Tuesday, October 13, 2009

அட்டனில் முக்கிய இடங்களுக்கு இந்திய எம்.பிக்கள் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று திங்கட்கிழமை நோர்வூட் நகரில் அமைந்துள்ள தொண்டமான் விளையாட்டரங்கைப் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இ. தொ. கா. பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சரும், இந்திய நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கியவருமான டி. ஆர். பாலு தலைமையில், கனிமொழி எம்.பி, தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோரும் ஹெலிகொப்டர் மூலம் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்குக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்து வாகனப் பேரணியில் அட்டன் மாநகர் மணிக்கூண்டுச் சந்தி வழியாக சௌமியமூர்த்தி தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரிக்கு விஜயம் செய்தனர்.
கைத்தொழில் பயிற்சி அரங்குகளை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், பிரதி அமைச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் இ. தொ. கா. பிரதித் தலைவர்களும், கலந்துகொண்டனர்.
10 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் கொட்டகாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தொழிலாளர் பேட்டையைப் பார்வையிட்டு பின்னர் நுவரெலியா நகர் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இக் குழுவினரைச் சந்திப்பதற்கு நகர வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெருந்திரளாக அட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி கல்லூரிக்கு வந்திருந்தனர். நுவரெலியா, அட்டன், பொலிசார் பாதுகாப்பு வழங்கினர். பலத்த பாதுகாப்புடன் இந்திய நாடாளுமன்ற குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

No comments: