Saturday, October 3, 2009

அரசின் அபிவிருத்தித் திட்டங்களில் தோட்டப் பகுதிகள் உள்ளடக்கப்படுவதில்லையா?

அரசு நாட்டில் உள்ள 2-5 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கு ஒரு கிளாஸ் பசும்பால் திட்டம் கொண்டு வந்துள்ளது. இது எத்தனை தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது? மகிந்த சிந்தனையின் கீழ் தாய்மாருக்கான போஷாக்கு பொதித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எத்தனை தோட்டப்புற தாய்மார்களுக்கு கிடைக்கின்றது. அது தவிர அரசாங்கத்தால் இலவசமாக பெற்றுத்தரப்படும் சமூக அபிவிருத்தி தொழில் விருத்தி சிறுவர் அபிவிருத்தி மற்றும் கலாச்சார நோக்கங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களும் அதற்கான அரச நிதிகளும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் கிடைத்து வருகின்றன. ஆனால் இவையெல்லாம் தோட்ட மக்களுக்கு கிடைக்கின்றனவா?
அப்படியானால் அரசாங்கம் தோட்ட மக்களை புறக்கணித்து செயற்படுகி;றதா? இல்லவே இல்லை என்கிறார் அம்பகமுவ பிரதேச செயலாளர் நாயகம் கே.பி. கருணாதிலக்க. அரசாங்கம் நாட்டு மக்களின் சேமநலனை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அதற்கான நிதியுதவிகளையும் அளித்து வருகின்றது. தோட்ட மக்களும் இந்நாட்டின் மக்களே என்ற அடிப்படையில் அவர்களுக்கும் இவ் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கு கொண்டு பலன் பெற சகல உரிமையும் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தோட்டப் பகுதிக்கான சேவைகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு விசேட பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கான சேவைகளை அரசாங்கம் வழங்கி வருகின்றது. ஆயினும் இத் திட்டங்கள் தொடர்பாக இம் மக்கள் அறிந்திராமையும் இதனை உரிய வகையில் இம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்குரிய முகவர்கள் தெளிவு பெற்றிருப்பதில்லை என்பதாலும் அரசின் இத்தகைய திட்டங்கள் இம் மக்களை சென்றடைவதில்லை. இவ் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அரசின் பிரதிநிதிகளாகச் செயற்பட்டு வருகின்ற அரச ஊழியர்கள் கூட இத் திட்டங்கள் தொடர்பான பூரண அறிவை கொண்டிருப்பதில்லை. இவ்வாறான காரணங்களாலேயே அரசின் பல அபிவிருத்தித் திட்டங்கள் தோட்ட மக்களை சென்றடையவில்லை. இது ஒரு பாதகமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அரசின் அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறு பங்கு கொண்டு பலன் பெற முடியும் என்ற தெளிவினையும், அறிவினையும் தோட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமொன்றை கெயர் சர்வதேசத்தினூடாக நாம் தற்போது முன்னெடுத்து வரும் திட்டத்திற்கிணங்க பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் இருந்து மற்றவர்களுக்கு தெளிவுப் படுத்தக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்ற ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் படித்த இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற அறிவினையும் பயிற்சியையும் வழங்கி வருவதாக இச் செயற்திட்டத்தின் இணைப்பாளர் விமன்சசொய்சா தெரிவித்துள்ளார்.
குறிஞ்சி குணா
நன்றி - சூரியகாந்தி

Friday, October 2, 2009

மலையகப் பகுதிகளில் கடும் மழை மண்சரிவு அபாயம்

நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக மலையப் பகுதிகளில் கடும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. இதனால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு ள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால், மின்சாரக் கம்பங்களும், தொலைத் தொடர்புக் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன. ஹட்டன் வனராஜா பகுதியில் பாரிய கல்லொன்றும், மரமொன்றும் சரிந்துள்ளது. இதன்போது அந்த வழியால் சென்ற பால் வேனொன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹட்டன், வட்டவளை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பகுதியில் சிறு மினிசூறாவளியால் பன்வில, கோம்பர, ஹேவாஹெட்டை, கண்டி, ஹாரிஸ்பத்துவ போன்ற பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. பிரமாண்டமான மாறா மரம் கண்டி பேராதனை வீதியில் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு முன்பாக உடைந்து வீழ்ந்ததால் தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. பாடசாலை முடிவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதால் பாரிய விபரீதம் எதுவும் இடம்பெறவில்லை.
கண்டி கட்டுகஸ்தோட்டை வீதியில் வட்டாரந்தன்னையில் பாரிய மாமரம் ஒன்றும் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்துக்கள் சில மணி நேரம் தடைப்பட்டன.
இவ்வாறு பெய்யும் அடைமழையினால் மலையகத்தில் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்படலாம் என தேசிய கட்டட நிர்மாண ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த பூகற்பவியல் அதிகாரி எம். எம். சி. டபிள்யூ. மொரேமட தெரிவித்தார். மண்சரிவுகள் குறிப்பாக சப்ரகமுவ, மத்திய ஆகிய பிரதேசங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடும் மழை, சூழல் காற்றினால் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இறக்குவானை பகுதிகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
பெல்மதுளை வன்னியாராச்சி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற கடும் மழை, சூழல் காற்றினால் வீட்டுக் கூரை அள்ளுண்டு சென்றுள்ளது. இதேவேளை இறக்குவானை டெல்வீன் ஏ பிரிவில் மரமொன்று சரிந்து விழுந்ததால் தோட்டத் தொழிலாளியின் வீடு பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. பல வீடுகளின் கூரைகள் சேதமடை ந்துள்ளன. இறக்குவானை பல பகுதிகளில் மின்வெட்டும் இடம் பெற்றுள்ளது.

Wednesday, September 30, 2009

மலையகத்தில் சிறுவர் தொழிலாளர் அதிகரிப்பு: குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கசுன்
இன்றைய சிறுவனே நாளை தலைவன் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியை காட்டுகிறது. ஆனால் மலையகத்தை பொறுத்த மட்டில் இன்றைய சிறுவனே நாளைய வீட்டு வேலைக்காரன் என்ற நிலைமை தான் உள்ளது.
இவற்றிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் மிக முக்கிய காரணமாக பொருளாதாரமே காணப்படுகின்றது. உலகம் இன்று பொருளாதாரத்திலும் நவீன தொழிநுட்பத்திலும் வெற்றிகொள்வது எப்படி என பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் நாம் சிறுவர் தொழிலாளர்களை தடுப்பது எப்படி என பேசிக் கொண்டிருக்கின்றோம். இது எமது சமூகத்தின் 200 ஆண்டுகால வீழ்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது.
ஒரு சமூகத்திலுள்ள சிறுவர்கள் வேலை செய்வதன் மூலம் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உரிமை புறக்கணிக்கப்படு வதுடன் நாளைய சமூகத்தின் தலைமைத்துவமும் கேள்விக் குறியாகி விடுகின்றது. அதனுடன் அடிமைத்தனமும், ஒடுக்கப்படும் நிலையும் கூடவே பிறக்கின்றது. இதனால் எமது சமூகம் தலைகுனிந்து நிற்கின்றது.
அவ்வாறு இருந்திருந்தால் எமது மக்களுக்கு 200 வருடங்கள் கழிந்து இந்த தேயிலையை மாத்திரம் நம்பி வாழவேண்டிய அவசியம் இருந்திருக்காது. சிறுவர் தொழிலாளர்களும் அதிகரித்திருக்க மாட்டார்கள். எந்த ஒரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்திவிட்டு அவர்களை வேலைக்கு அனுப்ப நினைக்க மாட்டார்கள்.

Tuesday, September 29, 2009

தோட்டத் தொழிலாளருக்கு சொந்தமாக வீடும் காணியும் எப்போது கிடைக்கும்?

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாத முதலாம் திங்கட்கிழமை (5ம் திகதி) அன்று உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டிலும் செப்டம்பர் 28ந் திகதி முதல் அக்டோபர் 5ந் திகதி வரையில் உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தவரும் சொந்த வீட்டைக் கொண்டிருக்க உரித்துடையவர். மலையகத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டுரிமையும், காணி உரிமையுமின்றி வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்புக்களில் 70 சத வீதமானவை வாழ்வதற்கேற்ற சூழலைக் கொண்டிராதவை. 60 சத வீதமானவை மலசல கூடமின்றி காணப்படுகின்றன.
48 சத வீதமானவை சுத்தமான குடிநீரைப்பெறும் வாய்ப்பு இல்லாதவை. 45 சதவீதமானவை ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற லயன் குடியிருப்புக்களாக காணப்படுகிறது.அடிப்படை மனித உரிமைகளில் வீட்டு வசதி உரிமையும் ஒன்றாகும். பாதுகாப்பாகவும், அமைதியாகவும், கௌரவமாகவும், எங்காவது ஓரிடத்தில் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையே இதுவாகும். ஆகவே போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வது வெறுமனே ஒரு நபரின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தினை வைத்து தீர்மானிக்கப்படக்கூடாது.
போதுமான வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையானது. இலங்கையால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் குழு 1991ம் ஆண்டு பொதுவான கருத்துரையொன்றை வெளியிட்டது. போதுமான வீட்டு வசதிக்கான உரிமையானது பின்வரும் ஏழு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
(அ) ஆதன அனுபவிப்புக்கான சட்ட பாதுகாப்பு:
கட்டாயப்படுத்தி வெளியேற்றல், தொல்லை மற்றும் ஏனைய பயமுறுத்தல்களுக்கு எதிராக சட்ட பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை ஒருவர் கொண்டுள்ளார். ஆதன அனுபவிப்புக்கான பாதுகாப்பான உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. இது எல்லா வகையான வீட்டு வசதிகளையும் அதாவது ஒன்றில் அது முறையற்ற குடியேற்றமொன்றின் வதிவிடமாளிகையொன்றாக அல்லது குடிசையொன்றாக இருப்பினும் இது பிரயோகிக்கப்படும் என அக் குழு தெரிவித்துள்ளது.
(ஆ) சேவைகளும் மூலப் பொருட்களும்
போதுமான வீட்டு வசதியென்பது கட்டட மூலப் பொருட்களை அணுகிப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொருவரினதும உரிமையை மாத்திரமின்றி நீர், ஆரோக்கியம், வலு, கழிவகற்றல், வடிகாலமைப்பு மற்றும் அவசர சேவைகள் போன்ற அத்தியாவசியமான சேவைகளுக்கான உரிமையினையும் உள்ளடக்கியுள்ளது.
(இ) செலவைத் தாங்கும் தன்மை
போதுமான வீட்டு வசதி இலவசமாக வழங்கப்பட வேண்டுமென்பதல்ல. ஆனால் வீட்டு வசதியைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தனிப்பட்ட அல்லது குடும்பத்தவரது செலவுகள் என்பது தமது ஏனைய அடிப்படைத் தேவைகளை திருப்தி செய்ய முடியாத மக்கள் என கருதப்படக் கூடாது.
(ஈ) குடியிருக்கத்தகு நிலை:
போதுமான வீட்டு வசதியானது இடைவெளிகொண்ட வசிப்பிடங்களாகவும், குளிர், ஈரத்தன்மை, உஷ்ணம், மழை, காற்று மற்றும் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை உள்ளாக்கும் கட்டமைப்பு ஆபத்துக்கள் மற்றும் நோய்க்காவிகள் (உதாரணம் விலங்குகளால் பரப்பப்படுகின்ற நோய்கள்) என்பவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதனையும் உள்ளடக்கியுள்ளது.
(உ) அணுகக் கூடிய நிலையிருத்தல்:
போதுமான வீட்டு வசதியானது பௌதீக ரீதியாக அணுகக் கூடிய நிலையிருத்தல் வேண்டும். அங்கவீனமுடைய மக்களும் வீட்டு வசதியை அணுகக்கூடிய நிலையிலும் அல்லது புதிய வீடொன்றைக் கட்டிக்கொள்வதற்கான போதுமான அளவு காணி இருப்பதனையும் நிச்சயப்படுத்திக் கொள்வதனைக் கூறுகின்றது.
(ஊ) இடவமைப்பு:
போதுமான வீட்டு வசதியானது வேலைவாய்ப்புத் தெரிவுகளையும், சுகாதார கவனிப்புச் சேவைகள் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய சமூக வசதிகளை நாடிப் பெறுவதனை அனுமதிக்கக் கூடிய இடமொன்றில் இருத்தல் வேண்டும். வீட்டு வசதியானது மாசுபடுத்தப்பட்ட இடப்பரப்பிலோ அல்லது உரிமைக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் மாசுபடுத்தலை தோற்றுவிக்கும் மூலங்கள் நிறைந்த இடத்திலோ கட்டப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறப்பட்டுள்ள போதிலும் தோட்டத் தொழிலாளரின் வீட்டு வசதிக்கான உரிமைகள் அநேகமாக இன்று மறுக்கப்பட்டு வருகின்றதென்றே கூறவேண்டும். தோட்டங்களில் ஒரு பகுதியைச் சுவீகரித்து கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு புதிய குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக உரிமையாக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கிறது. ஆயினும் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தும் போது அங்கு தேவையான அடிப்படை வசதிகளும், சட்ட ரீதியான உரிமையும் கிடைப்பதில்லை.

ஏழு பேர்ச் காணியிலேயே தோட்டத் தொழிலாளருக்கான வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு ஒரு வீட்டை மட்டுமே அமைத்துக் கொள்ள முடிவதுடன் வேறு மேலதிக வசதிகள் எதையுமே மேற்கொள்ள முடியாது அடுத்தடுத்து வீடுகள் ஒட்டியபடி ஒடுக்கமாகவே அமையப் பெறுகின்றன. இதுவும் கூட லயன் முறையை ஒத்ததாகவே உள்ளது என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் காணிக்கான உறுதியாவது கிடைத்தால் அதுவே பெரிய காரியமாக இருக்கும் எனக் கூறும் தொழிலாளர்கள் வருடங்கள் பல கடந்துவிட்ட போதிலும் இன்னும் காணி உரிமை இல்லையே என அலுத்துக்கொள்கின்றனர்.

ஒரு குடியிருப்பும் அதைச் சூழவுள்ள காணியும் அதற்கான பெறுமதி முற்றிலும் செலுத்தப்பட்ட பின்னரேயே குடியிருப்பாளருக்கு உரிமையாக்கப்படும்.ஆனால் பெருந்தோட்டக் காணி அரசுக்கு சொந்தமான இக்காணியை மக்கள் பெருந் தோட்ட அபிவிருத்திச் சபையும். பெருந் தோட்டக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுள்ளன.
எனவே இக்காணியை வெளியாருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சட்டப்படி விற்பனைச் செய்ய முடியாது. இவ்வாறான நிலையில் தமது தோட்டத்தில் வேலை செய்வோருக்காக அமைக்கப்படும் குடியிருப்பையும் சுற்றியுள்ள காணியையும் தொழிலாளர்களுக்கு விற்பனைச் செய்வது சாத்தியமாகுமா? இந்நிலையில் தோட்ட வீடமைப்புத் திட்டம் எவ்வாறு முழுமையாக முடியும்?

தனக்கு சொந்த மில்லாத காணியில் தனது கைப்பணத்தைச் செலவிட்டு வீடு கட்டி மகிழும் ஒரே மனித கூட்டம் தோட்டத் தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டக் காணியை உரிமையாக்கித்தர முன்வரவேண்டும். இல்லையேல் இதுபோன்ற வீடமைப்புத் திட்டத்தை அரசியல் கண்கட்டுவித்தையாக மட்டுமே கருதவேண்டியிருக்கும்.
இங்கிரிய மூர்த்தி
நன்றி- தினகரன் வாரமஞ்சரி

Tuesday, September 22, 2009

பெருந்தோட்ட மாணவர்களின் கணிதத் திறன் வீழ்ச்சியடைந்திருப்பதேன்?

பெருந்தோட்டப் புற பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையின் போது, கணிதப் பாடம் தொடர்பான சித்தி வீதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதைக் காணலாம். இலங்கையின் பரீட்சை விதிகளுக்கு அமைய ஒரு மாணவன் க.பொ.த. உயர் தரத்திற்கு கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளுக்குச் செல்ல வேண்டுமானால் க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இது கட்டாயமான ஒரு நிபந்தனையாகும். ஆனால் இக் கணிதப் பாடத்தை ஆண்டு 1-11 வருடங்கள் தொடர்ச்சியாக இம்மாணவர்கள் கற்றப் பின் இறுதியாக நடைபெறும் க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அநேகமான மாணவர்கள் சித்தியடையத் தவறி விடுவதை வருடம் தோறும் அவதானிக்கலாம். ஏன் இந்த நிலை இந்நிலைக்கான காரணகர்த்தா யார்? இந்த கணிதப் பாடப் பெறுபேறுகளை அதி கரிப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை நோக்கும் போது பல்வேறு தகவல்கள் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இலங்கையின் பரீட்சை விதிகளின் படி கணிதப் பாடத்தில் சித்தி பெறாவிட்டால் அவளுக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இப்பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெற்றோர்களும், பணிப்பாளர் விடயத்துக்கு பொறுப்பானவர் அதிபர் போன்றோர்கள் அதிக கரிசனை எடுத்து கணிதப் பாட பரீட்சைப் பெறுபேற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருடம் தோறும் பரீட்சைப் பெறுபேறுகள் வந்தவுடன் அவசர அவசரமாக கருத்தரங்குகளை வைப்பதும் கலந்துரையாடல்களை, நடத்துவதும், ஆசிரியர்கள், மாணவர்களை, பாடசாலை அதிபர்களை விமர்சிப்பதும் பொருத்தமற்ற ஒரு விடயமாகும், இந்த பெறுபேறு வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதை உணர வேண்டும்.
ஆசிரியர்கள் முன்வைக்கும் கருத்துக்களைப் பார்ப்போம். ஆரம்பக் கல்வியின் போது செயற்பாடுகளுடன் கூடிய கல்வி நிலை, எண்ணக்கரு விளக்கம் என்பன மிகமிக குறைவு இதற்கு காரணம் வீட்டுச் சூழல், பெற்றோர்கள், கணிதப்பாட அறிவு குறைந்த பயிற்றப்படாத ஆசிரியர்கள், மற்றும் தொடர்ச்சியான கணித அறிவு மட்டம் கணிப் பிடப்படாமை, வாசிப்பு திறனையும் அதிகரித்தால் தான் கணிதப் பாடத்தையும் விளங்கச் செய்ய முடியும்.
கணித எண்ணக் கருவில் முக்கியமான கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், என்பவற்றை ஆரம்பத்தில் இருந்து சரியாகவும் முறையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எண் இடப் பெறுமானங்களைச் சரியாக மாணவர்களுக்கு புரிந்து கொள் ளும் வகையில் கற்பிக்க வேண்டும். சில மாணவர்களுக்கு 4,5,6,7,ம் வகுப்புகளில் கூட இடப் பெறுமானம் தெரிவது இல்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.
மீள அறிவுறுத்தல் இன்மை, கணிதம் பற்றிய மனப்பாங்கு எதிர்மறையாக இருத்தல் கணிதப் பாடம் கஷ்டம் (கடினம்) என ஆரம்பத்திலேயே நினைத்தல், சுயசிந்தனை இண்மை, தொடர்ச்சியாக முயற்சிக்காமை, பிறழ்வான நடத்தை, சந்தேகங்களை உடனுக்குடன் கேட்காமை, கணிதப் பாடத்தின் முக்கியத்துவம் புரியாமை. சில ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளில் உள்ள குறைபாடுகள். கணித பாட அறிவை வளர்க்கக் கூடிய வாய்ப்புகள் இப்பிரதேச பாடசாலைகளில் குறைவாகக் காணப்படுகின்றமை. கணிதப் பாடத்தில் திறமையில்லாத மாணவர்கள் வகுப்பறையிலும், சக மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்க ளிடத்திலும் கவனிப்பாரற்ற நிலையில் விடப்படு கின்றார்கள். இதனால் இம்மாணவர்கள் உள ரீதியாகப்
பாதிக்கப்படுகின்றார்கள். கணிதப் பாடத்தில் திறமை குறைந்த மாணவர்களே தரம் 8-9 வகுப்புக்களில் இடை விலகலுக்கு உட்படுகின்றார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். க.பொ.த. சதாரணத் தரத்திற்கான சில அடிப்படைக் கணக்குகள் இந்த வகுப்பில்தான் தொடங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்கள் உடல் ரீதியான மாற்றங்களுக்கு உள்ளாகும் வயதும் இவ்வயதே என்பதும் சுட்டிக்காட்ட வேண்டும்.
எனவே ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் கணிதப் பாடத்திற்கான ஆரம்ப எண்ணக் கருக்களை முறையாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கணித பாடத்தில் ஒரு விருப்பத்தை உருவாக்க வேண்டும். கணிதப் பாடத்தில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை 6-11 வரையான வகுப்புகளுக்கு உள்ளவர்களை அனுப்பும் போது குறிப்பிட்ட ஆசிரியர்களின் கணிதப்பாடம் சம்பந்தமான பின் புலத்தை அறிந்து அனுப்ப வேண்டும். கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாமல், பணம் மட்டுமே முக்கியம் என்று டியூஷன் நடத்தாது, உங்களை நம்பி வரும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்தி கற்பிப்பதோடு, இப்பாடத்தை ஒரு விருப்பமான பாடமாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். 144 மாணவர்கள் பரீட்சை எடுத்து 100 மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி பெறவில்லை என்றால் கோளாறு எங்குள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஆராய முன்வரவேண்டும்.
கொட்டகலை இரா.சிவலிங்கம்
தினகரன் வாரமஞ்சரி

Thursday, September 17, 2009


தோட்டத் தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.
2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் கொழும்பு ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் இ.தொ.கா சார்பில் ஆறுமுகன் தொண்டமான், ல.தே.தோ.தொ.ச சார்பில் கே.வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக அதாவது எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையையும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

  • தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும்,
  • 75 வீத வருகைக்கான கொடுப்பனவு- 90 ரூபா,
  • உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.


  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கொழுந்து எடை போடும் காட்சி1900ம் ஆண்டின் முற்பகுதியில்
  • இடிந்த கிணற்றில் குடி தண்ணீர் எடுத்துச் செல்லும் மலையகத்து பெண் தொழிலாளர்கள். அன்று தொடக்கம் இன்றுவரை இந்த மக்களின் வாழ்வு இந்த இடிந்த கிணறு போலவே செப்பனிடப்படாது, செழிப்பற்றுக் கிடக்கின்றது. எந்த" பெருந்தேசியங்களும், கதையாடல்களும், போராடல்களும்" இவர்களின்பால் என்ன அக்கறை செலுத்தின
  • கங்காணிகளும், தோட்டத் தொழிலாளர்களும். 1870இல்