Thursday, April 30, 2009

தொழிலாளர் ஐக்கியம் பிளவு படாமலிருக்க இம் மேதினத்தில் உறுதியெடுப்போம்

உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் உயிர்ப்புத் தினமும் உரிமைத் தினமுமான உன்னத மே தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தினர் இன்னல்களையும் எதிர்ப்புகளையும் கண்டுவரும் காலகட்டத்திலேயே மீண்டுமொரு மே தினம் இன்று வந்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைவர் ஏ.பி.கணபதிப்பிள்ளை விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
திசைமாறிப்போகும் மேதினம் களியாட்டங்களுக்கு கைகொடுக்கின்றதே தவிர, தொழிலாளரின் அவஸ்தைகளை தூரவைத்தே பார்க்கின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும் அமைதியற்ற சூழலும் தொழிலாளர் நசுக்கப்படுவதை நிரூபணமாக்கிறது. அரசியல்மயப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளே தொழிலாளரின் ஒற்றுமை சீர்குலைவுக்கு வித்திடுகின்றன. தொழிலாளரின் சீர்குலைவானது அவர்களைச் சுரண்டும் கம்பனிகாரர்களுக்கு மாத்திரமல்லாமல் அரசுக்கும் கூட இலாபமாக அமைகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிந்து அடுத்த கட்ட நகர்வு என்னவென்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், நியாயமான சம்பள உயர்வு கிடைக்கவென போராடியும் வீண்வாத பிரதிவாதங்களால் தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் ஐக்கியம் பிளவுபடாமல் போவதையும் தடுத்து நிறுத்த இம் மே தினத்தில் உறுதிபூணுவோமாக. தொழிலாளர் வர்க்கத்திற்கும் அவர்களது போராட்டத்திற்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள்.

Wednesday, April 29, 2009

இறக்குவானை முத்துமாரியம்மன் வருடாந்த உற்சவம் இனவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து இடைநிறுத்தம்

இனவாதிகளின் அச்சுறுத்தலால் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறித்து இறக்குவானை வாழ் இந்துக்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களும் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலய பரிபாலன சபையினர் வழமைபோல் இம்முறையும் வருடாந்த உற்சவத்தை நேற்று 28-04-2009-ம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்..இந்நிலையில், இப்பகுதி இனவாதிகள் இது சிங்கள நாடு, நாம் சொல்வதையே அனைத்து இன மக்களும் செய்ய வேண்டுமெனக்கூறியதுடன் இம்மாதம் வெசாக் மாதம் குறிப்பாக 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வெசாக் வாரம் அனுஷ்டிக்கப்படுவதால் இக்காலப்பகுதியில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு விழாக்களையோ, தேர் திருவிழாக்களையோ நடாத்தக்கூடாதென்றும் அதையும் மீறி நடாத்தினால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமெனவும் எச்சரித்தனர்.
அத்துடன், கோயிலின் பரிபாலன சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தொழிற் கூடங்களுக்கும் சென்று அச்சுறுத்தலும் விடுத்தனர். இது குறித்து இறக்குவானை பொலிஸில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கலந்துரையாடலொன்றுக்கு இரு தரப்பினரையும் (தலா 7 பேருக்கு மட்டும்) வருமாறு அழைப்பு விடுத்தார். கோயில் பரிபாலன சபையினர் 7 பேர் பிரசன்னமாகியிருக்க எதிர்;த்தரப்பில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தனர். இதனால், அங்கு நடைபெற்ற கலந்துரையாடல் இனவாதிகளுக்கு சாதகமாகவே அமைந்ததால் கோயில் நிர்வாக சபை இம்முறை திருவிழாவை இடைநிறுத்துவதென முடிவெடுத்தது.
இது குறித்து கோயில் நிர்வாகம் குழுவினருக்கும் அறிவித்தனர். இதனால், இவ்வருட கோயில் திருவிழா இடைநிறுத்தப்பட்டது. சுமார் 200 வருட வரலாறு கொண்ட இக்கோயிலில் இம்முறை மட்டுமே இனவாதிகளின் எதிர்ப்பினால் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பகுதியிலுள்ள பௌத்த விகாரையின் விகாராதிபதி போயா தினத்தில் மட்டும் தேரினை வெளியில் கொண்டுவரக்கூடாது அதுவும் பௌர்;ணமி தினத்தில் எவ்வித விழாக்களையும் நடாத்தக்கூடாதெனவும் ஏனைய நாட்களில் வழமைபோல் விழாவினை நடாத்தலாமெனவும் கூறியுள்ளார். எனினும், இனவாதிகள் இதற்கும் அனுமதிக்கவில்லையென இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தர் பிறந்து ஞானம் பெற்று பரிபூரணநிலை அடைந்த தினம்தான் வெசாக் போயாதினம். அன்றைய தினம் உலகிலுள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இவ்வேளையில், இந்த ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழாவினை நடாத்த அனுமதிக்காதது பெரும் கவலையளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி- தினக்குரல்
தோட்டப்பகுதிகளில் எல்லைப்புற காணிகளை வெளியார் ஆக்கிரமிப்பு

களுத்துறை மாவட்டத்தின் சில தோட்டங்களில் எல்லைப்புறங்களில் உள்ள காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் படிப்படியாக ஆக்கிரமிப்புச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யும் காணிகளில் தேயிலை, தென்னை, வாழை மற்றும் ஏனைய பயிச்செய்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சிலர் இக்காணிகளுக்கான உறுதிகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் பற்றி தெரிந்திருந்தபோதிலும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேவேளை காலம் காலமாக தோட்டங்களின் அபிவிருத்திக்காக பாடுபட்டுவரும் தொழிலாளர்கள் தாம் வசித்து வரும் லயன் குடியிருப்புக்களில் மேலதிக வசதிகளை செய்து கொள்ளும் போதும், தற்காலிக குடிசைகள் அமைத்துக் கொள்ளும் போதும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக கெடுபிடிகளை மேற்கொள்வதுடன் வேலையிலிருந்து இடைநிறுத்தி நீதிமன்றம் வரை கொண்டு சென்று தொழிலாளர்களுக்கு பெரும் இக்கட்டான நிலைமையை தோட்ட நிர்வாகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
நிவாரணப் பொருட்கள் சேகரிக்க நுவரெலியா பிரதேச சபையில் தீர்மானம்

வன்னி மோதல் நடவடிக்கைகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பதற்கு நுவரெலியா பிரதேச சபை தீhர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். நேற்று(28-04-2009) திங்கட்கிழமை இடம்பெற்ற நுவரெலியா பிரதேச சபை அமர்வின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்படவுள்ள நிவாரணப் பொருட்களை வவுனியா பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
தொழிலாளர்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க மே தினத்தில் உறுதி கொள்வோம் - ஆறுமுகன் தொண்டமான்

மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் உறுதி கொண்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் விடுத்துள்ள மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அச் செய்தியில் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே தினத்தை இம்முறை மிகுந்த நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். மே தினம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், வேலை, நேர நிர்ணயம் இன்னும் பல உரிமைகள் ஆகியவற்றை வென்றெடுத்த வெற்றித் தினமாகும். மே தினம் தொழிலாளர்களுக்கு விமோசனத்தையும் விடிவையும் ஏற்படுத்தித் தரும் என்பதில் நம்பிக்கையுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை இன்னும் ஜீவாதார உரிமைகள் ஆகியவை தொடர்பாக பல திட்டங்களை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். பொருளாதார நெருக்கடிகளால் நாளாந்தம் பல்வேறு இடர்பாடுகளை இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ளார்கள் இச்சமயத்தில் தொழிலாளர்களுடைய வாழ்க்கை சுமுகமாகவும் சீராகவும் அமைய வேண்டும் என்ற நோக்கில் புதிய பல திட்டங்களை வகுத்துள்ளோம். அதேவேளை. அரசுடனும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடனும் இணைந்து எமது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றோம். இ.தொ.கா. ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. அதேபோல அவ்வப்போது அரசுகள் மூலமாக மலையக மக்களுக்கான கோரிக்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றி வந்துள்ளது.
இ.தொ.கா. காலம் காலமாக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற அதேவேளையில் தொடர்ந்து சமகால தேவைகளுக்கேற்பவும் சேவையாற்றி வந்துள்ளது. இன்று அரசுடன் இணைந்து எம்மக்களுக்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றோம். மலையக சமூகம் பல்வேறு துறைகளில் துரிதமாக முன்னேறி வருகின்றது.
காலமாற்றத்திற்கேற்ப எமது தேவைகள் பெருகிவிட்டன. அதேவேளை, புதுப்புது கோரிக்கைகளையும் முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, இம்மாற்றங்களுக்கு எமது சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இத் தொழிலாளர் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது மே தினச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும்.

மலையக தொழிற்சங்கங்கள் அரசியல் மயமாக்கப்படுவதால் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகியும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு இன்றுவரை பெற்றுக் கொடுக்க முடியாத நிலை தொழிற் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமி அக்கரப்பத்தனையில் தோட்ட தமிழ் தலைவர்களை சந்தித்து உரையாற்றும் போது தெரிவித்தார். தொழிற்சங்கவாதிகள் தங்களை அரசியலில் வளர்த்துக் கொள்வதாலும் தொழிற்சங்க போட்டிகளுக்கும், பணத்திற்காக விலைபோகும் படலமும் தொடர்வதாலே தொழிற்சங்க உரிமைகளை பெற முடியாமல் இருக்கின்றது என்றார். தொழிலார்கள் வர்க்க ரீதியாக ஒன்றுபட்டு தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடுவதன் மூலமே எமது தொழிற்சங்க உரிமைகளை பெற முடியும். மாறாக அரசியல் மாயைகளுக்காக தொழிற்சங்கங்களை கூறு போடுவதால், தொழிற்சங்க போட்டிகள் வளருமே தவிர தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட மாட்டாது.

Tuesday, April 28, 2009

உள்ளுராட்சி சட்ட மூலத்தை மத்திய மாகாணசபை நிராகரிக்க வேண்டும்

மத்திய மாகாணசபையில் எதிர்வரும் மே 5 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ள உள்ளுராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டமூலத்தை மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டுமென மாகாணசபை உறுப்பினர் கனபதி கணகராஜ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி விஷேட ஒழுங்குகள் சட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டமூலம் மலையக மக்களின் உள்ளூராட்சி உறுப்பினர் பிரதிநிதித்துவத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு வந்துவிடும். தற்போது இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழுகின்ற பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தமது பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துள்ளனர். அத்துடன், மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்திலும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து கொள்ள முடியாத பிரதேசங்களில் உள்ளூராட்சி சபைகளின் ஊடாகத் தமது பிரதிநிதித்துவத்தைத் தெரிவு செய்து கொள்கின்றனர்.
இந்த விடயம் குறித்து மலையகத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இந்தச் சட்ட மூலத்தினை மத்திய மாகாணத்தில் நிராகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோருவதுடன் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கின்ற மாகாணசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் கோரவுள்ளதாக அவர் தெரிவித்தார்
இலங்கையில் அதிகமான மதுபான விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா நகரில் வீதிக்கு வீதி மதுபான நிலையங்கள் அமைப்பட்டுள்ளன. ஒரு சிலர் விற்பனை அனுமதிப் பத்திரம் பெற்றும் கடை திறப்பதற்கு இடமில்லாமல் இருக்கின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் இருந்ததை விட தற்போது மதுபான கடைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதுடன், வீதிகள் தோறும் இரண்டு அல்லது ஒன்று என்ற அடிப்படையில் மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் மதுபான கடைகளும் பிரதான வீதியில் 2 பார்களும், எலிசபெத் வீதியில் ஒரு மதுபான கடையும் லோசன் வீதியில் 3 மதுபான கடைகளும் கண்டி வீதியில் 2 பார்களும் 4 மதுபான கடைகளும் ஒரு பியர் கடையுமாக 15 மதுபான விற்பனை நிலையங்கள் நுவரெலியா நகரிற்குள் இருக்கின்றன. இந்த 15 மதுபான விற்பனை நிலையங்களுடன் கந்தப்பளை வீதியில் ஹாவ-எலியாவில் மதுபான விற்பனை நிலையம் பொரவத்த என்னும் இடத்தில் ஒரு மதுபான விற்பனை நிலையமும் உள்ளன. இவ்விரண்டு மதுபான விற்பனை நிலையங்களும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கும் இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் ஆலயங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், முஸ்லீம் பள்ளிவாசல், தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. நுவரெலியாவிலிருந்து ரம்பொட புசல்லாவ வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்களும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா லிந்துல தலவாக்கலை வரையும் நுவரெலியாவிலிருந்து வெளிமடை வரையும் நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை இராகலை வரையிலும் பல மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன.
இது இப்படியிருக்கையில், நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உள்ள உல்லாச ஹோட்டல்களிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றது. நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 50 இற்கும் அதிகமான மதுபானம் விற்பனை நிலையங்களும் பார்களும் உட்பட சுமார் 15 இற்கும் அதிகமான உல்லாச ஹோட்டல்களிலும் பார்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தோட்டத்தொழிலாளர்கள் அதிகமாக நடமாடும் இடங்களிலேயே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட பகுதிகளில் அனுமதியற்ற மினிபார்களும் இயங்குகின்றன. இலங்கையிலே மதுபான விற்பனை நிலையங்கள் அதிகமாக இருப்பது நுவரெலியா மாவட்டத்திலாகும்.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் கல்வி, பொருளாதார தொழில் வாய்ப்பு, வீதிகள், குடியிருப்புகள் போன்றவற்றின் அபிவிருத்தியை விட மதுபான விற்பனை நிலையங்களே அபிவிருத்தியடைந்துள்ளதென்று இம்மாவட்ட பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இடைநிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை

புசல்லாவை இரட்டைப்பாதை நகரிலிருந்து தொரகல மற்றும் நயபனை பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இரட்டைப் பாதையிலிருந்து நயபனை மற்றும் தொரகல செல்லும் வழியில் அமைந்துள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததால் இவ்வீதியில் இடம்பெற்ற இரு பஸ் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. தற்போது பாலம் புனரமைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இவ்வீதியினூடான பஸ் போக்குவரத்து சேவையை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதிப்பை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜோசப்

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு ஆசிரியர்களை அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் குறைந்த பட்சம் க.பொ.த. (சா த.) பரீட்சையில் திறமைச் சித்தி அவசியமாகும். ஆனால், அண்மையில் தோட்டப் பகுதிப் பாடசாலைகளுக்கு சாதாரண சித்தியுடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியாததால் மாணவர்களே பாதிக்கப்படுவர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தோட்டப் பகுதிப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் முகமாக அண்மையில் 3,300 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாதாரண சித்தியுடனேயே நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அனுமதிக்கும் போது குறித்த பாடத்தில் அவ்வாசிரியர்கள் க.பொ.த. (சா த) பரீட்சையில் குறைந்தது திறமைச் சித்திப் பெற்றிருக்க வேண்டுமென வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தோட்டப்புறப் பாடசாலைகளுக்கு சாதாரண தர சித்தியுடைய ஆசிரியர்கள் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மொத்தமாக 4,000; பேர் விண்ணப்பிக்கின்ற நிலையில் 1000 பேரே உள்ளீர்க்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் பயிற்சியை பெற முடியாததால் மாணவர்களே இதனால் பாதிக்கப்படுவர். எனவே மாணவர்களின் பாதிப்பை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
நியாயமான சம்பள உயர்வுக்கு தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த செயற்பாடு

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றினைந்து சிந்தித்து செயற்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கான நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் கெட்டபுலா தோட்டத்தில் இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் தெரிவித்தார் கூட்டு ஒப்பந்தத்தை சாடுவதனாலோ விபரிதமான அறிக்கைகளை விடுவதனாலோ மரண சாசனம் என கொச்சைப் படுத்தி கூறுவதாலோ மலையக மக்களுக்கு எந்த விமோசனமும் கிட்டப் போவதில்லை. மாறாக கூட்டு ஒப்பந்தத்தின் கூட்டாளிகளை தம்வசப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுடைய அபிலாஷைகளையும் தேவைகளையும் கோரிக்கைகளையும் அதற்கான சான்றிதழ்களையும் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி ஆக்கபூர்வமான பங்களிப்பை அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து செயற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தோட்ட முதலாளிகளும் அரசும் ஏற்றுக் கொள்ள அழுத்தம் கொடுப்பதாக அமையும் என்றார். இன்று அவசியம் தேவைப்படுவதெல்லாம் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரே குரலில் ஒரே அழுத்தத்தில் உரிய கோரிக்கைகளை முன்வைப்பதே ஆகும். இதற்கு தொழிற்சங்க தலைவர்களின் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையுமே அவசியம்.

Monday, April 27, 2009

மலையக தோட்டங்கள் மீண்டும் துண்டாடப்படுமா

கடந்த வருட இறுதியில் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கை தேயிலைக் கொள்வனவில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக இலங்கையின் தேயிலை விற்பனை குறைவடைந்ததுடன் தேயிலையின் விலையும் வீழ்ச்சியுற்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் பெருமளவு கொள்வனவு செய்யும் தென் மாகாணத் தாழ்நிலத் தேயிலை விற்பனை பாரியளவில் வீழ்ச்சியுற்றதுடன் பல சிறு தோட்டத் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சிறு உற்பத்தியாளர் தம் தேயிலைக் கொழுந்தினை விற்பனை செய்ய முடியாமல் போய்விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பல்லாயிரம் தொன் தேயிலை விற்பனை செய்யப்படாமல் முடக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தலையீடு செய்து, தேயி லைச் சபையினூடாக விற்பனை செய்யப்படாத தேயிலையை கொள்வனவு செய்ததுடன் தேயிலை உரத்தின் விலையையும் குறைத்து, சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலைக்கு உரம் வழங்கி தேயிலை உற்பத்தியை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இப்பாதிப்பு பின்னர் பாரிய கம்பனிகளுக்கும் விரிவடைலாயிற்று.
இப்பின்புலத்தில் அரசாங்கம் தேயிலை உற்பத்தித்துறையினை சீர்செய்யும் வகையில் குறிப்பாக பெருந்தோட்டங்களை பரிசீலிப்பதற்காக அமைச்சரவை துணைக் குழுவொன்றினை நியமித்தது. அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட இக்குழுவில் ஏனைய அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜீவன் குமாரதுங்க மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இவ் அமைச்சரவை குழு இம்மாத முற்பகுதியில் தமது பரிசீலனை அறிக்கையை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சமர்ப்பித்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதந்துரைப்புகள் அண்மையில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டது. இவ் விதந்துரைப்புகளில் ஒன்று மலையக தோட்டமக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. டியூ குணசேகரவின் தலைமையிலான அமைச்சரவை குழு பெருந்தோட்டங்களில் காணப்படும் உற்பத்தி செய்யப்படாத காணிகளை சிறு தோட்ட உரிமை யாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என விதந்துரைத்துள்ளது. மேலும் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ், விவசாய அமைச்சராக இருந்த கொப்பேகடுவவினால் முன்வைக்கப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் குறிக்கோள்கள் முழுமையாக எய்தப்படவில்லை எனவும் அதனால் அதனை முன் னெடுப்பது அவசியம் எனவும் வலியுறுத் தியுள்ளது.
""Unproductive lands to be distributed among small holdeers. The bone-fode objectives of late lands and AGriculture Minister Hector Kobbekaduwa in the 1970-77 Srimao Bandaranayade regime, when the lands Reforms Act was introduced have not been met (Daily Mirror 20th April 2009) அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் இவ்விதந்துரைப்பானது மீண்டும் மலையகத் தோட்ட மக்கள் 19721975 இல் சந்தித்த நிலையினை சந்திக்க நிர்ப்பந்திக்கும் என்பதுடன் மீண்டும் தோட்டங்கள் துண்டாடப்பட்டு, அம்மக்களது பாதுகாப்பு நிரந்தர கேள்விக்குறியாக மாறுவதற்கு வித்திடும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது..
ஹெக்டர் கொப்பேகடுவவினால் 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் பிரதான குறிக்கோள் யாதெனில், நிலமற்ற சிங்கள மக்களுக்கு மலையக தோட்டக் காணிகளை பகிர்ந்தளிப்பதாகும். 1971 ஆம் ஆண்டு நடந்த ஏப்ரல் கிளர்ச்சி பற்றி ஆராய்ந்த அலஸ் தலைமையிலான ஆணைக்குழு, ஏப்ரல் கிளர்ச்சிக்கு பிரதான காரணம் சிங்கள இளைஞர் மத்தியில் காணப்படும் வேலையின்மையாகும். எனவே இப்பிரச்சினைக்குப் பரிகாரம் தேடும் வகையில் சிங்கள கிராம மக்கள் சுய உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதற்கு காணி கள் வழங்கப்பட வேண்டும் என விதந்து ரைத் தது. இதுவே 1972ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு அடித்தளமாக்கப்பட்டது..
இச்சட்டத்திற்கமைய தனிநபர் கொண்டிருக்கக்கூடிய காணியின் அளவு 50 ஏக்கராக நி;ணயிக்கப்பட்டது. இதற்கமைய முதலாவதாக உள்நாட்டவர்களின் தோட்டங்கள் (ரூபா கம்பனி) அரசுடைமையாக்கப்பட்டதுடன் அக்காணிகள் காணியற்ற சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை பகுதிகளில் காணப்பட்ட தனியார் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் வெளியகற்றப்பட்டனர். குறிப்பாக கண்டி நகரில் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர் வீதியோரங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அவர்கள் வவுனியா நோக்கிச் சென்றனர். நட்சா என்ற பெயரில் மாற்றுப் பயிர்ச் செய்கையும் சிங்கள குடியேற்றமும் மேற்கொள்ளப்பட்டது. சில தோட்டங்கள் கூட்டுறவு என்ற பெயரில் (உசவசம) துண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975ல் ஸ்டேரிலிங் கம்பனி தோட்டங்கள் (வெளியாருக்கு சொந்தமான பாரிய தோட்டங்கள்) அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் ஜனவசம எனும் அரச கம்பனிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு நாளடைவில் இப்பெருந்தோட்டங்களின் ஒருசில டிவிசன்கள் மூடப்பட்டு பெரும்பான்மையோருக்கு சிறு உற்பத்தி காணிகளாக வழங்கப்பட்டன. அத்தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு இக்காணிகள் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறு உற்பத்தியாளர்களிடம் பணிபுரியும் கூலிகளாக வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது அவர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர். இதுவே அமைச்சர் டியூ குணசேகர பெருமிதத்துடன் கூறியுள்ள ஹெக்டர் கொப்பேகடுவவின் நிலச்சீர்திருத்த சட்டத்தின் சிறப்பு குறிக்கோள். திருமதி. சிறிமாவின் முக்கூட்டணி அரசாங்கம் 1977இல் வீழ்ச்சியுற்றதுடன் ஆட்சிபீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்காலிகமாக இச்செயற்பாட்டை நிறுத்தியது..
அதுவும் மலையகத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட எதிர்ப்பின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டது. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கங்களின் அழுத்தத்திற்கமைய அத்திட்டத்தை கைவிட்ட போதிலும் 1989 ஆம் ஆண்டு மீண்டும் மறைந்த காமினி திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இதனை அமுல்படுத்த முனைந்தது. அச்சமயம் இக்கட்டுரையாளர் இவ்வாறான கட்டுரையொன்றை எழுதியதன் மூலம் அப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததுடன் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் அறிவுஜீவிகளும் அத்திட்டத்திற்கு ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். காமினியின் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகள் குறிப்பாக மலையக நகரங்களுக்கு அண்மைய தோட்டக் காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகத்தின் ஒருமித்த அழுத்தம் காரணமாக அன்றைய பிரேமதாசவின் அரசாங்கம் இதனைக் கைவிட்டது. கைவிடப்பட்ட இத்திட்டங்களையே அமைச்சர் டியூ குணசேகர அமுல் படுத்தும்படி விதந்துரைத்துள்ளார்..
இவ்வரலாற்று பின்புலத்துடன் நோக்கும் போது மீண்டும் மலையகத்தை துண்டாடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விடயத்தில் மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டியூ குணசேகரவின் இவ்விதந்துரைப்பிற்கு தோட்ட முகாமையாளர் சங்க செயலாளர் நாயகம் மலின் குணதிலக்க விடுத்த மறுப்பு அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது பெருந்தோட்டங்கள் சிறு உடைமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமாயின் 9,41,341 தோட்ட வாழ் மக்களின் சமூக, பொருளாதார விடயத்தில் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை இது ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்..
மலின் குணதிலக்க கூறிய சமூக, பொருளாதார பிரச்சினையுடன் அவர்களது பாதுகாப்பும் இவ்விடயத்தில் உள்ளடங்கியுள்ளது. கடந்த பல வருடங்களாக இரத்தினபுரி, மதுகம, களுத்துர, தெனியாய போன்ற பகுதிகளில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 1972 ஆம் ஆண்டிற்கு முன்னர்,சிங்களவர் தோட்டத்தினுள் புகுந்து தமிழ் தொழிலாளர்களைத் தாக்கியதில்லை. எனவே மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் இம்முயற்சியினை ஒருமித்து எதிர்க்க வேண்டும். அரசாங்கம் பெருந்தோட்டங்களில் காணப்படும் நட்டத்தை சுட்டிக்காட்டி சிறு உடைமையாளர்களுக்கு கொடுத்தாக வேண்டுமெனக் கூறினால் அதனை தோட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனக் கோர வேண்டும் அல்லது நீண்ட கால குத்தகைக்கு அவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமெனக் கோர வேண்டும். அத்துடன் அக்காணிகளை பராமரிக்க அவர்களுக்கு மானியம் வழங்கும்படி கோர வேண்டும். .
மிக அண்மையில் மாத்தளைப் பகுதியின் விளைச்சல் குன்றிய காணித்துண்டுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சார்பாக பேராசிரியர் டியூடர் டி சில்வா தலைமையிலான குழு ஆய்வொன்றினை மேற்கொண்டது. இவ்வாய்வின் மூலம் பின்வரும் விடயம் கண்டறியப்பட்டது. அதாவது, வழங்கப்பட்ட பசளையற்ற காணித்துண்டுகளை வளம்பெறச் செய்ய எவ்வித மானியங்களையும் தோட்ட முகாமைத்துவம் வழங்கவில்லை . .
மாறாக கொழுந்தை மட்டுமே பெற்றுக்கொண்டன. இதனால் பல தோட்டத் தொழிலாளர்கள் அதனை மீண்டும் தோட்ட முகாமைத்துவத்திடமே வழங்கியுள்ளனர். மறுபுறம் தோட்ட முகாமைத்துவம் வழங்கிய காணித்துண்டுகளை தோட்டத் தொழிலாளர்கள் மறுத்த வேளையில் அதனை கிராம சிங்களவர்களுக்கு வழங்கப் போவதாக பயமுறுத்தி வழங்கியுள்ளனர். எனவே மலையகத் தொழிற்சங்கங்கள் இவ்விட யத்தில் சிரத்தைக்காட்ட வேண்டும். இத்திட்டத்தை அமுல்படுத்த இடமளித்தால் மலையகத்தின் நுவரெலியாப் பகுதியில் ஒரு சில தோட்டங்களைத் தவிர ஏனைய தோட்டங்கள் சிறு உடை மையாக்கப்படும். இதன் மூலம் மலையக மக்களது செறிவு அரிதாக்கப்படுவதுடன் அவர்களது அரசியல் பேரம் பேசும் சக்தி குறைக்கப்படும் அபாயம் ஏற்படலாம். ஆகையால் இப்போதே தமது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும்.
நன்றி- வீரகேசரி

Sunday, April 26, 2009

மலையக மக்களின் உணர்வுப் பிரவாகமான மலையக நாட்டார் பாடல்கள் ஒலிப்பேழைகளாக வேண்டும்

இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும்.
மலையக மக்கள் என்ற பெயரால் இன்று அழைக்கப்படும் இந்தியத் தமிழர் குடியேற்றங்கள் 1828ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டன. மலையக பகுதிகளை சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல்-தென் மாகாணங்கள், வடகிழக்கு பகுதியான விவசாய பிரதேசங்கள் கொழும்பில் வாழ்பவர்களையும் கூட மலையகத் தமிழர் என்ற தொடர்கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது. கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள். பிரித்தானிய பேரரசால் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் கடந்து இலங்கை வந்து மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் யாவரும் தென்னிந்திய விவசாயிகளாவர். இவர்கள் தமது இன, மத, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தை பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே. இவர்கள் ஏழைகளாகவும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை. அந்த வகையில் மலையக தமிழரிடையேயும் நாட்டுப் பாடல்கள் அதிகமாகவே வாய்மொழி வழக்கில் காணப்பட்டு வந்தன.
கல்வியறிவில்லாத எளிய பாமர மக்களாக காணப்பட்ட இவர்கள் தங்களுடைய இனிமையான பேச்சுவகையிலும் எல்லோரும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் தங்களது இன்பதுன்பங்களை பாடல் வடிவில் ஆக்குகின்றனர். இவற்றையே நாட்டுப்புறப் பாடல் என்கிறோம்.
இப் பாடல்கள் மேடையேறி பாடுவதற்கோ, ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ பாடப் பெற்றவை அல்ல. அந்நேரத்தில் பாடுவோரின் உணர்ச்சிகள் அடங்கிய இன்பதுன்பங்களை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் சொத்தாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வரும் இந்நாட்டார் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறை கேள்வி மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் அறிந்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளன. தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடிவந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலே வாய்மொழிப் பாடல்கள் வீறார்ந்த நிலையில் காணப்படும் என்பார் க. கைலாசபதி.
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இப்பாடல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத துன்பம், துயரம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், ஆடி மகிழும் ஆனந்தப் பூரிப்பு, மனக்குமைச்சல் அடங்கிய இதய ஒலிகளாக மனித மனத்தின் நித்திய உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முறையில் அமைந்துள்ளன. இப்பாடல்களில்,
‘ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நான் மறந்தேன்’

போன்ற நெஞ்சை நெகிழும் வரிகள் பல காணப்படுகின்றன. இப்பாடல்கள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.

எனினும் எத்தனை பேருக்கு இந்நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பெருந்தோட்ட மக்களிடையே எத்தனை பேருக்கு வாசிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இப்பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளிவர வேண்டும் என்பதே எமது அவாவாகும்.
ஏனெனில் வாசிக்க முடியாதவர்களும் இப்பாடலை கேட்பதன் மூலம் விளங்கி இப்பாடல்கள் மீண்டும் மக்கள் வாய்களில் முணுமுணுக்க வேண்டும். மலையகத்தில் இருந்து உதயமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் இலங்கையில் உள்ளனர். இவர்கள் இம்முயற்சியில் இறங்கி வெற்றிபெற வேண்டும். மலையக இலக்கியங்களின் பாதுகாப்பும் அதன் அவசியமும் உணர்ந்தவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வே. முரளிதரன் (நோர்வூட்)

Saturday, April 25, 2009

இம் மேதினத்திலாவது மலையகத் தியாகிகளை நினைவு கூருவோம்!

இந்நாட்டின் வரலாற்றில் 1866 ஆம் ஆண்டு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கினார் ஜேம்ஸ் டெய்லர் என்ற ஆங்கிலேயர் கண்டி மாவட்டத்தில் ஹேவாஹெட்ட லூல் கந்துர தோட்டத்தில் முதன் முதலாக தனது காணியின் பத்து ஏக்கரில் தேயிலை பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார்.
இப் பயிர்ச் செய்கையை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதற்காக இந்தியாவின் அசாமிலிருந்து தேயிலை விதைகளை தருவித்து பயிரிட்டார். இதில் பெரிய வெற்றியையும் கண்டு பெரியதோர் மாற்றத்தையும் கொண்டு வந்தார். ஜேம்ஸ் டெய்லரின் லூல் கந்துர பங்களாவிலேயே சிறிய தொழிற்சாலையையும் உருவாக்கினார். இந்தத் தொழிற்சாலையில் தனது காணியிலிருந்து பெறப்படும் தேயிலைக் கொழுந்தை உலர்த்தி தூளாக்கி லண்டனுக்கு அனுப்பினார். இவரின் தேயிலைத் தூளுக்கு லண்டன் மாநகர வர்த்தக மையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சிலோன் தேயிலைக்கு பெரும் வரவேற்பும், ஆதாயமும் கிடைப்பதை பலர் தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக பிரித்தானியர், ஸ்கொட்டிசார் ஐரிஸ்காரர்கள், வெல்ஷ்காரர்கள் உட்பட பெருந் தொகையான ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வரத் தொடங்கினர். இவ்வாறு வந்த இவர்கள் அன்றைய கண்டி, நுவரெலியா பிதேசங்களை பார்வையிட்டனர். பெருங்காடுகளையும், கற்பாறைகளையும் கொண்ட இப்பிரதேசத்தின் காணியில் ஒரு ஏக்கர் ஒரு பவுணுக்கு வெள்ளைக்காரர்களின் ஆட்சி வழங்கியது. இந்த விலைக்கு ஒவ்வொரு வெளிநாட்டு வெள்ளைக்கார கம்பெனிகளும் பல ஏக்கர்களை விலைக்கு வாங்கின. கமம்பெனிகாரர்களுடன், போட்டி போட்டுக்கொண்டு தனியாரும் காணிகளை கொள்முதல் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டினர்.
வெள்ளைக்காரர்கள் காடு நிறைந்த காணிகளை செப்பனிட முதன் முதலில் சிங்களத் தொழிலாளர்களை பயன்படுத்தினர். பெரும் காடுகளில் அட்டைகள், விஷபூச்சிகள், பாம்புகள், மிருகங்கள், தொல்லைகளாலும் கடுங்குளிரினாலும் பெரிதாகப் பாதிக்கப்பட்ட இவர்கள் வெள்ளைக்காரர்களிடம் கூலிகளாக வேலை செய்ய மறுத்தனர். அவர்களுடன் முரண்பட்டனர். முக்கியமாக சிங்களவர்களுக்கு ஆங்கிலமும், ஆங்கிலேயர்களுக்கு சிங்களமும் தெரியாதமையினால் மொழிப்பிரச்சினையும் ஏற்பட்டது.
ஏற்கனவே தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்து வந்த பலர் தேயிலைத் தோட்டங்களில் இணைந்தனர். அப்போது கோப்பி மரங்களில் நோய் பரவவே கோப்பித் தொழிலில் மந்தநிலை நிலவியது. இலங்கையின் தேசாதிபதியாகவிருந்த சேர் ஹெர்க்குயூலெஸ் ஜோர்ஜ் றோபர்ட் ரொபின்ச (1865- 1873) னின் உதவியோடு தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை வரவழைக்க வெள்ளைக்கார துரைமார்கள் திட்டம் தீட்டினர். இவர்களின் முயற்சிக்கு எற்கனவே இங்கு தென்னிந்தியா விலிருந்து வருகை தந்தோரும் உடந்தையாகினர். துரைமார்களின் திட்டத்துக்கு தேசாதிபதி றோபர்ட் ரொபின்சன் பெரிதும் உதவினார்.
மிகவும் தந்திரவழி வகைகளை கையாண்டு தமிழ் நாட்டிலிருந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்களை பாம்பன் தனுஷ்கோடியினூடே கடல் மார்க்கமாக இலங்கையின் வடபகுதி தலைமன்னாருக்கு அழைத்து வந்து மலையகத்தில் குடியேற்றம் செய்தனர். இவர்கள் கடுமையாக உழைத்தனர். காட்டில் கொடிய மிருகங்களுடன் போராடி அட்டைக் கடிக்கும், கொசுக்கடிக்கும் பயம் கொள்ளாது காடுகளை அழித்து செப்பனிட்டார்கள் எமது முதாதையர்கள். வெள்ளைக்காரர்களால் எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டிருக்காவிட்டால் இன்று மலையகம் எனப்படும் பிரதேசம் காடாகவும் கற்களாலுமே மூடப்பட்டிருக்கும். எமது மூதாதையர்களே காட்டையும், கற்களையும் வெட்டி ஒதுக்கி வீதிகளையும், பாதைகளையும் அமைத்து பாறை நிலத்தில் தேயிலைச் செடிகளை நாட்டி, தேயிலைச் செடிகளால் மலைகளை மூடி அழகு பார்த்தனர்.
180 வருட வரலாற்றைக் கொண்ட இம் மக்களின் துயரங்கள், அவலங்கள், இன்றும் தீர்ந்ததாக இல்லை. இம் மக்களை மலையகத்து அரசியல் தொழிற் சங்கங்கள் இன்றும் வெள்ளைக்கார துரைமார்களை விட மோசமாக ஏமாற்றி வருகிறது. இன்று மலையகத் தோட்டத் தொழிலாளிகளின் வழி நடத்துபவர்களாக அறுபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் திணைக்களத்தில் பதிவாகியுள்ளன.
1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.
எதிர்காலத்தில் மலையகத் தலைவர்கள் அம் மக்களாலேயே ஓரங்கட்டப்படுவர் என்பது உண்மையாகும். அண்மையில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்தியம்புகின்றன.
இன்று மலையக அரசியல் தொழிற் சங்கங்களின் செயற்பாடு அம் மக்களின் எழுச்சிக்கு உந்து சக்தியாக அமைய வேண்டும். அந்த நிலைமை இன்று மலையக அரசியல் தொழிற் சங்க செயற்பாடுகளில் இல்லை. இது தொடருமானால் எதிர்வரும் பொதுத் தேர்தல் பலருக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரக் கூடியதாக அமையலாம்.
அரசியல் அடக்குமுறைகள், தொழிற்சங்க தலைவர்களின் கெடுபிடிகள், அந்நியப்படுத்தல், எனப் பல அடக்கு முறைகள் இன்றும் இவர்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதலாம் திகதி மேதினம் கொண்டாடப்படுகிறது. இது வரை காலமும் மலையகத்தில் பல போராட்டங்களில் ஈடுபட்டு உயிர் நீத்த 36 தியாகிகளுக்கு எவ்வித மரியாதையையும் மேதினத்தில் வழங்காமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மே தினத்தன்று மாபெரும் ஊர்வலமும், வெறுமனே கோஷமும், தீர்மானங்களும்
நிறைவேற்றப்படுவதால் எவ்வித பயனும் மக்களை சென்றடையப் போவதில்லை. மலையக மக்களின் உரிமைக்காகப் போராடிய 36 தியாகிகளதும் வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு அது முக்கியமாகும். மே தினத்தன்று 36 தியாகிகளும் நினைவு கூரப்பட வேண்டும். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939, வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942 வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19 வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950, எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953, ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953, வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957, வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957, நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957, ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958, ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958, பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958, கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958, கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959, முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959, ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959, தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959, சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960, முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960, செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961, விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961, சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961, அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969, ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969, இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970, அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970, கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970, லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 1977. பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.
14-05-2005 இல் தியாகி சிவனு லெட்சுமணின் நினைவு தினத்தையொட்டி தலவாக்கலை மேல் கொத்மலைத் திட்டத்தை கைவிடுமாறு கோரி பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இறுதியில் அதே மின்சார அபிவிருத்தித் திட்டத்தில் உயர் பதவியேற்று வாகனமும் பெற்று சுக போகங்களை அனுபவித்து வருகின்றார்.
கே.பி.பி. புஷ்பராஜா
நன்றி- தினகரன்

Thursday, April 23, 2009

தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்தரங்கு

தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கும் சம்பள உயர்வு தொடர்பாக தெளிவுபடுத்தும் பொது கருத்தரங்கு ஒன்றை எதிர்வரும் 26-04-2009 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பதுளையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஐக்கிய தோட்ட தொழில் சங்கக் கூட்டமைப்பின் உப தலைவர் முத்துலிங்கம் தெரிவித்துள்ளார்
தோட்டத் தொழிலாளர்களின் மிக முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு சம்பந்தமாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பு போன்றவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. அதேவேளை இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளாத தொழிற் சங்கங்கள் ஊடகங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை தெரிவித்த வண்ணமுள்ளன. தற்போது தோட்டங்களில் பல்வேறு தொழிற் சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சில காலங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பல சங்கங்களும் மறைந்துவிட்டன. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தொழிற் சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் ஏனைய பொதுப் பிரச்சினைகள் சம்பந்தமான கோரிக்கைகளை ஒன்றிணைந்து முன்வைத்தால் நிச்சயமாக வெற்றி காணமுடியும். இதையே பெரும்பாலான தொழிலாளர்கள் விரும்புகின்றனர். இதை விடுத்து பல்வேறு கோஷங்களை கடந்த காலங்களைப்போல முன்வைத்துக் கொண்டிருந்தால் அது தோட்டக் கம்பனிகளுக்கு வசதியாக அமைந்துவிடுவதுடன் அப்பாவித் தொழிலாளர்களையும் பாதித்துவிடும். ஆகவே இவற்றைத் தெளிவுபடுத்தும் இக் கருத்தரங்கில் தொழிற் சங்கத் தலைவர்கள், தோட்டத் தலைவர்கள், தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்புத் தலைவர்கள், சட்டத்தரணிகள், சர்வகலாசாலை விரிவுரையாளர்கள் போன்றோர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

Wednesday, April 22, 2009

தொழிலற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி

மத்திய மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை அபிவிருத்தி செய்வதற்கென தொழிலற்ற இளைஞர், யுவதிகள் ஆயிரம் பேருக்கு தொழிற்பயிற்சி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்தியமாகாண தமிழ் கல்வியமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் மலையகத்திலுள்ள 68 பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப கல்வி பிரிவுகள் இயங்குகின்றன. அவற்றில் கல்வி போதிப்பதற்கென 10 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர். 18 மலையக விஞ்ஞான ஆசிரியர்கள் இந்தியாவில் விஞ்ஞான பட்டதாரிகளாக திரும்பியுள்ளனர் என்றார்.

கைத்தறி நெசவு உற்பத்தியையும், சந்தை வாய்ப்பையும் ஏற்றுமதி துறையில் பல்வேறு ஊக்குவிப்புக்களையும் எதிர்பார்ப்பதோடு விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக பாடசாலை மட்டங்களிலும் பிதேச செயலாளர் மட்டத்திலும் திட்டமிடல் தொடர்பாக ஆவன செய்யப்படும் என்றார்.

தோட்ட பிரதேச பிள்ளைகளின் கல்வி நிலைமையை மேம்படுத்துவதற்காக நகர்புற காடசாலை மாணவர்கள் பெறும் சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து சமத்துவ கல்வி சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

Tuesday, April 21, 2009

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும் - பிரிடோ நிறுவனம்

உலக கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மலையக மாணவர்களுக்கும் பொறுப்பு வாய்ந்த தரப்புகள் அறியத்தர வேண்டுமென பிரிடோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிடுகையில்

உலகம் முழுவதும் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் உலகக் கல்விச் செயற்பாட்டு வாரம் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும், அதற்காக உலகத் தலைவர்கள் கொள்கைகளை வகுக்க வேண்டும், நிதி ஒதுக்க வேண்டும், தத்தமது நாடுகளில் அனைவருக்கும் இலவசமானதும் தரமானதுமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக “உலகக்கல்வி பிரசார இயக்கம்” என்ற அமைப்பு வருடாவருடம் ஏப்ரல் மாதத்தில் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை கொண்டாடுவதுடன் பல மில்லியன் மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு கல்வி பெறமுடியாதிருக்கும் அனைவருக்கும் அதனை பெற்றுத்தர வேண்டும் என்ற பிரசாரத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

உலகில் 774 மில்லியன் வளர்ந்தவர்கள் எழுத வாசிக்க முடியாதவர்கள். 75 மில்லியன் பிள்ளைகளுக்கு ஒருபோதும் பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எழுத வாசிக்கத் தெரியாததால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையில் சிக்குண்டு வாழ்க்கையைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதுடன் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறானவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.

இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கான கூட்டமைப்பு இந்த செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதுடன் பிரிடோ நிறுவனம் பெருந்தோட்டப் பகுதிகளில் வருடாவருடம் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தை முன்னெடுப்பதில் அக்கறை காட்டி வருகிறது. இம்முறை உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்திற்கான தொனிப்பொருள் “வளர்ந்தோர் இளைஞருக்கான எழுத்தறிவும் வாழ்நாள் கல்வியும்” என்பதாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் தொகை குறிப்பிட்ட அளவில் உள்ளது. மாணவரிடையே இடைவிலகல் அதிகரித்து செல்கிறது. இந்த பின்னணியில் இது விடயமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை பிரிடோ நிறுவனம் வலியுறுத்துகிறது.

இதேவேளையில், பிரிடோ நிறுவனம் ஏப்ரல் 27 ஆம் திகதியை மலையக ஆசிரியர் அர்ப்பணிப்புத் தினமாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்தத் தினத்தில் ஆசிரியர்கள் மலையக சிறுவர்களின் கல்விக்கான உரிமையை பேணுவதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுடன் உலகக்கல்வி செயற்பாட்டு வாரத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு அறியத்தர வேண்டும் எனவும் இந்நிறுவனம் கோருகிறது.
ஊவா மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் தேர்தலுக்கு முன்பாக நிரப்பப்படுமா? - கல்விசார் சமூகம் கேள்வி

நடைபெறப் போகும் ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன்பு இம் மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமா என கல்விசார் சமூகம் கேள்வியெழுப்பியுள்ளது.

அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களினது நியமனமும் ஒருவருட காலமாக இழுபறி நிலையிலேயே உள்ளது. எனவே இவ்விடயத்தில் காலந்தாழ்த்தாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பரீட்சை முடிவுகளை கல்வித்திணைக்களம் வழங்கியதுடன், உடனடியாகவே தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் நியமனம் வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஒரு வருடத்திற்கு முன்பதாகவே தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்காக நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று முடிந்தது. மத்திய அரசு அறிவித்தது போல் மாகாண பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்ட போதும் தேசிய பாடசாலைகளுக்கான நியமனம் வழங்கப்படவில்லை.


இது தொடர்பாக கடந்த மாதம் 27 ஆம் திகதி ஊவா மாகாண கல்விக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் நியமனம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அப்போது தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடம் தொடர்பாக பலரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இது விடயத்தில் கல்வியமைச்சு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஊவா மாகாணத்தில் 33 சிங்கள மொழி மூல தேசிய பாடசாலைகளும் 3 தமிழ்மொழி தேசிய பாடசாலைகளும் உள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டு 3179 ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு அவை வழங்கப்பட்டன. இதில் 3179 நியமனங்களும் முழுமையாக வழங்கப்படவில்லை.

மத்திய மாகாணம்,சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் என்பவற்றில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்படாமல் போனதுக்கு பல காரணிகள் உள்ளன. ஊவா மாகாணத்தில் தெரிவான 521 நியமனங்களில் 494 தான் வழங்கப்பட்டது. 27 வெற்றிடங்கள் இன்னும் உள்ளது. இது தொடர்பாக மீண்டும் நேர்முகப்பரீட்சை நடந்தாலும் சில காரணத்தால் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஊவா மாகாண சபை மூலம் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையே நியமனங்களுக்கான தாமதமென தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாக தேசிய பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரிய நியமனமும் 27 ஆசிரியர்களது வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நன்றி- தினக்குரல்
எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்கங்களால் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

குறுகிய அரசியல் நோக்கங்களை வைத்துக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கை விடுக்கும் தொழிற்சங்க வாதிகளால் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். இராமநாதன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் சிலர் கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக எதுவித ஆதாரமுமின்றி விமர்;சித்து வருகிறார்கள். இவர்கள் ஒப்பந்தத்தை விமர்சித்து பேசிவருவது விசித்திரமாக இருக்கிறது. தொழிலாளர் நலன்களைவிட தங்கள் மத்தியில் உள்ள தனிப்பட்ட விரோத குரோதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
தனிப்பட்ட குரோதங்களையும் குறுகிய அரசியல் நோக்கங்களையும் தொழிலாளர்களது பிரச்சினையோடு கலந்து குழப்பியடிப்பது தொழிலாளர் நலன்களை எவ்விதத்திலும் பாதுகாக்காது.
தொழிலாளர்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் பேசப்பட்டு இறுதியாக ஏற்படும் முடிவினை எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ளும் ஆவணமே ஒப்பந்தம் எனப்படுவதாகும். இணக்கப்பாட்டுக்கு வரும் விடயத்தை எழுத்து வடிவில் ஒப்பந்தமாக செய்து கொள்வதானது தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கேயாகும்.
தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், பாதிப்படைபவர்கள் தொழிலாளர்களே. இன்று தொழிலாளர்களின் நன்மை கருதி பல தொழிற் சட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் ஊழியர் சேமலாப நிதி சட்டம், சேவைக்கால பணம் வழங்கும் சட்டங்கள் முக்கியமானவைகளாகும். ஆனால் இந்த சட்டங்களையும் தொழில் கொள்வோர் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய மில்லியன் கணக்கான ரூபாய்களை தொழில் கொள்வோர் வழங்காமல் மோசடி செய்துவருகிறார்கள். தொழிற் சங்கங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பயனாகவே இதனைத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியுமாயுள்ளது. இவ்வாரான காலகட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் ஒன்று இல்லாதிருந்தால் பொருளாதார பிரச்சினைகளைக் காரணம் காட்டி முதலாளிகள் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தையும்கூட குறைத்துக் கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஒருவருக்கொருவர் மத்தியில் உள்ள தனிப்பட்ட குரோதங்களையும் நோக்காக வைத்துக் கொண்டு கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர் துரோக ஒப்பந்தம் என்றும் இது ஒரு அடிமை சாசனம் என்றும் வசைபாடிவருகின்றனர். ஆனால் இதில் தொழிலாளர்கள் ஒன்றை நன்கு புரிந்துவைத்துள்ளனர்.யார் எதனைச் சொன்னாலும் இதுவரை காலமும் தொழிலாளர்கள் அதிகரித்த சம்பள உயர்வினைப் பெற்று வருவது தொழிலாளர் துரோக ஒப்பந்தம். இன்னொரு விடயத்தையும் தொழிலாளர்கள் மறந்து விடவில்லை. அதாவது கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக அறிக்கைகளைவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வரும் இவர்களால் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு ஒரு சதத்தையேனும் சம்பள உயர்வாகப்பெற்றுக் கொடுக்கமுடியவில்லை என்பதாகும்.

Friday, April 17, 2009

மலையக அமைப்புகளின் ஆலோசனையுடன் புதிய ஒப்பந்தத்துக்கு கட்சிகள் வழிவிட வேண்டும்

கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மலையகக்கட்சிகள் அதிலிருந்து விலகி மக்களின் தேவைக்கேற்றவாறு ஒப்பந்தத்தை மாற்றி எழுதவேண்டும் அல்லது மக்களின் நலனில் அக்கறையுள்ள மலையக அமைப்புகளின் ஆலோசனைகளுடன் புதிய ஒப்பந்தத்தை எழுதுவதற்கு வழிவிட வேண்டும் என மலையக தொழிலாளர் முன்னணி தெரிவித்துள்ளது.

இக்கூட்டு ஒப்பந்தம் பற்றியோ இந்த ஒப்பந்தம் எவ்வாறு தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தடையாக உள்ளது என்பது பற்றியோ போதிய விளக்கமோ, தெளிவோ இல்லை நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்து தொழிலாளர்களது வாக்குகளைப் பெற்றார்கள். தற்போது சம்பள உயர்வு பற்றி வேறு கதைகளை கதைக்கிறார்கள். கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பம் இட வேண்டாம் என்று ஐ.தே.கட்சியிடம் இவர்கள் கூறமுடியாதா?

தொழிலாளர் தேசிய சங்கத்தை சேர்ந்தவர்களால்தான் மலையகம் மாறும் என்ற போக்கில் இன்னுமொரு மாயை உருவாக்கப்படுகின்றது. கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர்களால் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாதா அல்லது சம்பளத்தை கூட்டிக் கேட்க முடியாதா?

Thursday, April 16, 2009

மொனராகலை பகுதி தமிழ் தொழிலாளர்கள் மீது காடையர்கள் அட்டகாசம்

மொனராகல மாவட்டம் புத்தள, இக்கம்பிட்டிய பகுதிகளில் அப்பாவி சிங்கள மக்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்ற பெரும்பான்மையின காடையர்கள் தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக காடுகளுக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் வெள்ளச்சிட தோட்டம், போகாலயின் றப்பர் தோட்ட மக்களே. கிராமங்களிலிருந்து இளைஞர்கள் பலர் ஆயுதங்களுடன் சென்று தாக்கியுள்ளதாகவும், தோட்டங்களுக்குள் புகுந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதனால் 11 தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மொனராகலை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் - சுரேஷ் வடிவேல்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரட்சி மற்றும் வெள்ளநிவாரணம், தர்மசம்பளம், அங்கவீனர்களுக்கான நிவாரண உதவிகள், விதவைகளுக்கான மேம்பாட்டு உதவி ஆகியன இதுவரை காலமும் பெரும்பான்மையின மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இச் உதவிகள்;, நிவாரணங்களை பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையிலானவேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் பசறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பயன்தரும் மரக்கன்றுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்தார்.

Monday, April 13, 2009

தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை எதிர்வரும் 22 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டடைப்பு பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார் மேலும் இப் பேச்சுவார்த்தையில் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்ற உள்ளனர் என்றும இப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கூட்டொப்பந்தம் கைச்சாத்திடும் பட்சத்தில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் புதிய கூட்டொப்பந்தம் செல்லுபடியாகுமென்றும் என்றார் தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வக்கேற்ப தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்படவேண்டுமென்று மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 12, 2009

இந்திய அரசு பெருந்தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யும்- இந்திய தூதுவர்

இலங்கையில் பெருந்தோட்டத்துறை மக்களை நான் உடன் பிறப்புக்களாகவும் பெருந்தோட்டத்துறையை நான் முக்கியத்துவமுடையதாகவும் கருதுகிறேன். இந்திய அரசு தொடர்ந்து தோட்டத்துறை மக்களுக்கு உதவி செய்யக் காத்துக் கிடக்கிறது இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் இந்திய அரசு வழங்கிய 20 சிட்டி ரைட் பஸ் வண்டிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். இப் பஸ் போக்குவரத்து சேவை யாவும் மாணவ, மாணவியர் தமது கல்வி நடவடிக்கைகளை துரிதமாக நிறைவேற்றவும், இளைஞர், யுவதிகள் தமது கடமையை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து கொள்ள பேருதவியாக அமையும் என்றார். இந்த பஸ் வண்டிகளைத் தவிர எதிர்காலத்தில் மேலும் 30 பஸ் வண்டிகளை வழங்கி வைக்கவும் தொடர்ந்து இம் மக்களுக்கு உதவிகளை புரியவும் இந்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

Saturday, April 11, 2009

சம்பள உயர்வு குறித்து மக்களிடம் கருத்துகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்துகளை பெற்று வருவதாகத் தெரிவித்த இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் தோட்டத் தொழிலாளர் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறுபட்ட தொகைகளை குறிப்பிடுகின்றன. இந்நிலையில் என்ன அடிப்படையில் அச் சம்பள உயர்வை பெறுவது தொடர்பில் அவர்கள் குறிப்பிடவேண்டும். புதிய கூட்டு உடன்படிக்கை தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி கம்பனிப் பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர்.

சம்பள உயர்வை என்ன அடிப்படையில் கோரலாமென்பதை தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புகளும் தெரியப்படுத்தவேண்டுமெனவும் கோரியுள்ளார். முதலில் தற்போதைய சூழ்நிலையை தெரிந்து கொள்ள வேண்டும். தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வை எந்தளவு வழங்குமென்பதை சிந்திக்க வேண்டும். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அரசு என்ன செய்ய வேண்டுமென்பதையும் சிந்திக்க வேண்டும். அதாவது அரச ஊழியர்களுக்கு பொருட்களின் விலை உயரும் போது சம்பளங்களை அரசு உயர்த்துகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டுள்ளனர். எனவே, பொருட்களின் விலையை தீர்மானிக்கின்ற அரசு விலையுயர்வால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்(பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமாகும்)

Friday, April 10, 2009

மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்திய அரசு உதவி தொடரும் -இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா

இந்திய வம்சாவளி மலையக மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு தொடர்ந்தும் வழங்கும். ஏன இந்திய உதவித் தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். கண்டி விக்டோரியா மாபேரிதென்ன தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கணினி மைய ஆசிரியவள நிலையத்தில் கணனி தகவல் தொழில் நுட்பம் தொடர்பான இரண்டு மாத வதிவிட பயிற்சியினை முடித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கணனித் துறைக்கு முகம்கொடுக்கக் கூடியவாறு கல்வித்துறையில் கணனி தகவல் தொழில் நுட்பத்தினை வளர்க்கும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்
மலையக பஸ் சேவை இன்று ஆரம்பிக்கப்படும்

வரையறுக்கப்பட்ட அன்னை கோதை முயற்சியாண்மை கம்பனியின் ஊடாக மலையக மக்களுக்கான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் வைபவம் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் இடம்பெறுகிறது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோக் பிரசாத் அவர்களும் கலந்து கொள்கிறார். இ.தொ.கா வின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமை தாங்குகிறார்.
உரிமைகளை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே சிறந்த மாகாணம் உருவாக்க முடியும்

தமிழ் மக்களுக்கு உரிமைகளும் வாழ்வாதாரமும் பெற்றுக் கொடுப்பதன் மூலமே மத்திய மாகாணத்தை சிறந்த மகாணமாக உருவாக்க முடியும் என மத்திய மாகாண சபை ஆளுநரின் கொள்கை விளக்கவுரையின் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றழிய மத்திய மாகாணசபை உறுப்பினர் பிரகாஷ் கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் உரிமைகளை நன்மைகளை நுவரெலியா மாவட்ட தமிழர்கள் முழுமையாக பெற வேண்டுமானால் நுவரெலிய அம்பேகமுவ பிரதேச சபைகளுக்குப் பதிலாக மேலும் 10 பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும். நுவரெலியா மாவட்டமே அதிக வறுமையான மாவட்டம் என உலக வங்கி அறிக்கையில் வெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இம்மக்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வருமான சமநிலை பேணப்பட வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசங்களில் இரண்டு மொழி அமுலில் இல்லை. இதனால், மொழி உரிமை வழங்கப்பட வேண்டும். கல்வி வளர்ச்சி ஏற்பட தோட்டங்களில் ஆரம்ப கல்வியை ஏற்படுத்துவதுடன், நவீன வசதியுடனான வைத்தியசாலை வேண்டும். இந்த கொள்கை விளக்க உரையில் காணி பற்றிய விளக்கம் போதாது. காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு வேண்டும். நாமும் இதில் எங்கள் சமூக பங்கினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளை பாராட்டுவதுடன், சிறந்த மாகாண சபையாக இங்கு மொழி உரிமை சமத்துவம், சகோதரத்துவம் பேணப்பட்டு சமூக துரோகம் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
மக்களின் நல மேம்பாட்டை அபிவிருத்தி செய்ய யூ.எம்.டி.பி நிறுவனம் வருகை

பெருந்தோட்ட மக்களது நலமேம்பாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து யூ.எம்.டி.பி என்ற பெயரிலான நிறுவனம் இலங்கை வரவிருப்பதாக மத்திய மகாண தமிழ் கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந் நிறுவனம் 2010ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை இலங்கையில் தங்கியிருந்து தோட்டப்புற மக்களது நலமேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும். குறிப்பாக தோட்டப்புற மக்களது அடிப்படை வசதிகள், குடியிருப்பு அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தோட்ட சமூக அங்கவீனர்களின் நலன் செயற்பாடுகள்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு உள்ள பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைகளில் இச் சமூகத்தில் வாழும் அங்கவீனர்களின் நலனுக்கான செயற்பாடுகள் முற்றாக மறக்கப்பட்டுள்ளன என அமைச்சர் பெ. சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மலையக மக்களின் பிரச்சினைகள், தேவைகள் என்பது வெறுமனே சம்பள உயர்வோடும், அவர்களின் உட்கட்டமைப்பு பிரச்சினைகளோடும்; சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக மாத்திரமே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கின்றன.

இவை அனைத்தையும் விடவும் வெளிக்கொணரப்படாத ஆனால் முக்கியத்துவப்படுத்தக் கூடிய பிரச்சினையாக அங்கவீனர்களின் பிரச்சினை திகழ்கின்றது. அங்கவீனர்களுக்காக சமூக சேவைகள் திணைக்களங்களினால் வழங்கப்படும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை.
இவ்வாறானவர்கள் நாம் வாழும் வரை தமது குடும்பத்திற்கு சுமையானவர்களாக இருந்துவிடக் கூடாது. இதற்காக நாம் விசேட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.


இவர்களை அவர்களுக்குரிய துறைகளில் வளர்த்தெடுப்பதோடு அவ்வாறனவர்களுக்கு மனோ திடத்தினை வளர்க்கும் நிகழ்ச்சிகளை உருவாக்கி அவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற வேண்டும். தனது அமைச்சினூடாக ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட தோட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

மத்திய மாகாண சபையின் கீழுள்ள அமைச்சுக்கள் மூலமாக நுவரெலியா மாவட்டத்தின் தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளப்படாததால் தோட்டப்பகுதி மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் திகாம்பரம் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

குறிப்பாக மத்திய மகாண நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு உட்பட்ட நுவரெலியா மாவட்டத்தின் சில பாதைகள் நீண்டகாலமாக செப்பணிடப்படவில்லை.

போடைஸ் - மன்றாசி, பூண்டுலோயா – டன்சினன், டிக்கோயா – சலங்கந்தை, மெரேயா-டெஸ்போர்ட், லிந்துலை-ராணிவத்தை என்பவற்றுக்கான பாதை மிக மோசமான நிலையில் உள்ளது.

மேலும் அட்டன்-எபோட்ஸிலி, அட்டன்-மறே, அட்டன் - எல்ஜின், தலவாக்கலை-கிறேட்வெஸ்டன், தலவாக்கலை-ராணிவத்தை, அட்டன்-டெம்பல்ஸ்டோ, அட்டன்-மேபீல்ட் ஆகிய தோட்டப்புறங்களுக்கான இ.போ.ச பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை என்றார்.

