Saturday, July 4, 2009

சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமில்லை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் 03-07-2009 முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை.
இப் பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்,தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியன கலந்துகொண்டன. இப் பேச்சுவார்த்தையின் போது இன்றைய வாழ்க்கை சுமைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் 500 ரூபா நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கூட்டாக முதலாளிமார் சம்மேளனத்திடம் வலியுறுத்தின. எனினும், இதற்கு இணங்க மறுத்த முதலாளிமார் சம்மேளனம், வருடத்திற்கு பன்னிரண்டரை வீத சம்பள அதிகரிப்பு வழங்க முன்வைத்த யோசனையை முழுமையாக நிராகரித்த தொழிற்சங்கங்கள், இது சம்பந்தமாக தத்தமது தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஒரு பொது கூட்டு நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
முகாம்களிலுள்ள மலையக மக்கள் உறவினர்களிடம் செல்ல அனுமதிக்க கோரிக்கை


வடக்கில் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களை மலையகத்திலுள்ள அவர்களது உறவினர்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி சர்வ கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போது முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஜனாதிபதியை சந்தித்த போது கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 25 வருடங்களுக்கு முன்பு மலையகத்திலிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் இன்று அகதிகளாக உள்ளனர். இவர்கள் விரும்பும் பட்சத்தில் இவர்களை மலையகப் பகுதிகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை காணுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதியை கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீர்க்கமான முடிவு இன்றேல் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு விடயத்தில் தீர்க்கமான முடிவு கிடைக்காததால் தொழிலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பொறுமை காத்து வந்த தொழிலாளர்கள் பெருந்தோட்டக் கம்பனிகளினதும், கூட்டு ஒப்பந்த தொழிற் சங்கங்களினதும் அலட்சியப் போக்கை கண்டித்து பல்வேறு வகையான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமீளாய்வு பேச்சுவார்த்தையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு கோரி தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டி தோட்டக் கம்பனிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்லாமல் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்த வேண்டிய நிலைக்கும் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தள்ளப்பட்டுள்ளது என்றார்
சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்காமையானது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்