Tuesday, May 24, 2016

நிம்மதியாக வாழ ஒரு காணி துண்டைத் தாருங்கள்

நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையினால் மலையகத்தின் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் அனர்த்த அபாயங்கள் ஏற்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட டுனாலி, அப்பர் கலஹா, கலஹா குரூப், பட்டியகம, கிதுல் முல்ல, தெல்தோட்டை குரூப் ஆகிய பெருந்தோட்டப் பகுதிகள் இதனால் பெரிதும் பாதிப்பப்பட்டுள்ளன. பொதுவாக இத்தோட்டங்களைச் சேர்ந்த 10 இற்கு மேற்பட்ட லயக்குடியிருப்புக்களின் 162 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இம்மக்கள் வாழும் லயக்குடியிருப்புக்களுக்கு அருகாமையில் நிலப்பிளவுகளும் நிலம் தாழ்ந்தும் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காணப்படுவதால் இம்மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் குடியிருப்புக்கள் ஆபத்தானவை என பிரதேச செயலகத்தினால் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லையென மக்கள் ​தெரிவிக்கின்றனர்.
மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர், கண்டியை மையமாகக்கொண்டு கேகாலை உள்ளிட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் மனித அபிவிருத்தித்தாபனத்தின் விசேட இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த்
தெல்தோட்டைப்பிரதேசத்திற்குச் சென்று அவர் அங்கு மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் கலந்துரையாடினார். அதன்போது சிலர் வழங்கிய கருத்துக்களே இவை.
எஸ்.ஜெயந்தி கருத்து தெரிவிக்கையில் :
நான் ஒரு கால்நடை விவசாயி. தனது குடும்ப வாழ்வாதாரத்தை கால் நடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தைக் கொண்டு சீவியம் நடாத்தி வருவதாக தெரிவித்தார். கால்நடை வளர்ப்புக்கு உகந்த பிரதேசமாக டுனாலி பிரதேசம் காணப்படுகின்றது. தற்போது டுனாலிப் பிரதேசம் அனர்த்தப் பிரதேசமாக காணப்படுகின்றது. இவ்வனர்த்தத்தினால் என்னைப் போன்ற பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி எமது குடியிருப்புக்களை உருவாக்க வேண்டும் என அரசிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். எமக்குத் தேவை பாதுகாப்பான காணித்துண்டொன்று. அடுத்து ஜீவாதாரத்திற்கான தொழில். என்றார்.
எல். காஞ்சனா (பாடசாலை மாணவி):
நாம் மலையக மாணவர்கள் என்ற பகுதிக்குள் வருகின்றோம். அதனால் பல இன்னல்களை அவ்வப்போது சந்தித்துவருகின்றோம். பல வசதியீனங்களுக்கு மத்தியில் நாம் கற்றுவருகின்றோம். மின்னொழுக்கு ஒழுங்கீனத்தினால் மலையகத்தின் பல லயக்குடியிருப்புக்கள் எரிந்து சாம்பலாகியுள்ளமையை நாம் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். அதற்கு நாமும்விதிவிலக்கல்ல.
அதேபோல், மழை காலங்களில் எமது குடியிருப்புக்கள் அவ்வப்போது அழிந்து சேதமடைகின்றன. இந்நிலை தொடருமாயின் எமது கல்வி பாதிக்கப்படுவதோடு மலையக மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவும் ஏற்படும்.
இவற்றை கருத்திற்கொண்டு எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் நிர்வாகத்துறையினரும் எமக்கு பாதுகாப்பான நிலத்தை வழங்கி கல்வியுரிமையை உறுதிப்படுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாம் கல்வியைத்தடையின்றிப்பெற கல்வியமைச்சர் எமது இராஜாங்க கல்வியமைச்சர் உள்ளிட்டோர் உதவவேண்டும்.என்றார்.
ஆர். வேலு (ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளி):
தோட்டத்தொழிலாளிகள் ஏமாறவே பிறந்தவர்கள் என்பது போல தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் ஏன் இயற்கையும் நடந்துகொள்கின்றன.
காலங்காலமாக தோட்ட முகாமைத்துவமும் தொழிற்சங்கங்களும் அரசியல் வாதிகளும் எம்மை ஏமாற்றி வருகின்றனர்.இதனை யாவரும் அறிவர். தேர்தல் காலத்தில் மாத்திரம் எமது பகுதிக்கெல்லாம் வருவார்கள். தொண்டை கிழியக்கத்துவார்கள். அது செய்வோம் இது செய்வோம் என்பார்கள். ஆனால் எமக்கு கிடைப்பது ஏமாற்றமே.எங்களை ஏமாற்றி பிழைப்போர் எமது இன்றைய நிலையை நன்கு அவதானித்து எமக்கு நிரந்தரத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இது பிராயச்சித்தமாகும்.
நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடைகளை எங்களால் தேடிக்கொள்ள முடியும். நாம் பீதியின்றி நிம்மதியாக வாழ எமக்கு ஒரு காணித்துண்டை தாருங்கள்.
இதுவே எமது விருப்பம்.எனத்தெரிவித்தார்.
நன்றி- தினகரன்

தோட்டத் தொழிலாளர்கள் 2500 ரூபாவுக்கு உரித்துடையவர்கள் அல்ல

கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு உரி;த்துடையவர்களாக மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான பி. இராஜதுரை இது பற்றி தெரிந்திருந்தும் தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஏமாற்று வித்தையாகும் என்று தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் தோட்த் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் வலுவடைந்து வருகின்றது. இதனால் சொல்லொணா துன்ப துயரங்களை தொழிலார்கள் அனுபவித்து வருகின்றார்கள் இந்நிலையில் இவர்களுக்குரிய சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசியல் தொழிற்சங்கவாதிகளின் கடமையாகும். 

தொழிலாளர்களின் நலன்கருதி அரசியல் தொழிற்சங்க பேதம் பாராது இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனினும் இங்கு சில அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றனர். மக்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கவில்லை. 

2016ம் ஆண்டின் கைத்தொழில் பிணக்குகள் சட்டம் மிகவும் முக்கியமானது. இச்சட்டத்தின் கீழ் கூட்டு உடன்படிக்கை ஒன்று இருக்குமானால் தொழிலாளர்கள் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு உரித்துடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்று இச்சட்டம் வலியுறுத்துகிறது. 

எனவே வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்மொழியப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வினை கூட்டு ஒப்பந்த நடவடிக்கை காரணமாக தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தெரிந்திருந்தும் ஒப்பந்தம் இல்லாமல் போக வேண்டுமென்றால் இரு சாராரில் ஒரு சாரார் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். எனினும் நிலைமை இன்னும் அவ்வாறு அமையவில்லை. கூட்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே ஒரு வருடத்துக்கும் மேலாக காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் நடவடிக்கைகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மற்றும் பிரதான கட்சிகளும் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து வருகின்றன. இதனடிப்படையில் விரைவில் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர் கூட்டு ஒப்பந்தம் நடைமுறை இல்லையென்று கூறிவிட முடியாது 

இதேவேளை குறைந்தபட்ச வேதன சட்டத்திற்கமைய தொழிலாளர்களுக்கு தொழில் தருநர்களால் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வேதனத் தொகை உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதனடிப்படையில் குறைந்த பட்ச மாதாந்த வேதனம் பத்தாயிரம் ரூபாய் எனவும் நாள் ஒன்றுக்கான அடிப்படை சம்பளம் 400 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இச்சட்டமும் கூட தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இது குறித்து நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டி இருக்கின்றது. 

கூட்டு ஒப்பந்தம் அவசியம் என்ற கருத்தினை பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மையுமாகும்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக காலத்துக்குக் காலம் உரிய சம்பள உயர்வினை பெற்றுக்­கொ­டுக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையும் பொறுப்புமாகும் என்பதை மறந்து விடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தினை நாம் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தொழிலாளர்களை போராட்டத்துக்கு அழைப்பதனை விடுத்து நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் அமைச்சு பதவிகளின் ஆளுமையின் ஊடாகவும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினையும் விசேட கொடுப்பனவுகளையும் ஏதேனும் ஒரு வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு அரசுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகள் முனைதல் வேண்டும். அதைவிடுத்து அப்பாவி மக்களை ஏமாற்ற முனைவது தவறான விடயமாகும் என்றார். 

மண் சரிவு அபாயம் - 390 பேர் வெளியேற்றம்

கொத்மலை, பெல்மதுளை மற்றும் கிரிந்திவெல ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, 390 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தில் 6, 7, 8ஆம் ஆகிய இலக்க லயன் தொகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புப் பின்பகுதியில் மண்மேடுகள் மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக் கூடிய நிலை காணப்படுகின்றது. இதனால், 6ஆம் இலக்க லயன்தொகுதியில் 10 குடும்பங்களும், 7ஆம் இலக்க லயன்தொகுதியில் 7 குடும்பங்களும், 8ஆம் இலக்க லயன் தொகுதியில் 10 குடும்பங்களும், தற்காலிகக் கூடாரங்கள் இரண்டில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் அடங்கலாக, 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 35 சிறுவர்களும் 6 மாத சிசுக்கள் இருவரும் அடங்குகின்றனர். மேலும், அதிகமான பெண்கள் தங்கியிருப்பதனால், போதியளவான மலசலக்கூட வசதிகள் இன்மையால் அவர்கள், பல்வேறான அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெய்த கடும் மழையினால்,  இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்த மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு,  அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. அறிவிப்பு விடுக்கப்பட்டு ஒருவருட காலமாக எவ்விதமாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத காரணத்தினாலேயே, தங்களுடைய உயிர்களைக் கையில் பிடித்துக்கொண்டு, இக்குடியிருப்பிலேயே வாழ்ந்து வந்ததாகவும் இம்முறை, அனர்த்த அபாயம் அதிகரித்துவிட்டதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, பெல்மதுளை பொரோணுவ தோட்ட மேற்பிரிவு இலக்கம் - 03 லயன் அறைகளில் வசித்துவந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாகவே இவர்கள், இடம்பெயர்ந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கட்டட ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இவ்விடம் மண்சரிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய இடமென்று இனங்காணப்பட்டது. அப்பகுதியிலிருந்து வெளியேறியோர், பொரோணுவ தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குருநாகல் கிரிந்திவெல, உடவெல கல்உடகந்தையில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது,

இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டோம்

மத்துகம வோகன் தோட்டம் கீழ்ப்பிரிவில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள 14 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வெளியேறி தோட்ட வைத்தியசாலையில் சென்று தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டபோது “மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு போனாலும் குடியிருப்புக்களை விட்டு வெளியேறமாட்டோம்” என தோட்டக்குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

2012, 2013, 2014 ஆகிய காலப்பகுதிகளில் இங்கு ஏற்பட்ட மண்சரிவையடுத்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து இப்பகுதியில் மேலும் மண்சரிவு அபாயம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு வசித்துவரும் குடும்பங்களை வேறு இடத்துக்கு சென்று குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு 2014ம் ஆண்டு ஜீன் மாதம் கடிதம் மூலம் தோட்ட நிர்வாகத்துக்கு கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியிருந்தது.  

இதற்கி­ணங்க 100 நாள் ஆட்சியில் காணி ஒதுக்கப்பட்டு வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டிய பாதுகாப்பான வசதியான இடத்துக்கு மாறாக தோட்ட நிர்வாகம் தெரிவு செய்திருந்த காணியை விரும்பாத குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வீட்டுத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து இது தொடர்பாக அமைச்சர்களான பி. திகாம்பரம், மனோகணேசன், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலமும் தொலைபேசி மூலமும் பல தடவைகள் கொண்டு வந்தும் நேரில் சந்தித்து எடுத்துக் கூறிய போதிலும் இதுவரை எந்த ஒரு பலனும் கிட்டாது கைவிடப்பட்டு விட்டது.

மீரியபெத்த சம்பவத்தையடுத்து விழிப்படைந்த தோட்ட நிர்வாகம் இங்கு வசித்து வந்த குடும்பங்களை வெளியேற்றி பின்னர் மீண்டும் லயன் குடியிருப்புகளுக்கு திருப்பி அனுப்பியது. தற்பொழுது நிலவி வரும் காலநிலை காரணமாக அச்சமடைந்துள்ள தோட்ட நிர்வாகம் மீண்டும் வெளியேறுமாறு கேட்டுள்ளது.

காலநிலை மோசமடையும் போது வெளியேறு என்று கூறுவதும் காலநிலை வழமைக்குத் திரும்பியதும் மீண்டும் பழைய இடத்துக்கே போ என்று கூறுவதும் வாடிக்கையாகி விட்டது.
எங்களுக்கான வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தால் வெளியேறுவோம். அல்லாவிடின் மண்சரிவு ஏற்பட்டு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மடிந்து போனாலும் பரவாயில்லை. நாங்கள் வெளியேறப் போவதில்லை. மண்சரிவு ஏற்­பட்டு புதையுண்டு போகும் நிலை ஏற்படுமேயானால் அதற்கான முழுப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், ட்ரஸ்ட் நிறுவனம், பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் மலையக தலைவர்களுமே ஏற்க வேண்டும்.

எனவே அத்தகையதொரு துரதிர்ஷ்ட நிலை ஏற்படும் முன்னர் மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் இது குறித்து விசேட கவனம் செலுத்தி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என ஆபத்தை எதிர்நோக்கியுள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.