Sunday, August 30, 2009

சம்பளப் பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது. தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக ஒவ்வொரு தொழிற்சங்கமும் ஒரு தொகையை நிர்ணயித்து அறிக்கை விடுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபாவாக இருந்தால் மாத்திரமே தற்போதைய வாழ்க்கை செலவை சமாளிக்க முடியும் என்பதை தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இ.தொ.கா, இ.தே.தோ.தொ.சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியனவும் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தன. எனினும் பன்னிரண்டரை வீத சம்பள உயர்வை மாத்திரமே வழங்க முடியும் என்று முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து இடை நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஆகஸ்ட் 31ம் திகதி இடம்பெறவுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனம் சம்பள உயர்வை வழங்க முடியாததற்கான காரணங்களை முன் வைக்கும் என்பது நிச்சயம். இப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இத் தொழிற்சங்கங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் தொழிலாளர்கள் பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.

No comments: