Sunday, July 30, 2017

தேயிலை உற்பத்திக்கு 150 வருடங்கள்

இலங்கையின் தேயிலை கைத்தொழிலுக்கு 150 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்குமுகமாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் இவ்விழாக்களில் முக்கிய இடம் கிடைக்கவில்லையென விமர்சனமும் எழுந்துள்ளது.
எமது தேயிலைத் தொழிற்துறைக்கு சிறு தேயிலை தோட்டங்களின் பங்களிப்பை நாம் குறைவாக எடைபோட முடியாது.
சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தேசபற்று விஜேரத்ன தேவ கெதர கூறுவது என்னவென்றால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு 3,93,420 ஆகும். அவர்கள் 121.967 ஹெக்டயார் காணியில் தேயிலையைப் பயிரிட்டிருந்தார்கள். அவர்கள் 2016ம் ஆண்டு 21806 இலட்சம் கிலோ தேயிலையை உற்பத்திச் செய்திருந்தார்கள்.
அண்ணளவாக 25 இலட்சம் பேர் சிறிய தேயிலைத் தோட்டம் மூலம் வாழ்க்கை நடத்துகின்றார்கள். மொத்த தேயிலை உற்பத்தியில் 74.5 வீதம் 2016ம் ஆண்டு சிறிய தேயிலைத் தோட்ட பிரிவினருக்கே கிடைத்தது. 2016ம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானமாக 1269 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதாவது 184777 மில்லியன் ரூபா கிடைத்தது. சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை 1977ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ம் திகதி சிறுதேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யவே ஆரம்பிக்கப்பட்டது.
சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தியை அதிகரித்தல், வர்த்தக சந்தர்ப்பங்களை அதிகரித்தல், அத்துறையில் தொழில் ஈடுபட்டுள்ள மக்களின் சமூக நலங்களை வழங்குதல் என்பன அவ் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பணிகளாகும்.
கிராமிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் அரச கொள்கையின் முக்கிய இரு விடயங்களாகும். கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிறிய தோட்டங்களுக்கும், சிறிய இறப்பர் தோட்டங்களுக்கும் முக்கிய பங்குள்ளது.
தேயிலை உற்பத்தியாளர்களின் அசமந்தம்
சில கணக்கெடுப்புகள் மூலம் வெளிவந்த விடயம் என்னவென்றால் தேயிலை உற்பத்தி செய்யக் கூடிய காணிகள் அதிகமாக இருந்தும். அதற்காக முயற்சி செய்யும் உற்பத்தியாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். ஆகவே அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சிறிய தேயிலைத் தோட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இது தொடர்பாக ஆய்வுகள் நடத்திய தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சபையின் கணக்கெடுப்பின்படி முற்றாக அழிவடைந்த காணிகளின் அளவு 658.14 ஹெக்டயராகும். இக் காணியின் உரிமையாளர்கள் 4053 பேராகும். அவர்கள் 07 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பெருமளவு பச்சை தேயிலைக் கொழுந்துகள் மூலம் உயிர் வருமானத்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். தெற்கு மாகாணத்தில் 1 கிலோ பச்சைத் தேயிலை கொழுந்து 1 கிலோவுக்கு 100-110 ரூபா வரை கிடைத்ததாக அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார். வருமானத்தை இழந்த தேயிலைக் காணி சொந்தக்காரர்களின் நிலைமையை மேம்படுத்துதற்காக அரைவாசி மற்றும் முற்றாக பாதிப்படைந்த காணிகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. முற்றாக பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலையை நட 280.4 மில்லியன் ரூபாவும் அரை வாசி பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலை நடுவதற்கு 111.66 மில்லியன் ரூபாவும் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. மே மாதம் தொடக்கத்தில் தேயிலைக் கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென கூறப்பட்டதோடு தனியார் துறையினரினது நாற்று மேடைகளிலும் தேயிலைக் கன்றுகளின் விலை அதிகரிக்குமென கூறப்பட்டது.
சந்தை குறித்த தவறான கருத்து
