Wednesday, July 15, 2009

தொழிலாளர்களின் உரிமைப் பிரச்சினைகள்

தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறைகளுக்கு மேலதிகமாக தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை ஏற்படுகிறது. இவ்வாறு தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கு தோட்டங்களில் சில விதி முறைகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. 1975 இல் தோட்டங்கள் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத் தலைவராக ரஞ்சன் விஜேரத்னா இருந்த போதே சகல தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து தோட்டத் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்கான இணக்கப்பாடொன்று காணப்பட்டது.



இதன்படி தோட்டத் தொழிலாளி ஒருவர் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொள்ள வேண்டுமானால் தோட்டத் துரையோடு இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். இணக்கப்பாட்டின் முடிவில் சம்பந்தப்பட்ட தொழிலாளி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு தோட்டத் துரையின் அனுமதியோடு தற்காலிக கொட்டிலை நிர்மாணித்துக் கொள்ள முடியுமாகவிருந்தது.




தோட்டத்துரையின் அனுமதியின்றி கொட்டில் ஒன்றை நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில் அல்லது தோட்டத்தில் காலியாக இருந்த லயன் அறைகளில் அத்துமீறி குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தோட்டங்களிலிருந்து அநேகமானவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதுண்டு. சம்பந்தப்பட்ட தொழிலாளியை தாங்கள் வேலை நீக்கம் செய்யவில்லை எனவும் இவர் தான் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் லயன் காம்பிறாவை தோட்ட நிர்வாகத்திடம் மீண்டும் கையளிக்கும் வரை அவர்pன் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அல்லது சம்பந்தப்பட்ட தொழிலாளி நிர்வாகத்தின் அனுமதியின்றி நிர்மாணித்த தற்காலிக கொட்டிலை உடைத்து அகற்றும் வரை இவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் நிர்வாகத்தின் வாதமாக இருக்கும்.



எனவே வேலை நீக்கம் அல்ல ( No termination) இது ஒரு வேலை இடைநிறுத்தமே (Suspension from work) எனவே தொழில் பிணக்கு சட்டத்தின் 31(ஆ) பிரிவின் படி தொழிலாளிக்கு இம் மனுவை இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உரிமை இல்லை என்றும் இம் மனுவை விசாரிக்கும் அதிகாரம் தொழில் நீதிமன்றத்துக்கும் இல்லை என்பதும் நிர்வாகத்தின் வாதமாகும்.



சில சமயங்களில் தொழிலாளியின் சார்பில் வாதிடும் சட்டத்தரணி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதியின் சாமர்த்தியத்தால் சில வழக்குகளில் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தோட்டத்துரையை சந்தித்து பேசி அவர் இந்த காம்பிறாவை சம்பந்தப்பட்டவருக்கு தருவதாக ஒத்துக் கொண்டுள்ளார் என்றும் அல்லது தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொள்ளும் முன்பு தோட்ட சின்னத்துரையிடம் சொல்லிவிட்டுதான் இதனை செய்தார் என்றும் சாட்சிகளை நெறிப்படுத்தி அவ்வாறான சாட்சிகளில் தொழிலாளிக்கு ஏற்படும் சாதகமான பலாபலன்களை ஆதாரமாக வைத்து இது ஒரு ஊகித்தறிந்த வேலை நீக்கமே (Constructive termination) என்றும் இது நிர்வாகத்தின் நியாயமற்ற செயல் என்றும் விவாதித்து வழக்குகளை வெல்லும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருப்பினும் இவ்வாறு நீதிமன்றங்களுக்கு முன் எடுத்துச் செல்லப்பட்ட வழக்குகள் பலவற்றில் இது வேலை நீக்கம் அல்லது (Not termination) தோட்டத்துரையின் சட்ட ரீதியிலான கட்டளையை (Lawful Orders) நிறைவேற்றும் வரை தொழிலாளி வேலையிலிருந்து இடைநிறுத்தம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளார்.(Suspension from work) என்று பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.




எனவே தொழிலாளி ஒருவரின் பிரச்சினை முன்னெடுக்கப்படும் பொழுது அது அவரது அது அவரது சட்ட ரீதியிலான உரிமையை நிர்வாக ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையா அல்லது யதார்த்தமான சூழ்நிலைகள் காரணமாக தோன்றிய மனிதாபிமான ரீதியில் அணுகக்கூடிய பிரச்சினைகள் என்பது போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன.




தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் வசதியின்மை காரணமாகவும் அவர்களுக்கென்று குளியலறைகள் தனியாக இல்லாத காரணங்களினாலும் தங்களின் வீடுகளுக்கு முன் வாளிகளில் தண்ணீரை நிரப்பி அவசர அவசரமாக குளிப்பது வழக்கம். வீட்டிலுள்ள வயது வந்த பெண் பிள்ளைகளுக்குக்கூட மறைவாக நின்று குளிக்க முடியாதுள்ளதே என்ற காரணத்தினால் தொழிலாளர்கள் தங்களின் மரக்கறி தோட்டங்களிலோ வீட்டுக்குப் பக்கத்திலோ தற்காலிக கொட்டில்களை நிர்மாணித்து கொள்வது வழக்கம்.




தொழிலாளிக்கும் தொழில் கொள்வோருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொழில் நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நாகரிகமான காலத்திலும் கூட இளம் பெண்கள் திறந்த வெளியில் நின் குளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது ஆச்சரியத்துக்குரியதாகும். இந்த வசதிகளை செய்து கொடுப்பது தொழில் கொள்வோரின் கடமையும் பொறுப்புமாகும். இவ்வாறான வசதிகள் நிர்வாகத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட தொன்றல்ல என்று அப்பீல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.




(ஆதாரம் Bagawathy VS SLSPC-CA 47 87)) நீதிமன்றங்களுக்கு செல்லும் போது தொழிலாளர்களின் பிரச்சினைகளை உரிமைகள் மற்றும் மனிதாபிமான காரணங்களை ஆதாரங்களாக வைத்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ளும் வழி வகைகளும் உண்டு.


எஸ். இராமநாதன்


மாத்தனை

Monday, July 13, 2009

தோட்டத்துறை இளைஞர்களின் மனித உரிமை நிலை

இலங்கையின் பெருந்தோட்ட பயிராக்கவியல் செயற்பாடுகளுக்கென பிரித்தானியரால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றைய மலையகத் தமிழர்கள். 18ம் நூற்றாண்டின் குருதி கசிந்த சோக வரலாற்றின் உலகறியாத மக்கள் கூட்டமாக இன்று இம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மனிதகுல நாகரிகம் வெட்கி நிற்குமளவிற்கு இம் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த போதும் தம் அயராத உழைப்பின் மூலம் இந் நாட்டின் மத்திய மலை நாட்டில் இந் நாட்டுக்கு பெரும் புகழையும் பொருளாதார ஊற்றையும் உருவாக்கி இலங்கையின் ஒட்டுமொத்த அபிவிருத்தியிலும் காத்திரமான பங்களிப்பினை வகித்து வருகின்றார்கள்.

மனித நேயம் வென்றெடுத்த நாகரிகத்தின் எந்தவொரு வினைப்பயனையும் இம் அனுபவிக்கக்கூடாது என்பதிலும் அம் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலம் காலம் காலமாக பதவிக்கு வந்த அதிகார வர்கத்தினர் மிகவும் சிரத்தையுடன் இருந்தனர். வேறு வார்த்தையில் கூறுவதாயின் இம் மக்களை நவீன அடிமைகளாக வைத்து மலிவு ஊழியர்களாக (Cheep Labour) பயன்படுத்தி தொடர்ச்சியாக சுரண்டினார்கள் என்றே கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதார கட்டுமானத்தை பலப்படுத்த அயராது பாடுபட்ட இம் மக்களின் உழைப்பு நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதில் பெரிதும் பங்காற்றியது என்பதனை மறந்துவிட முடியாது. ஆனால் இங்கு வேடிக்கை என்னவெனில் நாடு சுதந்திரம் பெற்றபோது இம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டமையாகம். வாழ்வுரிமை மறுக்கப்பட்டமையானது இம் மக்களை அரசியல் அநாதைகள் என்ற அசாதாரணமான நிலைக்கு தள்ளியதுடன் அனைத்து அரசியல் சமூக பொருளதார உரிமைகளையும் அனுபவிக்க முடியாதவாறு ஒடுக்கப்பட்டார்கள்.
இதன் விளைவாக ஏனைய சமூகத்தவர்கள் அனுபவித்த அடிப்படை மனித உரிமைகளை மலையக மக்கள் அனுபவிக்க முடியாத நிலை உருவாகியது. சர்வதேச ரீதியாக இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல மனித உரிமை நியமங்களையும் (International Human Rights Standards) அனுபவிக்க முடியாத நிலைக்குள்ளானார்கள். சுமார் மூன்று நூற்றாண்டு காலமாக சகல அடிப்படை மனித உரிமைகளையும் அனுபவிக்க முடியாத, மனித கௌரவத்துடன் (Human Dignity) வாழ முடியாத ஒரு மக்கள் கூட்டமாக இந் நாட்டில் இருந்தார்கள் குறிப்பாக 1970ம் ஆண்டு ஆகும் வரையில் தாம் இழந்த அரசியல் மற்றும் ஏனைய சமூக பொருளாதார உரிமைகளை பெற்றுக்; கொள்வதற்காக காத்திருந்தனர்.
1970 களுக்கு பின்னரும் சகல மனித உரிமைகளுடனும் ஒரு நாகரிகமான மக்கள் கூட்டமாக வாழும் சூழல் உருவாகவில்லை. படிப்படியாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நியாயப் பிரச்சாரங்களினூடாகவே (Advocacy) ஓரளவேனும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுக்க முடிந்தது என்பது மனங்கொள்ள வேண்டிய விடயமாகும்.

முலையகத்தில் 18 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பெருமளவான இளைஞர்கள் சகல தோட்டப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையினை சரியாக வரையறுப்பது கடினமாகவே உள்ளது. அது குறித்த சரியானத் தரவுகள் திரட்டப்பட்டதாகத் இது வரையில் தெரியவில்லை. ஆயினும் மொத்த இளைஞர்களில் சுமார் 48 சதவீதமானோர் தொழில் அற்றவர்களாக இருக்கின்றார்கள்.

போதிய கல்வி தேர்ச்சியின்மை குறைந்த மட்ட விஞ்ஞான தொழில்நுட்ப அறிவு குறைந்த மட்ட தொழில் திறன், குறைந்த உலக அனுபவம், குறைந்த மட்ட துறைசார் பயிற்சி ஆகிய பல பிரச்சினைகள் இவர்கள் மத்தியில் காணப்படுகின்றன. அதனையும் தாண்டி ஒரு சில படித்த இளைஞர்களும் அரச தொழில் வாய்ப்புக்களில் பாரபட்சம், தோட்ட முகாமைத்துவ தொழில்களில் பாரபட்சம், அரச சேவைகளில் பாரபட்சம், புறக்கணிப்புக்கள் அந்நியப்படுத்தல் ஆகிய பல பாகுபாடுகளுக்கு உட்பட்டு வருகிறார்கள்.
அதற்கு விதிவிலக்காக ஒரு சிலர் தான் பாடசாலைக் கல்வியில் பெற்றுக்கொண்ட அறிவினை மூலதனமாகக் கொண்டு சில ஏற்றங்களை அடைந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் நீண்ட பிரயத்தனங்களின் மூலம் பல்கலைகழக மற்றும் கல்வியியல் கல்லூhயிpல் அனுமதிப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமது எதிர்காலத்தை செம்மைப்படுத்திக் கொள்கிறார்கள்.
மலையக இளைஞர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற தொழில் வாய்ப்பு என்பது ஆசிரியர் தொழிலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானது வருந்ததக்க விடயமாகும் ஏனைய துறைகளில் இவர்களின் பங்கு ஒப்பீட்டளவில் மிக குறைவாகும். ஏவ்வாறாயினும் போதிய கல்வித் தேர்ச்சி இன்மையால் நீண்டகால்;;;ம் நிரந்தர தொழிலின்றி பெற்றோர்களின் உழைப்பில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றார்கள்.

இவ்வாறு நீண்ட காலம் தங்கியிருப்பதனால் ஏற்படும் வறுமை மற்றும் அதிகரித்த குடும்ப சுமை காரணமாக தோட்டப்பகுதிகளை விட்டு நகர்புறங்களுக்கு தொழில் வாய்ப்பு தேடிச் செல்கிறார்கள். இவ்வாறு தொழிலுக்கு செல்லும் இந்த இளைஞர் யுவதிகள் அண்மைக்காலமாக எதிர்கொள்ளும் மனித உரிமை பிரச்சினைகள் அதிர்ச்சியூட்டுவனவாக காணப்படுகின்றன.

- இரா. ரமேஸ்-

Saturday, July 11, 2009

மூடப்பட்டுவரும் தேயிலை தொழிற்சாலைகள்

மலையக பகுதியில் உள்ள சகல தோட்டங்களும் வெள்ளையர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போது சகல தேயிலை தோட்டங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது தொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளின்றி மாதம் 30 நாட்களும் வேலை செய்து வந்தனர். அக்கால கட்டத்தில் சகல தேயிலை தோட்டங்கள் தோறும் தேயிலை தொழிற் சாலைகள் இருந்தன. அந்தந்த தேயிலை தோட்ட தேயிலை கொழுந்துகளை அதே தோட்ட தொழிற்சாலைகளில் அரைத்து தேயிலையை நல்ல விலைக்கு பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

அக்கா¡லத்தில் தோட்டங்களில் இருந்த தெருக்கள் சுத்தமாக இருந்தன. வைத்திய சாலைகள் பராமரிப்பில் இருந்தன. தோட்ட சுத்திகரிப்பாளர்கள் கடமையில் இருந்தனர். தோட்டப் பளிச்சென இருந்தது.

இவ்வாறான தேயிலை தோட்டங்களையும் இறப்பர் தோட்டங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்று அரச உடமைகளாக்கியது. அப்போது அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என இரண்டு பிரிவுகளின் கீழ் தோட்டங்கள் இயங்கி வந்தன. தேயிலை தோட்ட பராமரிப்பு ஓரளவுக்கு சிறந்து காணப்பட்டது.

இவ்வாறான கால கட்டத்தில் அரசாங்கம் ஒரு சில தேயிலைத் தோட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்தது. அவ்வாறு இணைக்கப்பட்ட போது அத் தோட்டங்களில் இருந்த தேயிலை தொழிற்சாலைகளை மூடி விட்டனர்.

அவ்வாறு மூடப்பட்ட தேயிலை தொழிற் சாலையில் இருந்த உபகரணங்களை விலை மனு கோரி விற்று விட்டனர்.

பின்னர் தோட்டங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு குத்தகைக்கு எடுத்த சிலர் தேயிலை கொழுந்தை மட்டும் பறித்து விற்றனர். ஆனால் தேயிலை தோட்டங்களை துப்புரவு செய்யவில்லை. பல தோட்டங்கள் தற்போது காடாகி வருகின்றன. பராமரிப்பில் அக்கறை குறைந்து வருகிறது.

தோட்டங்களில் இருந்த மரங்களை வெட்டி விற்று விட்டனர்.அந்தப் பணத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு வழங்கவில்லை முழுமையாக கம்பனிகள் சுருட்டி கொண்டன.

மேலும் அக்காலத்தில் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளையும் விலை மனு கோரி விற்பனை செய்கின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் பணமும் கம்பனிகாரர்கள் சுருட்டி கொள்கின்றனர்.

இவ்வாறாக கிடைக்கப் பெறும் இலாபங்களை தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் வழங்குவது இல்லை. இவ்வாறு தோட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் விற்று தீர்ந்த உடன் தொழிலாளர்களுக்கு என்ன மிஞ்சப் போகிறது? இவ்வாறு விற்பனை செய்வதை அரசாங்கமும் தோட்டத் தொழிற் சங்கங்களும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் தோட்டங்களில் லயன் அறைகளில் வசிப்போர் உள்ளனர். 8 ஒ 8 காம்பிராக்களில் வசிக்கின்றனர். அதனை நவீன மயப்படுத்த வேண்டும். தற்காலிக கொட்டில் அமைத்து கொண்டும் உள்ளனர். தோட்ட நிர்வாகம் சம்பாதித்து கொண்டு செல்வதை மட்டும் பார்க்காமல், இவர்களுக்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும். சகல வேலைகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கும் என்ற எதிர்பார்பில் தோட்ட கம்பனிகள் தொழிலாளர் நல விஷயங்களை கண்டு கொள்வதில்லை. இலாபம் தேடுவதிலேயே குறியாக உள்ளன.

தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்டிக் கொடுக்க கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. கம்பனிகாரர்களினால் தான் இது நடக்கின்றது. கிடைக்கும் இலாபம் எல்லாம் எங்கு போகின்றது?

ஒருசில தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் பல தோட்டங்கள் பாரிய இலாபத்தினை தேடி கொடுக்கின்றன. அதற்குக் காரணம். தோட்டத்தை நிர்வாகம் செய்யும் முகாமையாளரும் தோட்ட தொழிலாளரும் தான் காரணம்.

மஸ்கெலியா பகுதியை எடுத்துக் கொண்டால் சீட்டன் தோட்ட தேயிலை தொழிற்சாலை, புரவுண்லோ தேயிலை தொழிற்சாலை, அப்புகஸ்தனை தேயிலை தொழிற்சாலை, பெரிய நடுதோட்ட தேயிலை தொழிற்சாலை, ராணி தோட்ட தேயிலை தொழிற்சாலை மல்லியப்பு தேயிலை தொழிற்சாலை மினிசிங் லேன் தேயிலை தொழிற்சாலை நல்ல தண்ணி தேயிலை தொழிற்சாலை மடுல்கல தேயிலை தொழிற்சாலை என்பன மூடப்பட்டுள்ளன.
இவற்றில் மல்லியப்பு தேயிலை தொழிற்சாலையை அப்புறப்படுத்தும் வேலை ஆரம்பமாகி விட்டது.இதனால் தோட்ட தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது கம்பனிக்காரர்களுக்கே இதில் இலாபம்.

ஏனையவற்றையும் இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ள தொழிலாளர்கள், தொழிற் சங்கங்கள், அரசாங்கம் முன்வர வேண்டும்.
-பெருமாள்-

Friday, July 10, 2009

நான்கு மாதங்களாக ஊதியமின்றி வேலை செய்த தொழிலாளர்கள்

ஹொரணை,மொரகஹஹேன யாலகல தனியார் தோட்டத்தைச் சேர்ந்த ஐம்பது தொழிலாளர்களுக்கு,தோட்ட உரிமையாளர் கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ம.ம.மு யின் இங்கிரிய மாவட்டப் பிரதிநிதி எம்.எஸ்.பெருமாள் தோட்ட உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது தோட்ட உரிமையாளர் இதற்கான காரணத்தைக் கூறாது இழுத்தடித்து வருவதாகவும், இதனையடுத்து தொழிலுறவு அதிகாரி மற்றும் பாணந்துறை தொழில் காரியாலயத்திலும் முறைப்பாடு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்
இதேவேளை, சம்பளம் வழங்கப்படாததால் இங்குள்ள தொழிலாளர்கள் ஊதியமில்லாது பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளதுடன் தொடர்ந்தும் வேலைக்குச் சென்று வருகின்றனர். தனியார் தோட்ட உரிமையாளர்கள் பலர் இன்று தோட்டங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்குரிய சம்பளம், ஊழியர் சேம இலாப நிதியம், உரிமைகள், சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் போன்றவற்றை வழங்குவதில் பின்னின்று வருவதுடன், தொழிலாளர்களை அசௌகரியத்திற்குட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதலாம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்புக்களை மீளாய்வு செய்யும் பணிகள் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
கிராம சேவகர் மூலம் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் ஒப்படைக்க வேண்டும். நாடு முழுவதிலும் இவ்வாறான நடைமுறைகளே பின்பற்றப்படுகிறது.
தேர்தல் காலம் வந்தால்தான் நம்மில் பலர் தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாமை –குறித்து குறை கூறுவோரும் இருக்கிறார்கள். குறிப்பாக பெருந்தோட்டங்களில் வாழும் பெரும்பாலானோர் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்து கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை.
வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர வேறு அரச, நிர்வாக ரீதியில் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய தெளிவில்லாதவர்களாகவே இன்னமும் இருக்கிறார்கள். தமது பெயர்களை பதிவு செய்யாமல் வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை. வாக்களிப்பு நிலையம் வரை சென்று கடமையில் இருக்கும் உத்தியோகத்தர்களால் திருப்பியனுப்பப்படுகின்றனர்.
தற்போது கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை பெருந்தோட்ட வாக்காளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் வேலையாக வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமே உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. உங்களது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள ஒரு வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்ள, அரச நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த வாக்குரிமை மிகவும் அவசியமான தொன்றாகும். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் தான் தேர்தல் காலங்களில் உங்களைத் தேடி ஐயாமார் வருவார்கள். நீங்களும் மதிப்புக்குரியவர்களாக தேர்தல் காலங்களில் மட்டும் இருப்பீர்கள்.
தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் தோட்டப் பகுதிகளுக்கு வருவார்கள். வழமையாக கொடுக்கும் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை பெறுவார்கள். தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் முடிந்துவிடும். அதன்பின் இம்மாதிரியான சமூக சேவைகள் செய்வதற்கு அரசியல்வாதிகள் நேரடியாக வந்து உங்களுக்கு சேவை செய்வதில்லை. செய்தால் பாராட்ட வேண்டும் அப்படி நடப்பது குறைவு.
1988 ஆம் ஆண்டுக்கு முன் பெருந்தோட்டப் பகுதிக்கு தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் படையெடுப்பது குறைவாக காணப்பட்டது. மலையக மக்களிடம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையே அதற்கான காரணமாகும். தோட்டத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரியும்.
1977 ஆம் ஆண்டு தனியொரு மனிதனாக மலையக மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த மறைந்த இ. தொ. கா. தலைவரும் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமான் எடுத்த நடவடிக்கை காரணமாக 1988 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு முதல் இலங்கையிலுள்ள மலையக மக்களுக்கு வாக்களிப்பதற்குத் தகுதியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் பிரதேச சபை, நகர சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு மலையக மக்கள் செல்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு வாக்குரிமை அவசியம். கிடைத்த வாக்குரிமையை மக்கள் தொடர்ந்து பாதுகாப்பது மக்களின் கடமையாகும்.
படித்த இளைஞர், யுவதிகள் பெருந்தோட்டப் பகுதியில் இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொரு தோட்டத்திலும் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இதேபோன்று தோட்டங்களில் தொழிற்சங்க தோட்ட கமிட்டிகள் இயங்குகிறது. மற்றும் பல மன்றங்கள், மகளிர் இயக்கங்கள் இருக்கின்றன.
இவர்கள் நினைத்தால் இதனை வெற்றிக் கொள்ள முடியும். ஒவ்வொரு தோட்டத்திலும் ஒருநாள் சிரமதானப் பணியைப் போல நினைத்து குடியிருப்புக்களுக்குச் சென்று வாக்காளர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும். இதன் மூலம் ஒவ்வொரு தோட்டத்திலும் மக்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
தேசிய அடையாள அட்டை வாக்களிப்பதற்கு அவசியம் தேவை. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள இடத்தில் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும். வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதினால் பல நன்மைகள் உண்டு.
அவையாவன வாக்களிப்பது தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு வதிவிடத்தினை உறுதிப்படுத்துவது விடயத்திலும் தொழில் சம்பந்தமான வேலைவாய்ப்பு பெறுவதிலும் இன்றைய சூழ்நிலையில் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி நன்சான்றிதழ் பெறுவதற்கும், பிள்ளைகளை பாடசாலைக்கு; சேர்ப்பதற்கும் முக்கியமாகும். ஆகவே, வாக்காளர் இடாப்பை பெயர்களை பதிவு செய்வதில் உள்ள நன்மைகளாகும் என்பதால் வாக்காளர் இது விடயத்தில் அலட்சியப்படுத்தாமல் உரிய கால எல்லைக்குள் குறிப்பிட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உடனடியாக உங்கள் பகுதி கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும்.
குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சில மக்கள் எல்லாமே நமது கைக்கு வந்து சேர வேண்டும் என்ற மனப்போக்கில் இல்லாமல் தாங்கள் இந்த விசயத்தில் கவனம் செலுத்தி முடிந்தளவு தோட்டங்களில் படித்த இளைஞர்,யுவதிகளிடம் மற்றும் விசயம் தெரிந்தவர்களிடம் சென்று விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய் வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது சம்பளப் பிரச்சினை இல்லை. தொழிற்சங்கங்கள் பேச்சு வார்த்தை நடத்தி பெற்றுக் கொடுப்பதற்கு இது உங்கள் அரசியல் உரிமை பிரச்சினை. இதில் நீங்கள் தான் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தெரிந்து செயல்பட வேண்டும்.
டி.வி. குமார்

