Wednesday, July 22, 2009

மலையக இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் வடிவேல் சுரேஷ்

யுத்தம் முடிவடைந்துள்ள இவ்வேளையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்ட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்,யுவதிகளை விடுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தோட்ட மக்களையும் கிராமிய மக்களையும் இணைக்கும் வகையிலான வேலைத்திட்டம் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளின் திறப்பு விழா நிகழ்வுகளுடனே ஆரம்பமாகியுள்ளன. தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்றதன் நோக்கமே அரசின் இலவச சுகாதார சேவைகளை பெருந்தோட்டத்துறை மக்களும் பெறவேண்டுமென்பதற்கேயாகும்.
அரசின் அந்நோக்கம் தற்போது நிறைவேறி கொண்டிருக்கின்றது. தோட்ட வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைக்கவேண்டுமென்ற எனது கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்ததையடுத்தே திட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்.
இரண்டரை வருடங்களுக்குள் 50மலையக பெருந்தோட்ட வைத்தியசாலைகளை முதற்கட்டமாக அரசினால் பொறுப்பேற்று அவ்வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் புனரமைப்பு பணிகளுக்கென பெருந்தொகை நிதியினையும் வழங்கப்பட்டுள்ளது..கோடிக்கணக்கான ரூபா செலவில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட வீதிகள் அமைத்தலும் ஏற்கனவே இருந்த வீதிகளை புனரமைத்தலுமான வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றிற்கும் கணினித் தொகுதிகளையும் ஆலயங்களுக்கான உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளது என்றார்
ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் 2008க்கான வருடாந்த தேயிலை மதிப்பீடு

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தேயிலை தரகுத் துறைசார்ந்த துணை நிறுவனமான ஜோன் கீல்ஸ் நிறுவனம், அண்மையில் அதன் 2008ம் ஆண்டுக்கான தேயிலை மதிப்பீட்டை வெளி யிட்டுள்ளது.அதன் முதற்பிரதியானது தேயிலை சபையின் தலைவர் லலித் ஹெற்றியாச்சியிடம் வழங்கப்பட்டது.
தேயிலை துறையின் மீது பூகோள பொருளாதாரம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராயும் அதேவேளை, அது மேற்கு, நுவரெலியா, ஊவா, சி.டி.சி. லோ குரொன், டஸ்ட் மற்றும் பிற தரங்களுக்கான தேயிலைச் சந்தைகள் மற்றும் உலகளாவிய உள்ளுர் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பற்றியும் இவ்வறிக்கை விரிவாக எடுத்துரைக்கிறது.
இவ்வறிக்கையின் படி, கடந்த ஆண்டில் உலகளாவிய அளவில் தேயிலையின் விலை யில் முன்னெப்போதுமில்லாத விலைத் தளம்பல் ஏற்பட்டிருந்தது. கென்யா போன்ற பிரதான தேயிலை உற்பத்தி நாடுகளில் தேயிலை வழங்கலில் ஏற்பட்ட கட்டுப்பாடு காரணமாக, இலங்கையின் தேயிலை விலை வரலாறு காணாத உயரங்களைத் தொட்டது.
உலக பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு ஏலத்தில் கேள்விகோருநர் இல்லாமையினால் பெருமளவான தேயிலை விற்பனை நடைபெறவில்லை. தேயிலை தொழிற் றுறையில் ஒரு நம்பகமற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. அது வழங்கற் சங்கிலி முழுவதும் ஒரு பண ஓட்டத்தில் நெருக்கடியைத் தோற்று வித்தது. விற்கப்படாத தேயிலையின் வீதமானது தேயிலை சபையின் அனுசரணையால் குறைக்கப்பட்ட அதேவேளை, உற்பத்தியாளருக்கு தேவையாக இருந்த பணஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
2008ல் உலக தேயிலை உற்பத்தி 3.7 பில்லியன் கிலோ. இது 2007 ஐ விட 12 மில்லியன் கிலோக்கள் குறைவு. கென்யா தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இறக்கம், அதாவது முதல் ஆண்டைவிட 24 மில்லியன் கிலோக்கள் குறைவாக இருந்தது.
மாறாக சீனாவும் இலங்கையும் முறையே 20 மில்லியன் கிலோ மற்றும் 14 மில்லியன் கிலோ தேயிலையை அதிகமாக உற்பத்தி செய்திருந்தன. இந்தியாவில் 36 மில்லியன் கிலோக்களை அதிகமாக உற்பத்தி செய்திருந்தது.

2008ல் இலங்கையின் தேயிலை உற்பத்தி உச்சத்தை 318.7 மில்லியன் கிலோவைத் தொட்டது. 2005 ல் உற்பத்தியான 317.2 மில்லியன் கிலோவை விட இது அதிகம். அதாவது 2007 ஐ விட 4.6 வீதம் அதிகம். கடந்தாண்டு மதிப்பீட்டின்படி ஹைகுரோன் உற்பத்தி 16 வீதம் அதிகமாகவும் மீடியம் குரோன் 10 வீதம் குறைவாகவும், லோ குரோன் 4 வீதம் உயர்வாகவும் அமைந்திருந்தது.
உலக ஏற்றுமதியானது முந்திய வருடத்தின் 71 மில்லியன் கிலோவைவிட இவ்வாண்டு 1.6 மில்லியன் கிலோவாக அமைந்தது. 2007 ஆண்டைவிட 11.6 வீதம் அதிகமாக 383.4 மில்லியன் கிலோவுடன் கென்யா மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்ற நிலையை தக்க வைத்துக் கொண்டது.
இலங்கை இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கியது. 2008ல் இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்றவை ஏற்றுமதியில் ஏற்றத்தை காட்டிய அதே வேளை, ஆஜன்டினா, உகன்டா, தன்சானியா, மாலாவி போன்றவை ஏற்றுமதியில் இறக்கத் தைக் கண்டிருந்தன.
இலங்கையின் 2008க்கான தேயிலை ஏற்றுமதி 319.3 மில்லியன் கிலோவை விட அதில் 299.2 மில்லியன் கிலோவைவிட தேறிய ஏற்றுமதியாக இருந்தது. இலங்கைத் தேயிலைக் கான பிரதான ஏற்றுமதி மையங்கள் எனும் நிலையை ரஷ்யா, ஈரான், சிரியா, மற்றும் துருக்கி என்பன தக்க வைத்துக்கொண்டன. ஏற்றுமதி வருமானமும் 2007 ஆண்டுக்கான 113.5 பில்லியன் ரூபாவைவிட 2008ல் 137.5 பில்லியன்களாக அமைந்திருந்தது

Sunday, July 19, 2009

போக்குவரத்து வசதிகள் அற்ற நிலையில் பெருந்தோட்டங்கள் கவனிக்குமா இ.தொ.கா.?


பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்ற போதிலும் தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.


கம நெகும, மக நெகும திட்டங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் தோட்டப் பாதை கள் கொங்கிரீட் போடப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. ஆனால் நகரப் பகுதிகளுக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியுமாகவே காணப்படுகிறது. வெள்ளைக்கார துரைமாரின் நிர்வாகத்தின் கீழ் இருந்ததைவிட மிகவும் மோசமான நிலையில் பிரதான வீதிகள் காணப்படுகின்றன.


இன்றைய நவீன யுகத்தில் மலையக மைந்தர்கள் இலக்குகளுக்காக இடைவிடாது குரல்கொடுத்து வருகின்ற போதிலும் வீதிப் புனரமைப்பும், வாகன போக்குவரத்து வசதிகளும் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது.


குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் செறிவான தொழிலாளர்களை உள்ளடக்கிய தல வாக்கலை நகரை அண்மித்த தோட்டப் பகுதி வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது. இரவு நேரங்களில் மனித நடமாட்டத்திற்கு ஏற்றதாக வீதிகள் இல்லை.


குன்றும் குழியுமாக காட்சி தரும் இந்த வீதிகளில்தான் தினமும் மக்கள் பயணிக்கின்றனர்.


தோட்டங்களுக்கும் நகரத்திற்குமிடையே சாதாரணமாக 5 கி. மீற்றரிலிருந்து 15 கி. மீற்றர் வரையான தூர த்தை நடந்தே கடக்க வேண்டியிருக்கிறது. இடை நிலை, உயர்தர மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்வதானால் அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் புறப்பட்டே ஆக வேண்டும். சற்று தாமதமானால் கூட பாடசாலைக்குச் செல்ல முடியாது போய்விடும்.


காலை முதல் மாலை வரை தேயிலை மலை முகடுகளில் மண்டியிட்டுக் கிடந்து, கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் கால்நடையாகவே நகரங்களுக்கு செல்கின்றனர்.


நாளொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இவ்வாறான வீதிகளைப் பயன்படுத்துகின்றனர். வீதிகள் குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.


இவ்வாறான வீதிகளில் வாகனங்கள் சேவையில் ஈடுபடுவது மிகவும் குறைவு. தோட்டப் பகுதிக்கு பஸ் போக்குவரத்துகள் இடம்பெறுவதில்லை என்றே கூறவேண்டும். கிராமப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது தோட்டப் பகுதிகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் காணப்படுகிறது.


தோட்டத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற ஒரு தொழிலாளர் தமது ஊழியர் சேமலாப நிதியில் ஒரு வாகனத்தை மிகவும் குறைந்த விலையில் அவ்வாகனம் வீதியில் நகர்ந்து சென்றாலே போதும் என்ற நிலையில் தான் காணப்படும்.அவ்வாறான வாகனங்களே தோட்டப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடு கின்றன. பழைய வாகனங்களே மக்களை ஏற்றி இறக்கும் பணியை கனக்கச்சிதமாக செய்து வரு கின்றன.


ஓரிரு வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன.சேவை மனப்பான்மையில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எந்தளவுக்கு பணத்தை வசூலிக்க முடியுமோ அந்தளவிற்கு சாதித்துவிடுவர்.


இரண்டு வாகனங்கள் அந்த வீதியில் சேவையில் ஈடுபடுமாயின் அவர்களுக்குள் போட்டா போட்டிகள் வேறு. ஒரு வாகனத்தில் செல்லும் ஒரு மாணவன் அந்த வாகனம் பழுதடைந்து விட்டால் வேறு வாகனத்தில் ஏற்றாத சம்பவ ங்களும் நடந்திருக்கின்றன.


இந்நிலையில் வாகனங்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட அந்த மாணவர்கள் அதிகமாக மழைபெய்யும் நாட்களில் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போவதாக அந்த பெற்றோர் தெரிவித்தனர். தோட்ட வீதிகளில் செல்லும் வாகனங்களில் சாதாரணமாக 12 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. எனினும் வாகனச் சொந்த க்காரர்கள் அவர் களால் முடிந்தள விற்கு ஆட்களை ஏற்றி மூச்சுகூட வெளியில் விட முடியாமல் நகர்ந்து நகர்ந்து செல்லும், போக்குவரத்துக்கென பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணமானது மூன்று மடங்கு அதிகரித்த நிலையே காணப்படுகிறது.


தமது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது கஷ்டப்படும் இந்த மக்கள் கட்டண அதிகரிப்பு காரணமாக தமது வீட்டுக்குத் தேவையான சாமான்கள் அனைத்தையும் ஒரு மூடையாகக் கட்டி அதனைத் தலையில் சுமந்துகொண்டு கால் நடையாகவே வீடுகளுக்குத் திரும்புவதுண்டு


இவர்களின் நிலைமை இவ்வாறிருக்க பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் ஐந்தாம் வகுப்பு வரையே கற்பிக்கப்படுகின்றது.


ஒரு சில பாட சாலைகளில் மட்டுமே சாதாரண தரம் வரை கற் பிக்கப்படுகிறது. உயர்தர பாடசாலைகள் நகர்ப் புறப் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இதனால் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த அசௌகரியமான சூழலை எதிர்நோக்குகின்றனர்.


சில பெற்றோர் தோட்டப் பாடசாலையில் ஆசிரியர்கள் சரிவர கற்பிப் பதில்லை எனக்கூறி நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர்.


இச் சிறார்கள் தமது சக்திக்கும் பலத்திற்கும் அப்பாற்பட்டு புத்தகப் பைகளை சுமந்துகொண்டு பல மைல் தூரம் நடந்தே பாடசாலைக்குச் செல்கின் றனர். பாடசாலை செல்வதற்கிடையில் களைத்துப் போகும் இச்சிறார்கள் உரியமுறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாதுள்ளது.


பள்ளிச் சிறார்கள் தினமும் மழையிலும் குளிரிலும் நடந்து செல்வதைப் பார்க்கும் போது பரிதாபமாக இரு க்கிறது. மண் சரிவு, இடி, மின்னல் போன்ற இயற்கை அனர்த்த சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கும் இச்சிறார்களின் கல்வியையும் எதிர்கால இலட்சியத்தையும் பாதுகாப்பதற்கு மலையக அரசியல் தலைமைகள் முன்வரவேண்டியது அவசியமாகும்.


போக்குவரத்து பிரச்சினை காரணமாக பல மாணவர்கள் ஆரம்ப நிலையிலேயே கல்வியை இடைநிறுத்தி வீட்டு வேலைகளில் ஈடுபடுவதையும், தேயிலைத் தோட்டங்களில் வேலைக்குச் சேர்ந்து விடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள் ஆகியோர் தமக்கான வைத்திய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கால்நடையாகவே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.


ஆபத்தான நிலையில் இருக்கும் தொழிலாளர்களை தோட்ட வாகனங்களுக்காக காத்திருந்து அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கிடை யில் உயிரிழந்த சம்பவங்களும் தோட்டப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களை ட்ரக்டரில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்தான் எத்தனை பேர்.
இந்நிலை மாற வேண்டும். தேயிலை தோட்டத்திலேயே காலாகாலமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் தொழிலாளர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.


மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் 1திர்காலத்தில் மலையக அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளினது நிலைமைகள் கேள்விக் குறியாகிவிடும்.


சந்ததி சந்ததியாக தேயிலைத் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே சமாதியாகிப் போகின்ற மலையக மக்களினது போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டியது எம் தலைவர்களினதும் கட்டாய கடமையாகும்.


தோட்டத்திற்கும் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் இடையிலான வீதிகள் புனரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக பஸ் சேவைகள் நடத்தும்படி தொழிலாளர்கள் கோருகி ன்றனர். சாராயத் தவறணைகளை திறப்பதற்கு பதிலாக மக்கள் நலனுக்கான பணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் இந்த போக்குவரத்துத் துறையும் ஒன்று. அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்.


தோட்டப் பகுதி மக்களின் நலன் கருதி இ. தொ. கா. பஸ் சேவைகளை நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடத்தப்ப டும் இச்சேவையை ஒரு கட்டமைப்பின் கீழ் எதிர்காலத்தில் சிறந்த போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய ஒரு ஸ்தாபனமாக அது இருக்க வேண்டும்.


போக்குவரத்து வசதிகள் இல்லாத தோட்டங்களில் இப் போக்குவரத்து சேவைகளை நடத்தக்கூடிய சக்தியும் பலமும் இ. தொ. காவிற்கே இருக்கிறது. மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதுபோல மக்களின் நலனில் அக்கறை கொண்டு இவ்வாறான பஸ் போக்குவரத்து சேவைகளை நடத்தும்படி தோட்ட மக்கள் வேண்டுகின்றனர். இவ்விடயத்தில் அரசியல், தொழிற்சங்க வேறுபாடுகள் எதனையும் பார்க்காமல் கூடிய விரைவில் பஸ் சேவைகளை நடத்த இ. தொ. கா. ஆவன செய்ய வேண்டும்.


டி. உமாதேவி

பேராதனைப் பல்கலைக்கழகம்

Wednesday, July 15, 2009

தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சினைகள்

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்கு மேலதிகமாக தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இவ்வாறு தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கு தோட்டங்களில் சில விதி முறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. 1975 இல் தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத் தலைவராக ரஞ்சன் விஜேரத்னா இருந்த போதே சகல தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடொன்று காணப்பட்டது.



இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தோட்டத் துரையோடு இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். இணக்கப்பாட்டின் முடிவில் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு தோட்டத் துரையின் அனுமதியோடு தற்காலிக கொட்டிலை நிர்மாணித்துக் கொள்ள முடியுமாகவிருந்தது.




தோட்டத்துரையின் அனுமதியின்றி கொட்டில் ஒன்றை நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில் அல்லது தோட்டத்தில் காலியாக இருந்த லயன் அறைகளில் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தோட்டங்களிலிருந்து அநேகமானவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதுண்டு. சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை எனவும் இவர் தான் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் லயன் காம்பிறாவை தோட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கையளிக்கும் வரை அவர்pன் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் அனுமதியின்றி நிர்மாணித்த தற்காலிக கொட்டிலை உடைத்து அகற்றும் வரை இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் நிர்வாகத்தின் வாதமாக இருக்கும்.



எனவே வேலை நீக்கம் அல்ல ( No termination) இது ஒரு வேலை இடைநிறுத்தமே (Suspension from work) எனவே தொழில் பிணக்கு சட்டத்தின் 31(ஆ) பிரிவின் படி தொழிலாளிக்கு இம் மனுவை இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமை இல்லை என்றும் இம் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொழில் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதும் நிர்வாகத்தின் வாதமாகும்.



சில சமயங்களில் தொழிலாளியின் சார்பில் வாதிடும் சட்டத்தரணி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதியின் சாமர்த்தியத்தால் சில வழக்குகளில் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தோட்டத்துரையை சந்தித்து பேசி அவர் இந்த காம்பிறாவை சம்பந்தப்பட்டவருக்கு தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்றும் அல்லது தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொள்ளும் முன்பு தோட்ட சின்னத்துரையிடம் சொல்லிவிட்டுதான் இதனை செய்தார் என்றும் சாட்சிகளை நெறிப்படுத்தி அவ்வாறான சாட்சிகளில் தொழிலாளிக்கு ஏற்படும் சாதகமான பலாபலன்களை ஆதாரமாக வைத்து இது ஒரு ஊகித்தறிந்த வேலை நீக்கமே (Constructive termination) என்றும் இது நிர்வாகத்தின் நியாயமற்ற செயல் என்றும் விவாதித்து வழக்குகளை வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் பலவற்றில் இது வேலை நீக்கம் அல்லது (Not termination) தோட்டத்துரையின் சட்ட ரீதியிலான கட்டளையை (Lawful Orders) நிறைவேற்றும் வரை தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளார்.(Suspension from work) என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




எனவே தொழிலாளி ஒருவரின் பிரச்சினை முன்னெடுக்கப்படும் பொழுது அது அவரது அது அவரது சட்ட ரீதியிலான உரிமையை நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையா அல்லது யதார்த்தமான சூழ்நிலைகள் காரணமாக தோன்றிய மனிதாபிமான ரீதியில் அணுகக்கூடிய பிரச்சினைகள் என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன.




தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வசதியின்மை காரணமாகவும் அவர்களுக்கென்று குளியலறைகள் தனியாக இல்லாத காரணங்களினாலும் தங்களின் வீடுகளுக்கு முன் வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவசர அவசரமாக குளிப்பது வழக்கம். வீட்டிலுள்ள வயது வந்த பெண் பிள்ளைகளுக்குக்கூட மறைவாக நின்று குளிக்க முடியாதுள்ளதே என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் தங்களின் மரக்கறி தோட்டங்களிலோ வீட்டுக்குப் பக்கத்திலோ தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்து கொள்வது வழக்கம்.




தொழிலாளிக்கும் தொழில் கொள்வோருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொழில் நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நாகரிகமான காலத்திலும் கூட இளம் பெண்கள் திறந்த வெளியில் நின் குளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இந்த வசதிகளை செய்து கொடுப்பது தொழில் கொள்வோரின் கடமையும் பொறுப்புமாகும். இவ்வாறான வசதிகள் நிர்வாகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல என்று அப்பீல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




(ஆதாரம் Bagawathy VS SLSPC-CA 47 87)) நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிமைகள் மற்றும் மனிதாபிமான காரணங்களை ஆதாரங்களாக வைத்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளும் உண்டு.


