Saturday, April 25, 2009

இம் மேதினத்திலாவது மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!

இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.
இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.
வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.
ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.
180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.
1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.
எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.
இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.
அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும்
நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939, வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942 வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19 வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950, எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953, ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953, வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957, வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957, நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957, ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958, ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958, பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958, கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959, முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959, ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959, தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959, சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960, முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960, செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961, சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961, அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969, ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969, இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970, அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970, கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 1977. பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.
14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.
கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்

Thursday, April 23, 2009

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்தரங்கு

தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கும் சம்பள உயர்வு தொடர்பாக தெளிவுபடுத்தும் பொது கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் 26-04-2009 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதுளையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய தோட்ட தொழில் சங்கக் கூட்டமைப்பின் உப தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்
தோட்டத் தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு சம்பந்தமாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு போன்றவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாத தொழிற் சங்கங்கள் ஊடகங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணமுள்ளன. தற்போது தோட்டங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில காலங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்களும் மறைந்துவிட்டன. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற் சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் ஏனைய பொதுப் பிரச்சினைகள் சம்பந்தமான கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைத்தால் நிச்சயமாக வெற்றி காணமுடியும். இதையே பெரும்பாலான தொழிலாளர்கள் விரும்புகின்றனர். இதை விடுத்து பல்வேறு கோஷங்களை கடந்த காலங்களைப்போல முன்வைத்துக் கொண்டிருந்தால் அது தோட்டக் கம்பனிகளுக்கு வசதியாக அமைந்துவிடுவதுடன் அப்பாவித் தொழிலாளர்களையும் பாதித்துவிடும். ஆகவே இவற்றைத் தெளிவுபடுத்தும் இக் கருத்தரங்கில் தொழிற் சங்கத் தலைவர்கள், தோட்டத் தலைவர்கள், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்புத் தலைவர்கள், சட்டத்தரணிகள், சர்வகலாசாலை விரிவுரையாளர்கள் போன்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Wednesday, April 22, 2009

தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

மத்திய மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கென தொழிலற்ற இளைஞர், யுவதிகள் ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்தியமாகாண தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் மலையகத்திலுள்ள 68 பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப கல்வி பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் கல்வி போதிப்பதற்கென 10 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். 18 மலையக விஞ்ஞான ஆசிரியர்கள் இந்தியாவில் விஞ்ஞான பட்டதாரிகளாக திரும்பியுள்ளனர் என்றார்.

கைத்தறி நெசவு உற்பத்தியையும், சந்தை வாய்ப்பையும் ஏற்றுமதி துறையில் பல்வேறு ஊக்குவிப்புக்களையும் எதிர்பார்ப்பதோடு விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக பாடசாலை மட்டங்களிலும் பிதேச செயலாளர் மட்டத்திலும் திட்டமிடல் தொடர்பாக ஆவன செய்யப்படும் என்றார்.

தோட்ட பிரதேச பிள்ளைகளின் கல்வி நிலைமையை மேம்படுத்துவதற்காக நகர்புற காடசாலை மாணவர்கள் பெறும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து சமத்துவ கல்வி சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

Tuesday, April 21, 2009

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும் - பிரிடோ நிறுவனம்

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் அறியத்தர வேண்டுமென பிரிடோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்

உலகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் உலகக் கல்விச் செயற்பாட்டு வாரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், அதற்காக உலகத் தலைவர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், தத்தமது நாடுகளில் அனைவருக்கும் இலவசமானதும் தரமானதுமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக “உலகக்கல்வி பிரசார இயக்கம்” என்ற அமைப்பு வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை கொண்டாடுவதுடன் பல மில்லியன் மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு கல்வி பெறமுடியாதிருக்கும் அனைவருக்கும் அதனை பெற்றுத்தர வேண்டும் என்ற பிரசாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

உலகில் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்க முடியாதவர்கள். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத வாசிக்கத் தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதுடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.

இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கான கூட்டமைப்பு இந்த செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதுடன் பிரிடோ நிறுவனம் பெருந்தோட்டப் பகுதிகளில் வருடாவருடம் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டி வருகிறது. இம்முறை உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்திற்கான தொனிப்பொருள் “வளர்ந்தோர் இளைஞருக்கான எழுத்தறிவும் வாழ்நாள் கல்வியும்” என்பதாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் தொகை குறிப்பிட்ட அளவில் உள்ளது. மாணவரிடையே இடைவிலகல் அதிகரித்து செல்கிறது. இந்த பின்னணியில் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை பிரிடோ நிறுவனம் வலியுறுத்துகிறது.

இதேவேளையில், பிரிடோ நிறுவனம் ஏப்ரல் 27 ஆம் திகதியை மலையக ஆசிரியர் அர்ப்பணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்தத் தினத்தில் ஆசிரியர்கள் மலையக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பேணுவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுடன் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் இந்நிறுவனம் கோருகிறது.
ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தேர்தலுக்கு முன்பாக நிரப்பப்படுமா? - கல்விசார் சமூகம் கேள்வி

நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன்பு இம் மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமா என கல்விசார் சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களினது நியமனமும் ஒருவருட காலமாக இழுபறி நிலையிலேயே உள்ளது. எனவே இவ்விடயத்தில் காலந்தாழ்த்தாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பரீட்சை முடிவுகளை கல்வித்திணைக்களம் வழங்கியதுடன், உடனடியாகவே தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்பதாகவே தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று முடிந்தது. மத்திய அரசு அறிவித்தது போல் மாகாண பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் தேசிய பாடசாலைகளுக்கான நியமனம் வழங்கப்படவில்லை.


இது தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊவா மாகாண கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நியமனம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடம் தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது விடயத்தில் கல்வியமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஊவா மாகாணத்தில் 33 சிங்கள மொழி மூல தேசிய பாடசாலைகளும் 3 தமிழ்மொழி தேசிய பாடசாலைகளும் உள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அவை வழங்கப்பட்டன. இதில் 3179 நியமனங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.

மத்திய மாகாணம்,சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் என்பவற்றில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்படாமல் போனதுக்கு பல காரணிகள் உள்ளன. ஊவா மாகாணத்தில் தெரிவான 521 நியமனங்களில் 494 தான் வழங்கப்பட்டது. 27 வெற்றிடங்கள் இன்னும் உள்ளது. இது தொடர்பாக மீண்டும் நேர்முகப்பரீட்சை நடந்தாலும் சில காரணத்தால் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஊவா மாகாண சபை மூலம் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையே நியமனங்களுக்கான தாமதமென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனமும் 27 ஆசிரியர்களது வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி- தினக்குரல்
எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் சிலர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக எதுவித ஆதாரமுமின்றி விமர்;சித்து வருகிறார்கள். இவர்கள் ஒப்பந்தத்தை விமர்சித்து பேசிவருவது விசித்திரமாக இருக்கிறது. தொழிலாளர் நலன்களைவிட தங்கள் மத்தியில் உள்ள தனிப்பட்ட விரோத குரோதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தனிப்பட்ட குரோதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தொழிலாளர்களது பிரச்சினையோடு கலந்து குழப்பியடிப்பது தொழிலாளர் நலன்களை எவ்விதத்திலும் பாதுகாக்காது.
தொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் பேசப்பட்டு இறுதியாக ஏற்படும் முடிவினை எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ளும் ஆவணமே ஒப்பந்தம் எனப்படுவதாகும். இணக்கப்பாட்டுக்கு வரும் விடயத்தை எழுத்து வடிவில் ஒப்பந்தமாக செய்து கொள்வதானது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கேயாகும்.
தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், பாதிப்படைபவர்கள் தொழிலாளர்களே. இன்று தொழிலாளர்களின் நன்மை கருதி பல தொழிற் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஊழியர் சேமலாப நிதி சட்டம், சேவைக்கால பணம் வழங்கும் சட்டங்கள் முக்கியமானவைகளாகும். ஆனால் இந்த சட்டங்களையும் தொழில் கொள்வோர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய மில்லியன் கணக்கான ரூபாய்களை தொழில் கொள்வோர் வழங்காமல் மோசடி செய்துவருகிறார்கள். தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பயனாகவே இதனைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்வாரான காலகட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று இல்லாதிருந்தால் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி முதலாளிகள் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தையும்கூட குறைத்துக் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஒருவருக்கொருவர் மத்தியில் உள்ள தனிப்பட்ட குரோதங்களையும் நோக்காக வைத்துக் கொண்டு கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர் துரோக ஒப்பந்தம் என்றும் இது ஒரு அடிமை சாசனம் என்றும் வசைபாடிவருகின்றனர். ஆனால் இதில் தொழிலாளர்கள் ஒன்றை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.யார் எதனைச் சொன்னாலும் இதுவரை காலமும் தொழிலாளர்கள் அதிகரித்த சம்பள உயர்வினைப் பெற்று வருவது தொழிலாளர் துரோக ஒப்பந்தம். இன்னொரு விடயத்தையும் தொழிலாளர்கள் மறந்து விடவில்லை. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கைகளைவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இவர்களால் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு ஒரு சதத்தையேனும் சம்பள உயர்வாகப்பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்பதாகும்.

Friday, April 17, 2009

மலையக அமைப்புகளின் ஆலோசனையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு கட்சிகள் வழிவிட வேண்டும்

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலையகக்கட்சிகள் அதிலிருந்து விலகி மக்களின் தேவைக்கேற்றவாறு ஒப்பந்தத்தை மாற்றி எழுதவேண்டும் அல்லது மக்களின் நலனில் அக்கறையுள்ள மலையக அமைப்புகளின் ஆலோசனைகளுடன் புதிய ஒப்பந்தத்தை எழுதுவதற்கு வழிவிட வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது.

இக்கூட்டு ஒப்பந்தம் பற்றியோ இந்த ஒப்பந்தம் எவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக உள்ளது என்பது பற்றியோ போதிய விளக்கமோ, தெளிவோ இல்லை நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து தொழிலாளர்களது வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது சம்பள உயர்வு பற்றி வேறு கதைகளை கதைக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டாம் என்று ஐ.தே.கட்சியிடம் இவர்கள் கூறமுடியாதா?

தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களால்தான் மலையகம் மாறும் என்ற போக்கில் இன்னுமொரு மாயை உருவாக்கப்படுகின்றது. கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களால் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாதா அல்லது சம்பளத்தை கூட்டிக் கேட்க முடியாதா?