Tuesday, September 15, 2009

மலையகம் தந்த பாடம்
வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?
-சாகரன்-
கடந்த இரு வாரங்களாக தமது வாழ்வு ஆதாரமான சம்பள உயர்வுப் போராட்டத்தை மலையக தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர். பிரிட்டஷ் ஆட்சிக்காலத்தில் தென் இந்தியாவில் இருந்து வாழ்வு அளிப்பதாக பசப்பு வார்த்தை காட்டி இராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆடு மாடுகள் போல் ஏற்றப்பட்டு தலைமன்னார் துறைமுகத்தில் இறக்கப்பட்டனர் இத் தொழிலாள அடிமைகள்.
அக்கால கட்டத்தில் தலைமன்னார் தொடக்கம் மலையகம் வரைக்கும் வீதிகள் ஏதுமற்ற நிலை இருந்தது. தலைமன்னாரில் இருந்து மலையகம் செல்வதற்கான வீதிகளை தாமே நிர்மாணித்து, தாம் நிர்மாணித்த பாதை வழியே நடந்தே பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையை அம்மக்கள் கொண்டிருந்தனர். இப்பாதை நிர்மாணிப்பில் பல ஆயிரக்கணக்க மக்கள் தமது உயிரை மாய்த்தக் கொண்டு ஏதுமற்றவர்களாக எரியூட்டப்பட்டனர் என்பதே சோக வரலாறு. மன்னார் மண்ணுக்கு உரமாக்கப்பட்டனர். இராமாணயத்தில் அனுமான் தனது பரிவாரங்களுடன் இணைந்து இலங்கைக்கு கடல் வழியே பாதை அமைத்ததாக கதைகள் கூறுகின்றன. அது உண்மையோ, பொய்யோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாம் வாழும் நூற்றாண்டில் தலைமன்னாரில் இருந்து மலையகம் வரை பாதையமைத்து தமது உயிரை தியாகம் செய்த வரலாறு எமது மலையக மக்களுக்கே சேரும். இவர்களே உண்மையில் வரலாற்று நாயகர்கள். ஆமாம் இலங்கையில் நாம் கண்ட வரலாற்று நாயகர்கள்.

பொகவந்தலாவையில் பதற்ற நிலை தொடர்கிறது

சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த கொட்டியாக்கலை, பொகவான, குயினா, கில்லானி, செல்வக்கந்தை உட்பட பல தோட்டங்களைச் சேர்ந்த சகல தொழிலாளர்களும் எவ்வித தொழிற்சங்க, அரசியல் கட்சி பேதமின்றி நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட பின்னர் (15-09-2009) ஒன்றிணைந்து ஊர்வலமாக சென்றனர். பேரணி பொகவந்தலாவை கல்லூரி வீதிக்குச்சென்ற போது, ஊர்வலத்தினர் மீது இனந் தெரியாதவர்கள் கல்லால் அடித்ததைத் தொடர்ந்து அவர்களும் திருப்பித் தாக்குதல் மேற்கொண்டனர். பொகவந்தலாவை நகர மத்தியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொகவந்தலாவை நகருக்கூடான சகல போக்குவரத்துக்களும் பல மணிநேரம் தடைபட்டன. இதனைத் தொடர்ந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். நிலைமை எல்லை மீறிச்செல்லவே பொலிஸார் 10 க்கும் மேற்பட்ட கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.


இதனால் மறியலிலில் ஈடுபட்டவர்கள் எதிர்த்து நின்ற போதும் புகை மண்டலம் பரவியதால் தொழிலாளர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். சிதறி ஓடினர். உடனடியாகப் பொகவந்தலாவை நகரின் சகல கடைகளும் இழுத்து மூடப்பட்டன. பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையிட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு சம்பள நிர்ணயசபை மூலம் நிர்ணயிக்க வேண்டும்

வாழ்க்கை செலவுகளுக்கேற்ப அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகள் வழங்கப்படுவது பொதுவாக உலக நாடுகள் அனைத்திலும் இடம்பெற்று வரும் பொதுவான நிலைப்பாடாகும்.
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வானது முதலாளிமார் சம்மேளனத்துக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தங்களின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. இதற்காக பெரும் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் சம்பள உயர்வை சம்பள நிர்ணயசபை மூலம் அல்லது ஜனாதிபதியின் மூலம் பெற்றுக்கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தோட்டத் தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டும் என புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொழிற்சங்கங்களால் ஒற்றுமையாக முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை போராட்டம் 405 ரூபா சம்பள உயர்வுடன் பல்வேறு இழுபறிகளையும், மோதல்களையும் ஏற்படுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு இவ்வாறானதொரு சூழ்நிலை தேவையற்றதாகும். தொழிலாளர்கள் தமக்கு நியாயமான சம்பள உயர்வை கோருவதும், முதலாளிமார் சம்மேளனம் அதனை வழங்க மறுப்பதும், பின்னர் தொழிற்சங்கங்கள் இணங்கப்பட்ட சம்பள உயர்விலும் பார்க்க குறைந்த தொகைக்கு இணங்குவதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பழக்கப்பட்ட விடயமாகும். இது மாற்றம் பெற வேண்டும். நாட்டின் ஏனைய தொழிற்துறை ஊழியர்களுக்கு கிடைப்பதை போன்ற சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆவண செய்ய வேண்டும். தமது அடிப்படை தேவைகள் கூட இன்று வரையில் நிறைவு செய்யது கொள்ள முடியாது திண்டாடும் மலையகத் தோட்ட மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். இப் போராட்டம் வாரக்கணக்கில் இடம்பெற்ற போதும் நியாயபூர்வமான சம்பள உயர்வு கிடைக்காது போவதால் காலாகாலமாக ஏமாற்றப்படுவது தொழிலாளர்களே. எனவே தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகி சம்பள நிர்ணயசபை மூலமாக அல்லது ஜனாதிபதியின் மூலமாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
சம்பள பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்துக்கு – வடிவேல் சுரேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படாவிட்டால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தொழிலாளர்களுக்கு 500ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை போராட்டத்துக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படாது உள்ள போதிலும் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கில் ஆதரவு வழங்கினோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றவர்கள் வௌவேறு விதத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். 500 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கும் வரை ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதியாக கூறியவர்கள் விடுமுறை நாளில் இரவோடு இரவாக பேசி எவருக்கும் தெரியாமல் 405 ருபா சம்பளத்திற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கின்றார்கள். மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக அமைச்சர் வீ. புத்திரசிகாமணி, அமைச்சர் பெ. சந்திரசேகரன், மத்திய மாகாண உறுப்பினர்கள் திகாம்பரம்,சதாசிவம் ஆகியோருடன் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம் என்றார். மலையக தொழிலாளர்களுடைய பிரச்சினை தொடர்பாக எவரும் தனித்து முடிவெடிக்கக் கூடாது என்றார்.
பொகவந்தலாவையில் பதற்ற நிலை - பொலிஸார் கண்ணீர்ப்புகை

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் பேரணி ஒன்றையும் மறியல் போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Monday, September 14, 2009

மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தினால் மலையக தொழிற்சங்கங்கள் இன்று ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன. இதனால் மலையகத்தில் ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகும் நிலையும் விரோத மனப்பான்மைகளும் தலைதூக்கியுள்ளன.
“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்பதனை உணராத மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதுவது தோட்டத் தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்பன மேற்கொண்ட ஒத்துழையாமை போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்கள் அனைத்தும் உடனடியாகவே ஆதரவு வழங்கின.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல போராட்டத்துக்கான ஆதரவை ஏனைய ஏனைய தொழிற்சங்கங்கள் மாற்றிக் கொண்டன. ஒத்துழையாமை போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய மலையக மக்கள் முன்னணி பின்னர் தொழிலாளர் சம்பள வியடத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதேபோல் பிரதியமைச்சர் சுரேஷ் வடிவேல் தலையிலான பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியின் தலையீட்மை கோரியிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 500 ரூபாவாக உயர்த்த வேண்டும். இல்லையேல் போராட போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளும் அறிவித்திருந்தன.
இந்த நிலையில் தோட்டத் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சுட்டு ஒப்பந்தத்தில்; கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 405 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 290 ரூபாவும் வேலை வரவுக்கான விசேட கொடுப்பனவாக 85 ருபாவும், திறமைக்கான மேலதிக கொடுப்பனவாக 30 ரூபாவும் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்தது.
ஆனால் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தையில் 405 ரூபா சம்பளம் வழங்குவது குறித்து பேசப்பட்டதே தவிர இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இணக்கம் எதுவும் காணப்படவில்லை என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் ஓ.ஏ. இராமையா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே சம்பள உயர்வு அதிகரிப்பு அறிவிப்பு தொடர்பில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது.
405 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியுள்ளது என இ.தொ.கா வும், இல்லை முடிவே எடுக்கவில்லையென ஏனைய தொழிற்சங்கள் மறுப்பு தெரிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மூன்று தொழிற்சங்கங்களுக்கிடையே முரண்பாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? முரண்பாட்டினை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஏற்படுத்தியதா, என்ற கேள்விகள் தோட்ட தொழிலாளர்களின் மனங்களில் உருவாகியுள்ளன.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் இன்று குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கதையாக மாறியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட ஒத்துழையாமைப் போராட்டத்தையும் கைவிடுமாறு இ.தொ.கா அறிவித்துள்ளது.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டுவதும் பின்னர் உரிய இலக்கை அடையாமலேயே போரட்டத்தை கைவிடுமாறு அறிவிப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அட்டன் நகரில் மலையக மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டப் பேரணியினை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆர்பாட்ட பேரணி ஆரம்பமாகும் வேளை அங்கு ம.ம.மு க்கு எதிராக இ.தொ.கா வினர் ஆர்பாட்டம் செய்துள்ளனர். ஏட்டிக்குப் போட்டியான ஆர்பாட்டத்தினால் அங்கு பதற்ற நிலை உருவானது. ம.ம.மு யின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன் சத்தியாக்கிரகம் செய்யும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் பொகவந்தலாவ நகரில் 500 ரூபா சம்பள உயர்வினை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்புப் போராட்டமும் குழப்பியடிக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றச் சென்ற மூன்று கட்சிகளின் தலைவர்களும் இ.தொ.கா ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டனர் வாகனங்கள் மீது கற்கலால் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இவ்வாறு மலையக தொழிற்சங்கங்களிடையே முரண்பாடுகள் எழுந்து தாக்குதல் வரை அவை சென்றுள்ளன. சம்பள உயர்வு கோரிய போராட்டங்களை தடை செய்வதன் மூலம் யாருக்கு பாதகம் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். எனவே மலையக தொழிற்சங்கங்களின் சுயநல அரசியலுக்காகவும், எதிர்காலத் தேர்தல்களை குறிக்கோளாகக் கொண்டு முட்டி மோதுவதை விடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை பெற்றுக் கொடு;க்க முயல வேண்டும்.
சுயநல அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மலையக தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையுடன் விளையாடக் கூடாது.
எனவே சம்பள அதிகரிப்புத் தொடர்பான பேச்சுவார்த்தையின் உண்மை நிலையினை அறிவிப்பதுடன் 500 ரூபா சம்பளத்தினை பெறும் வகையில் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இல்லையேல் பாதிக்கப்பட போவது தோட்டத் தொழிலாளர்களே அன்றி மலையக தொழிற்சங்கத் தலைவர்கள் அல்ல. மலையக தொழிலாளர்களின் நலன் கருதி மலையக தொழிற்சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி - வீரகேசரி
மலையக மக்கள் முன்னணி வீதி ஹட்டனில் மறியல் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முன்னணி ஏற்பாட்டில் ஹட்டனில் 13-09-2009 ஆம் அன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை. இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் முன்னணி ஆதரவாளர்கள் ஹட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன.இந்நிலையில் ஹட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.