எஸ். இராமநாதன்


மாத்தனை

Monday, July 13, 2009

தோட்டத்துறை இளைஞர்களின் மனித உரிமை நிலை

இலங்கையின் பெருந்தோட்ட பயிராக்கவியல் செயற்பாடுகளுக்கென பிரித்தானியரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றைய மலையகத் தமிழர்கள். 18ம் நூற்றாண்டின் குருதி கசிந்த சோக வரலாற்றின் உலகறியாத மக்கள் கூட்டமாக இன்று இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதகுல நாகரிகம் வெட்கி நிற்குமளவிற்கு இம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த போதும் தம் அயராத உழைப்பின் மூலம் இந் நாட்டின் மத்திய மலை நாட்டில் இந் நாட்டுக்கு பெரும் புகழையும் பொருளாதார ஊற்றையும் உருவாக்கி இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும் காத்திரமான பங்களிப்பினை வகித்து வருகின்றார்கள்.

மனித நேயம் வென்றெடுத்த நாகரிகத்தின் எந்தவொரு வினைப்பயனையும் இம் அனுபவிக்கக்கூடாது என்பதிலும் அம் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலம் காலம் காலமாக பதவிக்கு வந்த அதிகார வர்கத்தினர் மிகவும் சிரத்தையுடன் இருந்தனர். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இம் மக்களை நவீன அடிமைகளாக வைத்து மலிவு ஊழியர்களாக (Cheep Labour) பயன்படுத்தி தொடர்ச்சியாக சுரண்டினார்கள் என்றே கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை பலப்படுத்த அயராது பாடுபட்ட இம் மக்களின் உழைப்பு நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதில் பெரிதும் பங்காற்றியது என்பதனை மறந்துவிட முடியாது. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் நாடு சுதந்திரம் பெற்றபோது இம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமையாகம். வாழ்வுரிமை மறுக்கப்பட்டமையானது இம் மக்களை அரசியல் அநாதைகள் என்ற அசாதாரணமான நிலைக்கு தள்ளியதுடன் அனைத்து அரசியல் சமூக பொருளதார உரிமைகளையும் அனுபவிக்க முடியாதவாறு ஒடுக்கப்பட்டார்கள்.
இதன் விளைவாக ஏனைய சமூகத்தவர்கள் அனுபவித்த அடிப்படை மனித உரிமைகளை மலையக மக்கள் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியது. சர்வதேச ரீதியாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மனித உரிமை நியமங்களையும் (International Human Rights Standards) அனுபவிக்க முடியாத நிலைக்குள்ளானார்கள். சுமார் மூன்று நூற்றாண்டு காலமாக சகல அடிப்படை மனித உரிமைகளையும் அனுபவிக்க முடியாத, மனித கௌரவத்துடன் (Human Dignity) வாழ முடியாத ஒரு மக்கள் கூட்டமாக இந் நாட்டில் இருந்தார்கள் குறிப்பாக 1970ம் ஆண்டு ஆகும் வரையில் தாம் இழந்த அரசியல் மற்றும் ஏனைய சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுக்; கொள்வதற்காக காத்திருந்தனர்.
1970 களுக்கு பின்னரும் சகல மனித உரிமைகளுடனும் ஒரு நாகரிகமான மக்கள் கூட்டமாக வாழும் சூழல் உருவாகவில்லை. படிப்படியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நியாயப் பிரச்சாரங்களினூடாகவே (Advocacy) ஓரளவேனும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்க முடிந்தது என்பது மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.

முலையகத்தில் 18 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பெருமளவான இளைஞர்கள் சகல தோட்டப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையினை சரியாக வரையறுப்பது கடினமாகவே உள்ளது. அது குறித்த சரியானத் தரவுகள் திரட்டப்பட்டதாகத் இது வரையில் தெரியவில்லை. ஆயினும் மொத்த இளைஞர்களில் சுமார் 48 சதவீதமானோர் தொழில் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.

போதிய கல்வி தேர்ச்சியின்மை குறைந்த மட்ட விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு குறைந்த மட்ட தொழில் திறன், குறைந்த உலக அனுபவம், குறைந்த மட்ட துறைசார் பயிற்சி ஆகிய பல பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அதனையும் தாண்டி ஒரு சில படித்த இளைஞர்களும் அரச தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம், தோட்ட முகாமைத்துவ தொழில்களில் பாரபட்சம், அரச சேவைகளில் பாரபட்சம், புறக்கணிப்புக்கள் அந்நியப்படுத்தல் ஆகிய பல பாகுபாடுகளுக்கு உட்பட்டு வருகிறார்கள்.
அதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் தான் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொண்ட அறிவினை மூலதனமாகக் கொண்டு சில ஏற்றங்களை அடைந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் நீண்ட பிரயத்தனங்களின் மூலம் பல்கலைகழக மற்றும் கல்வியியல் கல்லூhயிpல் அனுமதிப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமது எதிர்காலத்தை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையக இளைஞர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்பு என்பது ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானது வருந்ததக்க விடயமாகும் ஏனைய துறைகளில் இவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் மிக குறைவாகும். ஏவ்வாறாயினும் போதிய கல்வித் தேர்ச்சி இன்மையால் நீண்டகால்;;;ம் நிரந்தர தொழிலின்றி பெற்றோர்களின் உழைப்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

இவ்வாறு நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஏற்படும் வறுமை மற்றும் அதிகரித்த குடும்ப சுமை காரணமாக தோட்டப்பகுதிகளை விட்டு நகர்புறங்களுக்கு தொழில் வாய்ப்பு தேடிச் செல்கிறார்கள். இவ்வாறு தொழிலுக்கு செல்லும் இந்த இளைஞர் யுவதிகள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் மனித உரிமை பிரச்சினைகள் அதிர்ச்சியூட்டுவனவாக காணப்படுகின்றன.

- இரா. ரமேஸ்-

Saturday, July 11, 2009

மூடப்பட்டுவரும் தேயிலை தொழிற்சாலைகள்

மலையக பகுதியில் உள்ள சகல தோட்டங்களும் வெள்ளையர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போது சகல தேயிலை தோட்டங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளின்றி மாதம் 30 நாட்களும் வேலை செய்து வந்தனர். அக்கால கட்டத்தில் சகல தேயிலை தோட்டங்கள் தோறும் தேயிலை தொழிற் சாலைகள் இருந்தன. அந்தந்த தேயிலை தோட்ட தேயிலை கொழுந்துகளை அதே தோட்ட தொழிற்சாலைகளில் அரைத்து தேயிலையை நல்ல விலைக்கு பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அக்கா¡லத்தில் தோட்டங்களில் இருந்த தெருக்கள் சுத்தமாக இருந்தன. வைத்திய சாலைகள் பராமரிப்பில் இருந்தன. தோட்ட சுத்திகரிப்பாளர்கள் கடமையில் இருந்தனர். தோட்டப் பளிச்சென இருந்தது.

இவ்வாறான தேயிலை தோட்டங்களையும் இறப்பர் தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று அரச உடமைகளாக்கியது. அப்போது அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என இரண்டு பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் இயங்கி வந்தன. தேயிலை தோட்ட பராமரிப்பு ஓரளவுக்கு சிறந்து காணப்பட்டது.

இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் ஒரு சில தேயிலைத் தோட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. அவ்வாறு இணைக்கப்பட்ட போது அத் தோட்டங்களில் இருந்த தேயிலை தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.

அவ்வாறு மூடப்பட்ட தேயிலை தொழிற் சாலையில் இருந்த உபகரணங்களை விலை மனு கோரி விற்று விட்டனர்.

பின்னர் தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த சிலர் தேயிலை கொழுந்தை மட்டும் பறித்து விற்றனர். ஆனால் தேயிலை தோட்டங்களை துப்புரவு செய்யவில்லை. பல தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றன. பராமரிப்பில் அக்கறை குறைந்து வருகிறது.

தோட்டங்களில் இருந்த மரங்களை வெட்டி விற்று விட்டனர்.அந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கவில்லை முழுமையாக கம்பனிகள் சுருட்டி கொண்டன.

மேலும் அக்காலத்தில் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளையும் விலை மனு கோரி விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் பணமும் கம்பனிகாரர்கள் சுருட்டி கொள்கின்றனர்.

இவ்வாறாக கிடைக்கப் பெறும் இலாபங்களை தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் வழங்குவது இல்லை. இவ்வாறு தோட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் விற்று தீர்ந்த உடன் தொழிலாளர்களுக்கு என்ன மிஞ்சப் போகிறது? இவ்வாறு விற்பனை செய்வதை அரசாங்கமும் தோட்டத் தொழிற் சங்கங்களும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் தோட்டங்களில் லயன் அறைகளில் வசிப்போர் உள்ளனர். 8 ஒ 8 காம்பிராக்களில் வசிக்கின்றனர். அதனை நவீன மயப்படுத்த வேண்டும். தற்காலிக கொட்டில் அமைத்து கொண்டும் உள்ளனர். தோட்ட நிர்வாகம் சம்பாதித்து கொண்டு செல்வதை மட்டும் பார்க்காமல், இவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும். சகல வேலைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்பில் தோட்ட கம்பனிகள் தொழிலாளர் நல விஷயங்களை கண்டு கொள்வதில்லை. இலாபம் தேடுவதிலேயே குறியாக உள்ளன.

தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. கம்பனிகாரர்களினால் தான் இது நடக்கின்றது. கிடைக்கும் இலாபம் எல்லாம் எங்கு போகின்றது?

ஒருசில தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் பல தோட்டங்கள் பாரிய இலாபத்தினை தேடி கொடுக்கின்றன. அதற்குக் காரணம். தோட்டத்தை நிர்வாகம் செய்யும் முகாமையாளரும் தோட்ட தொழிலாளரும் தான் காரணம்.

மஸ்கெலியா பகுதியை எடுத்துக் கொண்டால் சீட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலை, புரவுண்லோ தேயிலை தொழிற்சாலை, அப்புகஸ்தனை தேயிலை தொழிற்சாலை, பெரிய நடுதோட்ட தேயிலை தொழிற்சாலை, ராணி தோட்ட தேயிலை தொழிற்சாலை மல்லியப்பு தேயிலை தொழிற்சாலை மினிசிங் லேன் தேயிலை தொழிற்சாலை நல்ல தண்ணி தேயிலை தொழிற்சாலை மடுல்கல தேயிலை தொழிற்சாலை என்பன மூடப்பட்டுள்ளன.
இவற்றில் மல்லியப்பு தேயிலை தொழிற்சாலையை அப்புறப்படுத்தும் வேலை ஆரம்பமாகி விட்டது.இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது கம்பனிக்காரர்களுக்கே இதில் இலாபம்.

ஏனையவற்றையும் இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், அரசாங்கம் முன்வர வேண்டும்.
-பெருமாள்-

Friday, July 10, 2009

நான்கு மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்த தொழிலாளர்கள்

ஹொரணை,மொரகஹஹேன யாலகல தனியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐம்பது தொழிலாளர்களுக்கு,தோட்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ம.ம.மு யின் இங்கிரிய மாவட்டப் பிரதிநிதி எம்.எஸ்.பெருமாள் தோட்ட உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது தோட்ட உரிமையாளர் இதற்கான காரணத்தைக் கூறாது இழுத்தடித்து வருவதாகவும், இதனையடுத்து தொழிலுறவு அதிகாரி மற்றும் பாணந்துறை தொழில் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
இதேவேளை, சம்பளம் வழங்கப்படாததால் இங்குள்ள தொழிலாளர்கள் ஊதியமில்லாது பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதுடன் தொடர்ந்தும் வேலைக்குச் சென்று வருகின்றனர். தனியார் தோட்ட உரிமையாளர்கள் பலர் இன்று தோட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்குரிய சம்பளம், ஊழியர் சேம இலாப நிதியம், உரிமைகள், சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் போன்றவற்றை வழங்குவதில் பின்னின்று வருவதுடன், தொழிலாளர்களை அசௌகரியத்திற்குட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.