Thursday, March 3, 2011

தமிழ் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்


அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப்போட்டியின் போது கவரவில தமிழ் வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மீது பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள் (ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரி) தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

கவரவில தமிழ் வித்தியாலய கரப்பந்தாட்ட மாணவர் அணியினர் மீது மேற்படி பெரும்பான்மையின மாணவர் கூட்டம் ஒன்று கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸார் இருவர், தாக்குதல் நடத்திய மாணவர்களில் இருவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதன் போது அங்கு அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.

எனினும் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மீண்டும் அம்மாணவர் குழு குறித்த தமிழ் பாடசாலை மாணவர்களை தாக்க எத்தனித்துள்ளனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கும் அச்சத்திற்கும் உள்ளான கவரவில தமிழ் வித்தியாலய மாணவர்கள் போட்டிகளில் தமது திறமைகளை சரிவர வெளிக்காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வலயக்கல்வி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி பாடசாலை கரப்பந்தாட்டக்குழுவுக்கு தலைமை தாங்கிய ஆசிரியர் கே.மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருக்கும் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: