Monday, April 19, 2010

தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தவர்களின் தாக்குதலால் நால்வர் காயம்

நிவித்திகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னகந்த மகாவெல தோட்டத்திற்குள் புகுந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்த சிலர் குடிபோதையில் அங்குள்ள தமிழர்களை தாக்கியுள்ளதோடு அவர்களின் வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவத்தில் காயமடைந்த நால்வர் இத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது நீண்டகாலமாக இத் தோட்டத்திலுள்ள காணியை வெளியார் அத்துமீறி கைப்பற்றி வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தைத் தொடர்ந்து பெரும்பாலான தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில் சொற்ப எண்ணிக்கையிலானவர்களே அங்கு வசித்து வருவதாகவும் தெரியவருகிறது.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்த போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறைப்பாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை எனவும் மாறாக தொழிலாளர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.டி ராஜனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அவர் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார். தொழிலாளர்கள் நிவித்திகலை பொலிசில் முறைப்பாடு செய்யவும் ஆவண செய்தார்.

No comments: