Tuesday, September 15, 2009

சம்பள பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்துக்கு – வடிவேல் சுரேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு 500ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாது உள்ள போதிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் ஆதரவு வழங்கினோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றவர்கள் வௌவேறு விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதியாக கூறியவர்கள் விடுமுறை நாளில் இரவோடு இரவாக பேசி எவருக்கும் தெரியாமல் 405 ருபா சம்பளத்திற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைச்சர் வீ. புத்திரசிகாமணி, அமைச்சர் பெ. சந்திரசேகரன், மத்திய மாகாண உறுப்பினர்கள் திகாம்பரம்,சதாசிவம் ஆகியோருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம் என்றார். மலையக தொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக எவரும் தனித்து முடிவெடிக்கக் கூடாது என்றார்.
பொகவந்தலாவையில் பதற்ற நிலை - பொலிஸார் கண்ணீர்ப்புகை

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் பேரணி ஒன்றையும் மறியல் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Monday, September 14, 2009

மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினால் மலையக தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன. இதனால் மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகும் நிலையும் விரோத மனப்பான்மைகளும் தலைதூக்கியுள்ளன.
“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பதனை உணராத மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவது தோட்டத் தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன மேற்கொண்ட ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் உடனடியாகவே ஆதரவு வழங்கின.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல போராட்டத்துக்கான ஆதரவை ஏனைய ஏனைய தொழிற்சங்கங்கள் மாற்றிக் கொண்டன. ஒத்துழையாமை போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் முன்னணி பின்னர் தொழிலாளர் சம்பள வியடத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதேபோல் பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தலையிலான பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியின் தலையீட்மை கோரியிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 500 ரூபாவாக உயர்த்த வேண்டும். இல்லையேல் போராட போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சுட்டு ஒப்பந்தத்தில்; கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 405 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ருபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையில் 405 ரூபா சம்பளம் வழங்குவது குறித்து பேசப்பட்டதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இணக்கம் எதுவும் காணப்படவில்லை என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. இராமையா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே சம்பள உயர்வு அதிகரிப்பு அறிவிப்பு தொடர்பில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
405 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது என இ.தொ.கா வும், இல்லை முடிவே எடுக்கவில்லையென ஏனைய தொழிற்சங்கள் மறுப்பு தெரிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? முரண்பாட்டினை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்படுத்தியதா, என்ற கேள்விகள் தோட்ட தொழிலாளர்களின் மனங்களில் உருவாகியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் இன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக மாறியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தையும் கைவிடுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டுவதும் பின்னர் உரிய இலக்கை அடையாமலேயே போரட்டத்தை கைவிடுமாறு அறிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆர்பாட்ட பேரணி ஆரம்பமாகும் வேளை அங்கு ம.ம.மு க்கு எதிராக இ.தொ.கா வினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர். ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டத்தினால் அங்கு பதற்ற நிலை உருவானது. ம.ம.மு யின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன் சத்தியாக்கிரகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் பொகவந்தலாவ நகரில் 500 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டமும் குழப்பியடிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றச் சென்ற மூன்று கட்சிகளின் தலைவர்களும் இ.தொ.கா ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டனர் வாகனங்கள் மீது கற்கலால் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இவ்வாறு மலையக தொழிற்சங்கங்களிடையே முரண்பாடுகள் எழுந்து தாக்குதல் வரை அவை சென்றுள்ளன. சம்பள உயர்வு கோரிய போராட்டங்களை தடை செய்வதன் மூலம் யாருக்கு பாதகம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். எனவே மலையக தொழிற்சங்கங்களின் சுயநல அரசியலுக்காகவும், எதிர்காலத் தேர்தல்களை குறிக்கோளாகக் கொண்டு முட்டி மோதுவதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை பெற்றுக் கொடு;க்க முயல வேண்டும்.
சுயநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது.
எனவே சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையின் உண்மை நிலையினை அறிவிப்பதுடன் 500 ரூபா சம்பளத்தினை பெறும் வகையில் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட போவது தோட்டத் தொழிலாளர்களே அன்றி மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் அல்ல. மலையக தொழிலாளர்களின் நலன் கருதி மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி - வீரகேசரி
மலையக மக்கள் முன்னணி வீதி ஹட்டனில் மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் ஹட்டனில் 13-09-2009 ஆம் அன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் முன்னணி ஆதரவாளர்கள் ஹட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில் ஹட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவையில் பதற்றம்

தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்கள் பொகவந்தலாவை நகரில் நடத்தப்படவிருந்த கவனயீர்ப்புப் போராட்டம் இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் இடையுறு விடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் பொகவந்தலாவை நகரில் 12-09-2009 நண்பகல் வேளையில் இடம் பெறவிருந்தது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்திரளான ஆதரவாளர்கள் பொகவந்தலாவை நகரில் கூடியிருந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயக மக்கள் முன்;னணியின் தலைவரும் எம்பியுமான மனோகணேசன்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் ,இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னயியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோரின் வாகனங்கள பொகவந்தலாவை நகரின் நுழை வாயிலுக்கு அருகில் வருகை தந்த போது இ.தொ.கா.வின் ஆதரவாளர்கள் சிலரால் திடீரென கற்களால் தாக்கப்பட்டதைத்தொடரந்து பெரும் களேபரம் ஏற்பட்டது. சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிய வில்லை. இந்தத்தாக்குதல் சம்பவத்தின் போது மனோகணேசன் வாகனத்துக்குச்சிறிய சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஜனநாயக மக்கள் முன்னணி ,தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகிய அமைப்புக்களின் ஆதரவாளர்கள் வீதிமறியலில் ஈடுபட்டனர். இதன்போது மேலதிக பொலிஸார் வரவழைக்கப்படனர். மாலை 4.00 மணியளவில் நிலைமை சுமூக நிலைமைக்கு வந்தது.

Sunday, September 13, 2009

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம் : தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இப்போராட்டம் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் இடம்பெற்றன.
மலையகத்தில் சகல தேயிலைத் தோட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பதுளை, இரத்தினபுரி மாவட்டங்களில் தொழிலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதுடன் 500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை வெற்றிபெற வேண்டுமென்று ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்துகின்றதாகவும், பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தமது வேலைகளை பகிஷ்கரித்து விட்டு கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி தத்தமது தோட்டக் காரியாலயங்களை நோக்கி ஊர்வலமாக சென்று தமது எதிர்ப்பை தெரிவிக்கப்படுகிறது.
405 சம்பளம் வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 405 ரூபா வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததாக இ.தொ.கா.உபதலைவர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வரவுக்கான விசேட அலவன்ஸாக 85 ரூபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கும், மேற்படி ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு 2011 மார்ச் வரை அமுலில் இருக்கும். அதேவேளையில் 2006ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதால் ஏப்ரல் மாதத்தில் இருந்து இணக்கம் காணப்பட்ட சம்பள நிலுவை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.
தற்பொழுது தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 200 ரூபாவும் நாணய மாற்று விசேட கொடுப்பனவாக 20 ரூபாவும் மாதத்தில் 75 சதவீத வேலைக்கு சமுகமளித்திருந்தால் நாளொன்றுக்கு 70 ரூபாவுமாக மொத்தமாக 290 ரூபாவைப் பெற்று வந்தனர்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமையவே மேற்படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து புதிய சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தன. இதுவரை சம்பள உயர்வு தொடர்பாக 8 சுற்று பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் நடத்திய போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பொழுதும் நேற்று மீண்டும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாகவே 405 ரூபா எனும் தொகையை நாளொன்றுக்கு வழங்குவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் சார்பில் நாளொன்றுக்கு 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டது. இந்தத் தொகையை வழங்க முடியாதெனத் தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம் நேற்றுக் காலையில் நாளொன்றுக்கு 390 ரூபா அளவிலேயே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது அடிப்படைச் சம்பளமாக 275 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 100 ரூபாவும் திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 15 ரூபாவும் வழங்க முடியும் என்ற நிலைப்பாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனம் இருந்தது.
இதற்கிடையில் இந்த அறிவிப்புடன் ஒத்துழைக்க போவதில்லை என கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஏனைய தொழில் சங்கங்கள் இரண்டும் தெரிவித்துள்ளன.
500 ரூபா என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய போதும், தற்போ இந்த தொகைக்கு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த தொழில் சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இதுவரையில் இவ்வாறான எந்த ஒரு தீர்மானத்துக்கு வரவில்லை என முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அதன் பின்னரே தமது தீர்மானத்தை வெளியிட முடியும் என முதலாளிமார் சம்மேளனத்தின் பெருந்தொட்டத்துறை தலைவர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.