Wednesday, June 24, 2015

பொருளாதார நெருக்கடி பல்கலைகழக மாணவர்களின் இடை விலகலுக்கு காரணம்

மலையத்திலிருந்து அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பவேண்டும் என்பதே எம்முடைய முயற்சியாக காணப்பட்டாலும் மாணவர்களுடைய பொருளாதார நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் இடைநடுவே வெளியேறும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். 'வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் மலையத்திலிருந்து வரும் மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன'. 'பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்லும் மாணவர்கள், அவர்களது குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக இடைவிலகி வேறு தொழில்களுக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலைமையை உடனடியாக மாற்றவேண்டும்'. எனவே, மலையகத்திலிருந்து யாழ். பல்கழைக்கழகத்துக்கு தெரிவாகும்  மாணவர்களுக்காக தங்குமிட விடுதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. மிக விரைவில் கிழக்கு பல்கழைக்கழகத்தில் கல்வி பயிலும் எமது மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

No comments: