Wednesday, September 16, 2009

உத்தேச சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – தொழிற்சங்கங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினை தொடர்பாக மலையக மக்கள் முன்னணி- பெ.சந்திரசேகரன், தொழிலாளர் ஐக்கிய முன்னணி- எஸ்.சதாசிவம், தொழிலாளர் தேசிய சங்கம் - பி.திகாம்பரம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் -ஆர்.சந்திரசேகரன், பாட்டாளி வர்க்க புதிய ஜனநாயக சங்கம் - இ.தம்பையா, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஆர்.முரளிதரன் ஆகிய ஆறு தொழிற்சங்கங்கங்களின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடி தெரிவித்துள்ள பத்திரிகை அறிக்கையில்
  • அடிப்படை சம்பளம் 500 ரூபாவாக இருக்க வேண்டுமென்ற அனைத்து தொழிற்சங்கங்களின் முடிவுக்கு மாறாக 290 ரூபாவை அடிப்படை சம்பளமாக ஆக்கியிருப்பது தொழிலாளர்களின் உழைப்பையும் விலைவாசி ஏற்றத்தையும் உதாசீனப்படுத்துகிறது
  • ஏனைய கொடுப்பனவுகளோடு 405 ரூபா வழங்கப்படுமென தெரிவித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார சுமையை புரிந்து கொள்ளாததாகவே அமைந்திருக்கிறது.
  • அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமான சம்பள கொடுப்பனவுகள் அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு உத்தரவாதமில்லை என்பது தெளிவானதாகும்.

எனவே பின்வரும் கோரிக்கைகளை முன் வைப்பதாக மேற்படி ஆறு தொழிற்சங்கங்களும் தெரிவிக்கின்றன.

  • அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 500 ரூபா அடிப்படை சம்பளமாக வழங்கப்பட வேண்டும். • தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்படும் சம்பள உயர்வு கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் அலட்சியப்படுத்துவதாகவே அமைவதால் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் இக் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக இக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய பகுதிகள் யாவும் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  • இந்த ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் நிராகரிப்பதனாலும் முற்றாக எதிர்ப்பதனாலும் தொழிலமைச்சர் இதில் ஒப்பமிடுவதை உடனடியாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • 500 ரூபா அடிப்படை சம்பளத்திற்காக தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

இந்த விவகாரத்தில் அரசு பார்சையாளராக இல்லாமல் சமூக நியாயபூர்வமான தீர்வுக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: