Wednesday, October 19, 2016

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ‘730 ரூபாய்க்கு காட்டிக்கொடுத்துவிட்டன

தொழிற்சங்கங்கள் 730 ரூபாய்க்கு கையொப்பமிட்டு, தோட்டத் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக சாடி, மலையகத்தின் பொகவந்தலாவை, தலவாக்கலை, ஓல்டன், சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்றுப் புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.   
50 ரூபாய் அடிப்படைச் சம்பளம் உள்ளடங்களாக 730 ரூபாய் சம்பளத்துடன் கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளப்போதிலும், அத்தொகைப் போதாது ‘1,000 ரூபாயே வேண்டும்’, ‘இரத்தத்தை உறிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு’ ‘தொழிலாளர் உழைப்பை காட்டிக்கொடுக்கதே’ ‘தீபாவளியா அல்லது தீபாவலியா’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.  
மஸ்கெலியா சாமிமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மஸ்கெலியா வீதி ஒல்டன் சந்தியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
இதேவேளை, பொகவந்தலாவைக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பொகவந்தலாவை கொட்டியாகலை ஆலயத்தின் முன்றலில், சிதறுத் தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை கடந்த 18 மாதங்களாக இழுத்தடித்த தொழிற்சங்கங்கள், இறுதியில் வெறும் 730 ரூபாய்க்கு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.  
தொழிற்சங்க பிரதிநிதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தாம், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாது திண்டாடுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். 

நன்றி- தமிழ் மிரர்

Monday, October 17, 2016

போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி போராட்டம்

இலங்கையில் பெருந் தோட்ட மக்களின் போஷாக்கு மற்றும் காணி உரிமையை வலியுறுத்தி உலக உணவு தினமாகிய இன்று நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கல்ல நகரில் பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற உணவு மற்றும் போஷக்கு உணவு தொடர்பாக விழிப்புணர்வு தொடர்பான பிரச்சாரமும் இந்த போராட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட மக்களுக்கு போதிய வருமானம் இன்மையே அவர்களின் வறுமைக்கு பிரதான காரணம் என பெருந் தோட்ட சமூக காணி உரிமைக்கான இயக்கம் கூறுகின்றது.
''இந்த வறுமை காரணமாகவே போஷாக்கு உணவை பெற முடியாத நிலையில் அவர்கள் காணப்படுகின்றார்கள். '' என்கின்றார் அந்த அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான எஸ். டி கணேசலிங்கம்நு வரெலியா மாவட்டத்திலே மந்த போஷனையுடைய கூடுதலான சிறார்கள் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
பெருந்தோட்ட மக்களுக்கு பயிர் நிலங்கள் இல்லாத காரணத்தினால் இரசாயனமற்ற உணவை அவர்களால் உற்பத்தி செய்ய முடியாதிருப்பதாகவும் கூறும் அவர், பெருந்தோட்ட மக்களுக்கு இரசாயனமற்ற மற்றும் போஷாக்கு கொண்ட உணவு கிடைப்பதற்கான சிறப்பு திட்மொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.
பெற்றோர்களை பொறுத்தவரை தங்கள் பிள்ளைகளுக்கு போஷாக்கு உணவு வழங்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் . ஆனால் அதற்கு அவர்களின் வருமானம் பிரதான தடையாக காணப்படுகின்றது.

Friday, October 14, 2016

கூட்டொப்பந்தம் இன்றும் இல்லை?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய தொழிற்சங்கங்கள், இன்று வௌ்ளிக்கிழமை (14), கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதென்பது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டின.
ஆரம்பத்தில், 3 நாட்கள் மாத்திரமே, அடிப்படைச் சம்பளத்துடன் வேலை வழங்குவோம் என்று கூறி வந்த முதலாளிமார் சம்மேளனமானது, தற்போது, 250 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுமெனவும் அதனை, கூட்டொப்பந்தத்தில் புதிய நிபந்தனையாக உள்ளடக்குமாறும் வலியுறுத்தின.
“இவ்விடயத்தை உள்ளடக்கிய மின்னஞ்சலொன்று, கடந்த புதன்கிழமையன்று, முதலாளிமார் சம்மேளனத்தினால், தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்துப் பார்த்த தொழிற்சங்கங்கள், இந்தப் புதிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம், புதனன்றே அறிவித்துவிட்டன.
கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டொப்பந்த விவகாரம், நாளையுடன் முடிவுக்கு வருமா? என்று, பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “கூட்டொப்பந்தத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முறைமையை மாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலாளிமார் சம்மேளனம், 250 நாட்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தை, கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்துகின்றது” என்றார்.  
“தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தப் புதிய முறைமையை, எந்த வகையிலும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மூன்று நாட்களுக்கு மட்டுமே 730 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமெனவும் மீதமுள்ள நாட்களுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுமெனவும்  முதலாளிமார் சம்மேளனம் கடந்த 18 மாதங்களாக கூறிவந்தது.
இதனை தொழிற்சங்கங்கள் மறுத்ததன் காரணமாக, தற்போது குறுக்கு வழியை கையாண்டு 250 என்ற நாட்கணக்கை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் கூடிய 17 நாட்கள் விடுமுறை மற்றும் 3 பொது விடுமுறைகளை உள்ளடக்கும்போது, வருடத்தில் 20 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது.  
முதலாளிமார் சந்மேளனத்தின் புதிய நிபந்தனைப் பற்றி சிந்திப்போமாயின், 250 நாட்களுக்கான வேலையிலிருந்து 20 நாட்கள் விடுமுறையைக் கழித்தால், 230 நாட்கள் மாத்திரமே, அவர்கள் வேலை செய்ய நேரிடும். இவ்வாறு, 230 நாட்களுக்கு வேலை வழங்கப்படுமென்றால், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவர்.
எனவே, 250 நாட்கள் விடுமுறையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என அவர் கூறினார்.
“முதலாளிமார் சம்மேளனம், இவ்விடயத்தை தொடர்ந்து வலியுறுத்துமானால், கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் முக்கிய தொழிற்சங்கமொன்றின் பொதுச் செயலாளர், வெளிநாடொன்றுக்கு பயணமாகியுள்ளதால், இன்று கைச்சாத்திட எதிர்ப்பார்த்திருந்த கூட்டொப்பந்தம், கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலகாலமாக, சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கொந்தளித்துள்ள மலையக மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக, நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், இவ்வாரமும் மலையகத்தின் சில இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர் வீதிமறியல் போராட்டங்களால்,  மலையகத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் துறைக்கு பாரிய நட்டமேற்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத்துறை, அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும், பல மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டுள்ளது.
இவ்வாரமும், மலையகத்தின் சில பகுதிகளில், தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா, இரத்தினபுரி, வெலிமடை, கேகாலைக்கு உட்பட்ட 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், போராட்டங்களில் பணிப் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட மாட்டவங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொறுமையிழந்துள்ளத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் சந்தப்பாணத்தை நிறுத்தப்போவதாக கடுந்தொனியில் கூறியுள்ளதுடன், வாக்குறுதி வழங்கியதைப் போன்று 1000 ரூபாய் சம்பளத்துடன், ஆறு நாட்களுக்கான வேலையை வழங்குமாறும் கோஷமெழுப்பி வருகின்றனர்.
நன்றி- தமிழ் மிரர்

Thursday, October 13, 2016

கூட்டு ஒப்பந்த நகல் தொழிற்சங்கங்களால் நிராகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்திருந்த புதிய ஒப்பந்த நகல் வரைவைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.

ஆதலால் இன்று (14-10-2016 ) கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாள் வேலை வழங்க இணங்காவிட்டாலோ அல்லது பிரதான உடன்படிக்கையில் மாற்றங்களைச் செய்ய முனைந்தாலோ, இன்று உடன்படிக்கையில் கைச்சாத்திடப்போவதில்லை என தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தன.

வருடத்தில் 300 நாள் வேலை வழங்குவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் அடங்கிய பிரதான உடன்படிக்கையை ரத்துச் செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 250 நாள் வேலை வழங்குவதென்ற உடன்பாட்டையும் சம்பள உயர்வு தொடர்பான உடன்படிக்கையில் உள்ளடக்கி புதிய ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முதலாளிமார் சம்மேளனம் யோசனை முன்வைத்திருக்கின்றது.

அவ்வாறு பிரதான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படுமானால், தொழிலாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த விடயம் சம்பந்தமாக உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினமும் நேற்றும் கூடி தீவிரமாக ஆலோசனை நடத்தியதன் பின்னர், உடன்படிக்கை நகல் வரைவை நிராகரிக்கத் தீர்மானித்ததாக, தோட்டத் தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை 730 ரூபாய்க்கு உயர்த்துவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கும் தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் (முதலாளிமார் சம்மேளனம்), வாரத்தில் மூன்று நாட்கள் வேலை வழங்க முடியும் என்று தெரிவித்திருந்தன. இதனை ஏற்க மறுத்த சங்கங்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தன.

சங்கங்களின் இந்தக் கோரிக்கைக்கு ஏற்ப உடன்படிக்கையைக் கைச்சாத்திடுமாறு தொழில் அமைச்சரும் தெரிவித்திருந்தார். அதற்கிணங்க இன்றைய தினம் (14) உடன்படிக்கை புதுப்பித்துக் கைச்சாத்திடப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சம்மேளனம் அனுப்பியிருந்த புதிய உடன்படிக்கையின் நகல் வரைவை ஆராய்ந்தபோது, அதில் 300 நாள் வேலைக்குப் பதில், 250 நாட்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இராமநாதன் தெரிவித்தார். அதாவது, 2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டுள்ள பிரதான உடன்படிக்கையின் -(சம்பள உயர்வுக்குப் புறம்பான உடன்படிக்கை) 8,9 சரத்துகளில், வருடத்தில் 300 நாள் வேலை உள்ளிட்ட சேம நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்த உடன்படிக்கை அவ்வாறு இருக்கவே சம்பள உயர்வுக்கான உடன்படிக்கை புறம்பாக இதுவரை கைச்சாத்திடப்பட்டு வந்தது.

அந்தப் பிரதான உடன்படிக்கையின் 8ஆம் 9ஆம் சரத்துகளை நீக்கிவிட்டுச் சில விடயங்களைப் புதிய உடன்படிக்கையில் உள்ளடக்க சம்மேளனம் யோசனை தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு செய்யப்பட்டால், தொழிலாளர்களுக்குரிய ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், விடுமுறை கொடுப்பனவு, ஊக்குவிப்பு கொடுப்பனவு, பிரசவகால சகாய நிதியம் ஆகியவற்றிலிருந்து தொழிலாளர்கள் விலக்களிக்கப்படும் நிலை உருவாகும். இது பாரதூரமான விடயம். எனவே, இதற்கு உடன்பட முடியாது எனும் தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட இராமநாதன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சங்கங்கள் தீர்மானிக்கும் என்றார்.

சம்மேளனத்தினர் 730 ரூபாய் சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு, வேலை வழங்கும் நாட்களைக் குறைத்து, உற்பத்தியினை அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர்வினை வழங்குவதாகக்கூறி, மீண்டும் ஆரம்ப நிலைக்குச் சென்றிருப்பது வருத்தமளிப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, October 12, 2016

கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்

தமக்கு உடனடியாக ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குமாறும் தமக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட  சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்தும் ஹட்டன் எபோட்சிலி பிரதேச தொழிலாளர்கள் டயர்களை எரித்து கறுப்பு கொடி ஏந்தி இன்றுகாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இத்தோட்ட தொழிலாளர்கள் அங்கவகிக்கும்  மலையக கட்சிகள் அனைத்துக்கும், மாதாந்தம் சம்பளத்தில் சந்தாபணத்தினை தற்காலிகமாக அறவிட வேண்டாம் என தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியிடம் கையொப்பமிட்ட கடிதமொன்றினை வழங்கியுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எமக்கு ஆதரவாக போராடும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு நன்றி, உடனடியாக கூட்டு ஒப்பந்தத்தினை இரத்துச் செய்,சந்தாப் பணத்தினை நிறுத்திவிட்டோம், உடனடியாக ஆயிரம் ரூபாவை வழங்கு, போராட்டம் வெடிக்கும்" என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

1000 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு  ஆதரவு தெரிவித்து, அவிசாவளை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்று வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆரம்பித்து ஜனாதிபதி செயலத்திற்கு சென்று நிறைவடைய ஏற்பாடகியிருந்த நிலையில் பொலிஸார் வீதியில் தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தை தடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள 10 பேரடங்கிய குழுவினர்  கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும் வரை தாம் வேலைக்கு செல்லப்போவதில்லையெனவும் இப் போராட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித அக்கறையும் செலுத்தவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்

தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழு குற்றஞ்சுமத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 14ஆம் திகதி கைச்சாத்திடப்படலாம் என்றும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குதல், வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குதல் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்தல் போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை உள்ளடக்கியதாக இக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக மலையக சமூக நடவடிக்கை குழுவின் இணைப்பாளர், சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார்.
தீபாவளியை காரணம்காட்டி தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முன்னெடுக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மருதானை சி.எஸ்.ஆர் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சட்டத்தரணி இ.தம்பையா இதனைக் கூறினார். ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் துங்க ஜயசூரிய, மலையக சமூக ஆய்வு மையத்தின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பது என்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் முன்வைத்த கோரிக்கையல்ல. கடந்த தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரசாரங்களின் போதும் இதனைக் கூறியிருந்தார். இருந்தபோதும் 1000 ரூபாவை இதுவரை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவில்லை என்றார்.
மாறாக நாளொன்றுக்கு 730 ரூபாவை வழங்குவது தொடர்பான கூட்டு ஒப்பந்தமொன்று எதிர்வரும் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ கைச்சாத்திடப்படலாம். இந்த ஒப்பந்தமானது தொழிலாளர் சட்டத்துக்கு முரணான வகையில் அமையவுள்ளது. வாரமொன்றுக்கு மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்குவது, 3 வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, பாக்கிச் சம்பளத்தை வழங்குவதில்லை ஆகிய விடயங்கள் இம்முறை ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றன. எனினும் அவர்களின் வருடாந்த நிதி அறிக்கையை எடுத்துப் பார்த்தால் அது உண்மை இல்லையென்பது தெளிவாகிறது. தீபாவளி என்பது மலையகவாழ் மக்களுக்கு பரம்பரையாகக் கொண்டாடப்படும் கலாசார நிகழ்வாகும்.
ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவது வழமை. இம்முறையும் பண்டிகை முன்பணம் வழங்கப்படாது என தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் முயற்சிக்கின்றன. நரகாசுரனின் அழிவை தீபாவளியில் கொண்டாடுகிறோம். நரகாசுரன்கள் போன்று செயற்படும் கம்பனிகள் செயற்படுகின்றன என்றும் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்ற போராட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் போராட்டங்களை காட்டிக் கொடுக்காது தொழிற்சங்கங்களும் செயற்பட வேண்டும். மாறாக தொழிலாளர் சட்டத்தை மீறும் வகையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமாயின் அதற்கு எதிராக மலையகம் தளுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். எவ்வாறான போராட்டம் என்பது அப்போது அறிவிக்கப்படும் என்றும் சட்டத்தரணி இ.தம்பையா மேலும் கூறினார்.