Wednesday, July 8, 2009

14 தோட்டக் கம்பனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய 17 கோடி ரூபா

குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரச தோட்டங்களை நிர்வகித்த 14 கம்பனிகள் இதுவரை 17 கோடி ரூபா வரை அரசுக்கு வரி செலுத்தவில்லையென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார். குருநாகல் தோட்டக் கம்பனி மூன்றரை கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வரி ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டுமென தோட்டத்துறை அமைச்சு அரச மற்றும் தனியார் தோட்டக் கம்பனிகளுக்கு அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறியுள்ள 14 கம்பனிகளில் 3 அரச தோட்டங்களும் 11 தனியார் கம்பனித் தோட்டங்களும் அடங்கும். பெருந்தோட்டத்துறை அரசின் நிர்வாகத்தில் இயங்கும் தோட்டக் கம்பனிகள் அரசுக்கு வரியாக 7 கோடி ரூபாவை செலுத்தியுள்ளன. தோட்டக் கம்பனிகள் வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தவில்லையெனின் அந் நிர்வாகங்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு 600 ரூபா கிடைக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு நியாயமான சம்பளமாக 600 ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதே கோரிக்கையாகும் பிரதியமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பெல்மதுளை, உனுவல தோட்டத்தில் அமைச்சர் பி.சந்திரசேகரனின் 2,82,000 ரூபா நிதியில் கட்டப்பட்ட நீர்;ப்பம்பியுடன் கூடிய குடிநீர்;த்திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தாம் கூட்டு ஒப்பந்தத்தில் பங்காளிகள் அல்ல. என்று குறிப்பிட்ட அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் தாம் ஆணித்தரமாக இருப்பதாக குறிப்பிட்டார். தாம் ஒரு மனிதனுக்குரிய அடிப்படை தேவைகளான சுகாதாரம், வீடு, குடிநீர் மின்சார வசதி போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் முன்முரமாக செயற்படுவதாக தெரிவித்தார். இதனை எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்