Friday, October 30, 2009

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இ.தொ.கா. வசம்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் உதயகுமார் உட்பட அவருடன் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் ஆட்சி அதிகாரம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வசமாகியுள்ளது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மீன் சின்னத்தில் போட்டியிட்டு இந்த நகரசபையின் தலைவராக உதயகுமார் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து இந்த நகர சபை கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.
தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் இவ்வருட ஆரம்பத்தில் மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். இவ்வாறானதொரு நிலையில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உட்பட அவரின் உறுப்பினர்கள் தற்போது இலங்கைத்தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த இணைவு தொடர்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடக செய்தியில் தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய வகையில் வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்படாததால் இந்த நகர சபைக்குட்பட்ட குடியிருப்பாளர் மற்றும் ஏனையோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நகர சபையை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இதை உணர்ந்து கொண்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபைத் தலைவர் உட்பட அவருடன் சேர்ந்த நகர சபையின் உறுப்பினர்கள் நேற்று 26 ஆம் திகதி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டனர்.
இது தொடர்பான நிகழ்வில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா. முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளின் உடனடி அபிவிருத்தித் திட்டங்களுக்காக இ.தொ.கா. பொதுச்செயலாளரும் இளைஞர் வலுவூட்டல், சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது அமைச்சின் நிதியிலிருந்து 3 கோடி ரூபாவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
இ.தொகாவிலிருந்து முன்னர் வெளியேறிய சிலரும் பிற அரசியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சிலரும் வெகுவிரைவில் இ.தொ.காவுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்