சிறிய தேயிலைத் தோட்ட அதிகார சபைக்குச் சொந்தமான களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை போன்ற இடங்களிலுள்ள நாற்று மேடைகளில் தேவையான அளவு தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்படுவதாக தலைவர் கூறினார். மினவும் உயர் தரத்திலான தேயிலைக் கன்றொன்றை 25 ரூபா வீதம் தேயிலை மீள் நடுகைப் புரிபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
சர்வதேச தேயிலைச் சந்தையில் இலங்கைத் தேயிலையின் தரம் குறைவடைந்து வருவதாகக் பிரசாரம் செய்யப்பட்டது. வியட்நாமில் தேயிலை உற்பத்தி விரைவாக முன்னேற்றம் அடைவதால் இலங்கையின் இடத்தை வியட்நாம் கைப்பற்றும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இலங்கை தேயிலை என்றும் வர்த்தகப் பெயருக்குள்ள வணிக தரம் குறைவடையாது காணப்படுகின்றது. கொழும் தேயிலை ஏல விற்பனைக்கு முன்வைக்கப்படும் தேயிலையின் அளவு 7 மில்லியன் கிலோ அளவுக்கும் அதிகமாகவே உள்ளது. இவ் அளவானது சிறு தேயிலைத் தோட்ட காணி உரிமையாளர்களின் உற்பத்தி குறைவடைந்த போதெ காணப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டம் என 10 பர்சஸ் தொடக்கம் 10 ஏக்கர் வரையான காணிகளையே குறிப்பிடுகின்றார்கள். சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான சங்கம் ஒன்றும் செயட்படுகின்றது. 2014 ல் 1383 ஆக காணப்பட்ட சங்க்களின் எண்ணிக்கை 2015ல் 1394 ஆகவும் 2016ல் 1407 ஆகவும் அதிகரித்தது. அதன் மூலம் தொழிலின் அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த குரலும் எழுப்படுகின்றது. தேயிலைத் தொழிலின் இன்னுமொரு முக்கிய அம்சம் தேயிலைத் தொழிற்சாலைகளாகும். சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் தேயிலைச் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜப்பானில் தேயிலைத் தொழிற்சாலை சூரிய சக்தி மூலம் இயக்கப்படுகின்றது. அதேபோல் எமது தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டுமென அவர் கூறினார். அதற்காக வெளிநாட்டு உதவிகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவடைந்த பின்னரே தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 1880 ம் ஆண்டு கோப்பி களஞ்சியசாலைகள் தேயிலைத் தொழிற்சாலைகளாக மாற்றம் பெற்றன. பின்னர் இங்கிலாந்தின் மார்ஷல் நிறுவம் மற்றும் பர்மின்ஹாம் மற்றும் பெர்பர்ஸ்ட் நிறுவனமும் தேயிலை தொழிற்சாலைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வந்தார்கள். அதன் பின்னரே தேயிலைத் தொழிற்சாலை யுகம் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தற்போது இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க அங்கத்துவ தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும். பல தரத்திலான ஊழியர்கள் தேயிலை உற்பத்தியில் பங்குகொள்கின்றார்கள். முன்னர் நீராவி மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டாலும் தற்பொது மின்சாரம் மூலம் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் கொழுந்தை தொழிற்சாலைகளே கொள்வனவு செய்கின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றிய விபரங்களை அனைத்து அதிகார சபை கிளை காரியாலயங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் பண்டாரவெல ஆகிய இடங்களில் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்காரியாலயங்களை மேம்படுத்த 80 இலட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அதேபோல் மீண்டும் நடுகையை மேற்கொள்ள தேயிலைச் செடியை அகற்றுவோருக்கு சுயதொழில் மூலம் வருமானத்தைப் பெற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
திட்ட அதிகாரிகள் சேவையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் சிறு தேயிலைத் தோட்ட செய்கையில் ஈடுபடுபவர்களு தேயிலைன ஆலோசனைகள் வழங்கப்படும். மண்சரிவுக்குள்ளான காணிகளுக்குப் பதிலாக வேற்று காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் அரசாங்கம் காணிகள் தொடர்பாக புதிய கொள்கையொன்றையும் பின்பற்றவுள்ளது. அதன் மூலம் மக்கள் முகங்கொடுக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் சிறு தேயிலைத் தோட்டங்களின் அதிகரிப்பும் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருணாரத்ன அமரதுங்க
தமிழில்: வீ. ஆர். வயலட்

நன்றி- தினகரன்

Friday, July 21, 2017

தொழில்வாய்ப்புகளை வழங்க நிர்வாகங்கள் முன்வர வேண்டும்

கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக, பெருந்தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு தாங்கள் வதியும் தோட்டங்களிலேயே தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இளைஞர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் நோக்குடன், தோட்டங்களை நிர்வகிக்கும் பணிகளில் அவர்களை இணைத்து, அவர்களது தகைமைக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க, தோட்ட நிர்வாகங்கள் தயக்கம் காட்டக்கூடாது.  தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு, முன்வர வேண்டுமென்று, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்
“இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்கூட, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக தோட்டங்களை நம்பியே வாழ்ந்து வருகின்றார்கள். தோட்டங்களின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் இவர்கள், தமது பிள்ளைகள் தம்மைப்போல அல்லாமல் தாம் வாழ்கின்ற தோட்டங்களிலேயே தமது பிள்ளைகளுக்கு அந்தஸ்துள்ள தொழிலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளார்கள்.
“தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள், கட்டாயம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை தொழிலுக்கு அமர்த்தும் தோட்ட நிர்வாகங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
“படித்த இளைஞர்,யுவதிகளுக்கு பெருந்தோட்டங்களிலேயே, அவர்களது தகைமைக்கு ஏற்பட்ட தொழில்வாய்ப்புகள் வழங்கப்படாமையால், இளைஞர்,யுவதிகள் நகர்புறங்களை நோக்கி செல்கின்றனர். நகர்புறங்களில் தொழில்புரிவோர், அன்றாட வீட்டுத் தேவைகளை கவனிக்க முடியாமலும், குறிப்பாக தமது வாழ்க்கையோடு ஒப்பிட்டும் அடையாள அட்டை பெறுவதிலும் வாக்காளர் பதிவு போன்ற விடயங்களில் தமக்குக் கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடுகின்றார்கள். இது எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிலைக்கு தோட்ட நிர்வாகங்களே பொறுப்புக்கூற வேண்டும். முகவரி இழந்த நிலைக்கு நம்மவர்கள் தள்ளப்படக் கூடாது. 22 தோட்டக் கம்பனிகளோடு கட்டம் கட்டமாக, பேச்சு வார்த்தை நடாத்தி வருகின்ற நிலையில் தோட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தோட்டக் காரியாலயங்களில் எழுதுவினைஞர்களாக, தொழிற்சாலைகளில் மேற்பார்வையாளர்களாக, வெளிக்கள உத்தியோகஸ்தர்களாக பயிற்றுவித்து வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே முன்வைத்திருந்தோம். இதன்படி தோட்ட நிர்வாகங்கள் கரிசனைக் கொண்டு தோட்டங்களிலே தொழில் பெற்றுக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் நிர்வாகங்களிலே தங்கியுள்ளது. இவர்களைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தகுதி அடிப்படையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Monday, July 17, 2017

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் மகஜர்

பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரனின் கொடூர பிரதேசவாத சொற் பிரயோகங்களை வன்மையாக கண்டிப்பதோடு அவா் நாட்டில் வாழுகின்ற மலையக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனா்.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  சம்மந்தனிடம் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் வைத்து இம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்இ வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் அமைப்பின் இணைப்பாளருமான எம்பி. நடராஜ் கையொப்பம் இட்டு இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுகிளிநொச்சி மாவட்டத்தில்  மலையக வம்சாவழி மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனா். கடந்த தேர்தல்களில் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் இந்த மக்களின் அதிகளவாக வாக்குகளையும் பெற்றவா். எனவே இந்த நிலையில் அவா்  மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சொற் பிரயோகங்களை மேற்கொண்டிருப்பது நாடு முழுவது வாழும் மலையக மற்றும் இந்திய வம்சாவழி மக்களின் மனங்களை சிதறடித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினா் நேசிப்பதாக கூறும் அதே தமிழ்த்தேசியத்தை நாங்களும் நேசிக்கின்றோம். அதற்காக எண்ணற்ற உயிர்த்தியாகங்களை  செய்திருக்கின்றோம் அரை நூற்றாணடுகளுக்கு மேலாக வடக்கில் கிழக்கில் மலையக மக்கள் பரந்து வாழ்ந்து வருகின்றனா். ஆனால் இவா்கள் இன்றும் மாற்றான் தாய் மனப்பாங்குடன்தான்  நடத்தப்படுகின்றமை மிகுந்த மனவேதனையளிக்கிறது

எனவே மலையக மக்கள காயப்படுத்தும் வகையில்  பயன்படுத்தப்படும்  மோசமான சொற் பிரயோகங்களை உடனடியாக நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என்றும் கோரிக்கை விடுகின்றோம் எனவும் குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 11, 2017

பெருந்தோட்டங்கள் தனியாருக்கு விற்பனை: “கடுமையாக எதிர்ப்போம்

இலாபமீட்டும் அரச பெருந்தோட்டங்களை, தனியாருக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக, கடுயைமான எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்” என்று, இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் தலைவர் சத்துர சமரசிங்க (லங்கா வத்து சேவா சங்கம்) தெரிவித்தார்.
இலங்கை பெருந்தோட்டச் சேவா சங்கத்தின் புதியத் தலைவராகத் தெரிவான சத்துர சமரசிங்க, மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை, ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே, இவ்வாறு கூறினார்.
அங்கு மேலும் கூறிய அவர், இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திக் கூட்டுத் தாபனம்,(ஜனவசம) மற்றும் எல்கடுவ பிளான்டேசன் முதலான பெருந்தோட்டங்கள் பலவற்றை, தனியாருக்கு வழங்க, அரச பொருளாதார முகாமைத்துவ குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. எனவே, இதனை தடுத்து நிறுத்துவதற்காக, பல மட்டங்களிலும் எதிர்ப்பை வெளியிடவுள்ளோம்.
“97 வருடங்கள் பழைமையான எமது சங்கம், எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. எனவே, எமது அமைப்பானது தொழிற் திணைக்களத்தைவிடவும் பழைமையானது. எமது சங்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டதால், எமது அங்கத்தவர்களது நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு தீர்மானங்களை எடுக்கும் கடப்பாடு எமக்கு உள்ளது.
“பெருந்தோட்டங்களில், தொழிலாளர் நலன் கருத்திற்கொள்ளப்படுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக, சரியான கணக்குப் பதிவுகள் இடம்பெறுவதில்லை. இதன் காரணமாக, சேவையிலிருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், வெற்றுக் கையுடன் தமது இறுதிக் காலத்துக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது. எனவே, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
நன்றி- தமிழ் மிரர்

நிலுவைச் சம்பளத்தை வழங்கவேண்டுமென்ற ‘ஏற்பாடோ, தேவைப்பாடோ இல்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக, முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற ஏற்பாடுகளோ, தேவைப்பாடுகளோ இல்லையென, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.   
ஆகையால், கூட்டொப்பந்தத்துக்கு எதிராக, மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படியும் கோரியுள்ளது. 

கூட்டொப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான தனது ஆட்சேபனையிலேயே இ.தொ.கா. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.   
உயர்நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ள, சத்திய கடிதாசியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) அதன் உறுப்பினர்களின் தொழில் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு மாத்திரமே, 2016ஆம் ஆண்டு 35ஆம் இலக்க சம்பளக் கூட்டொப்பந்தத்தை இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொண்டது. கூட்டொப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல்
வேண்டும் என்றோ மற்றும் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை.  
அத்துடன், இதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) சட்டத்துக்கு, உட்பட்ட சம்பாத்தியத்தில் (Earning) இணைக்கப்படவில்லை என்பதால், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்கு ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) உட்படாது. இவற்றுடன் ஏனைய காரணங்களையும் குறிப்பிட்டு மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரியுள்ளது.  

எனினும், மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் நிலுவைச் சம்பளம் என்பது, தொழிலாளர்கள் தொடர்ந்து பெற்று வந்துள்ளமையால், அது தொழிலாளர்கள் ஏற்கெனவே அனுபவித்த உரிமை என்றும், அத்தோடு, சம்பளக் கூட்டொப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் ஏற்கெனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாதவையெனவும் சுட்டிக்காட்டியிருந்தது.   
அத்தோடு, கொடுப்பனவுகள் உட்பட மொத்த சம்பாத்தியத்துக்கும் (Total earnings) ஊ.சே.நிதி (E.P.F.) ஊ.ந.நிதி (E.T.F.) ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் கூட்டிக்காட்டிருந்தது. மேலும், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள கூட்டொப்பந்தத்தில் 2003ஆம் செய்து கொள்ளப்பட்ட பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தை மீறி வெளியாள் உற்பத்தி முறை என்ற பெருந்தோட்டத் தொழிற்றுறையை முழுமையான மாற்றும் முறைமையை அறிமுகம் செய்வது பிரதான/ முதன்மை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த 300 நாட்கள் வேலை உரிமையை இல்லாம் செய்வதாக இருக்கின்றமை, சம்பள சூத்திரம் மிகவும் தெளிவீனமாக இருக்கின்றமை என்ற விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது. அதனடிப்படையில், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சட்ட அந்தஸ்த்து அற்றது என பிரகடனம் செய்து அதனை இரத்துச் செய்யுமாறு மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  
கூட்டொப்பந்தம் தொடர்பான குறித்த எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் சி. துரைராஜா முன்னிலையில் 05.07.2017ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்துள்ள இம் மனுவில் அவரே முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.  
முன்னதாக 08.05.2017 இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் சட்டமா அதிபரை மனு தொடர்பாக இணக்கப்பாட்டை எட்டமுடியுமா என்று பிரதிவாதிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றத்துக்கு அறிவிக்கும்படியும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத விடத்து எதிராளிகளை ஆட்சேபனைகள் இருப்பின் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தது.
அதனடிப்படையில் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு எதிராளிகள் தயார் இல்லை என்பதையும் எதிராளிகள் ஆட்சேபனைகளை முன்வைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.   
அந்தவகையில் வழக்கின் எதிராளிகளான இ.தொ.கா., தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்ற கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகள் சார்பாக கைச்சாத்திடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகள் அனைத்தும் தமது ஆட்சேபனைகளை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தன.   
சட்டமா அதிபர், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் சார்பாக முன்னிலையாகிய அரச சட்டத்தரணி எதிராளிகளிடத்தில் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு கடைசி நேரம்வரை முயற்சித்தாகவும், அதனை கருத்திற்கொண்டு ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கோரி இருந்தார். இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தனது ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி ஆட்சேபனையை சமர்ப்பிக்காத தரப்புகளை அதனை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது. கால அவகாசம் கோரப்பட்ட போது இவ்வழக்கு அவசரமாக விசாரித்து முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் மீண்டும் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த மனு, ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 
நன்றி- தமிழ் மிரர்

Saturday, July 8, 2017

இறப்பர் தொழில்துறைக்கு புத்துயிரளிக்கும் திட்டங்கள்

வெள்ள அனர்த்தம் காரணமாக தாய்லாந்தின் இறப்பர் உற்பத்தி நூற்றுக்கு 76 வீதத்தால் 2017ம் ஆண்டு குறைவடையுமென்றும், அந்நாட்டின் இறப்பர் உற்பத்தி 4.38 இலட்சம் மெட்ரிக் தொன்னாக குறையுமென்றும் அந்நாட்டு இறப்பர் அதிகார சபை கூறியதாக ரொய்ட்டர் பத்திரிகையின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் ஜனவரி மாதம் 20ம் திகதி கூறப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் தற்போது இலங்கைக்கும் பொருத்தமாகவுள்ளன. ‘வெள்ளத்தில் மூழ்கிய அநேகமான இறப்பர் மரங்கள் மடிந்து வருகின்றன. இயற்கை இறப்பர் உற்பத்தி நாடான தாய்லாந்தில் மழை காரணமாக இறப்பர் மரங்களில் சரியான முறையில் பால் வெட்ட முடியாது போயுள்ளது. நான்கு வருடங்களுக்குப் பின்னர் இறப்பருக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு இறப்பர் மரத்தில் இறப்பர் பால் வெட்டுவதற்கு ஏழு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என அந்த அறிக்கை கூறுகின்றது.
இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அதிகமாகப் பாதிப்படைந்த களுத்துறை மாவட்டமானது தேயிலை இறப்பர் மற்றும் கறுவா பயிரிடப்படும் செழுமையான பிரதேசமாகும். அதேபோல் இரத்தினபுரி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களிலும் இறப்பர் செய்கையில் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. பாதிப்பின் அளவு தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றது.
பயிர்ச் செய்கையாளர்களுக்குள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால் தேவையான இறப்பர் கன்றுகளை பெறமுடியாதிருப்பதாகும். அதிகரித்திருக்கும் இத்தேவையை பூர்த்தி செய்ய பெருந்தோட்டத்துறை அமைச்சு ஒட்டு இறப்பர் மரக்கன்று நாற்பது மேடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வெலிகடமுல்ல, மீரிகம, எகல்ஓய, குருகொட, கரபிங்ச, மிந்தெனிய மற்றும் கும்புக்கன் ஆகிய இடங்களில் அரசு நாட்டு மேடைகளை அமைத்துள்ளதோடு தனியார் நாற்று மேடை கன்று உற்பத்தியாளர்களுக்கு 2017 ஆகஸ்ட், செப்டெம்பர் மாதத்துக்கான வணிக மட்டத்திலான பயிர் உற்பத்தி பொருட்களுக்கு தேவையான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் கடந்த வாரம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அனுமதிப்பத்திரம் பெறும் நாற்றுமேடை இடுபவர்கள் இம்மாதம் 31ம் திகதிக்குள் பாத்தியிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் பாத்தி அமைப்பதற்கு எதிர்பார்க்கும் இடங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும்.
இறப்பர் பயிர்ச் செய்கையை முற்றாக மாற்றியமைக்க வேண்டிய நிலைமையிலேயே இருந்தது. அவ்வேளையிலேயே வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. 2016ம் ஆண்டு இலங்கை பெற்றுக்கொண்ட இறப்பர் உற்பத்தியானது கடந்த 50 வருடங்களில் பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த உற்பத்தியாகுமென 2016ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது. 2016ம் ஆண்டு புதிதாக 592 ஹெக்டேயர் காணியிலேயே இறப்பர் பயிர் செய்யப்பட்டது. 2015ல் 769 ஹெக்டேயர், 2014ல் 1428 ஹெக்டேயரும் புதிதாக நடப்பட்டுள்ளன. இவ்வாறு பழைய மரங்கள் அகற்றப்பட்டு புதிதாக இறப்பர் கன்றுகள் 2016ம் ஆண்டு 591 ஹெக்டேயரில் நடப்பட்டன.
சாதாரணமாக இறப்பர் மரமொன்றிலிருந்து பால் வெட்டுவதற்கு 6 வருடங்கள் செல்ல வேண்டும். அந்த 30 வருடங்கள் நல்ல பலனைத் தரும். அவ்வாறு பார்க்கும்போது 2015ல் பாலை வெட்டக் கூடிய மரம் 2011ம் ஆண்டு நடப்பட்டதாகும். அவ்வாறான காணியின் அளவு 6504 ஹெக்டேயராகும். 2019ல் 4673 ஹெக்டேயர் காணிகளிலுள்ள மரங்களிலேயே பால் வெட்டப்படும்.
இறப்பர் செய்கையின் பாதிப்புக்கு முக்கியமான காரணம் சர்வதேச இறப்பர் விலை குறைவாகும். அதற்குக் காரணம் எண்ணெய் விலை குறைந்து செயற்கை இறப்பர் விலை குறைந்ததாகும்.
தோட்ட கம்பெனிகள் இறப்பருக்குப் பதிலாக கொப்பறா மற்றும் கறுவா உற்பத்தியில் ஈடுபட்டு நட்டத்தை ஈடுகட்டியதாக வருடாந்த அறிக்கைகள் கூறுகின்றன. சிறிய தோட்டச் செய்கையாளர்கள் இறப்பர் செய்கையிலிருந்து விலகத் தொடங்கியுள்ளார்கள். தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகளவு கூலிகொடுக்க வேண்டிய நிலைமை உருவானதால் பயிர்ச் செய்கையை கைவிட காரணமாக அமைந்தது. வர்த்தக சபை பேச்சாளர் ஒருவர் உலக கையுறை தேவையானது தினம் தினம் அதிகரித்து வருவதாகவும் இறப்பர் கையுறை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து கேள்விகள் கிடைப்பதாகவும் ஆனாலும் அதில் போட்டி நிலவுவதாகவும் கூறினார். காரணம் சீனாவும் வியட்நாமும் சந்தையில் பிரவேசித்திருப்பதாகும்.
கடின டயர் மற்றும் வாயுவிலான டயருக்கு அமெரிக்கா, பிரேஸில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும் கிராக்கி உள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன் வர்த்தக சந்தையிலும் இறப்பர் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு உண்டென்றும் வர்த்தக சபை கூறுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு உள்ளூர் இறப்பர் உற்பத்தி தொழிலை பாதிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 79,100 மெட்ரிக் தொன்னான தேசிய இறப்பர் உற்பத்தியை இரண்டு லட்சம் மெட்ரிக் தொன்னாக அதிகரிக்க இறப்பர் அபிவிருத்திப் பிரிவு மூலோபாய வழிகளை மேற்கொண்டுள்ளது.
சிறிய தோட்ட உரிமையாளர்களுக்கு இறப்பரை மீள பயிரிட மற்றும் புதிதாகப் பயிரிட 2016ம் ஆண்டு 372.9 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இறப்பர் பயிரிடப்படாத (சம்பிரதாய இறப்பர் காணி அல்லாத) மாவட்டங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு மற்றும் வவுனியா போன்ற பிரதேசங்களிலும் இறப்பர் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புதிய பயிர்ச் செய்கைக்கும் தேவையான இறப்பர் கன்றுகள் கும்புக்கன் ஓயவில் அமைந்துள்ள நாற்று மேடையிலிருந்தே பெறப்படுகின்றன. அரசுக்குச் சொந்தமான இந்த நாற்று மேடையில் 50,000 கன்றுகள் வளர்க்கலாம். அதனை ஒன்று தொடக்கம் 1 ½ இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதைத் தவிர பதியத்தலாவையிலும் நாற்று மேடை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இறப்பர் செய்கையை மேம்படுத்த மண்ணின் வளத்தை அதிகரித்தல் உயர் தரத்திலான சீட் இறப்பர் உற்பத்தி, அதிக பலனைத் தரும் குளோரின் வகையிலான நோய் எதிர்ப்பு குளோரினை அறிந்துகொள்ளல் உள்ளிட்ட பலவித பரிசோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இறப்பர் தொழில் தொடர்பான சர்வதேச நிறுவனமன சர்வதேச இறப்பர் மகாநாடு 1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விற்பனை உள்ளிட்ட இறப்பர் தொழிலுடன் தொடர்புடைய முப்பது நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. அதைத் தவிர வேறு நிறுவனங்கள் 120ம் அங்கத்துவம் பெற்றுள்ளன. இம் மகாநாடு 2018ம வருடம் இலங்கையில் நடைபெற அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கைக்கு ஐரோப்பிய சங்க நாடுகள் பங்குபற்றுவது நல்ல பலனைத் தரும். இலங்கையில் இறப்பர் தொழிலுக்கு இம்மாநாட்டின் மூலம் நன்மைகள் கிடைக்கும்.
கருணாரத்ன அமரதுங்க
நன்றி- தினகரன்

Monday, July 3, 2017

மலையக சமூக அபிவிருத்தியில் அக்கறையற்ற பெருந்தோட்ட கம்பனிகள்

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வள அபிவிருத்திக்காக தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அண்மையில் தெரிவித்திருந்தார். வரவு செலவுத் திட்டங்களில் மலையகப் பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்காக நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றது. மாகாணசபை மட்டத்திலும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதி ஒதுக்கீடுகளும் நடைபெறுகின்றன. இருந்தும் இதற்கான காணிகளைப் பெற்றுக் கொள்வதில்தான் முட்டுக்கட்டைகள் நிலவுகின்றன.
காணிகளை குத்தகைக்கு எடுத்துள்ள 22 கம்பனிகளும் இதில் இறுக்கமான நடைமுறையையே கையாள்கின்றன. 1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களை அரசாங்கம் தனியார் கம்பனிகளிடம் குத்தகைக்குக் கொடுத்தது. அப்போது தோட்ட மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு கம்பனிவசம் சார்ந்தது. அரசாங்கத் தரப்பிலும் கம்பனிகள் தரப்பிலும் பல்வேறு உறுதிமொழிகளும் வழங்கப்பட்டன. பெருந்தோட்டத் துறையை இலாபகரமான தொழிற்றுறையாக மாற்றுவதும் அதன்மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வியலை மேம்படுத்துவதுமே தோட்டங்களைக் கைமாற்றம் செய்வதன் நோக்கம் என அரசு தரப்பில் வியாக்கியானம் தரப்பட்டது. இதற்கு சகல ஒத்துழைப்புகளும் தாம் வழங்கத்தயாராக இருப்பதாக தோட்டக் கம்பனிகள் சான்றுரைத்தன. இவையெல்லாவற்றையும் ஆமோதிப்பது போல மலையக தொழிற்சங்கங்கள் மெளனம் சாதித்தன.
ஆனால் உறுதிமொழி வழங்கியபடி எதுவுமே நடைபேறவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் மலையக மக்களுக்குச் சொந்தமானவை என கருதப்பட்ட லயக்குடியிருப்புகள் இன்று தோட்டக் கம்பனிகளுக்கு உரித்தாக்கப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. ஏனெனில் இன்றைய நிலையிலும் கூட அறைகளைப் பெருப்பித்தல், வீட்டை விசாலமாக்கல் தோட்ட நிர்வாகங்கள் அனுமதித்தால் மட்டுமே செய்யக்கூடியதாக உள்ளது.
இம்மக்களுக்கு தோட்டக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட சிறு சிறு நிலத்துண்டுகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதற்கு உரிமை கோரமுடியாது. தவிர இத்துண்டு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். வெள்ளையர் காலத்தில் சுகாதாரம் பேணப்பட்டது. வேலை வாய்ப்புகள் இருந்தன. லயக்குடியிருப்புகள் என்றாலும் அவை முறையாக பராமரிக்கப்பட்டன. இன்று சொந்தமாக வீடில்லை. காணி உரிமையில்லை. கல்வி அபிவிருத்திக்கான பின் புலங்கள் இல்லை. சகாதார நிலைமைகள் மோசமாகிப் போயுள்ளன. தனியார் கம்பனிகள் அரசு துறை நிறுவனங்களான அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, எல்கடுவ பிளான்டேஷன் என அனைத்தும் தோட்டங்களை காடாக்கிக் கொண்டிருக்கின்றன.
இன்று தோட்ட நிர்வாகங்கள் தாம் நினைத்தமாத்திரத்தில் தொழிலாளர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற பணிக்கின்றன. தோட்டங்களைக் கூறு போடுகின்றன. வெளியாருக்குக் கைமாற்றுகின்றன. இதனடிப்படையில் தோட்டக்காணிகளை தமது விருப்பிற்கேற்ப கையாளும் சகல உரிமைகளையும் இக் கம்பனிகள் கொண்டிருப்பதாகவே கருதமுடியும்.
பாராளுமன்றத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தேவையான காணிகளைப் பெறுவதில்தான் நெருக்கடி இருப்பதாக கூறியிருந்தார். இது உண்மையிலேயே குழப்பமான விடயமாகும். அரசுக்கும் கம்பனிகளுக்கும் அவசியமென்றால் அதிரடியாக காணிகளைக் கையாடல் செய்யமுடிகின்றது. அதுவே பெருந்தோட்ட மக்களுக்குத் தேவை என்றால் மட்டும் சட்டச் சிக்கல் ஏற்படுகிறதாம். தேசிய ரீதியிலான காணிக் கொள்கை இருந்தும் தோட்டக் காணிகளை மலையக மக்களின் அத்தியாவசிய தேவைக்காக பெறுவதில்தான் எத்தனை சவால்கள். சங்கடங்கள் தடைகள்!
தோட்ட மக்களுக்கு வீடமைப்புக்கு காணி என்றாலும் சரிபாடசாலைத் தேவைக்குக் காணி என்றாலும் சரி, கம்பனி தரப்பு தவறாமல் ஒரு கூற்றை முன்வைக்கும். காணிகள் வழங்கப்படும் பட்சத்தில் விளைச்சல் நிலங்கள் வீணாகிப்போகும், அழிவடையும் என்பதுதான் அது. இதற்காக சில தோட்ட நிர்வாகங்கள் புது ஆலோசனைகளை வழங்குவதாக தெரியவருகின்றது. தற்போது மக்கள் வாழ்ந்துவரும் லயங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி தற்காலிக இடங்களில் தங்க வைத்துவிட்டு அவர்களின் லயக்குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கி அதே இடத்தில் புதிதாக வீடுகளைக் கட்டும் யோசனையும் அதில் ஒன்று. இதன்மூலம் வீடமைப்புக்காவும் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காகவும் சிறுவர் முன்பள்ளி விளையாட்டு மைதானம் போன்றவற்றை அமைப்பதற்கும் இடம் வழங்குவதைத் தவிர்ப்பதே கம்பனிகளது நோக்கமாகும். பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்துமே அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகளுக்கான நிதியினை மத்திய மாகாண அமைச்சுகள் ஒதுக்கவேண்டியுள்ளது. அவ்வாறே நடைபெறவும் செய்கின்றது. ஆனால் பாடசாலைகளுக்கான காணிகளைப் பெற்றுக் கொடுப்பதில் இழுபறிநிலையே காணப்படுகின்றது. அரசுடைமையாக்கப்பட்ட சகல பாடசாலைகளுக்கும் தலா இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாட்டைக் கூட சில தோட்ட நிர்வாகங்கள் அசட்டை செய்து வருகின்றன. இந்நிலையில் மேலதிக காணிகளைப் பெறுவது அப்படியொன்றும் இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.
மலையகக் கல்வி அபிவிருத்திக்காக பாடசாலைக் கட்டடங்கள் விரிவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் குறித்த நேரத்தில் இதற்கான காணி ஒதுக்கித் தரப்படாத நிலையில் குறித்த வேலைகள் ஸ்தம்பிதமடைந்து போகின்றன. குறிப்பாக மலையக பாடசாலைகளில் இடப் பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குன்றனர். அத்துடன் மத்திய, மாகாண கல்வித் திணைக்களங்களுக்கூடாக ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் முடங்கிப்போகிறது. அல்லது திறைசேரிக்குத் திருப்பியனுப்பப்படுகிறது. இது போன்றச் சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்துள்ளன. இதுபற்றி மலையக பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் பிரஸ்தாபிக்கவே செய்கிறார்கள். ஆனால் தீர்வுதான் வந்தபாடில்லை. எனவே ஆளுக்காள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் விளைச்சல் தரக்கூடிய பெருமளவு காணிகள் உரிய பராமரிப்பின்றி காடுகளாகவும் தரிசு நிலங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் 200 வருடங்களாக படாத பாடுபட்டு நாட்டுக்குச் செல்வத்தைத் தேடித்தரும் பெருந்தோட்ட மக்களின் வீட்டுத் தேவைகளுக்கும் அவர்களது வாரிசுகளின் கல்வி அபிவிருத்திக்கும் அவசியமான காணிகளை வழங்குவதில் கம்பனி தரப்புக் காட்டும் பிடிவாதம் தயக்கம் அசிரத்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தவே செய்கின்றது. ஒரு வேளை பெருந்தோட்டச் சமூகம் கல்வியறிவு பெற்ற சமூகமாக வளர்ச்சியடைவதில் கம்பனிகளுக்கு விருப்பம் இல்லையோ என்னவோ! அதேபோல பிற சமூகங்களைப் போல சொந்தக் காணியில் சொந்த வீட்டில் குடியேறுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றதோ தெரியவில்லை. மனிதருக்கு சொந்தக்காணியில் சொந்த வீடு என்பது வாழ்வுரிமையின் அடையாளம். அதேபோல கல்வி என்பது அபிவிருத்திக்கான அடைவு மட்டம். அந்த இரண்டும் இல்லாத சமூகமாக இன்னும் எத்தனை காலம் தான் இருப்பதாம்?