Thursday, October 17, 2013

தொழிலாளர்களுக்குரிய 100 கோடி ரூபா கோரி சட்ட நடவடிக்கை

அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கண்டி, மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சுமார் 100 கோடி ரூபாவை கோரி சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி துணை அமைச்சருமான முத்துசிவலிங்கம் பி.பிசிக்கு தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட சேமலாபநிதி, மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி, ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன கடந்த 10 முதல் 15 வருடத்துக்கு மேலாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளன. 

அரசின் கீழ் உள்ள 3 நிறுவனங்களின் கீழ் இயங்கும் இந்தத் 15 தோட்டங்களும் முறையாக இயங்காதபடியாலேயே தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் உரிய முறையில் வைப்பிலிடப்படாமல் இருந்துள்ளதாக முத்து சிவலிங்கம் குறிப்பிடுகிறார். 

கண்டி, ஹந்தானை தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அண்மையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பிலும் வழக்குகள் தாக்கல் செய்து சுமார் 100 கோடி ரூபா அளவான தொழிலாளர்களின் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது

இதேவேளை, அரச நிர்வாகங்களின் கீழுள்ள தோட்டங்களிலுள்ள பழமையான, பெறுமதி மிக்க மரங்களை வெட்டி விற்று தொழிலாளர்களின் ஓய்வுகால கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கம் முன்வந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் முத்து சிவலிங்கம்  அவ்வாறு இல்லாவிட்டால் அரச திறைசேரியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றம் ஊடாக அரசாங்கத்தைக் கோரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பெரும்பான்மை தொழிலாளர்களை சந்தாதாரர்களாகக் கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கக் கூட்டணியில் நீண்டகாலமாக பங்காளிக் கட்சியாக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரிய மட்டுக்கலை மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் 600 மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று (15) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாவனைக்கு உகந்ததாக இல்லாத தோட்டத்திலுள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைத்துத்து தருமாறு மக்களால் கோரிக்கை மனுவொன்று நுவரெலிய பிரதேச சபை தலைவருக்கு வழங்கப்பட்டதனடிப்படையில் 

நுவரெலியா பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மைதான புனரமைப்புக்கு மண் நிரப்பப்பட்டது. 

அத்தோடு, மைதானத்தில் வடிகால் அமைப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணி முற்றுபெற்றுள்ளது. 

வீதி அதிகார சபை மூலம் மைதானத்தில் நிரப்பப்பட்ட மண் சரியான முறையில் பரப்பப்படாத காரணத்தால் இரண்டு வருடமாக தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புனரமைப்பு பணியை மேற்கொள்ளுமாறு  நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு ககடிதம் வழங்கப்பட்டதையடுத்து விளையாட்டு மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 13-10-2013 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. 

புனரமைக்கப்பட்ட மைதானத்திற்கு 15,80000 ரூபா செலவிட்டதாக கூறி நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காசோலை பெற முயற்சி செய்துள்ளதாக மக்களுக்கு தகவல் பரவியதையடுத்து  20 பேர் கொண்ட தோட்ட இளைஞர் குழு நேரடியாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு சென்று செயலாளரை சந்தித்து குறித்த உறுப்பினருக்கு காசோலை வழங்க வேண்டாம் என கோரப்பட்டதால் காசோலை வழங்கப்படவில்லை. இந்த மோசடி செயலை கண்டித்தே தோட்டத் தொழிலாளாகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கருத்து வெளியிட்ட நுவரெலிய பிரதேச சபை உறுப்பினர் நாகராஜ், 02 வருடங்களுக்கு முன்பு மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும் இதனை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததால் 05 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இதனையே பொறுப்பேற்று வேறு ஒரு நபருக்கு வழங்கியதாகவும் 15,80000 இலட்சம் ரூபா என்ற குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தனக்கும் இதற்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறிப்பிட்டார்.