதாகக் கூறும் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் மக்களின் நலனுக்காக இணைந்து குரல் கொடுக்காமைக்குக் காரணம் என்ன?

அதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்| என்ற கொடுமை மலையகமெங்கும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதற்குப் பெற்றோர் விழிப்புணர்ச்சி கொள்ளாதது முக்கிய காரணம் எனினும் வறுமையே தூண்டுகோலாக அமைகிறது. இங்கு வருமான(சம்பள) அதிகரிப்பின் தேவை உள்ளதை நம் தலைவர்கள் உணர்வார்களா?

வேதனையோடு தொடரும் மக்களின் வாழ்க்கையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் தலைமைகள், வரலாற்றுக்குக் கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும் அல்லது கறைபடிந்த மக்களின் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாக அவர்களின் பெயர் என்றும் மாறாத வடுவாகி விடும்.

அரசியல், தொழிற்சங்க பேதங்கள் தேவையில்லை, யார் பெரியவர் என்ற நிலையும் அவசியமில்லை, மக்களுக்காக ஒன்றிணைந்தால் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அது எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வாக அமைவதுடன் ஆரோக்கியமான, காத்திரமான எதிர்காலத்துக்கு நல்ல அடித்தளமாகவும் அமையும்.

மக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் இதுபற்றிச் சிந்திக்க வேண்டும். வலிமை மிக்க மனித உணர்வுகளை சுயலாபத்துக்காக கிள்ளிக் கொலைசெய்யாது உண்மையான அரசியல் சேவையை வழங்க முன்வருதலே காலத்தின் தேவையாகும்.

-இராமானுஜம் நிர்ஷன்