Saturday, August 15, 2009

பெண்களின் தலைமைத்துவம் மலையகத்திற்கு வேண்டும்

எந்த ஒரு பெண்ணுக்கும் வீட்டிலேயே முதலாவது தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு ஒரு சில வீடுகளில் தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்கு எவரும் ஊக்குவிப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகுதான் பெண்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் பின் மனைவிக்கு பெருமளவு பொறுப்பு சுமத்தப்படுகின்றது. அதாவது கணவன் இருக்கும் போதே தலைமைத்துவம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன விடயங்களைக் கூட பெண்களுடன் கலந்துரையாட வேண்டும். பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா, திருமணம், திருவிழா, கொண்டாட்டங்கள் பெருநாட்கள் இவையாற்றிலும் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.சகல தீர்மானங்களிலும் இவர்களின் பங்களிப்பும் விருப்பமும் இருக்க வேண்டும். உதாரணமாக உடைகள் எடுப்பதில் கூட இவர்களின் விருப்பம் அறியப்பட வேண்டும். குறிப்பாக தோட்டத்தில் நடைபெறும் திருவிழா, மரண வீடு, பெருநாட்கள் (விழாக்கள்) சிரமதானம், பெற்றோர் கூட்டம், அரசியல் கூட்டங்கள், முன்பள்ளிக்கூடங்கள், மற்றும் தோட்ட மட்டத்தில் நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் பெண்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இதனுடாக சமூகத்தில் பெண்களின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். ஆனால் இந்நிலைமை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.
மலையகப் பகுதியில் பெண்கள் அதிகமாகப் படிக்காவிட்டாலும் அவர்களிடத்தில் அதிகமான திறமைகள் உள்ளன.உதாரணமாக இவர்களால் செய்யப்படும் திண்பண்டங்களைச் சுட்டிக்காட்டலாம் (முறுக்கு, வடை, உருண்டை, அதிர்சம், கொக்கிஸ்), ஆனால் இன்று பெரும்பாலான கற்ற பெண்களுக்கு இவ்விடயங்களைச் செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறியே?
இவர்களிடம் திட்டம் இடும் பண்பு மிக அதிகமாகக் காணப்படுகின்றது. வீட்டுத் தோட்டம் போடுதல், வீட்டின் குடும்ப நிர்வாகம், பிள்ளைப் பராமரிப்பு, பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், ஏனைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்கக் கூடிய திறமையும் பொறுப்பும் இப்பெண்களுக்கு இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இப்படி ஒரு தாய் கூறுகின்றார். எனது கணவன் மதுவிற்கு அடிமையானவர். எனக்கு நான்கு பிள்ளைகள், கணவர் சிறந்த கல்வியாளர், நல்ல சமூக சேவையாளர், பொது நலவாதி, எழுத்தாளர், கலைஞர் இவ்வாறு சகல திறமைகள் இருந்தும் இவரால் எனது குடும்பத்திற்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் படிப்பறிவு இல்லாத என்னால் (கைநாட்டு) என்னுடைய 4 பிள்ளைகளையும் எனது திறமையால் படிக்க வைத்து இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பென்சன் எடுத்தும் இன்றும் வேலை செய்கின்றேன்.
4 பிள்ளைகளும் இப்படி சுறுகின்றனர். எங்கள் தந்தையினால் எங்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை. (தந்தை தற்போது இல்லை) எல்லாம் படிக்காத எங்க அம்மாதான். அவரை நாங்கள் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இவ்வாறான எத்தனை தாய்மார்கள் மலையகத்தில் உள்ளனர்.
இவ்வாறான தாய்மார்களை மலையகச் சமூகம் கௌரவித்துப் பாராட்ட வேண்டும். இவர்களை உதாரண புருஷர்களாகக் கொள்ள வேண்டும். இன்று உலகத்தில் பால்நிலை சமத்துவம் பற்றி தினமும் கதைக்கப்படுகின்றது. ஆனால் எத்தனைப் பெண்களுக்கு இந்தப் பால்நிலை சமத்துவம் கிடைத்துள்ளது. ஒரு சில விடயங்களை செய்யும் போது பால் நிலைச் சமத்துவம் பற்றிக் கதைக்க வேண்டும். உதாரணம், திருமணம் செய்யும் போதே இதனைக் கதைக்க வேண்டும்.
ஆண்களும் (கணவன்) வீட்டு வேலைகளை சமமாக பகிர்ந்து செய்ய வேண்டும். தேநீர் தயாரித்தல், வீட்டு பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, பிள்ளை பராமரிப்பு, உடைகள் கழுவுதல், உணவு சமைத்தல், வீட்டு பொறுப்புகள் போன்றவற்றில் ஆண்களும் ஈடுபட வேண்டும். ஆனால் மேற்கூறிய விடயங்களை முழுமையாகச் செய்யும் ஆண்களை பெண்கள் சமூகம் மதிப்பது இல்லை. ஏன் ஆண்கள் கூட இவ்வாறானவர்களை (PONTS) என அழைப்பதும் உண்டு.
எனவே பெண்கள், சமூகத்தில் தலைமைத்துவத்தை ஏற்கும் போதே சிறந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். அதாவது குழந்தைப் பேறு, குழந்தை வளர்ப்பு, பிள்ளைகளின் போசணை, பிள்ளைகளின் கல்வி, குடும்பத்திட்டமிடல், பெண் அடிமை, பெண் விடுதலை, பெண்ணியம், பால்நிலை சமத்துவம், பெண் கல்வி, பெண் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், இன்னும் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன. இதற்கு மலையகத்தில் இருக்கும் பெண்களின் சமூகம் கல்வி கற்க வேண்டும். கல்விதான் இதற்கான முதலீடு. என்று கல்வி கற்கத் தொடங்குகின்றோமோ அன்றே ஒரு சமூகம் விழித்துக் கொள்கின்றது.
கொட்டகலை சிவமணம்

No comments: