Monday, April 27, 2009

மலையக தோட்டங்கள் மீண்டும் துண்டாடப்படுமா

கடந்த வருட இறுதியில் சர்வதேச ரீதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இலங்கை தேயிலைக் கொள்வனவில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக இலங்கையின் தேயிலை விற்பனை குறைவடைந்ததுடன் தேயிலையின் விலையும் வீழ்ச்சியுற்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் பெருமளவு கொள்வனவு செய்யும் தென் மாகாணத் தாழ்நிலத் தேயிலை விற்பனை பாரியளவில் வீழ்ச்சியுற்றதுடன் பல சிறு தோட்டத் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சிறு உற்பத்தியாளர் தம் தேயிலைக் கொழுந்தினை விற்பனை செய்ய முடியாமல் போய்விட்டது. உற்பத்தி செய்யப்பட்ட பல்லாயிரம் தொன் தேயிலை விற்பனை செய்யப்படாமல் முடக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தலையீடு செய்து, தேயி லைச் சபையினூடாக விற்பனை செய்யப்படாத தேயிலையை கொள்வனவு செய்ததுடன் தேயிலை உரத்தின் விலையையும் குறைத்து, சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலைக்கு உரம் வழங்கி தேயிலை உற்பத்தியை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இப்பாதிப்பு பின்னர் பாரிய கம்பனிகளுக்கும் விரிவடைலாயிற்று.
இப்பின்புலத்தில் அரசாங்கம் தேயிலை உற்பத்தித்துறையினை சீர்செய்யும் வகையில் குறிப்பாக பெருந்தோட்டங்களை பரிசீலிப்பதற்காக அமைச்சரவை துணைக் குழுவொன்றினை நியமித்தது. அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகரவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட இக்குழுவில் ஏனைய அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, ஜீவன் குமாரதுங்க மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இவ் அமைச்சரவை குழு இம்மாத முற்பகுதியில் தமது பரிசீலனை அறிக்கையை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் சமர்ப்பித்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் விதந்துரைப்புகள் அண்மையில் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பிரசுரிக்கப்பட்டது. இவ் விதந்துரைப்புகளில் ஒன்று மலையக தோட்டமக்களின் இருப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. டியூ குணசேகரவின் தலைமையிலான அமைச்சரவை குழு பெருந்தோட்டங்களில் காணப்படும் உற்பத்தி செய்யப்படாத காணிகளை சிறு தோட்ட உரிமை யாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என விதந்துரைத்துள்ளது. மேலும் திருமதி பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் கீழ், விவசாய அமைச்சராக இருந்த கொப்பேகடுவவினால் முன்வைக்கப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் குறிக்கோள்கள் முழுமையாக எய்தப்படவில்லை எனவும் அதனால் அதனை முன் னெடுப்பது அவசியம் எனவும் வலியுறுத் தியுள்ளது.
""Unproductive lands to be distributed among small holdeers. The bone-fode objectives of late lands and AGriculture Minister Hector Kobbekaduwa in the 1970-77 Srimao Bandaranayade regime, when the lands Reforms Act was introduced have not been met (Daily Mirror 20th April 2009) அமைச்சர் டியூ குணசேகர தலைமையிலான அமைச்சரவைக் குழுவின் இவ்விதந்துரைப்பானது மீண்டும் மலையகத் தோட்ட மக்கள் 19721975 இல் சந்தித்த நிலையினை சந்திக்க நிர்ப்பந்திக்கும் என்பதுடன் மீண்டும் தோட்டங்கள் துண்டாடப்பட்டு, அம்மக்களது பாதுகாப்பு நிரந்தர கேள்விக்குறியாக மாறுவதற்கு வித்திடும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது..
ஹெக்டர் கொப்பேகடுவவினால் 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டத்தின் பிரதான குறிக்கோள் யாதெனில், நிலமற்ற சிங்கள மக்களுக்கு மலையக தோட்டக் காணிகளை பகிர்ந்தளிப்பதாகும். 1971 ஆம் ஆண்டு நடந்த ஏப்ரல் கிளர்ச்சி பற்றி ஆராய்ந்த அலஸ் தலைமையிலான ஆணைக்குழு, ஏப்ரல் கிளர்ச்சிக்கு பிரதான காரணம் சிங்கள இளைஞர் மத்தியில் காணப்படும் வேலையின்மையாகும். எனவே இப்பிரச்சினைக்குப் பரிகாரம் தேடும் வகையில் சிங்கள கிராம மக்கள் சுய உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதற்கு காணி கள் வழங்கப்பட வேண்டும் என விதந்து ரைத் தது. இதுவே 1972ஆம் ஆண்டு நிலச்சீர்திருத்த சட்டத்திற்கு அடித்தளமாக்கப்பட்டது..
இச்சட்டத்திற்கமைய தனிநபர் கொண்டிருக்கக்கூடிய காணியின் அளவு 50 ஏக்கராக நி;ணயிக்கப்பட்டது. இதற்கமைய முதலாவதாக உள்நாட்டவர்களின் தோட்டங்கள் (ரூபா கம்பனி) அரசுடைமையாக்கப்பட்டதுடன் அக்காணிகள் காணியற்ற சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, பதுளை பகுதிகளில் காணப்பட்ட தனியார் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் வெளியகற்றப்பட்டனர். குறிப்பாக கண்டி நகரில் ஆயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர் வீதியோரங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர் அவர்கள் வவுனியா நோக்கிச் சென்றனர். நட்சா என்ற பெயரில் மாற்றுப் பயிர்ச் செய்கையும் சிங்கள குடியேற்றமும் மேற்கொள்ளப்பட்டது. சில தோட்டங்கள் கூட்டுறவு என்ற பெயரில் (உசவசம) துண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975ல் ஸ்டேரிலிங் கம்பனி தோட்டங்கள் (வெளியாருக்கு சொந்தமான பாரிய தோட்டங்கள்) அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் ஜனவசம எனும் அரச கம்பனிகளின் கீழ் கொண்டுவரப்பட்டு நாளடைவில் இப்பெருந்தோட்டங்களின் ஒருசில டிவிசன்கள் மூடப்பட்டு பெரும்பான்மையோருக்கு சிறு உற்பத்தி காணிகளாக வழங்கப்பட்டன. அத்தோட்டங்களில் வாழ்ந்த தமிழ் தொழிலாளர்களுக்கு இக்காணிகள் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து சிறு உற்பத்தியாளர்களிடம் பணிபுரியும் கூலிகளாக வைக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது அவர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டனர். இதுவே அமைச்சர் டியூ குணசேகர பெருமிதத்துடன் கூறியுள்ள ஹெக்டர் கொப்பேகடுவவின் நிலச்சீர்திருத்த சட்டத்தின் சிறப்பு குறிக்கோள். திருமதி. சிறிமாவின் முக்கூட்டணி அரசாங்கம் 1977இல் வீழ்ச்சியுற்றதுடன் ஆட்சிபீடமேறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்காலிகமாக இச்செயற்பாட்டை நிறுத்தியது..
அதுவும் மலையகத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட எதிர்ப்பின் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டது. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கங்களின் அழுத்தத்திற்கமைய அத்திட்டத்தை கைவிட்ட போதிலும் 1989 ஆம் ஆண்டு மீண்டும் மறைந்த காமினி திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இதனை அமுல்படுத்த முனைந்தது. அச்சமயம் இக்கட்டுரையாளர் இவ்வாறான கட்டுரையொன்றை எழுதியதன் மூலம் அப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததுடன் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் அறிவுஜீவிகளும் அத்திட்டத்திற்கு ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். காமினியின் திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகள் குறிப்பாக மலையக நகரங்களுக்கு அண்மைய தோட்டக் காணித்துண்டுகள் அடையாளம் காணப்பட்டு கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மலையகத்தின் ஒருமித்த அழுத்தம் காரணமாக அன்றைய பிரேமதாசவின் அரசாங்கம் இதனைக் கைவிட்டது. கைவிடப்பட்ட இத்திட்டங்களையே அமைச்சர் டியூ குணசேகர அமுல் படுத்தும்படி விதந்துரைத்துள்ளார்..
இவ்வரலாற்று பின்புலத்துடன் நோக்கும் போது மீண்டும் மலையகத்தை துண்டாடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விடயத்தில் மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டியூ குணசேகரவின் இவ்விதந்துரைப்பிற்கு தோட்ட முகாமையாளர் சங்க செயலாளர் நாயகம் மலின் குணதிலக்க விடுத்த மறுப்பு அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது பெருந்தோட்டங்கள் சிறு உடைமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுமாயின் 9,41,341 தோட்ட வாழ் மக்களின் சமூக, பொருளாதார விடயத்தில் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை இது ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்..
மலின் குணதிலக்க கூறிய சமூக, பொருளாதார பிரச்சினையுடன் அவர்களது பாதுகாப்பும் இவ்விடயத்தில் உள்ளடங்கியுள்ளது. கடந்த பல வருடங்களாக இரத்தினபுரி, மதுகம, களுத்துர, தெனியாய போன்ற பகுதிகளில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். 1972 ஆம் ஆண்டிற்கு முன்னர்,சிங்களவர் தோட்டத்தினுள் புகுந்து தமிழ் தொழிலாளர்களைத் தாக்கியதில்லை. எனவே மலையகத்தின் அனைத்து அமைப்புகளும் இம்முயற்சியினை ஒருமித்து எதிர்க்க வேண்டும். அரசாங்கம் பெருந்தோட்டங்களில் காணப்படும் நட்டத்தை சுட்டிக்காட்டி சிறு உடைமையாளர்களுக்கு கொடுத்தாக வேண்டுமெனக் கூறினால் அதனை தோட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும் எனக் கோர வேண்டும் அல்லது நீண்ட கால குத்தகைக்கு அவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமெனக் கோர வேண்டும். அத்துடன் அக்காணிகளை பராமரிக்க அவர்களுக்கு மானியம் வழங்கும்படி கோர வேண்டும். .
மிக அண்மையில் மாத்தளைப் பகுதியின் விளைச்சல் குன்றிய காணித்துண்டுகள் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. இது தொடர்பில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சார்பாக பேராசிரியர் டியூடர் டி சில்வா தலைமையிலான குழு ஆய்வொன்றினை மேற்கொண்டது. இவ்வாய்வின் மூலம் பின்வரும் விடயம் கண்டறியப்பட்டது. அதாவது, வழங்கப்பட்ட பசளையற்ற காணித்துண்டுகளை வளம்பெறச் செய்ய எவ்வித மானியங்களையும் தோட்ட முகாமைத்துவம் வழங்கவில்லை . .
மாறாக கொழுந்தை மட்டுமே பெற்றுக்கொண்டன. இதனால் பல தோட்டத் தொழிலாளர்கள் அதனை மீண்டும் தோட்ட முகாமைத்துவத்திடமே வழங்கியுள்ளனர். மறுபுறம் தோட்ட முகாமைத்துவம் வழங்கிய காணித்துண்டுகளை தோட்டத் தொழிலாளர்கள் மறுத்த வேளையில் அதனை கிராம சிங்களவர்களுக்கு வழங்கப் போவதாக பயமுறுத்தி வழங்கியுள்ளனர். எனவே மலையகத் தொழிற்சங்கங்கள் இவ்விட யத்தில் சிரத்தைக்காட்ட வேண்டும். இத்திட்டத்தை அமுல்படுத்த இடமளித்தால் மலையகத்தின் நுவரெலியாப் பகுதியில் ஒரு சில தோட்டங்களைத் தவிர ஏனைய தோட்டங்கள் சிறு உடை மையாக்கப்படும். இதன் மூலம் மலையக மக்களது செறிவு அரிதாக்கப்படுவதுடன் அவர்களது அரசியல் பேரம் பேசும் சக்தி குறைக்கப்படும் அபாயம் ஏற்படலாம். ஆகையால் இப்போதே தமது எதிர்ப்புகளை தெரிவிக்க வேண்டும்.
நன்றி- வீரகேசரி