Wednesday, April 8, 2009

தொழிலாளர்களின் பங்கு அட்டைகளை ஏமாற்றி பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள்
பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு கைமாறியதையடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறந்தள்ளி விடக்கூடாது என்பதற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பங்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இப் பங்கு அட்டைகளை பெற்றுக் கொண்டதன் மூலம் தொழிலார்களும், தோட்டக் கம்பனியினருடன் இணைந்து தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆனார்கள். இதன் மூலம் கம்பனிகளுக்கு வருடா வருடம் கிடைக்கும் இலாபப் பணத்தில் குறித்த சதவீதம் தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகங்களோ அல்லது கம்பனியினரோ தொழிலாளர்களிடத்தில் எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் நிலைக்கு பங்கு அட்டை முறைமை முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த பங்கு அட்டைகளை தொழிலாளர்களிடமிருந்து ஒரு பங்கு அட்டையை 1,500 – 2,000 ரூபாவுக்கு இடைப்பட்ட தொகைக்கு ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் பெற்றுக்கொள்வதாக தெரியவருகிறது. எதிர்காலத்தில் பங்கு அட்டைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்கள் பங்கு அட்டைகளை நிர்வாகங்களிடம் விற்பதால் வருடா வருடம் கிடைக்கும் இலாப பங்கு பணம் வழங்கப்பட மாட்டாது. தோட்ட நிர்வாகங்களின் எதேச்சதிகார நடவடிக்கைகள் குறித்து தொழிலாளர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சங்கங்கள் கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும்
வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டுமானால் முதலில் தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இன்றைய நிலையில் இது சாத்தியமற்றதாகும் ஆதலால் கூட்டு ஒப்பந்தத்தில் ஒரு சரத்தாக வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளத்தை அந்தந்த காலத்தில் உரிய வகையில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் செய்து கொள்ளப்பட வேண்டும்.
2006ம் ஆண்டுடன் முடிவடைந்த பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தை மாதிரியாக வைத்துக் கொண்டு இதுகாலம் வரை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
இந்த நிர்ணயம் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்துடள் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி தொழிற்சங்கங்கள் தீர்மானிக்க வேண்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தேயிலை விலை வீழ்;ந்துள்ளது எனக் கூறியும் வரட்சி காலங்களில் வேலையை குறைத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி அவலநிலையில் இருப்பதைப்பற்றி எந்த ஒரு நிர்வாகமும் பொருட்படுத்தவில்லை.
ஏப்ரல் மாதத்தைத் தொடர்ந்து இனிவரும் மாதங்களில் கொழுந்து அதிகரிக்கும் அதேநேரம் தொழிலாளர்களின் வேதனத்தை கூட்டு ஒப்பந்தத்தால் மாத்திரமே அதிகரிக்க முடியும்.
தொழிற் சங்கங்கள் பயனற்ற விவாதங்களில் ஈடுபடாமல் ஒருங்கிணைந்து சம்பள உயர்வுக்கு ஒரே முகமாக செயல்படுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடியும்.
அரசு நேரடியாக தோட்டங்களில் ஈடுபட முடியாமலேயே தோட்டங்களின் குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வரவு செலவுத திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது.
விலகி நின்று விமர்சிப்பவர்கள் இதை உணர்ந்து தொழிற்சங்க பலத்தை ஒருமுகப்படுத்தி தொழிலாளர்களுக்கு நன்மைபயக்கும் வகையில் செயல்பட முன்வர வேண்டும்
தொழிற்சங்கங்கள் சர்ச்சைகளில் ஈடுபடுவதை விட சம்பளத்தை எவ்வாறு அதிகரிக்கலாம் என உடனடியாக கலந்தாலோசித்து கூட்டு ஒப்பந்தத்தை வலுவாக்க வேண்டும் சர்ச்சைகளில் ஈடுபடுவதின் மூலம் பெருந்தோட்டக் கம்பனிகளே இலாபமடையும்.
எஸ். ஜோதிவேல்
ஐ.தொ.கா. நிர்வாகச் செயலாளர்.
தொழிலாளர்களுக்கு நன்மையளிப்பதாக கூறப்படும் கூட்டு ஒப்பந்தம் துரோகமானது.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் எனக் கூறுவது ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும் ம.ம.மு வலப்பனை பிரிவு பொறுப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிடுகையில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்ட சக்தியைச் சரியாக பயன்படுத்தி அவர்களின் தொழில் உரிமை, பாதுகாப்பு, வாழ்க்கை செலவின் உயர்விற்கேற்ற சம்பள உயர்வு மற்றும் அவர்களின் வாழ்வியல் ரீதியான தேவைகளுக்கு போதிய உத்தரவாதம் என்பவற்றைப் பெற்றுக்கொடுக்க தவறிய கூட்டு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் அதனை நியாயப்படுத்துவது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் செயலுக்கு ஒப்பாகும்.

இவ் ஒப்பந்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு வறுமையின் அகோரப் பிடியில் அகப்பட்டு "திணறுவதையும்' கம்பனி நிர்வாகங்களின் சர்வாதிகார செயல்பாடுகளினால் தொழிலாளர் உரிமை நசுக்கப்படுவதையும் நன்கு அறிந்துள்ள தலைமைகள் சில இவ்வொப்பந்தம் பல நன்மைகள் பெற்றுக்கொடுத்துள்ளன எனக் கூறுவது வேடிக்கையாகும். இது தொழிலாளர் மீது பலவந்தமாக புதிய ஒப்பந்தத்தை செய்ய முற்படும் செயலாகும்.

மீண்டும் ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்யும் முன்பு கடந்தகால அனுபவங்கள், யதார்த்தபூர்வமான நடைமுறை சிக்கல்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகும் பல்வேறு விடயங்களையும் சட்ட வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள், பொருளியல் நிபுணர்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாட வேண்டும்.

வாழ்வியல் ரீதியில் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு, தொழில் ரீதியிலும் உரிமைகளுக்கும் உத்தரவாதம் கிடைக்கும் வகையில் தொழிலாளர்கள் விமோசனம் பெற்று உரிமைகள், சலுகைகள், சுதந்திரம் போன்றவற்றை அனுபவிக்கும் வகையில் இவ் ஒப்பந்தம் செய்யப்பட சம்பந்தப்பட்ட தொழிற்சங்க தரப்புகள் முன்வருவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

சர்வதேச தொழிற்சங்கங்களின் மரபு ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் சர்வாதிகார முறையில் பலவந்தமாகவும் ஒரு நிர்ப்பந்தம் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக திணிக்கப்படும் கூட்டு ஒப்பந்தத்தை செய்து வருகிறது. அவ்வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர் என்று கூறுவது ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களுக்கு எதிரான துரோகச் செயலாகும்.

இக்கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் யாவும் பல்வேறு வகையில் தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை பல்வேறு துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், 95 சதவீதம் தொழிலாளர்கள் வெளிப்படையாக தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.
மேலும், கூட்டு ஒப்பந்தம் சரத்துக்கள் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் பலவற்றை தோட்ட நிர்வாகங்கள் அமுல்படுத்திய சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கப் போராட்டம் மூலம் அவற்றை எதிர்த்து வந்துள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இது கடந்தகால நிகழ்வுகளின் உண்மையாகும்.

எனவே, தொழிலாளர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் நன்மை பெறக்கூடிய கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இதனை நிராகரித்து கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுமாயின் கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்கள் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
பெருந்தோட்டப் பகுதிகளில் மாற்றத்தினை உருவாக்க பெண் தொழிலாளர்களே முன்வரவேண்டும்

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் மது என்ற அரக்கன் ஆக்கிரமித்திருக்கும் வரை அப் பகுதிகளில் முன்னேற்றகரமான மாற்றத்தினை என்றுமே எதிர்பார்க்கமுடியாது. இம் மாற்றத்தினை இலகுவில் ஏற்படுத்தக்கூடியவர்கள் பெண் தொழிலாளர்களே எனஇவ்வாறு, முன்னாள் பதுளை மாவட்ட பா.உ, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவருமான டி.வி. சென்னன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் பெருந்தோட்டப் பகுதிகளில் தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் தொழிற்சங்கவாதிகள் மது போத்தல்களை தொழிலாளார்களுக்கு வழங்கிவந்தனர் ஆனால் அந்நிலை தற்போது தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்துவங்களை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற சூழல் மலையகப்பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதனால் சமூகச் சீரழிவுகள் பெருமளவில் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் துரித நடவடிக்கைகளினால் மட்டும், மலையகத்தில் மதுவினை முற்றாக ஒழிக்க முடியும். அந்நிலை ஏற்பட்டுவிட்டால் மலையகத்தின் பெரும் தோட்டப் பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டும் என்றார்.
டிக்கோயா லெதண்டி பகுதியில் காற்றுடன் கடும்மழை; வீடுகள் சேதம்

டிக்கோயா லெதண்டி கிராம சேவகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-04-2009) பிற்பகல் பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் 22 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றுள் எட்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளில் வாழ்ந்த 45 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

டிக்கோயா பிரதேசத்தின் டங்கல்ட் சமரவில், காபெக்ஸ், காசல்ரீ, ஒஸ்போன் ஆகிய தோட்டப்பகுதிகளில் மழையுடன் சுமார் 15 நிமிடங்கள் வீசிய மினிசூறாவளியினால் மேற்படி தோட்டப்பகுதிகளிலுள்ள கூரைத்தகரங்கள் பல காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளன. மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளதுடன் மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால், பிரதேசத்தில் சில மணிநேரம் மின்சாரத் தடை ஏற்பட்டதோடு அட்டன் நோட்டன் பிரதான பாதையில் போக்குவரத்துகளும் தடைப்பட்டன.

இச் சம்பவத்தில் டங்கல்ட் தோட்டத்தில் 4 வீடுகளும் சமர்வில் தோட்டத்தில் 2 வீடுகளும் காபெக்ஸ் கொலனியில் 2 வீடுகளும் முழுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் 14 வீடுகள் சிறிய அளவிலான சேதத்துக்கு உள்ளாகியதாகவும் சேதவிபரங்கள் குறித்து கினிகத்தேனை பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் லெதண்டி பிரதேசத்துக்கான கிராம உத்தியோகஸ்தரான எஸ். டார்வின் தெரிவித்தார்.

Monday, April 6, 2009

சி.டபிள்யூ.சி பஸ் வருகிறது நடந்து போகத் தேவையில்லை


“சி.டபிள்யூ.சி காரங்க ‘கமுக்கமா’ இருந்துட்டு என்னமா ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்காங்க” என்று மலையகத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள். “ப்ஷா நல்ல வேலை” என்று ஏனைய பகுதிகளில் பேசுகிறார்கள். உண்மையில் நம்புவதற்குச் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். என்றாலும் தண்ணீருக்குள் நெருப்பு கொண்டு செல்ல முடியும் என்பதை நடைமுறைச் சாத்தியமாக்கியிருக்கிறது சி.டபிள்யூ.சி என்கிற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போக்குவரத்துச் சேவை என்ற புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கிறது காங்கிரஸ்.
வெள்ளைக்கார துரைமார்களின் வாகனங்கள் ஓடுவதற்காகவென்று மட்டும் நிர்மாணிக்கப்பட்ட பல தோட்டப்புற பாதைகளில் இனி தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக பஸ் ஓடும். இதற்கான ஒரு புரட்சிகர நடவடிக்கையைத்தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். மேற்கொண்டிருக்கிறது. தனியாக ஒரு பஸ் போக்குவரத்து கம்பனியை ‘அன்னை கோதை தொழில் முயற்சியாண்மை நிறுவனம்’ என்ற பெயரில் ஸ்தாபித்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு 50 பஸ் வண்டிகளை இலவசமாக வழங்கியிருக்கிறது.
இதில் முதற் கட்டமாக இருபது பஸ் வண்டிகள், கொழும்பு கப்பித்தாவத்தை ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து தம் மலையகப் பெருந்தோட்டச் சேவையை ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் 2009 எப்ரல் இரண்டாந் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினதும் மலையகத் தொழிற்சங்க வரலாற்றிலும் ஒரு மறக்க முடியாத நாள். தொழிலாளர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் எழுதப்பட்ட நாள் இது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமின்றி எல்லா தொழிற்சங்கங்களும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. அவர்களை என்றுமே வசதியற்ற வளமற்ற சமூகமாக வைத்திருக்கவே அவை விரும்புகின்றன என்று பல குற்றச்சாட்டுகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், இ. தொ. காவைப் பொறுத்த வரை எதுவுமே செய்யவில்லை என்பதற்கும், இனிச் செய்ய விருப்பதற்கும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து இந்தப் பணியை ஆற்றியிருக்கிறது என்றால் மிகையில்லை.
இந்த பஸ் சேவையால் உண்மையில் நன்மையடையச் போகிறவர்கள் தோட்டப்புற மாணவர்கள்தான். ஏனெனில் இது முற்றிலும் அந்த மாணவர்களின் போக்குவரத்துச் சிரமங்களை நிவர்த்திப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது என்கிறார்கள் காங்கிரஸார். மயைலகத் தோட்ட உருவாகத்திற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாறு இருந்த போதிலும், இன்னமும் பஸ் போக்குவரத்தைக் கண்டிராத பல தோட்டங்கள் உள்ளன. நகரத்தில் இருந்து ஐந்நூறு மைல் தொலைவில் இருக்கும் தோட்டப் பாதைகள் மிகவும் குறுகியதாகவும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் காணப்படுவதால், இங்கு பஸ் போக்குவரத்து நடத்துவதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் தோட்டப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புடன் கல்வியை நிறுத்திக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. சிரமத்திற்கு மத்தியிலும் நகரப் பாடசாலைகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் படும் வேதனைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை. தோட்டங்களில் தற்போது தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் நிறையவே ஓடுகின்றன. கல்வி கற்ற இளைஞர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க சொந்த வாகனங்களும் அதிகரிக்கச் செய்கின்றன. நுவரெலியா, மஸ்கெலியா, பொகவந்தலாவ, ஹப்புத்தளை உள்ளிட்ட தோட்டங்களில் வீடுகளில் வான்கள், பஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக்கூட காணலாம். ஆனால், நடந்து மட்டுமே செல்வதற்கு வசதியுள்ள தொழிலாளர்களும் அவர்களின் பிள்ளைகளும், தோட்டங்களில் உருவாகிய ஆசிரியர்களும் இன்னமும் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். மாதத்திற்கு ஒரு தடவை அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக நகரத்திற்குச் செல்லும் தொழிலாளர்கள், தாம் வாங்கும் பொருள்களின் பெறுமதியைவிட பணம் கொடுத்து வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திச் செல்வதற்காகக் கூறுகிறார்கள் நானுஓயா தோட்டங்களில்.
இவ்வாறான தோட்டங்களில் உள்ள தொழிலாள சமூகத்தின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் பேசுகிறார்கள். ஆனால், எல்லாம் சரி, அது ஏன் இந்திய அரசு பஸ் வண்டிகளை காங்கிரஸ்க்கு வழங்க வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு காங்கிரஸ் கேட்டதால் அதற்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று எளிதில் பதில் அளித்துவிடலாம். மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு நடத்தினோம். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று பத்திரிகைகளில் படம் வரப்பண்ணும் அரசியல்வாதிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதில் மலையகத் தொழிற்சங்க அரசியலும் விதிவிலக்காக இருக்கவில்லை. என்றாலும் அண்மையில் கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்குடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான தூதுக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் காத்திரமான விடயம் கலந்தாலோசிக்கப்பட்டு நடந்தேறியிருக்கிறது. அதன் விளைவாகத்தான் இந்திய அரசு 50 சிற்றி ரைடர் பஸ் வண்டிகளை வழங்கியிருக்கிறது. பஸ் வண்டிகள் கடந்த இரண்டாந் திகதிதான் காங்கிரஸால் பொறுப்பேற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், பஸ் வண்டிகளைப் பொறுப்பேற்று பதிவும் செய்து, காங்கிரஸ் நிறமும், கம்பனி பெயரும் பொறிக்கப்பட்டு பஸ் வண்டிகள் கலகலப்பாய் பூஜைக்கு வந்திருந்தன.
அதுபோல்தான் இந்த பஸ் வண்டிகளுக்கான சாரதிகள், நடத்துநர்களும் தோட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸின் வளர்ச்சிக்காகப் பணியாற்றிய நீண்டநாள் உறுப்பினர்களின் குடும்பத்தில் இருந்து அதற்குப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் தலைவர் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம். கோதை பஸ் கம்பனியைப் பற்றிக் கேட்டதும், உடப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய அறங்காவலர் சபைதான் நினைவுக்கு வந்தது. கிராமத்து மக்களின் நலன்கருதி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து பென்னம்பெரிய இரண்டு பஸ் வண்டிகளை சேவை யில் விட்டிருக்கிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் பஸ் போக்குவரத்தைத் தாமதமாகவேனும் நடத்துவது அதன் அங்கத்துவர்களுக்கு மாத்திரம ன்றி முழுத் தொழிலாளர் சமூகத்திற்கும் மகிழ்ச்சி தான். இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சாதாரண கட்டணமொன்றைச் செலுத்தி நிம்மதி யாகக் கல்வி கற்கச் செல்ல முடியும். அது சரி, இந்தப் பணியை காங்கிரஸ் எவ்வாறு நல்ல முறையில் கொண்டு நடத்தப் போகிறது, சிக்கல்களையும் சவால்களையும் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்ற கேள்விக்கு இடம் வைக்காமல் சேவையைத்தொடர வேண்டும். சபாஷ் சி.டபிள்யூ.சி. இறுதியாக ஒன்று, பஸ் சேவைக்கு பூஜை வைக்கும் வரை அது பற்றி எந்த ஊடகங்களிலும் பெரிதாகப் பிரசாரம். இது ஒரு வகையில் சிறப்புதான். ஆனால் விடயம் கைகூடியதும் அதனை திறம்படி செயற்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை காங்கிரஸார் மறுக்க மாட்டார்கள். பஸ் சேவை ஆரம்ப நிகழ்வுக்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் பலர் காங்கிரஸ் ‘பிரஸ் ஒபிசர்’மார்களின் செயற்பாடுகளில், திருப்தி காணவில்லை. இது இப்பொழுது மட்டுமல்ல இ. தொ. கா.வின் எந்த விடயத்திற்குச் சென்றாலும் ஊடகவியலாளர்கள் ஏதாவது ஒரு குறையைத்தான் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் இ. தொ. கா.வின் தலைவர்கள் அல்ல, பிரஸ் ஒபீசர் என்று சொல்லிக் கொள்பவர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குற்றச்சாட்டு அவர்களுக்கு வராது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே, காங்கிரஸின் ஊடகப் பிரிவை சற்று உயிரூட்ட வேண்டும் என்பதையும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துவது பொருந்தும்.

பி.வீரசிங்கம்


தினகரன்
இருந்த பிரதிநிதித்துவங்களையும் இழந்து விட்ட களுத்துறை தமிழர்கள்

மேல் மாகாணத்தில் பெருந்தோட்டங்களைக் கொண்ட மாவட்டமாகக் களுத்துறை மாவட்டம் உள்ளது. தேயிலை, இறப்பர் தோட்டங்களைக் கொண்ட இம்மாவட்டம் அகலவத்தை, பண்டாரகமை, பேருவளை, புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, களுத்துறை, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, பாணந்துறை, வலல்லாவிட்ட, ஆகிய பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளுள்ளன. இவை அனைத்திலும் சிங்கள மக்களே பெரும்பான்மையினராகவுள்ளனர்.

இவற்றுள் அகலவத்தை,புளத்சிங்கள, தொடங்கொடை, ஹொரண, இங்கிரிய, மதுராவளை, மத்துகம, மில்லனிய, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட ஆகிய பத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தமிழர்கள் இரண்டாமிடத்திலும் பண்டாரகம, பேருவளை, களுத்துறை, பாணந்துறை ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் முஸ்லிம்கள் இரண்டாவது இடத்திலுமுள்ளனர் என்பதை 2001 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீடு காட்டுகின்றது.
இம்மாவட்டத்தின் 2001 ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த சனத்தொகை 1,060,800 ஆக இருந்துள்ளதுடன் சிங்களவர்கள் 923,893 பேராகவும் (87.1) தமிழர்கள் 42, 296 பேராகவும் (4%) ஆகவும், முஸ்லிம்கள் 8.8%ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை நகரம் இம்மாவட்டத்தின் தலைநகராகவுள்ளதுடன் இங்கு கதிர்வேலாயுத சுவாமி கோயில் என்ற பிரசித்தமான இந்துக் கோயில் உள்ளது. அதேபோன்று பாணந்துறை நகரில் கந்தசுவாமி கோயிலும் முக்கியமானது. தற்போது இக்கோயில் நிர்வாகம் இந்து சமய விவகாரத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ளது. குளோடன் முத்து மீனாட்சியம்மன் கோயில் இங்கிரிய குறிஞ்சி மகாமாரியம்மன் கோயில், றைகம மாரியம்மன் கோயில், எலதுவ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சென்.ஜோர்ஜ் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில், டெல்கித் முத்துமாரியம்மன் கோயில் உட்பட பல இந்துக்கோயில்கள் இம்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றவைகளாகவுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் முப்பத்தெட்டு தமிழ்ப் பாடசாலைகளிருந்த போதிலும் எந்தவொரு பாடசாலையிலும் உயர்தர வகுப்புகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் இல்லாமையும் மத்துகம சென்.மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் கலை, வர்த்தகப்பிரிவுகளுள்ள அதேவேளை, உயர்தர வகுப்புள்ள டெல்கித், மில்லகந்த ஆகிய இரு தமிழ் மகாவித்தியாலயங்களிலும் கலைப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. குளோடன் நவோதய தமிழ் வித்தியாலயத்தில் தற்போது 111 வரையான வகுப்புகள் இயங்குகின்றன. இப்பாடசாலையை இம்மாவட்டத்தின் சகல வசதிகளும் கொண்ட கலை, வர்த்தக, கணித, விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கிய தரமான தமிழ்ப் பாடசாலையாக உருவாக்க கூடிய வசதிகளுள்ளன. இடவசதியும் அதிபர், ஆசிரியர் விடுதிகளும் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதி வசதிகள் கொண்ட இப்பாடசாலை மாணவர்களுக்கான விடுதிவசதிகள் கொண்ட பாடசாலையாக அமையக்கூடிய வசதிகள் செய முடியும். களுத்துறை மாவட்டத்தில் தரமான தமிழ்ப்பாடசாலையாக உருவாக்கக்கூடிய பொருத்தமான வசதிகள் இங்கு உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த சி.ஜெயக்குமார் இப்பாடசாலையின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப்பாடசாலையின் அதிபராக விருப்புடன் செயற்படும் இவ்வேளையில் அவரது ஆர்வமிக்க நோக்கத்தைப் பூர்த்தி செய முன்வர வேண்டியது பொறுப்புள்ளவர்களின் கடமையாகும். 1981 ஆம் ஆண்டில் 5.2 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் 4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. அதேபோன்று 1981 ஆம் ஆண்டில் 87.2 வீத சிங்களவர்களின் எண்ணிக்கை 87.1 வீதமாகவும் முஸ்லிம்களின் வீதம் 7.4 இலிருந்து 8.8 ஆகவும் மாற்றமடைந்துள்ளன.

இம்மாவட்டத்தில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினராகவுள்ள ஒரே உள்ளூராட்சி நிறுவனம் பேருவளை நகர சபை மட்டுமே. பேருவளை நகரசபை நகரசபையில் முஸ்லிம்கள் 76 வீதமாகவும் சிங்களவர்கள் 21.2 வீதமாகவும், தமிழர்கள் 2.1 வீதமாகவும் உள்ளனர். ஆனால், பேருவளை பிரதேச செயலகப் பிரிவில் 2ஃ3 பங்கினருக்கு அதிகமாக சிங்களவர்களேயுள்ளனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை பின்வரும் வீதத்தினராக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள இங்கிரிய 9.5, புளத்சிங்கள 12.8, தொடங்கொடை 13, மத்துகம 9.5, மதுராவளை 10.3, பாலிந்தநுவர 9, மில்லனிய 3, வலல்லாவிட்ட 2.1, அகலவத்தை 2.7, ஹொரண 2.2, களுத்துறை 1.3 என்ற வீதத்தில் 2001 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி இருந்தமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

சுமார் இருபதாயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ள இம்மாவட்டத்தில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றுமுழுதாக இழக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் உள்ளூர் அரசியல் அமைப்புகளில் தமது பிரதிநிதித்துவங்களைப் பாதுகாத்துக் கொண்டுள்ள போதும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பறிகொடுத்துவிட்டனர்.
தமிழ்பேசும் முஸ்லிம் ஒருவர் பாராளுமன்றப் பிரதிநிதியாக இருந்த போது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவ சக்தி இருந்தது. முஸ்லிம்களிடம் ஏற்பட்ட பிளவும் தமிழ் வாக்காளரைப்பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் சிந்திக்காமையும் இதற்கான காரணமாயமைந்துவிட்டது.

எவ்வாறாயினும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் அவர்கள் வாழும் சகல பிரதேச செயலகப் பிரிவுகளினும் நகரசபைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது. இழந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்களுடன் இணைந்து மீட்டெடுக்க முஸ்லிம் மக்கள் எதிர்காலத்தில் சிந்திப்பர் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த உள்ளூர் அதிகார சபைகளான பிரதேச, நகரசபைத் தேர்தலுக்கு முந்திய தேர்தலின் போது ஐந்து தமிழர்கள் பிரதேச சபைகளுக்குக் களுத்துறை மாவட்டத்திலிருந்து தெரிவு செயப்பட்டிருந்தனர். ஆனால், இறுதியாக நடைபெற்ற தேர்தலில் ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை. தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்பட்டுவிட்டது.

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறாது முழுமையாக வாக்களிக்கப்பட்டால் குறைந்தது பதினைந்து பேர் பிரதேச சபைகளில் உறுப்பினராக முடியும். இதை ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள தமிழர்களின் எண்ணிக்கை தெளிவாகக் காட்டுகின்றது. களுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே பெரும்பான்மையாக வாழ்வதால் அவர்களிடம் தொழிற்சங்கம் நடத்தி சந்தா வசூலிப்பதிலேயே தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றனவே அன்றி அரசியல் ரீதியாக வழிகாட்டுவதாயில்லை.

மலையகத் தமிழ்த் தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாக மாறியபின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் பற்றியே கனவு காண்கின்றன. பிரதேச செயலகப் பிரிவுகளில் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தொடர்பில் சிந்திப்பதில்லை. இன்று அரசியல் அமைப்புகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்கள் சந்தா வசூலிப்பதைவிட தொழிற்சங்க ரீதியாகச் செயலிழந்துள்ளன என்பதே உண்மை நிலையாகும்.

களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். கல்வி, தொழில், இருப்பிட, சுகாதாரம் உட்பட பல சமூக தேவைகளும் சமூக பாதுகாப்பும் அற்ற நிலையில் பெரும்பாலான தமிழ்த் தோட்டத்தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு பரிகாரம் காணப்பட வேண்டியதேவை உள்ளது. சில தோட்டங்களில் வாழும் மக்கள் எந்தவொரு அடிப்படைத் தேவைகளையும் அடைய முடியாத அவல நிலையில் உள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்குவேட்டையாட களமிறங்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிவதில் ஆர்வம் இல்லை. இதுவே யதார்த்தம். இதுவே உண்மை.

களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த, இழந்த தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை மீட்டெடுக்க வழிவகை காணப்பட வேண்டும். தமிழர் வாக்குகளை பிரித்துக்காட்டிப் பலப்பரீட்சை நடத்தும் தமிழ் அரசியல் செயற்பாடுகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போது தான் விடிவு ஏற்படும்.

முற்றாக அரசியல் பிரதிநிதித்துவங்களைத் தமது திட்டமில்லா, தூரநோக்கில்லா சிந்தனைகளாலும் செயற்பாடுகளாலும் இழந்துவிட்ட களுத்துறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சரியான, தெளிவான வழிகாட்டல் இன்று தேவையாகவுள்ளது. அரசியல் ரீதியாக ஏற்படுத்திக்கொள்ளும் பலமே கல்வி, இருப்பிடம் உட்பட சகலவற்றிற்கும் ஆதாரமாகும். இதைப்புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பு.

இன்று சகல தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள அரசியல் அதிகாரம் தேவை. எனவே, களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் வாக்காளர்கள் தமது எதிர்கால நலன்களையும் இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
இருப்பையும் கணிப்பீட்டையும் எதிர்காலத்தில் நிலை நாட்ட களுத்துறைத் தமிழ் மக்கள் சிந்தித்து, தெளிவான முறையில் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

த.மனோகரன்

நன்றி- தினக்குரல்
மலையகத் தமிழரை அழிக்கும் முயற்சியில் குடும்பக் கட்டுப்பாடு

மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்து விடயங்களும் மாறிக்கொண்டிருக்கும் சமகால உலகில் மலையக மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும், நூற்றாண்டுகள் கடந்தும் இன்னும் மாறாமல் காணப்படுகின்றது. ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து கல்வி, சுகாதாரவசதிகள், வீட்டுவசதி, பொருளாதாரம், சொத்துரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல அம்சங்களில் இவர்கள் பின்தங்கியே வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். இன்று உலகின் சனத்தொகையானது கட்டுப்படுத்த முடியாதளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கின்ற வேளையில், சனத்தொகை வளர்ச்சியில் கூட இவர்கள் பின்தங்கியே காணப்படுகின்றனர். ஒரு சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அச்சமூகத்தின் அதிகரித்து வரும் கல்விவளர்ச்சி ஒரு காரணமாய் அமைகின்றது. ஆனால், மலையகத்தின் சனத்தொகை வளர்ச்சி குறைவடைந்து செல்கின்றமைக்கு அவர்கள் கல்வி ரீதியாக வளர்ச்சியடையாமையே காரணமாகும். வருடாந்த புள்ளிவிபர அறிக்கை (Statistical Annual Report-2000), பெருந்தோட்டத்துறை சனத்தொகை வளர்ச்சியானது 5.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைவடைந்திருப்பதனைச் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்குப் பிரதானமாக மலையகத்தில் காணப்படும் கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு (Family Planning) முறையே காரணமாகும்.

அதீத சனத்தொகை வளர்ச்சியானது ஒரு நாட்டிற்குப் பிரச்சினையாக அமையும்போது, அந்நாட்டில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு அமுலுக்கு வருவதை நடைமுறையில் சில நாட்டுக்கொள்கைகள், சட்டங்கள் என்பன சித்திரிக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் "நாம் இருவர் நமக்கிருவர்' என்ற கொள்கை மக்கள் மத்தியில் பின்பற்றப்படுவதும், சீனாவில் ஒரு குழந்தை மாத்திரம் பெற்றுக்கொண்டால் அதற்கான சகல செலவினங்களையும் அரசு பொறுப்பேற்பதன் மூலம் அவர்களைக் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ள ஊக்குவிப்பதனையும் காணலாம். இங்கு குறிப்பிடக் கூடிய அம்சம் யாதென்றால், இக்கொள்கைகள், சட்டங்கள் என்பன ஒரு இனக்குழுவை மாத்திரம் மையப்படுத்தாமல், எந்தவொரு இனக்குழுவிற்கும் பாதகத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றது. ஆனால், இலங்கையில் மலையக மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் விருப்பத்திற்கு அப்பால் குடும்பக் கட்டுப்பாட்டு முறையைத் திணிப்பது அவர்களுக்குக் காட்டும் பாரபட்சமாகாதா?
2008 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.943மூ என ?The World Factbook குறிப்பிடுகின்றது. இவ்வளர்ச்சி வீதமானது ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்ததாகும். அத்தோடு, இலங்கையின் இன முரண்பாட்டினால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதனாலும், பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையினாலும் நாட்டின் சனத்தொகையின் அளவு குறைந்துள்ளதை பல்வேறு அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்நிலையில் இலங்கையின் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அவசியமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அம்முறை மலையக சமூகத்திற்கு மட்டும் கட்டாயப்படுத்தப்படுவதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இங்கு இலங்கையின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாக இருக்கும் மக்களின் உயிர்கள் அழிக்கப்படுகின்றமையை அவதானிக்க வேண்டும்.

கூலிப்படைகளாக இலங்கைக்கு வரவழைக்கப்பட்ட இம்மக்களைத் தொடர்ந்தும் அந்நிலையிலேயே வைத்திருப்பதனை பெரும்பான்மை சமூகம் விரும்புகின்றது. இவர்கள், குறிப்பாக கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதனை விரும்பாத பெரும்பான்மை அரசியற் குழாம், ஒரு நிர்ப்பந்தத்தின் பேரிலேயே இவர்களுக்கான கல்வி வசதிகளை செய்து கொடுக்கின்றது. பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுவதைப் போல, மலையகத்தில் இரண்டாம் நிலைக்கல்வி (க.பொ.த. சாஃத) வரை கற்றவர்களே அதிகம். உயர்கல்வி பெறுபவர்களின் தொகை சமீபகாலமாக அதிகரித்த போதிலும், ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும்போது இத்தொகை மிகக் குறைவாகும். பெரும்பான்மையினர் இலங்கையின் பொருளாதாரத்திற்குத் தேவையான தொழிற்படையை மாத்திரமே மலையகத்திலிருந்து எதிர்பார்க்கின்றனர். தேயிலைத் தோட்டத்திலும் , தேயிலைத் தொழிற்சாலைகளிலும் தினக்கூலி (Daily Wage) பெறுபவர்களாக விளங்க வேண்டும் என்பது அவர்களின் அவா. சனத்தொகை ரீதியாக வளர்ச்சியடைந்துவிட்டால் அம்மக்களுக்கான சகல வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும். அவ்வாறு வசதிகளைப் பெறும்போது ஒரு சமூக அசைவியக்கத்தின் (Social Mobility) மூலம் அவர்கள் வேறு தொழில்களை நோக்கி இடம்பெயர்ந்து விடுவர். எனவே தேயிலைத் தோட்டங்களில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்வதற்கான ஆளணி இல்லாமல் போய்விடும்.

இந்த அம்சத்தின் காரணமாகவே இன்று மலையகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அத்தியாவசியமானதொன்றாகத் திணிக்கப்படுகின்றது. இவர்களிடம், “உனக்கு வருமானம் இல்லை” எவ்வாறு இத்தனை குழந்தைகளை வளர்க்கப்போகின்றாய், அநியாயமாக நோயிலும், பட்டினியிலும் சாகப்போகின்றனர்” என்று தோட்ட வைத்தியர் ( Estate Medical Officer), தாதி குறிப்பாக தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் ( Estate Welfare Officer) போன்றோர் “உளவள ஆலோசனை” (Counseling) மூலம் இவ் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால சந்ததியினரை இல்லாமல் செய்கின்றனர். “கொடியின் காய் கொடிக்குப் பாரமில்லை” என்பதுபோல தன் குழந்தைகளை தன்னால் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இல்லாமல் செய்து, நிறைய குழந்தைகள் பெறுவது கேவலம் என்ற நிலைக்கு அவர்களை மாற்றி விடுகின்றனர். அதேவேளை, கிராமப்புற சிங்கள மக்களும், முஸ்லிம் இனத்தவரும் மூன்றிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதனையும் அல்லது தங்களுக்கு வேண்டியளவு குழந்தைகளைப் பெறுவதையும் நடைமுறையில் காணலாம். அவர்களுக்கென எந்தவொரு கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், மலையக மக்களின் குழந்தைப் பேறானது பெரும்பாலும் இரண்டு குழந்தைகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்றது. இதற்காக இவர்கள் ஒரு “டசின்” (12) அல்லது இரண்டு “டசின்” (24) குழந்தைகள் பெறவேண்டும் என்பது கருத்தல்ல. அதே சமயம் நான்கைந்து குழந்தைகள் பெறுவது சமூகத்திற்கு தீங்குமல்ல. இம்மக்களால் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறவும், வளர்க்கவும் சக்தியிருக்கும்போது, அதைத் தடுப்பது ஒரு இன பாரபட்சமான செயல் என்றே கூற வேண்டும்.
இன்று தோட்டப்புறங்களில் இளைஞர், யுவதிகளுக்காக நடைபெற்றுவரும் பாலியல் உறவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் மலையக சனத்தொகையை கட்டுப்படுத்துவதனையே நோக்காகக் கொண்டுள்ளன. இது நேரடியாக கூறப்படாமல், “எயிட்ஸ்” (HIV) வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பான உடலுறவு முறையைப் பற்றியே என்று வெளியில் கூறினாலும், மறைமுகமாகக் குடும்பக் கட்டுப்பாட்டையே சுட்டி நிற்கின்றது. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் யாதென்றால்,”எயிட்ஸ்” நோயானது பெருந்தோட்டப்புறப் பகுதிகளில் பெருவாரியாக இனங்காணப்படாமையும், அந்நோய் பெரும்பாலும் நகரத்திலேயே பரவிக்கொண்டிருக்கும் வேளையில் நகர்ப்புறங்களிலேயே விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டிய தேவை இருக்கின்றது. மாறாக பெருந்தோட்டங்களில் இவை நடத்தப்படுவதற்கான நியாயப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரை தற்போது குடிநீர், போஷாக்கு உணவு, சுத்தமான சூழல், பாடசாலை இடைவிலகல் போன்ற எத்தனையோ சமூகப்பிரச்சினைகள் இருக்குமிடத்து, அவற்றைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தனியே பாலியல் உறவில் மாத்திரமே கவனம் செலுத்துவதற்கான தேவை என்ன?

மலையக கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டிற்கு பிரசவத் தாய்மாரின் போஷாக்கின்மை பிரதான காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால், இதனைத் தவிர்ப்பதற்கு போஷாக்கு உணவுத்திட்டங்கள், மக்களுக்கான சம்பள உயர்வு, குழந்தைப் பிறப்பு இடைவெளிக்காலத்தை கூட்டுவதற்கான ஆலோசனைகளை வழங்குதல் என்பவற்றை அரசு மேற்கொள்ளலாம். அதனைவிடுத்து தனியே நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாடு (LRT) முறையின் மூலமே அப்பிரச்சினையை நிவர்த்தி செய்யலாம் என்பது தவறான கருத்தாகும். இந்நிலைமை தொடருமாயின், எதிர்காலத்தில் இலங்கை வரலாற்றின் ஏடுகளைத் திருப்பிப் பார்க்குமிடத்து மலையகத் தமிழர் என்ற இனம் இல்லாமல் இருக்கும்.

எனவே மரத்தைப் பற்றி நிற்கும் கொடிபோல் அல்லாமல், ஒரு மரமாக தனித்து நிற்பதற்கு மலையக சமூகத்தின் சனத்தொகையானது வளர்ச்சியடைய வேண்டும். பேரினவாதத்தின் இந்த சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு மலையகத்தில் கல்வி கற்ற சமூகம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அத்தோடு, அம்மக்களை பலவீனமானவர்களாகக் காட்டும் வறுமையை ஒழிப்பதற்கும், அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையவும் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுதல் அவசியமாகும். இவர்கள் பலவீனமானவர்கள் அல்ல என்று பேரினவாதிகள் நினைப்பதற்கு இம்மக்கள் விரைவாக பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

-எல். கமலேஸ்வரி-
நன்றி- தினக்குரல்