Sunday, March 29, 2009

மக்களை ஓரணியில் திரட்டுவது தான் நோக்கம் - முத்தப்பன் செட்டியார்

பி.ரவிவர்மன்

இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரே இலட்சிய நோக்குடனேயே இலங்கை- இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று முன்னணியின் தலைவரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான முத்தப்பன் செட்டியார் தெரிவித்தார். இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி என்ற புதியதோர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதன் அவசியம் என்னவென்று ஞாயிறு தினக்குரலுக்கு முத்தப்பன் செட்டியார் வழங்கிய விசேட செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள போது.

இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கம் என்ன?

இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள்,தெலுங்கர்கள், கன்னடர்கள், மேமன் சமூகத்தினர், குஜராத்திகள் உள்ளடங்கிய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி எமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை அரசியல் வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். அதனை விட பாதுகாப்பு “கெடுபிடி” கைது, காணாமல் போதல் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைப்பதே எமது பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல்படியாகவே எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி சுயேச்சைக் குழு-5 இல் கண்ணாடி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

பேரினவாத கட்சிகளுடன் கடந்த காலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களால் எமது சமூகத்திற்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. எனவே எமது சமூகத்தின் தனித்துவத்தை எதிர்காலத்தில் பேணிப் பாதுகாப்பதற்காக இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியை பலப்படுத்த முன்வர வேண்டும்.

பல்வேறு அரசியல் கட்சிகள், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் உங்கள் புதிய அரசியல் செயற்பாட்டின் நோக்கமென்ன?

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எமது மக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எமக்கான அரசியல் தளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம் பாராளுமன்றத்தில் குரலெழுப்புவதும் அறிக்கைகள் விடுவதாலும் எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. யதார்த்த பூர்வமாக சிந்தித்து எமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்பவர்கள் அதனால் எமது மக்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவென்பதை இதுவரை சொல்ல முடியாதவர்களாகவேயுள்ளனர்.

தேர்தல் காலத்திலேயே உங்கள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றஞ்சாட்டுகின்றார்களே அது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்?

தேர்தல் காலத்தில் மாத்திரம் புதிதாக தோற்றுகின்றவர்கள் என்ற கருத்தை சிலர் தமது அரசியல் சுயலாபங்களுக்காக முன்வைக்கலாம். அது உண்மையில்லை. எமது முன்னணியில் புத்திஜீவிகள்,எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் சாதாரண தரத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எமது இலட்சியம், சிந்தனை, நோக்கம் என்பன இந்திய வம்சாவளியை ஓரணியில் திரட்டி பேரம் பேசும் அரசியல் சக்தியொன்றை உருவாக்குவதேயாகும்.

இலங்கை இந்தி வம்சாவளி மக்கள் முன்னணியின் எதிர்கால அரசியல் செயற்திட்டங்கள் எவ்வாறாக அமையப் போகின்றது?

இலங்கை இந்திய காங்கிரஸ் 1939 ஜூலை 25 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக வீ.ஆர்.எம்.ஏ.லெட்சுமணன் செட்டியார் மற்றும் இணைச் செயலாளர்களாக ஏ.அஸீஸ், எச்.எம் தேசா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி, பிரதமர் நேரு ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே அன்று இந்தியவம்சாவளி மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் நலன் கருதியும் அவர்களை ஓரணியில் திரட்டவும் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு காலப்போக்கில் தொழிற்சங்கங்களாக மாற்றமடைந்து பிளவுபட்டு காலப்போக்கில் பல பிரிவுகளாக சிதறுண்டது. இவ்வாறு பிளவுண்டு சிதறுபட்ட அரசியல் தொழிற்சங்க பிரமுகர்கள் தமது அரசியல் நலன்கருதியே செயற்பட்டனரே தவிர இந்திய வம்சாவளி மக்கள் நலன்கருதி ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் செயற்படவில்லை. இவ்வாறு வளர்ச்சி பெற்ற தலைவர்கள் பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமது சுயலாப அரசியலையே முதன்மைப்படுத்தி இந்த நிலையிலே புதியதோர் அரசியல் விழிப்புணர்ச்சியை உருவாக்க இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை கட்சிகளின் தயவில் அரசியல் நடத்துபவர்கள் அவற்றின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவேயுள்ளனர்.இந்த நிலையை மாற்றியமைக்கவே நாம் புதியதோர் அரசியல் களத்தை தோற்றுவித்துள்ளோம்.

Saturday, March 28, 2009

டன்சினன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம்

மத்திய மாகாணம் பூண்டுலோயா மத்திய பிரிவு தோட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த விடயம் குறித்து தோட்டத் தொழிற்துறை அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, சூழலியல் அமைப்புக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை பூண்டுலோயா பகுதியிலேயே மேல் கொத்தமலைத் திட்டத்தின் நிலக்கீழ்ச் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மதுவுக்கு எதிராக மகளிர் அமைப்பு

மலையகத்தில் புதியதொரு அரசியல் மற்றும் தொழிற்சங்க கலாச்சாரமொன்றினை ஏற்படுத்தும் வகையில் மதுவுக்கு எதிரான மகளிர் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் காலங்களிலும் தொழிற்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் காலங்களிலும் சில அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களால் தாராளமாக வழங்கப்படும் மதுபானம் தோட்டத் தொழிலாளர்களின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. அத்துடன் மலையக பகுதிகளில் அதிகரித்து வருகின்ற மதுபாவனை இளைஞர்கள் உடல் ரீதியாக பாதிப்படைந்து வருகின்றனர். குடும்பத் தலைவர்களின் மது பாவனையால் அக் குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.
விவசாயத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தம்

பொகவந்தலாவை கெம்பியன் தோட்ட 57ம் பிரிவிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், அவர்களுடைய உறவினர்களும் தோட்டங்களில் வேலை செய்வதிலிருந்து தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது மேலதிக வருமானத்துக்காக தோட்டங்களிலுள்ள தரிசு நிலங்களில் விவசாயப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பள உயர்வு தொடர்பாக மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

பதுளையில் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடலின் போது தெரிவித்த கிருஷ்ணசாமி அவர்கள் பதுளை மாவட்டத்தில் 65 தோட்டங்களும், 525 பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் 40 தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய தோட்டங்களில் கையொப்பம் பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் கையொப்பம் பெறப்பட்ட மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கூட்டொப்பந்தத்தில் மாதத்திற்கு 25 நாள் வேலையும், வருடத்திற்கு 300 நாள் வேலையும் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கூட்டொப்பந்தம் செய்தவர்களே வாரத்திற்கு இரண்டு, மூன்று நாள் வேலை வழங்கப்படும்பொழுது தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை கேட்பது உகந்த தருணம் இல்லை என்கிறார்கள். வரட்சி நிவாரணம் விவசாயிகள், சிறுதோட்ட சொந்தக்காரர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்றார்.

Friday, March 27, 2009

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே சமூகம் முன்னேற்றமடையும்

ஆளும் கட்சியுடன் இணைந்திருப்பதன் மூலமே மலையக சமூகத்தை முன்னேற்றத்திற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். எமது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எமது மக்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என பதுளை, ஆலி-எல பகுதி பெருந்தோட்டங்களின் தோட்டக்கமிட்டி முக்கியஸ்தர்கள் மத்தியில் பிரதி கல்வியமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூட்டு ஒப்பந்தம் மார்ச் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. மீண்டும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அதன் பிரகாரம் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஊவா மாகாணசபை கே. விஸ்வநாதன் குறிப்பிடுகையில் தேயிலை தோட்டங்களில் 10 வீதமான பங்குகள் தொழிலாளர்களிடம், 30 வீதமான பங்குகள் தோட்டங்களை பொறுப்பேற்ற நிறுவனங்களிடமும், 40 வீதமான பங்குகள் அரசிடமும் இருந்து வருகிறது.

அரசினால் தோட்டங்களை நடத்த முடியாது நட்டத்தில் இயங்கியதால் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. தோட்ட நிறுவனங்கள் நடத்த முடியாத பட்சத்தில் அடுத்த பங்குதாரர்களான தொழிலாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
கம்பனிகள் பொறுப்பேற்றது முதல் தோட்டங்களின் வளங்கள் அனைத்துமே சுரண்டப்பட்டு விட்டன. அத்துடன் ஏக்கர் ஒன்றிற்கு 3500 தேயிலைச் செடிகள் இருக்க வேண்டிய இடத்தில் 1500- 2000 தேயிலைச் செடிகளே உள்ளன என்றார்
.
பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு தமிழ்மொழிமூல பாடநெறிகளுடன் தொழிற்பயிற்சி

பெருந்தோட்டங்களை அண்மித்திருக்கும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாடநெறிகளுடன் தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பதுளைப் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் ரம்யமான முறையில் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர் என ஊவா மாகாண சபை உறுப்பினர் அ. அரவிந்குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களில் சிங்கள மொழிமூலமான பாடநெறிகளுடனேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதனால், பெரும்பான்மை சமூக இளைஞர், யுவதிகளுக்கே கூடுதலான வாய்ப்புக்கள் இருந்து வந்தன. எமது சமூகத்தவர்களுக்கு அவ்வாய்ப்புக்கள் முழுமையாக கிடைக்கவில்லை. இந்நிலையினால், எமது சமூக இளைஞர், யுவதிகள் பெரும் பாதிப்புகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.

இதுகுறித்து, வாழ்க்கை தொழில்பயிற்சி பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பதுளை மாவட்ட பெருந்தோட்டங்களின் இளைஞர், யுவதிகளிடையே விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆரம்பக்கட்டமாக 75 இளைஞர்களை தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுத்தியுளள்ளதாகவும் தெரிவித்தார்
ருபெல்லாவின் தாக்கம் மலையகத்திலும் பரவாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டும்

ருபெல்லா தடுப்பூசியின் தாக்கம் மலையகப் பாடசாலைகளிலும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதை சுகாதார அமைச்சு உறுதி செய்யவேண்டுமென அமைச்சர் பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளையில் ருபெல்லா ஊசி ஏற்றப்பட்டதால் மரணமாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் மாணவியின் மரணம் பற்றி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே மாத்தறை பகுதி பாடசாலையொன்றில் ஏற்பட்ட மாணவி ஒருவரின் மரணம் தொடர்பாக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அட்டன் பகுதியில் ஒரு மாணவியின் மரணத்திலும் ருபெல்லா தடுப்பூசி விவகாரம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.

பெருந்தோட்டத் துறையைப் பொருத்தவரையிலும் மாணவர்களின் சேம நலன்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவிற்கு பெற்றோர்களுக்கு போதிய ஓய்வும் இல்லை. நோய்களின் தாக்கங்களை உடனடியாகக் கண்டு கொள்ளும் அளவிற்கு அனுபவமும் இல்லை. இதற்கும் மேலதிகமாக வைத்திய வசதிகளும் எமக்கு பூரணமாக இல்லை. ஆகவே பாடசாலை நிர்வாகமும் சுகாதாரத் திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும். மலையகத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாதிரியான ஆபத்துகள் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வுத் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

Thursday, March 26, 2009

சம்பள உயர்வு கோரிக்கைக்கு கையெழுத்து வேட்டை – ஆர்.எம். கிருஷ்ணசாமி

தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி தொழிலாளர்களின் கையெழுத்து பெற்று மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நடவடிக்கையில் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக அச் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இதுவரை ஊவா மாகாணத்தில் 10,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இம் மாதம் 30ம் திகதியுடன் முடிவடைகிறது. குறிப்பாக அடிப்படை சம்பளமென்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்றும் ஒரே துறையில் கடமை புரியும் தொழிலாளர்களுக்கு வௌ;வேறு தொகையான சம்பளம் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் ரூபா 200, ஊக்குவிப்பு போனஸ் ரூபா 70, நாணயமாற்றுக் கொடுப்பனவு ரூபா 30 என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளிக்கு மாதமொன்றுக்கு ரூபா 6960 சம்பளம் கிடைக்க வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஒரு தொழிலாளி 23 நாட்கள் வேலை செய்தால் அடிப்படை சம்பளம் 200 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனவே மாதமொன்றுக்கு ரூபா 4370 மாத்திரமே ஒரு தொழிலாளி பெற்றுக்கொள்கின்றார். ஒரு தொழிலாளி ஒரு நாள் வேலையை இழந்தால் கம்பனிகள் இலாபமாக 2590 ரூபாவை பெறுகின்றன. இது தொழிலாளர்களுக்கு மிகப் பாதகமாக அமைகிறது.அத்துடன் அடிப்படை சம்பளம் 200 ரூபாவுக்கு மட்டுமே. ஊழிய சேமலாபநிதி, போனஸ், மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த ஒப்பந்தத்திற்கு பின் வாழ்க்கைச் செலவுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் விரோத சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி இன்றை வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தொழிலாளி ஒருவரின் நாட்சம்பளம் 500 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும். அது அரசாங்கம் தலையிட்டால் மாத்திரமே வெற்றி பெறும் என்றார்.
கம்புறுப்பிட்டியவில் ஏழுபேர் கைது

கம்புறுப்பிட்டிய நகரில் கடந்த 23-03-2009 அன்று பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காலி, தெனியாய பகுதிகளின் தோட்டங்களை சேர்ந்த நான்கு இளைஞர்களும் மூன்று யுவதிகளையும் பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இவர்களில் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாத காரணத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Thursday, March 19, 2009

மலையக மாணவர்களின் புலமைபரிசில் கொடுப்பனவு பெறுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரிட்டோ நிறுவனம்

புலமைப் பரிசில் பெற தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் வருமான எல்லையை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என வெளிவந்துள்ள செய்திகள் அடிப்படையில் பெருந்தோட்ட மாணவர் நிலை குறித்து ஆராந்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது பற்றி பிரிடோ நிறுவனம் விடுத்த வேண்டுகோளில் எமது நாட்டில் கல்வித் துறையில் அதிகமாக பின்தங்கிய மக்கள் பெருந்தோட்டத்துறையை சார்ந்த மலையக மக்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம்.

இவ்வாறு பின்தங்கிய நிலை காரணமாக மலையக பகுதிகளில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையும், பல்கலைகழகங்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஏனைய பிரதேச மாணவர்களோடு ஒப்பிடும் போது மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு

இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் மலையகத்தில் கல்வித்துறையில் மலையகம் முன்னேற்றமடைய அதிக காலம் எடுப்பதால் மலையக மாணவர்களுக்கு அதிக ஊக்குவிப்பு வழங்க வேண்யது அவசியமாகும். (மலையக பெற்றோரின் வருமானம் வருடத்துக்கு 24,000 இலிருந்து 54,000 ரூபா வரையில்- மாத வருமானம் 2,000 ரூபாவிலிருந்து 4,500 ரூபா) இன்றைய நிலையில் அதிக வருமானம் பெருபவர்களின் பிள்ளைகள் கூட புலமை பரிசில் கொடுப்பனவை பெறுகின்றனர். ஆனால் பெருந்தோட்டப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக தமது படிப்பினை முன்னெடுக்க முடியாத நிலை. இப் பிள்ளைகள் புலமை பரிசில் கொடுப்பனவை பெற வேண்டுமானால் விசேட ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதை உறுதி செய்வதற்கு மாற்று வழிகளை மேற்கொள்வதற்கு மலையக அரசியல்வாதிகள், மத்திய அரசு, மாகாண அரசு ஆகியவற்றில் கல்வி அமைச்சுக்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
மாணவி கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை

பசறை மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பு மாணவி காஞ்சனா(20) கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி கற்பழிக்கப்பட்டு கோரமாக கொலைசெய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பசறை ஹொப்டன் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர் இசுரு சம்பத் ஜயசுந்தர என்பவர் லுணுகலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தேக நபருக்கு பதுளை நீதவான் சிரான் குணரட்ன ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

இக் கொலை தொடர்பாக பசறை பிரதேச பாடசாலைகள் மட்டத்திலும், கிராம நகர மட்டத்திலும் கண்டன பேரணிகள், எதிர்ப்பு ஊர்வலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு பிரதான சந்தேக நபருக்கு சார்பாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஆஜராககூடாதென்று அழுத்தங்களும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் - மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடம் அமைச்சர் பெ. சந்திரசேகரன் தலைமையில் கூடியபோது பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் சம்பள உயர்வில் அக்கறையோடும் உறுதியோடும் நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்ட சகல தொழிற்சங்கங்களின் நிலைப்பாட்டை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மட்டுமல்லாது தொழிலாளர்களுக்குரிய வாய்ப்புகள் தொடர்பாகவும் புதிய சாசனம் உருவாக்கப்படல் வேண்டும்.
மேற்படி முடிவுகளுக்கு அனுசரணையாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு முதலாளிமார் சம்மேளனத்திற்கும் அரசுக்கும் அழுத்தம் ஏற்படுத்துவதற்குரிய திட்டங்களை வகுத்தல்.

இதற்கான ஆதரவினை பெற அரசியல் கட்சிகளையும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பொது ஸ்தாபனங்களையும் சந்தித்து தெளிவுபடுத்துவதோடு தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிக்கின்ற வரலாறுகள் திருத்தப்படல்.

இறுதி முடிவு எடுக்கப்படும் போது அதில் அரசாங்கம் பங்குதாரதாக இருக்கக்கூடியதான திட்டங்களை வகுத்தல்

குறைந்தபட்ச சம்பளம் 400 ரூபாவாக இருப்பதற்கு சகல மட்டங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுதல்

Wednesday, March 18, 2009

2015 இல் மலையக மக்களுக்கு சகலதும் கிடைக்கும் வகையிலான வாழ்க்கைத்தரம் - மத்திய மாகாண ஆளுநர்

2015ம் ஆண்டளவில் மத்திய மலைநாட்டு மக்களுக்கு சகல சௌபாக்கியங்களும் பொருந்திய வாழ்க்கைத் தரமொன்றை பெற்றுக் கொடுக்கும் மாகாண சபையாக மத்திய மாகாணசபையாக அமையும் என மத்திய மகாணசபையின் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மத்திய மாகாணசபையின் 5வது அமர்வின் கொள்கை விளக்க உரையில் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் வேட்பாளர்களுக்கு விசேட அடையாள அட்டை

மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. சகல வேட் பாளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய தாக அடையாள அட்டை வழங்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப் பதற்காகவும் வேட்பாளர்களின் பாதுகாப்பு க்காகவும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் கோரிக்கைப் படி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.