Saturday, October 3, 2009

தொழிலாளர்களுக்கு எதிரான நிர்வாகங்களின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்

தோட்டக் கம்பனிகளுடன் தொழிற் சங்கங்கள் செய்து கொண்டுள்ள கூட்டுத் ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளின்படி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வினை பெற்றுக் கொள்வதைத் தடுக்கும் சூழ்ச்சி வேலைகளில் தோட்ட நிர்வாகங்கள் ஈடுபடலாம். இதனை தொழிலாளர்களும், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து முறியடிக்க வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியனின் பொதுச் செயலாளரும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவருமான எஸ். இராமநாதன் அளவத்து கொடையச் சேர்ந்த விலான தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு 405 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள சம்பளத்தை சகல தோட்ட நிர்வாகங்களும் வழங்குவதை ஊர்ஜிதப்படுத்துவதற்கான நடவடிக்கையை தொழில் அமைச்சர் எடுத்து வருகிறார்.
சம்பள உயர்வை வழங்கத் தீர்மானிக்கப்பட்ட பிறகு தோட்டத் தொழிலாளர்கள் செய்யும் வேலையின் அளவை அதிகரிப்பதற்கு சில நிர்வாகங்கள் முயன்று வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இப்படி அவர்களால் தன்னிச்சையாக செயற்பட முடியாது.
வழமையான வேலையில் எந்தவித மாற்றம் செய்வதானாலும் தோட்டத் தலைவர்களுடன் பேசி அதன் பிறகே ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும். இந்த விடயம் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
கொழுந்து பறிக்கும் அளவும், இறப்பர் பால் சேகரிக்கும் அளவும் கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட்டு வந்த அளவாகவே இருக்க வேண்டுமேயொழிய நிர்வாகங்களின் தன்னிச்சையான முடிவின்படி இதில் எவ்வித மாற்றமும் செய்வதற்கு தொழிலாளர்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என்றார்.

No comments: